Jul 7, 2022

வட இந்திய யாத்திரை 6 (நிறைவுப் பகுதி)

 வட இந்திய யாத்திரை 5ன் தொடர்ச்சி.

காமாக்யா: அஸ்ஸாம் - கவுஹாத்தி ரயில்வே ஜங்க்ஷனிலிருந்து 8-10 கி.மீ தொலைவில்.  தனி ரயில் நிலையமும் உண்டு.  தக்ஷ யக்ஞம் நாசமடைந்த பின் தாக்ஷாயணியின் பிரிவு தாளாமல் அவள் சடலத்தைத் தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு ப்ரளய நடனமாடிய சிவனார் அமைதி கொள்ள, அவரின் ப்ரிய நண்பன் நாராயணர் தனது சுதர்சன சக்ரத்தால் தேவியில் உடலை நான்கு துண்டுகளாக சிதறடித்து விடுகிறார்.  பரமனும் சாந்தமாகி த்யானத்தில் அமர்ந்து விடுகிறார்.  அதில் தேவியின் இடுப்பு பாகம் விழுந்த இடமே ஆசைகளைப் பூர்த்தி செய்விக்கும் காமாக்யா என்ற யோனி பீடமாகிய இந்த தலம். மற்ற மூன்று தலங்கள் கல்கத்தா, பூரி, ஒடிசாவின் ப்ரம்மபூர்.  51 சக்தி பீடங்கள் முறையும் ப்ரதானமாக நடைமுறையில் இருக்கிறது.


உலகில் இன்றும் தாந்த்ரீக முறையில் (வாமாச்சார முறை) ஆடு, மாடு பலிகள் தினம் நடக்கும் சாக்தர்களின் (சக்தி வழிபாடு) ஒரே காளி வழிபாட்டுத்தலம்.  சக்தி பீடங்களில் ஒன்று.  லலிதா ஸஹஸ்ரநாமம் போன்ற அன்னையின் பெருமைகளைப் போற்றும் படைப்புகளில் வரும் தசமஹா வித்யை ஒவ்வொன்றுக்கும் இங்கு தனித்தனியே சன்னதிகள், பூஜைகள் நடக்கின்றன.  மிகவும் உக்ரமான வடிவங்கள், நீலாச்சல் மலை மேல் 20-30 அடிகள் ஆழ குகையில் மூலஸ்தானம்.  செம்பருத்தி மாலைகள், புஷ்பங்கள் என சாந்தமான அர்ச்சனை(தக்ஷிணாசார) முறையும் உள்ளது.  காலை 7 மணிக்குள் இலவச தரிசன வரிசைக்குள் சென்று விட்டால் அதிக பட்சம் 3 மணி நேரத்தில் குகைக்குள் சென்று தரிசனம் முடிந்து வந்து விடலாம்.   குகை இருளில் 10 படிகள் போல இறங்கி, தீபங்கள் ஒளியில் மேரு வடிவில் இருக்கும் மூலஸ்தானத்து அன்னையைத் தொட்டு, தலை வணங்கி, அடியில் ஓடிவரும் சௌபாக்ய குண்டத்து நீரைப் பருகி, ப்ரசாதமாக தலையில் தெளித்துக் கொள்கிறோம்.  இந்த மேருவிற்குக் கீழே யோனி பீடம் இருக்கிறது.  மூலஸ்தானத்திலேயே பலிகள் உண்டு.  வெளியே ப்ராகாரத்திலும் பலி பீடத்துடன் கூடிய ஹால் இருக்கிறது.  அங்கும் 10-15 நிமிடங்களுக்கொருமுறை பலி தொடர்கிறது.







க்ருஷ்ணனால் அழிக்கப்பட்டு, தீபாவளியாக நாம் கொண்டாடும் நரகாசுரனின் தலைநகரமாக ப்ராக்ஜ்யோதிஷபுரமும் இதுவே.  மன்மதன் சிவஜோதியில் சாம்பலானதும், விமோசனமடைந்த தலமும்(காமரூபம்) இதுவே.  அந்த உமானந்தர் கோவில் உலகில் குடிநீர் நதியில் இருக்கும் மிகச்சிறிய தீவில் இங்கே இருக்கிறது.  கவுஹாத்தி ஜங்க்ஷனிலிருந்து அங்கே சென்று வர கப்பல் வசதி 20-40ரூபாய்க்கு இருக்கிறது.  ப்ரம்மபுத்ராவில் பாதி நாள் வெள்ளம்.  நீர் வரத்து, கால நிலைகளைக் கணக்கிட்டு சில நாட்கள் போக்குவரத்தும் இருப்பதில்லை இந்த உமாநந்தர் கோவிலுக்கு.  எதிர்க்கரையில் இருக்கும் கொல்கத்தா ஐஐடி கல்வி நிறுவனத்திற்குச் செல்ல ப்ரம்மபுத்ராவிற்கு மேலே ரோப் கார் இருக்கிறது. ஒரு மணி தூர பயணம் செய்தால் பாறைகளுக்கு நடுவே ஓடிவரும் ஆற்றங்கரையில் வசிஷ்ட மஹரிஷியின் ஆசிரமும் குளித்து, தரிசித்து வரலாம்.



காமாக்யா அல்லது கௌஹாத்தியிலிருந்து நியூஜல்பைகுடி (NLP station code) வந்து அங்கிருந்து ரயிலில் கொல்கத்தா வந்து சேர்ந்தோம். கொல்கத்தா ரயில் நிலையம், ஊர் எதுவுமே கவுஹாத்தி, காமாக்யாவோடு ஒப்பிட முடியாது. அஸ்ஸாம் அவ்வளவு அழகு, சுத்தம். கொல்கத்தாவும் ஆற்றங்கரையில்தான் இருக்கிறது. ஆனால் அவ்வளவு குப்பை, பாக்கு. நேரமில்லாததால் நரேந்திரநாத் தத்தாவை சுவாமி விவேகானந்தராக்கி நமக்கு அளித்த ராமக்ருஷ்ண பரமஹம்ஸரும், சாரதா தேவியும் தங்கி, பல காலம் பூஜித்த தக்‌ஷிணேஶ்வர் காளி தரிசனம் செய்தோம். சுத்தமான, அமைதியான கோவில் வளாகம், தரிசன ஏற்பாடுகள் ஒரு ரூபாய் செலவின்றி அழகாக நடக்கிறது, வளாகத்தினுள்ளேயே கங்கை படித்துறை (ஹூப்ளி என்ற ஊர் வழியே ஓடுவதால் இங்கு ஹூப்ளி என்றே கங்கைக்குப் பெயர்)யில் குளித்து, அனுஷ்டானங்கள் முடித்துக்கொண்டு, ஹௌரா பாலம், கப்பல் சவாரிகள் முடிந்து

நாற்பது மணி நேர பயணத்திற்குப் பின் ரயில், பஸ் என்று தாவித்தாவி புவனேஷ்வர், விஜயவாடா, திருப்பதி வழியாக சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று பெங்களூர் வந்தடைந்தோம்... பாரத தரிசனம் அடுத்த டூரில் மீண்டும் சந்திப்போம்.





Jul 4, 2022

வட இந்திய யாத்திரை 5

வட இந்திய யாத்திரை 4 ன் தொடர்ச்சி.

பிரயாகை, காசி (பனாரஸ், வாராணஸி)

ப்ரயாகை: அலஹாபாத் மீண்டும் ப்ரயாக்ராஜ் என்ற பழைய பெயரில்.  ஹரித்வார், லக்னௌ என்று வந்து சேரும் கங்கை, கருப்புக் கலரில் டில்லி, மதுரா, ஆக்ரா என்று வந்து சேரும் யமுனை சேர்வது அழகாக வெவ்வேறு நிறங்களில் தெரிகிறது.  கண்ணுக்குத் தெரியாமல் அடியில் (அந்தர்வாஹினி) ஸரஸ்வதி நதி சேரும் திரிவேணி ஸங்கமம்.  சேரும் இடம் வரை நடந்து சென்றே குளிக்கலாம். கும்பல், தவிர படகுக்காரர்கள் நூற்றுக்கணக்கில் படகுகளை வரிசையாக நதிகள் சேரும் இடத்தில் நீண்ட தடுப்பு போல நிறுத்தி உள்ளனர். பிரயாகை அசோகர் கோட்டை யமுனை நதிக்கரையில் இருந்து, இந்தப் படகுத் தடுப்பு வரை சென்று, நாம் குளிக்கும் வரை காத்திருந்து, திரும்பி வர தனிப் படகு 1000 ரூபாய்க்கு, ஹிந்தியில் வரலாறு, ஸங்கம ஸ்னானம், 30ரூபாய்க்கு உடனடி ஃபோட்டோ,.. காசி யாத்திரை வருபவர்கள் ராமேஶ்வரம் ராமனாதருக்கும், வீட்டுக்கும் இங்கிருந்தே தீர்த்தம் புது ப்ளாஸ்டிக் கேன்களில், தாமிரக்குடுவைகளில் எடுத்துச் செல்கிறார்கள்.  ஶ்ருங்கேரி சங்கர மடத்தில் ஏசி அறைகள் இல்லை, அருகில் சந்தில் இருந்த மற்றொரு மடத்தில் சமையல், யாத்தீரிகர் கவனிப்பில் இருந்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த பொறுப்பாளர் ஒழுக்கம், நடத்தை சரியில்லாத காரணத்தால் வெகு களைப்பில் இருந்தும், வேறு வழியின்றி தனியார் ஹோட்டலில் சென்று தங்கினோம்.  பிறந்த குலம், ஊர், பிழைக்கும் ஊர், புனிதத் தலம் என்று எல்லாவற்றிற்கும் இவர்கள் போன்றவர்களால் கேடு, கெட்ட பெயர்.  ஒரே தவறு செய்யும் தொழிலாளி வர்ணத்தைச் சேர்ந்தவனுக்கு சிறு தண்டனையையும், தானும் கற்று, தெளிந்து சமூகத்தையும், தேசத்தையும் வழிநடத்தும் பொறுப்பும், கடமையும் இருப்பதால் அதே தவறைச் செய்யும் பிராம்மணனுக்கு உயர் தண்டனையையும் மனு தர்மம் விதிக்கிறது.  நமக்கு உள்ளும் வெளியிலும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரே இறைவனும் இதற்கு சாட்சி. காலம் அவரை கவனித்துக் கொள்ளும்.







காசி: மோக்ஷ புரிகளில் ஒன்று, விஶ்வநாதர் முக்தியளிக்கும் தலம், உலகெங்கும் கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் உணவூட்டும் அன்னபூரணியின் தலம்.  விசாலாக்ஷி வாசம் செய்யும் இடம்.  வாராணசி, பனாரஸ் மற்ற பெயர்கள்.  வாரணா+அஸி ரெண்டு நதிகள் ஓடுவதால் வாராணசி.  பண்டிதர்கள் அங்கீகாரமும், உபதேசமும், யாத்திரையையும் தொடங்க தேடி வரும் புனிதமான கலாச்சாரத் தலைநகரம் ஆதி முதல் இன்று வரை.  இங்கும் நகரச் சாக்கடைகள் கங்கையைத் தேடி வந்து சேருகின்றன.  சூரிய குலத்தில் ராமனின் முன் தோன்றலாக அவதரித்து பொய் சொல்ல மாட்டேன் என்ற ஒரு வேத வாக்கியத்தை உறுதியாகக் கடைபிடித்து நடைமுறையில் வாழ்ந்து காட்டிய ராஜா ஹரிச்சந்த்ரன் வேலை செய்த சுடுகாட்டுப் படித்துறை, பார்வதி தேவியின் காதணி விழுந்த மணிகர்ணிகா படித்துறைகளில் அணையாமல் சிதைகள் முழுமையாக எரியூட்டப் படுகின்றன.  ஆயிரக்கணக்கில் விறகுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன.  தென்னிந்திய உணவுடன் தங்க, கங்கை ஹாரத்தி, தரிசனங்கள் செய்ய போலே என்ற ப்ரம்மசாரி பண்டிதரிடம் முன்னேற்பாடு செய்திருந்தோம்.  மாலை 4.30 மணிக்குத் தொடங்கி மோட்டர் படகில் நூறு படித்துறைகளையும் அழகாகத் தரிசித்து, குளித்து, விஶ்வநாதர், விஶாலாக்ஷி, அன்னபூரணி, கங்கா ஹாரத்தி படகில் இருந்தபடியே தரிசித்து இரவு அறைக்குத் திரும்பினோம்.  1200ரூ படகுக்காரருக்கு.


வாராணஸி எம்.பியும், ப்ரதமருமான திரு. மோடி அவர்களின் முயற்சியால் விசாலமும், புதுப்பொலிவும் பெற்றிருக்கும் விஶ்வநாதர் கோவிலுக்கும் பாதுகாப்பு காரணமாக சிறு பணப்பர்ஸ் மட்டுமே அனுமதி.  ஒரு சின்னப்பை, செருப்புகளை படகிலேயே வைத்து விட்டு வராமல், படகோட்டி சொல் கேட்டு கையில் கொண்டு வந்தோம்.  ஒரு லாக்கர் காரரைக் காட்டி அங்கு வைக்கச்சொன்னார் அவர்.  வைத்த பிறகு லாக்கர் இலவசம் ஆனால் சாமிக்குப் படைக்க அர்ச்சனை, பிரசாதத் தட்டுகள் கட்டாயம் வாங்கியாக வேண்டும் (ஹோட்டல்களில் ரெண்ட் ஃப்ரீ ஹால் தருவாங்களே, அதே) என்று கட்டாயப்படுத்தியதால் ஆரம்ப விலை தட்டு 250 ரூபாய்க்கு வாங்கினோம்.  


200-250 பேர் இருந்திருக்க மாட்டார்கள்.  ஆனால் பண்டாக்கள் (பூஜை செய்யும் பண்டிதர்கள் ப்ரதிநிதிகள்), அந்த ஊழியர்கள், இந்த ஊழியர்கள் குறுக்கு வழி, சீக்ர தரிசனம் ஆசையால் பக்தர்கள் தொல்லைக்காளாகி சரியான க்யூ கட்டுப்பாடு இன்றி எல்லா மாநில மொழிகளிலும் சத்தம், சச்சரவு, நடு நடுவே விஶ்வநாத் மஹராஜ் கீ, ஜய்… ஹர ஹர மஹதேவ கோஷம் விண்ணைப் பிளக்க 15 நிமிஷங்களில் அருமையான தரிசனம்.  சன்னதியின் இரு வழிகளில் உள்ளே அனுமதிக்கிறார்கள், வேறு வழிகள் வெளியேற.  தொட்டு, அர்ச்சனைப் பொருள்களையும், காசையும் இறைத்து வழிபட்டு பெரும் நிம்மதியோடு, சாதனைப் பெருமிதத்தோடும் வெளியேறுகிறோம்.  வேறு நிறைய சிவ சன்னதிகள் கோவிலுக்குள்ளேயே.  இலவச குடிநீர் வசதிகள்.  ப்ராகாரத்தில் நிம்மதியாக இப்போது சுற்ற, இளைப்பாற முடிகிறது.  


கோவிலுக்கு அருகில் வெளியே அன்னபூரணி கோவில், விசாலாக்ஷி கோவில்கள் சிறு சிறு சன்னதிகளாக.  வழியெங்கும் விசாரித்துக்கொண்டே சந்து சந்தாக வளைந்து நெளிந்து தரிசனம் முடிந்து லாக்கர் இருக்குமிடத்துக்கே வந்து சேர்ந்து விட்டோம்.  படகில் சென்று கங்கை ஹாரத்தி 30 நிமிடங்களுக்கு.  அருகருகே எங்கு பார்த்தாலும் படகுகள்தான்.  அங்குமிங்கும் தாவித்தாவி டீ, பலூன், ஆரத்தி விற்கிறார்கள்.  அஶ்வமேத படித்துறையில் ரெண்டு டீம்களாக ஒன்றன் பின் ஒன்றாக அரை மணி நேர வித்யாசத்தில் இந்த ஆரத்திகள் நடக்கின்றன.  முடியும் தருணத்தில் துரத்தி விட்ட தேனீக்கள் போல படகுகள் பிரிந்து அவரவர் துறைகளுக்கு சென்று சேருகின்றன.


எந்த ஒரு பித்ருக்கள் திதி, சிறப்பு பூஜைகள் இன்று ஆசை தீர குளியல், தரிசனங்கள், தியானங்கள் மட்டும் செய்ய 2-3 நாட்கள் நிம்மதியாக இங்கு இருக்கலாம்.  நடந்து சென்று மேல் சொன்ன இடங்களை கவர் செய்வதே சுகம், அனுபவம்.  மறுநாள் ஆட்டோவில் 700ரூபாய்க்கு சோழி மாதா, துர்க்கா மந்திர், துளஸி மானஸ மந்திர், ஸங்கட விமோசன் ஹனுமான் மந்திர், கால பைரவர் கோவில்களுக்குச் சென்று வந்தோம்.  தமிழகம், ஆந்த்ரா என்று தென்னகத்திலிருந்து வருபவர்களிடம் இந்த சோழி மாதா கோவில் ப்ரபலம்.  சின்ன கோவில்.  காசி தரிசனம் முடிந்த கடைசியில் இங்கே வெளிக் கடையில் சோழிகள் வாங்கி சன்னதியில் அர்ச்சனை செய்வது போல அர்ப்பணித்து, “சோழி பலன் உனக்கு, காசி பலன் எனக்கு” என்று வேண்டிக்கொண்டு, ஒரு சோழியை பிரசாதமாக பீரோவில் வைத்துக்கொள்ள பெற்று வருகிறோம்.


துர்க்கா மந்திரும் அருமையாக இருந்தது.  துளசி மானஸ மந்திரில் சத்யநாராயணரிடம் சிவனார் வேண்டுவது போல ஒரு சன்னதி, சீதாராம சன்னதிகள், துளசிதாஸரின் முழு ஹிந்தி ராமசரிதமானஸமும் (ராமாயணம்) பெரிய பெரிய கல்வெட்டுகளில்.  ரோபோ பொம்மைகள் உதவியில் ராம, க்ருஷ்ண லீலை நிகழ்ச்சிகள் 5 ரூ டிக்கெட்டில் முதல் தளத்தில்.  ஃபோட்டோ அனுமதி உண்டு.  சங்கடங்கள் விமோசனமாகும் அனுமான் கோவிலில் பணப்பர்ஸ் மட்டுமே அனுமதி.  அருமையான தரிசனம்.  தக்ஷனின் திமிரை அடக்கிய கால பைரவர் கோவிலிலும் அருமையான தரிசனம்.  ஆட்டோவில் மேற்சொன்ன கோவில்களை 4 மணி நேரத்தில் தரிசித்து முடித்தோம்.  மதிய உணவு, ஓய்வுக்குப் பின் மீண்டும் கங்கைக் குளியல், சூரியாஸ்தமன சந்த்யா வந்தன பூஜை, வேத பாராயணம். புறப்பாடு.


வட இந்திய யாத்திரை - 4

 

வட இந்திய யாத்திரை - 3 ன் தொடர்ச்சி


மதுரா, ப்ருந்தாவன், ஆக்ரா, அயோத்யா

மதுரா-பிருந்தாவன்: பகவான் க்ருஷ்ணனின் பிறந்த ஊர், இடம், ஜெயில்.  தேவகி-வஸுதேவருக்கு க்ருஷ்ணன் பிறந்த சிறை அறை இன்றைக்குக் கோவில்.  வட இந்தியாவின் வழக்கப்படி எல்லைச்சுவர் முஸ்லீம் வழிபாட்டுத் தலத்துடன் பொதுவாக.  அயோத்தி ராம ஜன்ம பூமி, காசி விஶ்வநாதர், க்ருஷ்ண ஜன்மபூமி, குஜராத் ப்ரபாஸ தீர்த்தக் கடற்கரை (க்ருஷ்ணன் அவதாரம் முடிந்த தலம்) சோம்நாத் கோவில் என இன்று வரை எங்கு பார்த்தாலும் இடிபாடுகள், நஷ்டங்கள், துயரங்கள், உயிர்ப்பலிகளுக்கு நடுவில் ஒன்றன் பின் ஒன்றாக பதட்டத்துடன் வழிபாடு.  ராணுவ பாதுகாப்பில் கோவில், பைசா தவிர வேறெதுவும் உள்ளே எடுத்துச்செல்ல அனுமதி இல்லை, க்லாக் ரூமில் வைத்துச் செல்லலாம். 


அயோத்யா மதுரா மாயா(ஹரித்வார்) காசி காஞ்சி அவந்திகா(உஜ்ஜைனி) பூரி த்வாரவதி(த்வாரகா) என்பன முக்தி தரும் 7 தலங்கள்.  அதில் இந்த க்ருஷ்ண ஜன்ம பூமியும் ஒன்று.  இன்னும் அவந்திகா, பூரி, த்வாரகா தான் தரிசிக்க வேண்டிய மோக்ஷபுரிகள்.  இரும்பு ஜெயிலறைக்குள் வரிசையில் செல்கிறோம்.  பாலன் க்ருஷ்ணன் தரிசனம்.  வெளியே மற்ற மண்டபங்கள், பஜனைக் கூடங்கள்.  இங்கிருந்து 10 கி.மீட்டரில் க்ருஷ்ணன் லீலைகள் செய்த ப்ருந்தாவன் (வடக்கே வ, ப மாற்றங்களால் வங்காளம் பெங்கால் ஆகும், ப்ருந்தாவன் வ்ருந்தாவன் ஆகும், விஜய் பிஜய் ஆவார்).  இங்கு மில்க் பேடா ப்ரசித்தம்.  பேட்டரி ஏசி பஸ்ஸில் 16ரூ டிக்கெட் இங்கிருந்து வ்ருந்தாவன்னுக்கு!



ப்ரேம் மந்திர், த்வாரகாதீஶன், பங்கே பிஹாரி, இஸ்கான் என்று  நிறைய கோவில்கள்.  ப்ரேம் மந்திர் திறந்த வெளியில் மின்னொளியில் ரோபோ பொம்மைகளால் ராஸ லீலை, காளிங்க நர்த்தனம், டான்ஸ் ஃபவுன்டைன், ராதா க்ருஷ்ணன், ராம தர்பார், அடியார்கள் சிலைகள் என அமர்க்களமாக இருக்கிறது.  அக்ஷர் தாம் போலில்லாமல் இந்த எக்சிபிஷன்கள் எல்லாம் திறந்த வெளியில் இலவசம்.  மதுரா, பிருந்தாவன் தெருக்களில் இஷ்டமிருக்கோ இல்லையோ, உங்கள் நெற்றி, கன்னம் என்று ராதே, ராதே முத்திரை, நாமம் போட்டு ஒருவருக்கு 20-50 என்று ரூபாய் கேட்டு நச்சரித்து, பிடுங்கி விடுவார்கள், ஜாக்கிரதை. சுற்றுபுற சீர்கேது செய்யாத மாட்டு வண்டிகள் ஸ்கூல் பஸ்களாக பார்த்தோம்.







த்வாரகாதீஶன் கோவில் பஜனை, வளாகம் எல்லாம் யமுனைக் கரையில்.  இங்கே யமுனைக் கரையில் பெரிய கம்சன் கோட்டை, குழந்தை க்ருஷ்ணனை எடுத்துக்கொண்டு வஸுதேவன் யமுனையைக் கடந்த படித்துறை (வஸுதேவ் காட்), கம்ஸ வதம் முடிந்து கைகளைக் கழுவி, ஓய்வெடுத்த படித்துறை(விஶ்ராம் காட்)யில் தினம் மாலை யமுனை ஆரத்தி அருமையான அனுபவம் படகில்.  ஒரு படகில் சேலை நுனியை எடுத்துச் செல்கிறார்கள். மற்றொரு நுனி முடியும் இடத்தில் இருந்து மற்றொரு படகு என்று 8-10 படகுகளில் முழு யமுனைக்கும் வஸ்த்ரம் (உடை) அர்ப்பணிக்கும் அழகு.  வ்ருந்தாவன் யமுனையும் குளிக்க சுத்தமில்லை, படகில் நடுவில் சென்று வேண்டுமென்றால் சிறிது (ஓரிரு ஸ்பூன்) அருந்தலாம்.








பங்கே பிஹாரி! - நெளிந்து நின்று ரசிப்பவன் என்று பொருள்.  முகலாயர் படையெடுப்பில் அர்ச்சகரால் பூமியில் புதைத்து மறைக்கப்பட்ட இந்த மூலவர், பிற்காலத்தில் யாத்திரை வந்த ஹரிதாஸ் என்ற பக்தரால் கனவில் வந்த கட்டளையால் கண்டெடுக்கப்பட்டு, கோவில் எழுப்பப்பட்டது.  இரவு 9.30 மணிக்கு மூடும் ப்ருந்தாவனின் கடைசி கோவில், மற்ற கோவில்கள் 7-8 மணிக்கு மூடி விடுகிறார்கள்.



இஸ்கான் கோவில் கேன்டீனில் வழக்கம் போல சௌத் இண்டியன் தோசை, சாதம், இட்லிகளும் கிடைக்கிறது.  கோவிலும் மற்ற இஸ்கான் கோவில்களைப் போலவே.  க்ருஷ்ண பக்தர்கள் இந்த மதுரா, கோகுலம், ப்ருந்தாவனம், கோவர்த்தனம் இவைகளை வ்ரஜ பூமி என்று நூற்றுக்கணக்கான தொலைவுள்ள சுற்றளவை மாதக்கணக்கில் வலம் வருகின்றனர். 2-3 நாட்கள் இந்த மதுரா, ப்ருந்தாவன் தலங்களை தரிசிக்கலாம்.  மதுராவிலிருந்து ஆக்ரா 2 மணி நேர சாலைப் பயணம்.



ஆக்ரா: அழுக்கான யமுனைக் கரையின் தாஜ்மஹால் தவிர ஆக்ரா ஃபோர்ட், அக்பரின் தலைநகரான யுனெஸ்கோவின் ஃபதேபூர் சிக்ரி, அக்பர் புதைக்கப்பட்ட இடம் இவைகளையும் பார்க்கலாம் 2 நாட்களில்.  ஃபோட்டோ ஷூட்டிற்கான இடங்கள்.  தாஜ்மஹால் வெள்ளி விடுமுறை. மற்ற நாட்களில் சூரியோதயம் முதல் அஸ்தமனம் வரை சென்று பார்க்கலாம்.  அனுமதி இல்லை என்ற போர்டுகள் இருக்கு, ஆனால் ஃபோட்டோக்கள் எடுக்கிறார்கள்.  முன்பு அனுமதி இலவசமாக இருந்தது.  இப்போது ஷாஜகான், மும்தாஜ் புதைக்கப்பட்டுள்ள தாஜ்மஹாலின் மூல அறைக்கு 200ரூ டிக்கெட்.  மற்ற இடங்கள் மட்டும் பார்க்க 40ரூ.


அயோத்தி: ராம ஜன்ம பூமி கோவில் கட்டுமானப் பணிகள், எழில்மிகு தூண்கள், வளைவுத் தோரணங்கள் தயார் நிலைகள் சில வருடங்களாக.  கும்பாபிஷேகம் முடியும் வரை பால ராமன், லக்ஷ்மணன், பரத, சத்ருக்னர் சிலைகள் பாலாலயத்தில்.  1-2 கி.மீ முன்பாகவே தனியார் லாக்கர்களில் பொருள்களை வைத்து விட்டு, சின்ன பர்சில் பணம் மட்டும் வைத்துக் கொண்டு 2-3 ராணுவ பரிசோதனைகளைத் தாண்டி, கிட்டத்தட்ட இசட் பிரிவு பாதுகாப்பில் நாம் காலணிகளோடு நடந்து சென்று தரிசிக்கிறோம்.  இந்தக் கோவில் தவிர ஹனுமான் கடீ, ராமன் அயோத்யாவாசிகளோடு இறுதியில் வைகுண்டத்துக்குச் செல்ல இறங்கிய ஸரயூ நதி ஸ்னானம் போன்றவை இங்கு ப்ரசித்தம்.  ஒரு நாளில் ப்ரயாகை (அலஹாபாத்)யிலிருந்து 4 மணி நேரம் சாலைப்பயணம் செய்து இவைகளை முடித்துக் கொண்டு மீண்டும் ப்ரயாகை அல்லது காசிக்கு சென்று விடலாம்.




Jul 3, 2022

வட இந்திய யாத்திரை - 3

வட இந்திய யாத்திரை 2 ன் தொடர்ச்சி

டெல்லி: நம் தேசத்தின் தலைநகரம். மகாபாரத காலத்தில் இருந்தே

இது வெகு பிரசித்தம். சென்னை, கல்கட்டா போன்ற தலைநகரங்கள்

தரைவழி, வான்வழி, கடல்வழி மூன்றாலும் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த டெல்லி சுற்றிலும் நிலம் சூழ்ந்தது.  மலைகளும்

கிடையாது. உலர் குளிரும், வெயிலும் ஒவ்வொரு வருடமும் இங்கு

வாட்டும்.  எல்லா மாநிலங்களின் பிரதிநிதிகளும் அதிகம் உலாவும்

இடம் என்பதால், எல்லா மாநிலங்களின் அலுவலகங்கள்,

தங்குமிடங்கள் என்று பரபரப்பாக இருக்கும் இடம். அதனால்

டிராபிக், சுற்றுப்புற சுகாதார கேட்டிற்குப் பஞ்சம் கிடையாது. 

நகரின் குடியிருப்பு, தொழிற்சாலை என மொத்த கழிவும் யமுனை

நதியில் தான். வட மாநிலங்கள் எல்லாமுமே முகலாயர்

படையெடுப்புகளின் எச்சங்கள் நிறைந்தவை. பல படையெடுப்புகள்,

துக்கங்கள், துயரங்களைத் தாண்டி மீண்டும் மீண்டும் எழுந்து

நிற்கும் நம் கலாசார அடையாளங்களாக வரலாற்று,

வழிபாட்டுத் தலங்கள். 

முழுதாக மூன்று நாட்கள் இருந்தால் டெல்லியை மட்டும் நிம்மதியாக மெட்ரோ ரயில், ஆட்டோ உதவியோடு சுற்றிப்பார்த்து ஷாப்பிங்கும் முடித்துக் கொள்ளலாம். ஷூ, கோட், ஸ்லீப்பிங் பேக் (பாதி மெத்தையில் படுத்துக்கொண்டு மீதியை போர்த்திக்கொண்டு ஸிப் போட்டு மூடிக்கொள்ளலாம்) போன்றவை இங்கு பிரபலம்.  தெருவோரங்களில் கூடை, தட்டுக்கடைகளிலும், கடைகளிலும் கிடைக்கும். ஸ்லேட்டில் நாமும் கடைக்காரரும் அழிச்சி, அழிச்சி விலை எழுதி வாங்கலாம்.  கூசாம பயமின்றி விலை குறைத்துப் பேச வேண்டியுள்ளது.    

வருடா வருடம் கொடி ஏற்றப்படும் முகலாயர்களின் செங்கோட்டை, குடியரசு தின ராணுவ அணிவகுப்பு நடைபெறும் வழியில் இருக்கும் இந்தியா கேட், ராஷ்ட்ரபதி பவன், பிர்லா குடும்பத்தார் கட்டி வைத்துள்ள பிர்லா மந்திர், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்(இஸ்கான்) கோவில், தாமரை வடிவிலான லோட்டஸ் டெம்பிள், 2 கின்னஸ் சாதனைகள் படைத்த சமீபத்திய வரவான ப்ரம்மாண்டமான அக்ஷர்தாம் சுவாமி நாராயண் மந்திர், துருப்பிடிக்காத இரும்பு தூண் உள்ள குதுப்மினார் வளாகம்… டெல்லியில் 2-3 ரயில்வே ஜங்ஷன்கள் உள்ளன.  எல்லாவற்றிற்கு அருகிலும் 600 ரூபாய் முதல் ஐயாயிரம் பத்தாயிரம் என்று நம் காசுக்கு தக்க ஏசி நான்-ஏசி அறைகள் கிடைக்கின்றன. 

ஐஸ் பெட்டிக்குள் வைத்த இளநீர் 80 ரூபாய், சாதா இளநீர் 60 ரூபாய், வெள்ளரிக்காய், கொய்யாக்காய், தர்பூசணி, லஸ்ஸி, ஆரஞ்சு, ஆப்பிள் பழ வகைகள் கிடைக்கின்றன. ராஷ்ட்ரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரை நடந்து செல்லும் அனுபவம், அதுவும் மாலை சூரிய அஸ்தமன வேளையில் நடந்து செல்லும் அனுபவம் மிகவும் அருமையாக, கண்ணுக்கு இனிமையாக இருக்கும். திங்கட்கிழமை சில இடங்கள் (தொல்பொருள் இலாகா) மூடப்பட்டிருக்கின்றன. 


பஞ்சாபில் இருக்கும் ஜந்தர் மந்தர் மிகவும் பிரசித்தம். அதைப் போலவே இங்கேயும் ஜந்தர்மந்தர் இருக்கிறது.  இங்கு கட்டிடங்களை எழுப்பி அதன் நுணுக்கங்களை, நிகழ்வுகளை, பரிமாணங்களை கொண்டு வான சாஸ்திரங்கள், கோள்கள் இருக்குமிடம், தற்போதைய நேரம், நட்சத்திரங்களைப் பற்றிய விபரங்களை பண்டைய அறிவியல் சாதனைகளாக காணலாம். விளக்கங்களோடு தகவல் பலகைகளும் ஒவ்வொரு படைப்புகளுக்கும் அருகில் இருக்கின்றன. டிக்கெட் நாற்பது ஐம்பது ரூபாய். தில்லியில், பஞ்சாபில் எந்த இடத்திலுமே 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. இலவச அனுமதி. ஆன்லைனில் வெப்சைட், மொபைல் ஆப் மூலம் டிக்கெட் வாங்கினால் ஐந்து பத்து ரூபாய் சலுகை தருகிறார்கள். அதை எப்படி வாங்குவது என்று விளக்கங்களும் ஆங்காங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. தலைநகரம் என்பதால் எல்லா இடங்களிலும் டெல்லி போலீஸ், மத்திய போலீஸ், ராணுவ வீரர்களை ஆயுதங்களோடு காணமுடிகிறது. எல்லா மாநிலங்களிலும் மேலே நாங்கள்தான் செய்தோம், நாங்கள்தான் செய்தோம் என்று மாநில, மத்திய பிரதிநிதிகள் சொல்லிக்கொள்வார்கள். அது இங்கு சற்று அதிகமாகவே இருக்கிறது. 





துருப்பிடிக்காத இரும்பு தூண் இருக்கும் குதுப்பினார் வளாகம் போட்டோ ஷூட்டிற்கு அருமையாக உள்ளது.  நன்கு பராமரிக்கப்படுகிறது. முகலாய அரச குடும்பத்தினர்களை புதைத்த கல்லறைகளை எங்கும் காண முடிகிறது. நிறைய வேலைப்பாடுகள் எங்கு பார்த்தாலும். தங்கள் பங்குக்கு தொல்பொருள் இலாகா துறையினர் வழக்கம்போல் பெருக்கி, தூய்மை செய்து, புல் வளர்த்து டிக்கெட் போடுகிறார்கள். டெல்லி, பஞ்சாபில் சுற்றுப்புறத்தை பாதிக்காத பேட்டரி ஆட்டோக்கள் பிரசித்தமாக இருக்கிறது. அதிகபட்சம் 30 கிலோமீட்டர் வேகம் செல்கிறது. ஷாக் அப்சர்வர் இல்லாத காரணத்தால் வயதானவர்களுக்கு, பெண்களுக்கு, உடல்நிலை சரி இல்லாதவர்களுக்கு பயணிக்க சற்று கடினமாக இருக்கிறது. 




ரெட் ஃபோர்ட் என்னும் செங்கோட்டை.  பிரதமர் கொடியேற்றும் இடம். போட்டோ எடுத்துக் கொள்ளலாம். எங்கும் டிக்கெட் உண்டு. சற்று தொலைவிலேயே ஆட்டோ/பஸ் நின்றுவிடும். அங்கிருந்து செங்கோட்டை வாசலுக்கு நடந்து வரலாம் அல்லது பேட்டரி ஆட்டோவில் 10 ரூபாய் கொடுத்து வரலாம். கோட்டைக்கு உள்ளே அரச குடும்பத்தினர் குளிக்குமிடம், குறைகள் கேட்கும் இடம், நந்தவனம், சுல்தான் படுக்கையறையிலிருந்து பாதாள வழி கொண்ட இரும்பு மசூதி என்று இரண்டு மூன்று இடங்கள் இருக்கின்றன. மற்றபடி பராமரிப்பு ஆக்ரா கோட்டையை போல் இல்லை.




பஹாய் மத வழிபாட்டுத் தலமான லோட்டஸ் டெம்பிள் பெரிய, நன்கு பராமரிக்கப்படும் தனியார் அமைப்பு.  மத பேதங்கள் அற்றது.  பல விருதுகள், ஈஃபில் டவர், தாஜ்மஹாலையும் தாண்டிய பார்வையாளர் எண்ணிக்கையையும் சில வருடங்கள் பெற்றது.  நாங்க போயிருந்த போது கீதை, பைபிள், பௌத்தம், குரானிலிருந்து சில வாக்கியங்கள் வாசிக்கப்பட்டன.  2000 பேருக்கு மேல் அமரும் பிரமிப்பான கோவிலுக்குள் காலணி, புகைப்படங்கள் அனுமதி இல்லை.




சுவாமி நாராயண் அக்ஷர்தாம் மந்திர்: மிகக் குறைந்த காலத்தில் (5 வருடங்கள்) தன்னார்வலர்களைக் கொண்டு கட்டப்பட்ட மிகப்பெரிய ஹிந்துக் கோவிலுக்கான கின்னஸ் விருது பெற்றது.  பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கான வேலை வாய்ப்பு தந்தது.  பழங்காலத்து பாரதத்தின் பெருமை, வான சாத்திரம், மருத்துவம், விமானம், போர், கல்வி முறை, வாழ்வியலை படகில் பயணித்து பிரமிக்கும் காட்சி, சினிமா, ரோபோ காட்சிகள், படிக்கிணற்றில் மாலை நேரத்து லேசர் மின்னொளியில் பிரம்மாண்டமான செயற்கை நீரூற்றுக் காட்சி என 600-800 ரூபாய்க்கு எக்சிபிஷன்கள் கொண்டது.  கான்க்ரீட் உபயோகமின்றி பண்டைய முறையில் சிற்பங்கள், விளக்கொளிகள், பராமரிப்பு கொண்டது.  மூலஸ்தானத்து தங்கத்தினாலான நாராயண், சிவன், ராமன் சன்னதிகளைத் தரிசிக்க இலவசம்.  எக்சிபிஷன்களோடு முழுமையாக அனுபவித்துப் பார்க்க 3-4 மணி நேரங்கள் நிச்சயம் ஆகும்.  குழந்தைகளும், பெரியோர்களும் ஒரு முறை பார்க்கலாம். எந்த ஒரு எலெக்ட்ரானிக் சாதனங்களும், பெரிய பைகளும் அனுமதி இல்லை., க(கொ)டுமையாக செக் செய்து அனுமதிக்கிறார்கள்.  மற்றொரு முந்தைய அக்ஷர்தாம் குஜராத்தில் உள்ளது.  டில்லியின் ஹஸ்ரத் நிசாமிதீன் ரயிலடியிலிருந்து மதுரா (வட மதுரை நம் படைப்புகளின் படி) 2-3 மணி நேர பயணம்.