1. விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேதும் அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை முகவோனே
2. எருவாய் கருவாய் தனிலே யுருவா
யிதுவே பயிராய் விளைவாகி
இவர்போ யவரா யவர்போ யிவரா
யிதுவே தொடர்பாய் வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதா
யுடனே யவமா யழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோ தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லிணைதா ளருள்வோனே
முநிவோ ரமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல் விடும்வேலா
திருமால் பிரமா வறியா தவர்சீர்
சிறுவா திருமால் மருகோனே
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
திருவீ ழியில்மாழ் பெருமாளே
3. சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் முருகோனே
4. ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக தம்பிரானே
5. ஈனமிகுத் துளபிறவி யணுகாதே
யானுமுனக் கடிமையென வகையாக
ஞானஅருட் டனையருளி வினைதீர
நாணமகற் றியகருணை புரிவாயே
தானதவத் தினின்மிகுதி பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ முருகோனே
ஆனதிருப் பதிகமரு ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே
6. நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி
நடித்து விதத்தி லதிமோகம்
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி
நலத்தி லணைத்து மொழியாலுந்
திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை
திரட்டி யெடுத்து வரவேசெய்
திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள்
தெவிட்டு கலைக்குள் விழுவேனோ
பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து
படர்ச்சி கறுத்த மயிலேறிப்
பணைத்த கரத்த குணத்த மணத்த
பதத்த கனத்த தனமாதை
மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து
வெளுத்த பொருப்பி லுறைநாதா
விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க
ம்ருகத்தை யெடுத்தோர் பெருமாளே
7. தெருவினில் நடவா மடவார்
திரண்டொ றுக்கும் வசையாலே
தினகர னெனவே லையிலே
சிவந்து திக்கும் மதியாலே
பொருசிலை வளையா இளையா
மதன்தொ டுக்குங் கணையாலே
புளகித முலையா ளலையா
மனஞ்ச லித்தும் விடலாமோ
ஒருமலை யிருகூ றெழவே
யுரம்பு குத்தும் வடிவேலா
ஒளிவளர் திருவே ரகமே
யுகந்து நிற்கும் முருகோனே
அருமறை தமிழ்நூ லடைவே
தெரிந்து ரைக்கும் புலவோனே
அரியரி பிரமா தியர்கால்
விலங்க விழ்க்கும் பெருமாளே
8. ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த குமரேசா
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ ணங்க அருள்வாயே
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்க ளறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
போகமுற வேவி ரும்பு மடியேனை
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
நீதிநெறி யேவி ளங்க வுபதேச
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த வடிவேலா
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள் வினைதீர
ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்த பெருமாளே
9. இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா
அறநூலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment