Apr 23, 2018

நாகலாபுரம் ட்ரெக்கிங்

நாகலாபுரம் ட்ரெக்கிங்

தேதி: 21 ஏப்ரல் 2018, சனிக்கிழமை

ரூட்: ராமாபுரம் - திருமழிசை - திருவள்ளூர் - பூண்டி - ஊத்துக்கோட்டை - சுருட்டப்பள்ளி - நாகலாபுரம் - ராமகிரி - பிச்சாத்தூர் - 100 கிலோ மீட்டர்




டீம்:
பால்பாண்டி - லீடர்
ஞானசேகர்
ராஜ்மோகன்
பழனி
மாஸ்டர் விசேஷ்
ஸ்ரீநாத்
ஸ்ரீகாந்த்
இளவரசன்
சிவகுமார்
என் பொண்ணும் நானும்

அன்னமிட்ட கை: பால்பாண்டி அம்மா

நாகலாபுரம் - தமிழகத்திலிருந்து திருப்பதி போற வழில ஆந்திரா பார்டர்ல நொழஞ்சு கொஞ்ச நேரத்துல வந்திடும்.  சுருட்டப்பள்ளில பள்ளி கொண்ட சிவன், நாகலாபுரம் ட்ரெக்கிங்னு சொல்றாங்க, ஆனா, அதையும் தாண்டி பிச்சாத்தூர்னு ஒரு ஊர்.  அங்க தான் இருக்கு இந்த மலை, சுனைப்புனல் எல்லாம்.  நாகலாபுரம் க்ருஷ்ணதேவராயர் அம்மா பேர்ல உருவாக்கப்பட்டதுன்னு வரலாறு.

வருஷம் முழுக்க போலாம் இங்க,  ஆனா மழைக்காலத்துல சூப்பரா வழுக்கும் வழி முழுக்க, அட்டைபூச்சி ஆசமா இருக்கும்,  குளிரும், கோடைக்காலத்துல வெயில் மண்டய பொளக்கும்,  நமக்குப் பழக்கப்பட்டது தானே.  தண்ணி இருக்கான்னு கேட்டுட்டுப் போனா நல்லா இருக்கும்.

சென்னை ட்ரெக்கர்ஸ் டீம்ல அவங்க டெஸ்ட்டுல செலக்ட் ஆகி, ரூல்ஸ் ஃபாலோ பண்ணி, டீமோட கைடென்ஸ்ல போகனும், நமக்குத்தான் ஒருத்தன் சொல்லி, அதைக் கேட்டு நடந்து பழக்கம் கிடையாதே,   எங்க டீம் லீடர், பால்பாண்டி இங்கெல்லாம் போய்ட்டு வந்திருக்கார்,  போலாமான்னு கேட்க, 10-20 பேர்ல ஆரம்பிச்சி, கடைசில 11 பேர் போய்ட்டு வந்தோம்.  நான் என் பொண்ண கூட்டிட்டுப் போலாம்னு ரெண்டு வாரமாவே ரூட், க்ளைமேட், ஏற்கனவே போய்ட்டு வந்தவங்க அனுபவங்கள்னு பாத்து வெச்சிருந்தேன்.

பூச்சி/கொசுக்கடி மருந்து,
தேங்காயெண்ணெய்,
பேண்டேஜ்,பேண்டேஜ் துணி,
உலர் பழங்கள், பிஸ்கெட், புளிப்பு மிட்டார்,
மொபைல், கேமரா,
மலையேற்ற ஷூ,
லைஃப் ஜாக்கெட்/ட்யூப்,
தீப்பெட்டி/லைட்டர், சூடம், நூடுல்ஸ் பாக்கெட், பாத்திரம், தட்டு,
ட்ராக் சூட்/கார்கோ பேண்ட்/ஸ்விம் சூட்
தொப்பி, சன் க்ளாஸ்,
ஸ்ட்ரா வெச்ச வாட்டர் பாட்டில்,
துண்டு,
கத்தி,
டார்ச் லைட்,
கம்பாஸ் (திசைமானி)
பெப்பர், சால்ட், லெமன்

எல்லாம் எடுத்துட்டுப் போலாம்னு லிஸ்ட்டும் ரெடி, ஒரு சிலத விட்டுட்டு மிச்சதெல்லாம் வாங்கியாச்சு.  பால், பழனில்லாம் ஏற்கனவே போய்ட்டு வந்திருக்காங்க.  மிச்ச பேர் எல்லாம் புதுசு. ஒரு நாலு பேருக்கு நீச்சல் தெரியாது, ரெண்டு பேர் தெலுகு பாய்ஸ், கெளம்ப ரெண்டு நாளைக்கு முன்னாடி தண்ணியடிச்சுட்டு வாரா வாரம் யாராவது தவறிப்போய்டறாங்கன்னு, ட்ரெக்கிங் தடை பண்ணிட்டாங்கன்னு ந்யூஸ் காம்சாங்க ஃப்ரெண்ட்ஸ், லோக்கல் மக்கள்ட்ட ஃபோன் பண்ணி கேட்டா அது அடிக்கடி நடக்கும், தடையெல்லாம் ஒண்ணும் பண்ணலன்னுட்டாங்க.

வெயில் ஜாஸ்தியா இருக்கு,  காலை 5 மணிக்கு கிளம்பிடலாம்னு ப்ளான்,  6 மணிக்கு தான் கிளம்பினோம் ராமாபுரத்துலேந்து, பழனி கார்ல, பால் கார்ல ரெண்டு டீம்,  சுருட்டப்பள்ளில ஒரு ரோட்டோரக் கடைல மூணு ரூபாய்க்கு மசால் வடை, சாப்டு, டீ குடிச்சு, வழில, தர்ப்பூசணி சாப்டுட்டுப் போனோம்.  ஆந்த்ரால ரோட்டோரம் பனங்கள்ளு விக்கறாங்க, நம்மூர்ல மது ஒழிப்பு, கள்ளச்சாராய சாவைத் தடுக்கறேன்னு, டாஸ்மாக்க தொறந்து வெச்சிருக்காங்க, சாகற வரைக்கும் சொன்னா கேப்பான், கொஞ்ச கொஞ்சமா சாகட்டும்னு,

ஒன்பது மணிக்குப் போய் சேந்தோம் ட்ரெக்கிங் பார்க்கிங் இடத்துக்கு,  மெயின் ரோடுலேந்து மண் ரோடு ஒரு 2-3 கிலோ மீட்டர்.  பால்பாண்டி அம்மா காலை ரெண்டு மணிக்கு எழுந்து பத்து பேருக்கு புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்கா கறி, உருளைக்கிழங்கு கறி, மாங்கா துண்டம், கரண்டி, அலுமினியம் பேக்கிங்னு தடபுடல், ரெண்டு வேளைக்கு சாப்டோம், எங்க வீட்ல கெஸ்ட் வந்திட்டதால 20 இட்லியும், ஒரு டப்பா தயிர் சாதமும் தான் நான் எடுத்துட்டுப் போயிருந்தேன், பழனி பையனுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்திருந்தார்.  பார்க்கிங் சார்ஜ்ஜுன்னு 20 ரூபாய் வாங்கறாங்க, உள்ளூர்க்காரங்கன்னு நெனைக்கறேன்.  சாப்டுட்டு, அலுமினியம் கன்டெய்னர்ல மிச்ச சாப்பாட பேக் பண்ணிட்டு, காலி பாத்ரத்தையெல்லாம் கார்லயே வெச்சிட்டு கிளம்பினோம்,

சரியான வெய்யல், ஏரிக்கரைல ஏறி கொஞ்ச தூரம் நடந்து, உள்ள இறங்கினோம்.  மழை, வெள்ளத்தின் போது இந்த டேம்க்கு தண்ணி வந்து ரொம்பும் போல இருக்கு.  வழி நெடுக சைஸ் வாரியா கூழாங்கற்கள், மணல், இன்னும் சூடு ஏறல, ஒன்றை, ரெண்டு மணி நேரம் பாட்டு பாடிட்டு, கேட்டுட்டு, பேசிட்டு முதல் ஓடையை வந்து சேந்தோம்.  முதல் தடவைங்கறதால வழி நெடுக பட்டணத்த பாத்தாப்ல ஃபோட்டோஸ்,  தண்ணி சூப்பரா இருந்துது, குடிச்சிட்டு, பாட்டில்கள்ல ரொப்பிட்டு தாண்டினோம்.  நோ பாட்டில், அன்ஹெல்த்தி ட்ரிங்க்ஸ், ப்ளாஸ்டிக் குப்பைய காட்டுல போடறதில்லன்னு முடிவு பண்ணியிருந்தோம் பகுத்தறிவை யூஸ் பண்ணி,   வெல்லம் தூளா ஒரு கிலோ வாங்கிட்டு போயிருந்தேன். அதோட சுக்குப்பொடியும் ஒண்ணு, ரெண்டு விரல் போட்டு பாட்டில்ல குலுக்கி பானகம் ரெடி,  அடிக்கடி குடிச்சு, தொப்பைல லோடு சேக்காம, ஸ்ட்ரா வெச்ச வாட்டர் பாட்டில்.  கார்கோ பேண்ட்ல ஜெம்ஸ், ஆரஞ்சு, சீரக மிட்டாய்கள், பேரிச்சை, கடலை மிட்டாய், பிஸ்கெட் :)  எப்புடி,

பால் கொண்டு வந்த சாப்பாட்டால இந்த ஸ்னாக்ஸ் எல்லாம் அப்டியே ரிட்டர்ன் ஆய்டுச்சு.  முதல் ஓடைய தாண்டினதும் வெயில் தெரியல, மலை ஆரம்பிச்சுது, பாத்து, பாத்து பத்ரமா நடந்து ரெண்டாவது பனலுக்குப் போய் சேந்தோம்,  அதிக பட்சம் 10 அடி ஆழம் நடுவுல, இறங்கிப் போலாம்.  நல்லா குளிச்சு, மலை மேல ஏறி குதிச்சி ஆட்டம், கொண்டாட்டம்.  பழனி சார் வழக்கம் போல இங்கயே தங்கிட்டாரு.  பையன மட்டும் எங்கள நம்பி அனுப்பிச்சு வெச்சார்.  மூணாவது குளத்துக்கு அங்கிருந்து ஒரு அரை மணி நேரம் ஏறனும், பெண்களுக்கும், குண்டு பாய்ஸ்சுக்கும், நீச்சல் தெரியாதவங்களுக்கும் தேவையில்ல அங்க போறது,  எவன் சொல்றது, யார் கேக்கறது,  கொஞ்சம் கஷ்டம் சில இடங்கள்ல, குனிஞ்சு போகனும், பாறைய புடிச்சிட்டு, கால விளிம்புல வெச்சி ரெண்டு மூணு அடி போகனும் ஒரு எடத்துல..  இந்த இயற்கை நீர் நிலைகளுக்கு வரும்போது இன்னத்துக்கு ஷாம்பு, சோப்பு போட்டு குளிக்கறாங்கன்னு தெரியல,  எல்லாருக்கும் அதுதான் குடி நீரும் கூட,

போய் சேந்தாச்சு மூணாவது குளத்துக்கு,  குறைஞ்சது நாலாள் அடி ஆழம் இருக்கும், கொச கொசன்னு மீன்கள், பணிப்பெண்களாய்,  தெளிந்த , குளிர்ந்த நீர், குட்டி வாட்டர் ஃபால்ஸ், ட்யூப்ப இதுக்குன்னு சேப்பாக் ஸ்டேடியம் கிட்ட ஸ்போர்ட்ஸ் கடைல 400 ரூபாய்க்கு வாங்கியிருந்தேன் பொண்ணுக்குன்னு, 20 அடிக்கு தடியா ஒரு நைலான் கயிரும் தயார், மரக்கிளைல கட்டி, ட்யூப்ப ஊதி இன்னொரு முனைல கட்டி பொண்ண அந்த ஏரில இறக்கியாச்சு,    இறங்கிக் குளிக்க முடியாது, தண்ணியடிச்சிட்டு பாட்டில்கள எதுக்கு ஒடச்சு, ஒடச்சுப் போடறானுங்கன்னு தெரியல.  முட்டாப்பசங்க, ஊறிப்போன கால்ல எப்டி ஏறும்.  தீவட்டி பாய்ஸ்,  மலை மேல ஏறி, ஏறி குதிச்சு, நீச்சலடிச்சு, ப்ராணாயாமம் பண்ணிட்டே பத்மாசனம் போட்டு தண்ணில மிதந்து, நீச்சல் தெரியாத ஒருத்தனை உயிர் காத்து, வெயில்ல குளிர் காஞ்சு, ஃபால்ஸுல தலைய தோச்சு, குரங்குள தொரத்தி, நாங்க சாப்டு, பின்னர் அதுக்கும் குடுத்து, எங்கயும், கிழ விழாம, அடி பட்டுக்காம இறங்கி வந்தோம்  மாலை சூரிய அஸ்தமனம் அழகாய் ஏரில, மலைல, மரங்கள்ல,  நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டு போச்சண்ணே, அந்த மூணாவது குளத்துக்கிட்ட ஒரு குகை, குரங்குகள், காட்டுக் காய், பழங்கள், இப்படி யாராவது வரும் போது பிச்சையெடுத்து நாட்டு உணவு, தவ வாழ்க்கை, சூப்பரா இருக்கும்.  நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு இறங்கி வந்திட்டேன்.

பால்பாண்டி டீம முந்தி நாங்க வந்த வழிய விட்டு பெரிய பாளையம் ரூட்ல மாறி, வழில தேவையேயில்லாம கூகிள் மேப்புல வர்ற பொண்ணு சொல்றத தேட்டு ரெண்டு முட்டுச்சந்துக்குப் போனது தான் மிச்சம்.  பத்து மணிக்கு ஆபீஸ் கிட்ட அக்ஷயான்னு ஒரு வெஜிடேரியன் ஹோட்டல், டேஸ்ட், க்வாலிட்டி ஓகே, சர்வீஸ், ரேட் ஜாஸ்தி,  ஒவ்வொண்ணத்தையும் மூணு, மூணு தடவ கேட்க வேண்டியிருக்கு.  ஞானசேகர் ஆக்டிவால ஆபீஸ்லேந்து நைட் 12 மணிக்கு வீடு வந்து சேந்தோம்,  எல்லா புகழும் பால் பாண்டிக்கே :)

காட்டுல, நீர் நிலைகளில் குப்பை போடாதீங்க, சோப், ஷாம்பூ போட்டு குளிக்காதீங்க, எல்லா மூலிகைகளும் அந்த தண்ணிலயே இருக்கும், நமக்கு அங்க இருக்கும் போது அது தான் குடி நீர்.   சாராய பாட்டில தயவு செய்து உடைச்சுப் போடாதீங்க.

ஒவ்வொரு அடியும் பாத்து கண்ணு ஓகே சொன்னதும் காலை அழுத்தி வெச்சு நடங்க,  யாரையும் அவசரப்படுத்தாதீங்க, இஷ்டம் இல்லாதவங்கள, நீச்சல் தெரியாதவங்கள கட்டாயப்படுத்தி கூட்டிட்டுப் போகாதீங்க.  எதுக்கும் நீங்க பொறுப்பாக முடியாது.  வேர்களும், மரங்களும், பாறைகளும் தான் புடிச்சு ஏறுவதற்கும், கால் வைக்கறதுக்கும் துணை,  வேர்னு நினைச்சு தூங்கிட்டு இருக்கற பாம்பு, கறையான் அரிச்ச மரங்களை புடிச்சு ஏறாதீங்க :),  அட்டை பூச்சி கடிச்சு, கொஞ்ச நேரம் ரத்தம் உரிஞ்சனுத்க்கப்பறம் தான் நமக்கு எரியும், தெரியும், ஷூ, சாக்ஸ்குள்ளயும் சில அட்டைப்பூச்சிகளால போக முடியும்,  ஒரு குச்சியால அத எடுத்துப் போட்டுட்டு, கால கழுவிட்டு நடங்க, அதுவே சரியாய்டும் நாம வீட்டுக்கு வர்றதுக்குள்ள.

No comments: