வட இந்திய யாத்திரை 4 ன் தொடர்ச்சி.
பிரயாகை, காசி (பனாரஸ், வாராணஸி)
ப்ரயாகை: அலஹாபாத் மீண்டும் ப்ரயாக்ராஜ் என்ற பழைய பெயரில். ஹரித்வார், லக்னௌ என்று வந்து சேரும் கங்கை, கருப்புக் கலரில் டில்லி, மதுரா, ஆக்ரா என்று வந்து சேரும் யமுனை சேர்வது அழகாக வெவ்வேறு நிறங்களில் தெரிகிறது. கண்ணுக்குத் தெரியாமல் அடியில் (அந்தர்வாஹினி) ஸரஸ்வதி நதி சேரும் திரிவேணி ஸங்கமம். சேரும் இடம் வரை நடந்து சென்றே குளிக்கலாம். கும்பல், தவிர படகுக்காரர்கள் நூற்றுக்கணக்கில் படகுகளை வரிசையாக நதிகள் சேரும் இடத்தில் நீண்ட தடுப்பு போல நிறுத்தி உள்ளனர். பிரயாகை அசோகர் கோட்டை யமுனை நதிக்கரையில் இருந்து, இந்தப் படகுத் தடுப்பு வரை சென்று, நாம் குளிக்கும் வரை காத்திருந்து, திரும்பி வர தனிப் படகு 1000 ரூபாய்க்கு, ஹிந்தியில் வரலாறு, ஸங்கம ஸ்னானம், 30ரூபாய்க்கு உடனடி ஃபோட்டோ,.. காசி யாத்திரை வருபவர்கள் ராமேஶ்வரம் ராமனாதருக்கும், வீட்டுக்கும் இங்கிருந்தே தீர்த்தம் புது ப்ளாஸ்டிக் கேன்களில், தாமிரக்குடுவைகளில் எடுத்துச் செல்கிறார்கள். ஶ்ருங்கேரி சங்கர மடத்தில் ஏசி அறைகள் இல்லை, அருகில் சந்தில் இருந்த மற்றொரு மடத்தில் சமையல், யாத்தீரிகர் கவனிப்பில் இருந்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த பொறுப்பாளர் ஒழுக்கம், நடத்தை சரியில்லாத காரணத்தால் வெகு களைப்பில் இருந்தும், வேறு வழியின்றி தனியார் ஹோட்டலில் சென்று தங்கினோம். பிறந்த குலம், ஊர், பிழைக்கும் ஊர், புனிதத் தலம் என்று எல்லாவற்றிற்கும் இவர்கள் போன்றவர்களால் கேடு, கெட்ட பெயர். ஒரே தவறு செய்யும் தொழிலாளி வர்ணத்தைச் சேர்ந்தவனுக்கு சிறு தண்டனையையும், தானும் கற்று, தெளிந்து சமூகத்தையும், தேசத்தையும் வழிநடத்தும் பொறுப்பும், கடமையும் இருப்பதால் அதே தவறைச் செய்யும் பிராம்மணனுக்கு உயர் தண்டனையையும் மனு தர்மம் விதிக்கிறது. நமக்கு உள்ளும் வெளியிலும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரே இறைவனும் இதற்கு சாட்சி. காலம் அவரை கவனித்துக் கொள்ளும்.
காசி: மோக்ஷ புரிகளில் ஒன்று, விஶ்வநாதர் முக்தியளிக்கும் தலம், உலகெங்கும் கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் உணவூட்டும் அன்னபூரணியின் தலம். விசாலாக்ஷி வாசம் செய்யும் இடம். வாராணசி, பனாரஸ் மற்ற பெயர்கள். வாரணா+அஸி ரெண்டு நதிகள் ஓடுவதால் வாராணசி. பண்டிதர்கள் அங்கீகாரமும், உபதேசமும், யாத்திரையையும் தொடங்க தேடி வரும் புனிதமான கலாச்சாரத் தலைநகரம் ஆதி முதல் இன்று வரை. இங்கும் நகரச் சாக்கடைகள் கங்கையைத் தேடி வந்து சேருகின்றன. சூரிய குலத்தில் ராமனின் முன் தோன்றலாக அவதரித்து பொய் சொல்ல மாட்டேன் என்ற ஒரு வேத வாக்கியத்தை உறுதியாகக் கடைபிடித்து நடைமுறையில் வாழ்ந்து காட்டிய ராஜா ஹரிச்சந்த்ரன் வேலை செய்த சுடுகாட்டுப் படித்துறை, பார்வதி தேவியின் காதணி விழுந்த மணிகர்ணிகா படித்துறைகளில் அணையாமல் சிதைகள் முழுமையாக எரியூட்டப் படுகின்றன. ஆயிரக்கணக்கில் விறகுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. தென்னிந்திய உணவுடன் தங்க, கங்கை ஹாரத்தி, தரிசனங்கள் செய்ய போலே என்ற ப்ரம்மசாரி பண்டிதரிடம் முன்னேற்பாடு செய்திருந்தோம். மாலை 4.30 மணிக்குத் தொடங்கி மோட்டர் படகில் நூறு படித்துறைகளையும் அழகாகத் தரிசித்து, குளித்து, விஶ்வநாதர், விஶாலாக்ஷி, அன்னபூரணி, கங்கா ஹாரத்தி படகில் இருந்தபடியே தரிசித்து இரவு அறைக்குத் திரும்பினோம். 1200ரூ படகுக்காரருக்கு.
வாராணஸி எம்.பியும், ப்ரதமருமான திரு. மோடி அவர்களின் முயற்சியால் விசாலமும், புதுப்பொலிவும் பெற்றிருக்கும் விஶ்வநாதர் கோவிலுக்கும் பாதுகாப்பு காரணமாக சிறு பணப்பர்ஸ் மட்டுமே அனுமதி. ஒரு சின்னப்பை, செருப்புகளை படகிலேயே வைத்து விட்டு வராமல், படகோட்டி சொல் கேட்டு கையில் கொண்டு வந்தோம். ஒரு லாக்கர் காரரைக் காட்டி அங்கு வைக்கச்சொன்னார் அவர். வைத்த பிறகு லாக்கர் இலவசம் ஆனால் சாமிக்குப் படைக்க அர்ச்சனை, பிரசாதத் தட்டுகள் கட்டாயம் வாங்கியாக வேண்டும் (ஹோட்டல்களில் ரெண்ட் ஃப்ரீ ஹால் தருவாங்களே, அதே) என்று கட்டாயப்படுத்தியதால் ஆரம்ப விலை தட்டு 250 ரூபாய்க்கு வாங்கினோம்.
200-250 பேர் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் பண்டாக்கள் (பூஜை செய்யும் பண்டிதர்கள் ப்ரதிநிதிகள்), அந்த ஊழியர்கள், இந்த ஊழியர்கள் குறுக்கு வழி, சீக்ர தரிசனம் ஆசையால் பக்தர்கள் தொல்லைக்காளாகி சரியான க்யூ கட்டுப்பாடு இன்றி எல்லா மாநில மொழிகளிலும் சத்தம், சச்சரவு, நடு நடுவே விஶ்வநாத் மஹராஜ் கீ, ஜய்… ஹர ஹர மஹதேவ கோஷம் விண்ணைப் பிளக்க 15 நிமிஷங்களில் அருமையான தரிசனம். சன்னதியின் இரு வழிகளில் உள்ளே அனுமதிக்கிறார்கள், வேறு வழிகள் வெளியேற. தொட்டு, அர்ச்சனைப் பொருள்களையும், காசையும் இறைத்து வழிபட்டு பெரும் நிம்மதியோடு, சாதனைப் பெருமிதத்தோடும் வெளியேறுகிறோம். வேறு நிறைய சிவ சன்னதிகள் கோவிலுக்குள்ளேயே. இலவச குடிநீர் வசதிகள். ப்ராகாரத்தில் நிம்மதியாக இப்போது சுற்ற, இளைப்பாற முடிகிறது.
கோவிலுக்கு அருகில் வெளியே அன்னபூரணி கோவில், விசாலாக்ஷி கோவில்கள் சிறு சிறு சன்னதிகளாக. வழியெங்கும் விசாரித்துக்கொண்டே சந்து சந்தாக வளைந்து நெளிந்து தரிசனம் முடிந்து லாக்கர் இருக்குமிடத்துக்கே வந்து சேர்ந்து விட்டோம். படகில் சென்று கங்கை ஹாரத்தி 30 நிமிடங்களுக்கு. அருகருகே எங்கு பார்த்தாலும் படகுகள்தான். அங்குமிங்கும் தாவித்தாவி டீ, பலூன், ஆரத்தி விற்கிறார்கள். அஶ்வமேத படித்துறையில் ரெண்டு டீம்களாக ஒன்றன் பின் ஒன்றாக அரை மணி நேர வித்யாசத்தில் இந்த ஆரத்திகள் நடக்கின்றன. முடியும் தருணத்தில் துரத்தி விட்ட தேனீக்கள் போல படகுகள் பிரிந்து அவரவர் துறைகளுக்கு சென்று சேருகின்றன.
எந்த ஒரு பித்ருக்கள் திதி, சிறப்பு பூஜைகள் இன்று ஆசை தீர குளியல், தரிசனங்கள், தியானங்கள் மட்டும் செய்ய 2-3 நாட்கள் நிம்மதியாக இங்கு இருக்கலாம். நடந்து சென்று மேல் சொன்ன இடங்களை கவர் செய்வதே சுகம், அனுபவம். மறுநாள் ஆட்டோவில் 700ரூபாய்க்கு சோழி மாதா, துர்க்கா மந்திர், துளஸி மானஸ மந்திர், ஸங்கட விமோசன் ஹனுமான் மந்திர், கால பைரவர் கோவில்களுக்குச் சென்று வந்தோம். தமிழகம், ஆந்த்ரா என்று தென்னகத்திலிருந்து வருபவர்களிடம் இந்த சோழி மாதா கோவில் ப்ரபலம். சின்ன கோவில். காசி தரிசனம் முடிந்த கடைசியில் இங்கே வெளிக் கடையில் சோழிகள் வாங்கி சன்னதியில் அர்ச்சனை செய்வது போல அர்ப்பணித்து, “சோழி பலன் உனக்கு, காசி பலன் எனக்கு” என்று வேண்டிக்கொண்டு, ஒரு சோழியை பிரசாதமாக பீரோவில் வைத்துக்கொள்ள பெற்று வருகிறோம்.
துர்க்கா மந்திரும் அருமையாக இருந்தது. துளசி மானஸ மந்திரில் சத்யநாராயணரிடம் சிவனார் வேண்டுவது போல ஒரு சன்னதி, சீதாராம சன்னதிகள், துளசிதாஸரின் முழு ஹிந்தி ராமசரிதமானஸமும் (ராமாயணம்) பெரிய பெரிய கல்வெட்டுகளில். ரோபோ பொம்மைகள் உதவியில் ராம, க்ருஷ்ண லீலை நிகழ்ச்சிகள் 5 ரூ டிக்கெட்டில் முதல் தளத்தில். ஃபோட்டோ அனுமதி உண்டு. சங்கடங்கள் விமோசனமாகும் அனுமான் கோவிலில் பணப்பர்ஸ் மட்டுமே அனுமதி. அருமையான தரிசனம். தக்ஷனின் திமிரை அடக்கிய கால பைரவர் கோவிலிலும் அருமையான தரிசனம். ஆட்டோவில் மேற்சொன்ன கோவில்களை 4 மணி நேரத்தில் தரிசித்து முடித்தோம். மதிய உணவு, ஓய்வுக்குப் பின் மீண்டும் கங்கைக் குளியல், சூரியாஸ்தமன சந்த்யா வந்தன பூஜை, வேத பாராயணம். புறப்பாடு.
No comments:
Post a Comment