Jul 4, 2022

வட இந்திய யாத்திரை - 4

 

வட இந்திய யாத்திரை - 3 ன் தொடர்ச்சி


மதுரா, ப்ருந்தாவன், ஆக்ரா, அயோத்யா

மதுரா-பிருந்தாவன்: பகவான் க்ருஷ்ணனின் பிறந்த ஊர், இடம், ஜெயில்.  தேவகி-வஸுதேவருக்கு க்ருஷ்ணன் பிறந்த சிறை அறை இன்றைக்குக் கோவில்.  வட இந்தியாவின் வழக்கப்படி எல்லைச்சுவர் முஸ்லீம் வழிபாட்டுத் தலத்துடன் பொதுவாக.  அயோத்தி ராம ஜன்ம பூமி, காசி விஶ்வநாதர், க்ருஷ்ண ஜன்மபூமி, குஜராத் ப்ரபாஸ தீர்த்தக் கடற்கரை (க்ருஷ்ணன் அவதாரம் முடிந்த தலம்) சோம்நாத் கோவில் என இன்று வரை எங்கு பார்த்தாலும் இடிபாடுகள், நஷ்டங்கள், துயரங்கள், உயிர்ப்பலிகளுக்கு நடுவில் ஒன்றன் பின் ஒன்றாக பதட்டத்துடன் வழிபாடு.  ராணுவ பாதுகாப்பில் கோவில், பைசா தவிர வேறெதுவும் உள்ளே எடுத்துச்செல்ல அனுமதி இல்லை, க்லாக் ரூமில் வைத்துச் செல்லலாம். 


அயோத்யா மதுரா மாயா(ஹரித்வார்) காசி காஞ்சி அவந்திகா(உஜ்ஜைனி) பூரி த்வாரவதி(த்வாரகா) என்பன முக்தி தரும் 7 தலங்கள்.  அதில் இந்த க்ருஷ்ண ஜன்ம பூமியும் ஒன்று.  இன்னும் அவந்திகா, பூரி, த்வாரகா தான் தரிசிக்க வேண்டிய மோக்ஷபுரிகள்.  இரும்பு ஜெயிலறைக்குள் வரிசையில் செல்கிறோம்.  பாலன் க்ருஷ்ணன் தரிசனம்.  வெளியே மற்ற மண்டபங்கள், பஜனைக் கூடங்கள்.  இங்கிருந்து 10 கி.மீட்டரில் க்ருஷ்ணன் லீலைகள் செய்த ப்ருந்தாவன் (வடக்கே வ, ப மாற்றங்களால் வங்காளம் பெங்கால் ஆகும், ப்ருந்தாவன் வ்ருந்தாவன் ஆகும், விஜய் பிஜய் ஆவார்).  இங்கு மில்க் பேடா ப்ரசித்தம்.  பேட்டரி ஏசி பஸ்ஸில் 16ரூ டிக்கெட் இங்கிருந்து வ்ருந்தாவன்னுக்கு!



ப்ரேம் மந்திர், த்வாரகாதீஶன், பங்கே பிஹாரி, இஸ்கான் என்று  நிறைய கோவில்கள்.  ப்ரேம் மந்திர் திறந்த வெளியில் மின்னொளியில் ரோபோ பொம்மைகளால் ராஸ லீலை, காளிங்க நர்த்தனம், டான்ஸ் ஃபவுன்டைன், ராதா க்ருஷ்ணன், ராம தர்பார், அடியார்கள் சிலைகள் என அமர்க்களமாக இருக்கிறது.  அக்ஷர் தாம் போலில்லாமல் இந்த எக்சிபிஷன்கள் எல்லாம் திறந்த வெளியில் இலவசம்.  மதுரா, பிருந்தாவன் தெருக்களில் இஷ்டமிருக்கோ இல்லையோ, உங்கள் நெற்றி, கன்னம் என்று ராதே, ராதே முத்திரை, நாமம் போட்டு ஒருவருக்கு 20-50 என்று ரூபாய் கேட்டு நச்சரித்து, பிடுங்கி விடுவார்கள், ஜாக்கிரதை. சுற்றுபுற சீர்கேது செய்யாத மாட்டு வண்டிகள் ஸ்கூல் பஸ்களாக பார்த்தோம்.







த்வாரகாதீஶன் கோவில் பஜனை, வளாகம் எல்லாம் யமுனைக் கரையில்.  இங்கே யமுனைக் கரையில் பெரிய கம்சன் கோட்டை, குழந்தை க்ருஷ்ணனை எடுத்துக்கொண்டு வஸுதேவன் யமுனையைக் கடந்த படித்துறை (வஸுதேவ் காட்), கம்ஸ வதம் முடிந்து கைகளைக் கழுவி, ஓய்வெடுத்த படித்துறை(விஶ்ராம் காட்)யில் தினம் மாலை யமுனை ஆரத்தி அருமையான அனுபவம் படகில்.  ஒரு படகில் சேலை நுனியை எடுத்துச் செல்கிறார்கள். மற்றொரு நுனி முடியும் இடத்தில் இருந்து மற்றொரு படகு என்று 8-10 படகுகளில் முழு யமுனைக்கும் வஸ்த்ரம் (உடை) அர்ப்பணிக்கும் அழகு.  வ்ருந்தாவன் யமுனையும் குளிக்க சுத்தமில்லை, படகில் நடுவில் சென்று வேண்டுமென்றால் சிறிது (ஓரிரு ஸ்பூன்) அருந்தலாம்.








பங்கே பிஹாரி! - நெளிந்து நின்று ரசிப்பவன் என்று பொருள்.  முகலாயர் படையெடுப்பில் அர்ச்சகரால் பூமியில் புதைத்து மறைக்கப்பட்ட இந்த மூலவர், பிற்காலத்தில் யாத்திரை வந்த ஹரிதாஸ் என்ற பக்தரால் கனவில் வந்த கட்டளையால் கண்டெடுக்கப்பட்டு, கோவில் எழுப்பப்பட்டது.  இரவு 9.30 மணிக்கு மூடும் ப்ருந்தாவனின் கடைசி கோவில், மற்ற கோவில்கள் 7-8 மணிக்கு மூடி விடுகிறார்கள்.



இஸ்கான் கோவில் கேன்டீனில் வழக்கம் போல சௌத் இண்டியன் தோசை, சாதம், இட்லிகளும் கிடைக்கிறது.  கோவிலும் மற்ற இஸ்கான் கோவில்களைப் போலவே.  க்ருஷ்ண பக்தர்கள் இந்த மதுரா, கோகுலம், ப்ருந்தாவனம், கோவர்த்தனம் இவைகளை வ்ரஜ பூமி என்று நூற்றுக்கணக்கான தொலைவுள்ள சுற்றளவை மாதக்கணக்கில் வலம் வருகின்றனர். 2-3 நாட்கள் இந்த மதுரா, ப்ருந்தாவன் தலங்களை தரிசிக்கலாம்.  மதுராவிலிருந்து ஆக்ரா 2 மணி நேர சாலைப் பயணம்.



ஆக்ரா: அழுக்கான யமுனைக் கரையின் தாஜ்மஹால் தவிர ஆக்ரா ஃபோர்ட், அக்பரின் தலைநகரான யுனெஸ்கோவின் ஃபதேபூர் சிக்ரி, அக்பர் புதைக்கப்பட்ட இடம் இவைகளையும் பார்க்கலாம் 2 நாட்களில்.  ஃபோட்டோ ஷூட்டிற்கான இடங்கள்.  தாஜ்மஹால் வெள்ளி விடுமுறை. மற்ற நாட்களில் சூரியோதயம் முதல் அஸ்தமனம் வரை சென்று பார்க்கலாம்.  அனுமதி இல்லை என்ற போர்டுகள் இருக்கு, ஆனால் ஃபோட்டோக்கள் எடுக்கிறார்கள்.  முன்பு அனுமதி இலவசமாக இருந்தது.  இப்போது ஷாஜகான், மும்தாஜ் புதைக்கப்பட்டுள்ள தாஜ்மஹாலின் மூல அறைக்கு 200ரூ டிக்கெட்.  மற்ற இடங்கள் மட்டும் பார்க்க 40ரூ.


அயோத்தி: ராம ஜன்ம பூமி கோவில் கட்டுமானப் பணிகள், எழில்மிகு தூண்கள், வளைவுத் தோரணங்கள் தயார் நிலைகள் சில வருடங்களாக.  கும்பாபிஷேகம் முடியும் வரை பால ராமன், லக்ஷ்மணன், பரத, சத்ருக்னர் சிலைகள் பாலாலயத்தில்.  1-2 கி.மீ முன்பாகவே தனியார் லாக்கர்களில் பொருள்களை வைத்து விட்டு, சின்ன பர்சில் பணம் மட்டும் வைத்துக் கொண்டு 2-3 ராணுவ பரிசோதனைகளைத் தாண்டி, கிட்டத்தட்ட இசட் பிரிவு பாதுகாப்பில் நாம் காலணிகளோடு நடந்து சென்று தரிசிக்கிறோம்.  இந்தக் கோவில் தவிர ஹனுமான் கடீ, ராமன் அயோத்யாவாசிகளோடு இறுதியில் வைகுண்டத்துக்குச் செல்ல இறங்கிய ஸரயூ நதி ஸ்னானம் போன்றவை இங்கு ப்ரசித்தம்.  ஒரு நாளில் ப்ரயாகை (அலஹாபாத்)யிலிருந்து 4 மணி நேரம் சாலைப்பயணம் செய்து இவைகளை முடித்துக் கொண்டு மீண்டும் ப்ரயாகை அல்லது காசிக்கு சென்று விடலாம்.




No comments: