வட இந்திய யாத்திரை 5ன் தொடர்ச்சி.
காமாக்யா: அஸ்ஸாம் - கவுஹாத்தி ரயில்வே ஜங்க்ஷனிலிருந்து 8-10 கி.மீ தொலைவில். தனி ரயில் நிலையமும் உண்டு. தக்ஷ யக்ஞம் நாசமடைந்த பின் தாக்ஷாயணியின் பிரிவு தாளாமல் அவள் சடலத்தைத் தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு ப்ரளய நடனமாடிய சிவனார் அமைதி கொள்ள, அவரின் ப்ரிய நண்பன் நாராயணர் தனது சுதர்சன சக்ரத்தால் தேவியில் உடலை நான்கு துண்டுகளாக சிதறடித்து விடுகிறார். பரமனும் சாந்தமாகி த்யானத்தில் அமர்ந்து விடுகிறார். அதில் தேவியின் இடுப்பு பாகம் விழுந்த இடமே ஆசைகளைப் பூர்த்தி செய்விக்கும் காமாக்யா என்ற யோனி பீடமாகிய இந்த தலம். மற்ற மூன்று தலங்கள் கல்கத்தா, பூரி, ஒடிசாவின் ப்ரம்மபூர். 51 சக்தி பீடங்கள் முறையும் ப்ரதானமாக நடைமுறையில் இருக்கிறது.
உலகில் இன்றும் தாந்த்ரீக முறையில் (வாமாச்சார முறை) ஆடு, மாடு பலிகள் தினம் நடக்கும் சாக்தர்களின் (சக்தி வழிபாடு) ஒரே காளி வழிபாட்டுத்தலம். சக்தி பீடங்களில் ஒன்று. லலிதா ஸஹஸ்ரநாமம் போன்ற அன்னையின் பெருமைகளைப் போற்றும் படைப்புகளில் வரும் தசமஹா வித்யை ஒவ்வொன்றுக்கும் இங்கு தனித்தனியே சன்னதிகள், பூஜைகள் நடக்கின்றன. மிகவும் உக்ரமான வடிவங்கள், நீலாச்சல் மலை மேல் 20-30 அடிகள் ஆழ குகையில் மூலஸ்தானம். செம்பருத்தி மாலைகள், புஷ்பங்கள் என சாந்தமான அர்ச்சனை(தக்ஷிணாசார) முறையும் உள்ளது. காலை 7 மணிக்குள் இலவச தரிசன வரிசைக்குள் சென்று விட்டால் அதிக பட்சம் 3 மணி நேரத்தில் குகைக்குள் சென்று தரிசனம் முடிந்து வந்து விடலாம். குகை இருளில் 10 படிகள் போல இறங்கி, தீபங்கள் ஒளியில் மேரு வடிவில் இருக்கும் மூலஸ்தானத்து அன்னையைத் தொட்டு, தலை வணங்கி, அடியில் ஓடிவரும் சௌபாக்ய குண்டத்து நீரைப் பருகி, ப்ரசாதமாக தலையில் தெளித்துக் கொள்கிறோம். இந்த மேருவிற்குக் கீழே யோனி பீடம் இருக்கிறது. மூலஸ்தானத்திலேயே பலிகள் உண்டு. வெளியே ப்ராகாரத்திலும் பலி பீடத்துடன் கூடிய ஹால் இருக்கிறது. அங்கும் 10-15 நிமிடங்களுக்கொருமுறை பலி தொடர்கிறது.
க்ருஷ்ணனால் அழிக்கப்பட்டு, தீபாவளியாக நாம் கொண்டாடும் நரகாசுரனின் தலைநகரமாக ப்ராக்ஜ்யோதிஷபுரமும் இதுவே. மன்மதன் சிவஜோதியில் சாம்பலானதும், விமோசனமடைந்த தலமும்(காமரூபம்) இதுவே. அந்த உமானந்தர் கோவில் உலகில் குடிநீர் நதியில் இருக்கும் மிகச்சிறிய தீவில் இங்கே இருக்கிறது. கவுஹாத்தி ஜங்க்ஷனிலிருந்து அங்கே சென்று வர கப்பல் வசதி 20-40ரூபாய்க்கு இருக்கிறது. ப்ரம்மபுத்ராவில் பாதி நாள் வெள்ளம். நீர் வரத்து, கால நிலைகளைக் கணக்கிட்டு சில நாட்கள் போக்குவரத்தும் இருப்பதில்லை இந்த உமாநந்தர் கோவிலுக்கு. எதிர்க்கரையில் இருக்கும் கொல்கத்தா ஐஐடி கல்வி நிறுவனத்திற்குச் செல்ல ப்ரம்மபுத்ராவிற்கு மேலே ரோப் கார் இருக்கிறது. ஒரு மணி தூர பயணம் செய்தால் பாறைகளுக்கு நடுவே ஓடிவரும் ஆற்றங்கரையில் வசிஷ்ட மஹரிஷியின் ஆசிரமும் குளித்து, தரிசித்து வரலாம்.
காமாக்யா அல்லது கௌஹாத்தியிலிருந்து நியூஜல்பைகுடி (NLP station code) வந்து அங்கிருந்து ரயிலில் கொல்கத்தா வந்து சேர்ந்தோம். கொல்கத்தா ரயில் நிலையம், ஊர் எதுவுமே கவுஹாத்தி, காமாக்யாவோடு ஒப்பிட முடியாது. அஸ்ஸாம் அவ்வளவு அழகு, சுத்தம். கொல்கத்தாவும் ஆற்றங்கரையில்தான் இருக்கிறது. ஆனால் அவ்வளவு குப்பை, பாக்கு. நேரமில்லாததால் நரேந்திரநாத் தத்தாவை சுவாமி விவேகானந்தராக்கி நமக்கு அளித்த ராமக்ருஷ்ண பரமஹம்ஸரும், சாரதா தேவியும் தங்கி, பல காலம் பூஜித்த தக்ஷிணேஶ்வர் காளி தரிசனம் செய்தோம். சுத்தமான, அமைதியான கோவில் வளாகம், தரிசன ஏற்பாடுகள் ஒரு ரூபாய் செலவின்றி அழகாக நடக்கிறது, வளாகத்தினுள்ளேயே கங்கை படித்துறை (ஹூப்ளி என்ற ஊர் வழியே ஓடுவதால் இங்கு ஹூப்ளி என்றே கங்கைக்குப் பெயர்)யில் குளித்து, அனுஷ்டானங்கள் முடித்துக்கொண்டு, ஹௌரா பாலம், கப்பல் சவாரிகள் முடிந்து
நாற்பது மணி நேர பயணத்திற்குப் பின் ரயில், பஸ் என்று தாவித்தாவி புவனேஷ்வர், விஜயவாடா, திருப்பதி வழியாக சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று பெங்களூர் வந்தடைந்தோம்... பாரத தரிசனம் அடுத்த டூரில் மீண்டும் சந்திப்போம்.