வட இந்திய யாத்திரை 1 ன் தொடர்ச்சி
பஞ்சாப் அமிர்தசரஸ்-ஸரஸ் என்றால் குளம், பொய்கை. சீக்கியர்களின் தலைமைப்பீடம் இந்த பொற்கோவில். ஹர்மந்திர் ஸாஹிப், தர்பார் ஸாஹிப் என்று வேறு சில பெயர்கள் இந்தக் கோவிலுக்கு. அவர்களின் வேத புத்தகமான குருக்ரந்த ஸாஹிப் இருக்கும் பூஜைக்குரிய இடம் இது. சீக்கியர்களுக்கு 1. மறைத்த குடுமி 2. மரத்தாலான சீப்பு, 3. வெள்ளை கச்சம், 4. வாள், 5. இரும்பு கை காப்பு என்ற ஐந்தும் கட்டாய அடையாளங்கள். பரம்பரையாக வந்த 10 குருமார்களின் போதனைகளையும் உள்ளடக்கிய பதினோறாவது குருவாக அவர்களின் வேத புத்தகமான குருக்ரந்த ஸாஹிப் மதிக்கப்படுகிறது. கோதுமை மாவு, நெய், ட்ரை ஃப்ரூட்ஸ், வெல்லம் கலந்த இலவச ப்ரசாதம் வினியோகம் நாள் முழுதும். காலை 3 மணிக்கு ஒரு அறையிலிருந்து பொற்கோவில் மூலஸ்தானத்திற்கு இந்த வேத புத்தகம் பல்லக்கில் பவ்யமாக கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு நாள் பூஜை, வழிபாட்டுக்குப் பின் இரவு 10.30 மணிக்கு மீண்டும் அதே அறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. 24 மணி நேரமும் திறந்திருக்கும் பொற்கோவிலின் நான்கு கதவுகள் வழியாகவும் யாத்ரீகர்கள் ஒரு தடையுமின்றி குளத்தைச் சுற்றிலும் ஓய்வெடுக்கிறார்கள். 24 மணி நேரமும் சப்பாத்தி, தால்(பருப்பு), ஜீரா ரைஸ், டீ ப்ரம்மாண்டமான உணவுக் கூடத்திலிருந்து(லாங்கர்) எண்ணற்ற வாலன்டியர்களால் சமைத்து, பரிமாறப்பட்டு, சுத்தப்படுத்தப்படுகிறது. நாமும் எதாவது சேவையில் பங்கேற்கலாம். உள்ளே நுழையும் போது தட்டு டபரா தந்து அனுப்புவார்கள், தரையிலோ நாற்காலியிலோ அமர்ந்து உண்ணலாம், எவ்வளவு வேண்டுமானாலும், வீணாக்காமல்.
எல்லோரும் அவரவர்கள் நிலையிலிருந்தும், நான் எனது என்ற திமிர் நிலையிலிருந்தும் இறங்கி வழிபடவேண்டும் என்ற புரிதலுக்காக இந்த குளமும், அதன் நடுவில் இருக்கும் பொற்கோவிலும் பூமியின் நிலையிலிருந்து பதினைந்து இருபது அடிகள் தாழ்வில் இருக்கிறது. முன்பெல்லாம் இந்த குளத்து நீரை காலி செய்துவிட்டு, தூய்மை செய்யும் கர சேவக பணி மிகவும் பிரசித்தம். ரவி நதி நீர் இதற்கு மூல நீராக அரசர்கள் காலத்தில் இருந்து வந்துள்ளது, இப்போது நவீன தொழில்நுட்பங்களுடன் இந்தக் குளம் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. எந்த உயர்நிலையில் இருக்கும் சீக்கியராக இருந்தாலும் தன் குடும்பத்தோடு இங்கு வந்து சில காலம் எந்த காரியங்களிலாவது தன்னை, குடும்பத்தை ஈடுபடுத்திக் கொள்வதை மிகவும் புண்ணியமாக கருதுகின்றனர். நாமும் கலந்து கொள்ளலாம், தடையில்லை. கோவில் பொற்கோவில் குளத்தில் முழம் நீளத்திற்கு மீன்கள். எவரும் குளிக்கலாம் ஆர்ப்பாட்டமின்றி. தடுப்பு சங்கிலிகளும், பிடித்துக் கொள்ளவும் சங்கிலிகள் பாதுகாப்பிற்கு இருக்கின்றன. எவர் கண்ணிலும் படாமல் குளிக்கவும், உடை மாற்றிக் கொள்ளவும் பெண்களுக்கு குளத்து நீரிலேயே ஆங்காங்கு அறைகள் இருக்கின்றன. அவர்கள் முறைப்படி பெண்களும் ஆண்களும் தலைமுடியை வெளியே தெரியாமல் துணியால் போர்த்தி இருக்க வேண்டும். செல்ஃபி போட்டோ, கம்பீரமாக போஸ் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் எல்லாரும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆங்காங்கு சீக்கியர்கள் பாரம்பரிய உடையில் வாள், ஈட்டியோடு பணியில் இருக்கிறார்கள். மற்றவர்களும் ஆர்வமாக எவரும் தவறு செய்தால் அதை அன்பாக திட்டுகிறார்கள், திருத்துகிறார்கள். நிறுத்துகிறார்கள். கோவிலை சுற்றியும் குளத்தை சுத்தப் படுத்துவதற்காக படகில் சீக்கிய காவலர்கள் உலவுகிறார்கள்.
இங்கிருந்து 16-20 கிலோமீட்டர் தொலைவில் வாகா. பாகிஸ்தான் எல்லை அடாரி உள்ளது. இங்கு தினமும் மாலை இரு நாட்டு ராணுவத்தால் நடத்தப்படும் கலாச்சார கொடியிறக்க நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். மிகப் பெரிய நாடு என்பதால் கிரிக்கெட் கிரவுண்டில் இருப்பதுபோல் நம் நாட்டு கேலரி உள்ளது. இருநாட்டு ராணுவ சீருடைகளில் படைவீரர்கள், மூடியிருக்கும் எல்லைக் கதவுகள், மாலை கொடி இறக்கும் நிகழ்வில் கதவுகள் திறக்கப்பட்டு, ஆடல் பாடல் கொண்டாட்டங்களுடன் ஐந்தரை மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. நம் பகுதியில் மாலை நாலரை மணியிலிருந்தே தேசபக்தி பாடல்கள், உற்சாக முழக்கங்கள் என்று களைகட்டி விடுகிறது. குளிர்ந்த குடிநீர், ஐஸ்கிரீம், தின்பண்டங்கள் சர்க்கஸ் கொட்டகை போல் கிடைக்கின்றன. பொம்மைகள் நினைவுச் சின்னங்கள் கிடைக்கின்றன. எல்லை கதவுக்கு அருகில், படைவீரர்களுக்கு நடுவில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளலாம். நம் பரம்பரைக்கு ஒரு பெருமையான நிகழ்வு இது. இங்கு கட்டுப்பாடுகள், அணிவகுப்புகள் முக்கியம் இல்லை. கலாச்சாரம், கொண்டாட்டமே முக்கியமாக உற்சாகப்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment