Jun 17, 2022

வட இந்திய யாத்திரை - 1

வட இந்திய யாத்திரை - 1

जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी || - वाल्मीकि रामायणम्
ஜனனீ ஜன்மபூமிஶ்ச ஸ்வர்காதபி கரீயஸீ - வால்மீகி ராமாயணம்
பொருள்: பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே - மஹாகவி ஸுப்ரமண்ய பாரதியார்

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் - மருதகாசி வரிகளில் TMS குரலில் பொன்மனச் செம்மல்

டூருக்குக் கூட நம்மூர்ல இல்லாத மலை, இயற்கை, வயல், அருவிகள், குளங்கள், ஆறுகள், பனி, குளிர், வெயில், உணவு வகைகள் என்று எதுவும் ஸ்பெஷலா ஃபாரின்ல இருக்காப்ல எனக்குத் தோணல.  

முதல் யுகமான கிருத (ஸத்ய) யுகத்தில் தேவசேனாபதி முருகன் இமயமலையில் அவர் இருப்பிடமான கந்தமாதனத்தில் தொடங்கி இலங்கையையும் தாண்டி அவர் வரும் வழியெங்கும் தரிசனம், பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்கள், 

இரண்டாம் யுகம் திரேதா யுகத்தில் வால்மீகி ராமாயணத்தில் ராமன் காட்டுக்குள் கடந்து வந்த வழிகள், தீர்த்தங்கள்,  க்ஷேத்ரங்கள், சீதையைத் தேட டீம்களை அனுப்பும்போது சுக்ரீவன் நான்கு திசைகளிலும் செல்பவர்கள் எந்தெந்த இடங்கள், நதிகள், மலைகளை, மனிதர்களை, ஆபத்துகளை எல்லாம் கடந்து செல்லவேண்டி வரும் என்ற அபாரமான வர்ணனை, 

மூன்றாவது யுகத்தில் மகாபாரதத்தில் விதுரர், அர்ஜுனன், பீமன், பலராமன்னு பலர் செய்த யாத்திரைகள், 

நாம் இருக்கும் இந்த நான்காவதான கல்கியின் கலியுகத்தில் ஆதி சங்கரர், காஞ்சி மஹாஸ்வாமிகள், வள்ளலார், சமயக் குரவர் நால்வர், ஆழ்வார்கள் பாடல் பெற்ற தலங்கள் என்று எவ்வளவு புண்ய பூமிகள்.... ஆயுசு நிச்சயம் போதாது.  மஹாஸ்வாமிகள் 75 வருடங்கள் ஏறத்தாழ பாதயாத்திரையிலேயே பாரதத்தை வலம் வந்தார். 

இவ்வளவு வளமான, பெருமையான வரலாற்றைக் கொண்ட நாம இன்னிக்கு செல்ஃபோன், கூகுள் மேப், பஸ், காரு, ட்ரைனு இன்னும் என்னென்னவோ வசதிகள் வெச்சிருந்தாலும், காசு, பணம், துட்டுன்னு அனுபவிக்கப் போறோமான்னு ஒரு உத்தரவாதமும், நேரமும் இல்லாம ஓடிட்டே இருக்கோம்.

அதுவும் ஒவ்வொரு நதி, தலம், மூர்த்தி, சரித்திரப் புகழ், சாதனைகள் படைத்த முன்னோர்களைத் தெரிந்து கொண்டு இந்த இடங்களுக்கெல்லாம் சென்று நாம் அங்கு அதில் குளித்து, தரிசனம் செய்து, மண்ணில் உலவும் போது நிச்சயம் சிலிர்க்கிறது.  உருப்படியாக காசு, நேரம், வயது, வாழ்க்கையை செலவு செய்கிறோம் என்று. வாழ்க்கையில் அடுத்தடுத்த பணிகள், குடும்பம், வேலை என மற்ற படிக்கட்டுகள், பயணத்திற்கும் அது உற்சாகத்தைத் தருகிறது.  

வடக்கே, இந்த அமிர்தசரஸ் பஞ்சாபில் இருக்கே அது, பொற்கோவில், பாகிஸ்தான் பார்டரில் வாகா பெரேடு, ஜாலியன் வாலாபாக், டெல்லி, மதுரா கிருஷ்ணன் பிறந்த இடம், பிருந்தாவனம், அயோத்தி ராமர் பிறந்த இடம்,  பிரயாகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்று நதிகளின் திரிவேணி சங்கமம், காசி படித்துறைகள், விஶ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, கல்கத்தா ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பூஜை பண்ணின தட்சிணேஶ்வர் காளி, பூரி ஜெகன்நாதர், சங்கர மடம், கொனார்க் சூரியன் கோவில் இதெல்லாம் பாத்துட்டு வரணும்னு ஒரு லிஸ்ட். இது ஒரு பத்து பதினஞ்சு வருஷமாவே இருக்கு. ஆனா பேச்சுலரா இருந்தப்பவும், கல்யாணம் ஆனதுக்கப்புறமும், குழந்தைகள் பிறந்ததுக்கு அப்புறமும் காசும் இல்லை, லீவும் இல்லை. சரின்னு கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து, எப்படா லீவு வரும்னு காத்திருந்து காத்திருந்து இந்த வருஷம் கிளம்பியாச்சு. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ஹரித்வார், ஹ்ருஷிகேஶ் போயிட்டு வரலாம்னு பார்த்தா ரெண்டு வருஷம் கொரோணா கொண்டாட்டம் முடிஞ்சு மொத்த கும்பலும் இந்த வருஷம் அங்கதான் இருக்கு.  ஆகஸ்ட் மாசம் வேணா வாங்க, ஆகஸ்ட்-செப்டம்பரில் ஃப்ரீயா இருக்கும் அப்படின்னு அங்க இருக்கறவங்க எல்லாம் சொல்றாங்க.  அப்ப நம்மளுக்கு, ஸ்கூலுக்கு லீவு கிடைக்காது.  சரி இந்த ஸ்கூல் சம்மர் லீவ்ல எங்கேயாவது போயிட்டு வந்தே தீரனும்னு கிளம்பியாச்சு.

பெங்களூரில் 20 டிகிரி வெயில்.  இந்த டெல்லி, பஞ்சாப், ஆக்ரா, மதுரா, காசி எல்லாம் பார்த்தா 48-45-50 டிகிரி வெயில்.  டிசம்பர்-ஜனவரியில் இங்கெல்லாம் பத்து டிகிரி இன்னும் குளிரா இருக்கும். லீவும் இருக்காது. அப்பயும் போக முடியாது. ஒவ்வொரு வருஷமும் டெல்லியில வெயில்லையும், குளிரிலும் 10-15 பேராவது உயிரிழப்பு குளிர்-வெயில் தாங்க முடியாம.  திருச்சி பிறந்த ஊர் தாண்டி, காஞ்சிபுரம், மெட்ராஸ் வந்ததுக்கப்புறம் சப்பாத்தி, ரொட்டி, சப்ஜி இதெல்லாம் பழக்கம் ஆயிடுச்சு. அதே தானே வடக்க கிடைக்கப் போறது, பாத்துக்கலாம்னு கிளம்பியாச்சு.  நம்ம பாக்காத வெயிலான்னு கிளம்பியாச்சு. மொத்த ஊரையும் ரெண்டு வாரத்துல முடிச்சு தீரணும்னு பிளான். ஒரு ட்ரெயின்லயும் டிக்கெட் இல்லை. அடிச்சு புடிச்சு அம்ருத்ஸர் போய் சேர்ந்து ரெண்டே நாள்ல ஜுரம், எல்லா ஓட்டையிலிருந்தும் லூஸ் மோஷன். அனல் காத்து காலை ஏழு-எட்டு மணியிலிருந்து மாலை ஏழு-எட்டு மணி வரைக்கும். முகத்தை வெளியில காண்பிக்க முடியவில்லை. எல்லாரும் வெள்ளைத்துணில முக்காடு போட்டுனு சுத்தறோம் உள்ளூர்க்காரங்க போல.


15 வருஷத்துக்கு முந்தின நிலை இல்லையானாலும் இப்பயும் வடக்கே கிட்டத்தட்ட எல்லா இடங்களிலுமே உத்திரபிரதேஷ், டெல்லி, ஆக்ரா, மதுரா, கங்கை, யமுனை, பஞ்சாப், கல்கட்டால பாக்கு பாக்கு பாக்கு போடாத ஆளுங்களே இல்லை. அம்பல பொம்பளன்னு எல்லாரும் பாக்கு போட்டு விளையாடும் இடம், ஜன்னல், நடுரோட்டில், சுவர் ஓரமான்னு ஒரு இடம் பாக்கி இல்லாமல் எல்லா இடத்திலேயும் தூ தூ தூ தான். காலையில் கண் விழித்ததும் இரவு உறங்கும் வரை பாக்கு இல்லாத நாக்கு அபூர்வமாக உள்ளது. படிச்சவன் அடுத்தவனுக்கும் வெடி வைக்கறாப்ல சிகரெட்டு, பாமரனுக்கு பாக்கு, புகையிலை.


ஏரோப்ளேன் அனுபவம்: ரொம்ப கேவலம்.  பயண நேரம் கம்மிங்கறதும் எல்லா இடத்துக்கும் இல்ல.  ஏர்போர்ட் போறது, தனித்தனியா ஒவ்வொருத்தருக்கும் ஹார்டு காப்பி ஐடி கார்டு செக்கிங் (டிஜி லாக்கர், சாஃப்டு காப்பி எல்லாம் எல்லா இடத்துலயும் ஒத்துக்கறதுமில்ல), ஏறுவது, இறங்குவதுன்னு 5-6 மணி நேர பஸ், ட்ரைன் பயணத்துக்கு சரியா நேரம் ஆய்டுது.  ரெண்டு இட்லி 200-300 ரூபாய்ன்னு ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுல கடைகள்.(அவன் கரெண்ட் பில், சம்பளம், வாடகை… குடுக்கனுமில்லன்னு சப்பக்கட்டுகள்), ஃப்ளைட்டுக்குள்ளயும் இதே சர்க்கஸ் கொட்டகை விலை தான்.  2-3 ஜானுக்கு டிலக்ஸ் பஸ் சீட்டு போல அமரும் இருக்கை , புஷ் பேக் 4 விரலுக்குப் பின்னாடி சாயும்.  கால் நீட்டிக்க முடியாது.  ஏசி போட்ட 2+3 சீட் கவர்மென்ட் பஸ் அப்டியே.  குழந்தைகளுக்கும் ஃபுல் டிக்கெட் சார்ஜ். ஓசிப்பயணம், திமிர், அன்ப்ளான்டு அவுதி, எங்கயும் போகனும் தவிர்க்க முடியல 60 வயசுக்கு மேலயும்னெல்லாம் காரணம் இருந்தா போகலாம்.  ராத்திரி போனா போனதுக்கு ப்ரூஃபா நாரதர் போல மேகத்துக்கு நடுப்பற ஒரு ஃபோட்டோவும் எடுக்க முடியாது.  சம்ப்ரதாய நிகழ்வாக எத்தன வழிகள் இருக்கு, பெல்ட் எப்டி போட்டுக்கறதுன்னு அந்தப் பவுடர் பொண்ணுங்க பேசறதும் புரியாது, காது கேக்காதவங்களுக்கான ந்யூஸ் பாக்கறாப்ல இருக்கும்.  ஏறி இறங்கறதுக்குள்ள ஷெல் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போல அந்த ஏர் ஹோஸ்டஸ் நடிப்பும் மனப்பாடப்பகுதி மாதிரி பாவமா இருக்கும்.


பயண முறை: திட்டமிடாத !! பொதுப் போக்குவரத்து

இடங்கள்: பஞ்சாப்: அம்ருத்ஸர், ஜாலியன்வாலாபாக், வாகா பார்டர், வால்மீகி ஆஶ்ரம், பார்டிஷன் ம்யூஸியம், துர்க்யானா மந்திர்

டில்லி: செங்கோட்டை (லால்கிலா, ரெட்ஃபோர்ட்), இந்தியா கேட், ராஷ்ட்ரபதி பவன், பிர்லா மந்திர், இஸ்கான் கோவில், லோட்டஸ் டெம்பிள், அக்ஷர்தாம், குதுப்மினார், ஜந்தர் மந்தர்

மதுரா: க்ருஷ்ண ஜன்மபூமி, பிருந்தாவன்

ஆக்ரா: ஃபோர்ட், தாஜ்மஹல்

ப்ரயாக்ராஜ்: திரிவேணி சங்கமம்

காசி:

அஸ்ஸாம்: காமாக்யா கோவில், உமானந்தர் கோவில்

கல்கத்தா: ராமக்ருஷ்ண மடம், காளி

யாத்திரை நாட்கள்: 17 நாட்கள்


No comments: