தண்ணீரைப் பிழைக்கக்கூடாது என்று ஒரு பழமொழி. தண்ணி கம்மியா ஓடும் போதெல்லாம் அத எல்லாரும் சேந்து மூச்சா, ......... அலம்பிக்கறது, பவானி, அமராவதி, குடமுருட்டி ஆறுகளோட சாக்கடை, ஆலைக்கழிவுகள். திருச்சி சிந்தாமணி, டவுன் பகுதிகளோட சாக்கடைக் கலப்பு எல்லாம் நடந்து கொண்டிருந்தது. வருஷங்கள் ஆச்சு. இப்ப வருஷத்துக்கு ஒன்னு, ரெண்டு மாசம் தான் அதிக பட்சமா காவேரி முழுக்க ஓடுது. 2-3 மாசம் ரெண்டு கரையையும் ஒட்டி ஓடுது. மிச்ச மாசமெல்லாம் வற்றாமல் மணல் ஓடுது, தண்ணி இருந்தா தண்ணிய எடுப்போம், இல்லாட்டி மண்ண எடுப்போம். ஊருக்கெல்லாம் கொடுப்போம். எங்க ஊர்ல பெரிய, பெரிய கிணறெல்லாம் 4-5 போட்டு கி.மீ கணக்குல தண்ணிய உறிஞ்சி கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள். எங்க ஊருக்கே இப்ப ஆத்து நீரும் இல்ல, நிலத்தடி நீரும் இல்ல, வருஷங்கள் போராடி காவேரி பைப் கனெக்ஷன் வந்தது தெருவுக்கு. கூட்டுக்குடிநீர்க் கிணறுகளுக்கு தண்ணி ஓட்டம் இல்லைன்னு காவேரில ரெண்டு கரைலயும் ஓடின தண்ணிய ட்ராக்டர் வெச்சு வாய்க்கால் மாதிரி கிணறுகளுக்குக் கிட்ட கொண்டு வந்தாங்க.. இப்ப எந்த கரைலயும் தண்ணி இல்ல, ஊற்றும் இல்ல, தடுப்பணை கட்டி தண்ணி தேக்கறாங்க, வந்தா !!
தமிழ்நாட்டுல எல்லா ஆற்றங்கரை ஊர்க்கதையும் இதேவாகத்தான் இருக்கும், அதனால் ஊர்ப்பேர் சிறப்பா சொல்லல :( வினை விதைத்தவன் வினையும், தினை விதைத்தவன் தினையும் அறுப்பான், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு பல பழமொழிகள் இயற்கையைப் போற்றுத் துதித்துப் பாதுகாக்காமல், சீரழித்து அழிந்து கொண்டிருக்கும் எங்கள் வரலாறுதான் இது.
28 மார்ச் 2018, புதன் கிழமை இரவு 11.20 க்கு வரவேண்டிய RPN ஏசி செமி ஸ்லீப்பர் பஸ், ஒரு மணி நேரம் தாமதமாக க்ரோம்பேட்டைக்கு வந்தது. காலை திருச்சில இறங்கி, எங்க ஊர்க் காவிரில ஒரு குளியல் போட்டு, வீட்டுல பரம்பரையா பூஜை பண்ணிட்டு வர்ற சாமிகளுக்கு அபிஷேகம் பண்ண தீர்த்தம் குடத்துல எடுத்திட்டு வந்து சூப்பர் பூஜை. ஒரு சில வருஷங்கள் ஆச்சு நான் பூஜை பண்ணி.
நண்பர் கும்பகோணம் ஸ்ரீ சிவராம சிவாச்சாரியார் சமீபத்துல முக்திநாத், கைலாஷ், மானசரோவர் தீர்த்த யாத்ரை, க்ஷேத்ராடனம் பெற்றோர்களுடன் சென்று, ஒவ்வொரு ஸ்தலத்திலும் அந்த குளிரில் குளித்து ஆசாரக்குறைவில்லாமல் சிவபூஜை செய்து, எனக்கும் தீர்த்தம், ருத்ராக்ஷ மாலை கொண்டு வந்து கொடுத்தார். பாக்யம் செய்தவர், போகாமலேயே அந்தக் கதையெல்லாம் கேட்க, எழுத, ப்ரசாதம் கிடைக்க நானும் பாக்யம் செய்திருக்கிறேன். எங்க ஊர் தர்மசம்வர்த்தினியம்பா சமேத கம்பரசன்பேட்டை கைலாசநாதருக்கு அன்றைய ப்ரதோஷ அபிஷேகத்துக்கு இந்த கைலாஶ், மானசரோவர் தீர்த்தம் அமைந்தது. கும்பாபிஷேகம் முடிந்து இன்னும் ஒரு வருஷம் ஆகவில்லை. நானும் ருத்ரம், சமகம் க்ரமபாடம் சொன்னேன் அன்று பூஜையின் போது. ப்ரதோஷ புறப்பாடும் உண்டு, ரிஷப வாகனத்தில் ஸ்வாமியும், அம்பாளும் எழுந்தருள நானும் இந்த முறை ஒரு வாரைப் பிடித்தேன். அதிக அளவில் 2-3 மணி நேரங்களுக்கு பக்தர் கூட்டம், தேவார, திருவாசகப் பாடல்களோடு எண் திசைகளிலும் தீபாராதனைகளோடு சிறப்புப் புறப்பாடு, பெரியார் மண்ணல்லவா.
30 மார்ச் 2018, வெள்ளிக்கிழமை, பங்குனி உத்திர நன்னாள், மாதமும் 12, நக்ஷத்ரமும் 12ஆவது ! ! பெருமாள் கோவில்களில் சேத்தி என்ற உற்சவம். ஸ்ரீரங்கம் தாயார் அவங்க எல்லை தாண்டி வரமாட்டார். பெருமாள் ரெங்கராஜா அவங்க கிட்ட போய், சேர்ந்திருந்து தரிசனம். சுப்ரமண்ய, சிவாலயங்களில் கல்யாண உற்சவம். எங்க பாட்டி பரம்பரையில் வந்த காவடிய பழனிக்குப் பாதயாத்ரையாகக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்களாம். எங்க தகுதியும், ஊர் இருக்கற நெலைமையும் தெரிஞ்சு முந்தின தலைமுறைகளிலேயே அது உள்ளூர் முருகன் சன்னதியில் முடியத் தொடங்கியிருந்தது. நாம சினிமால பாக்கற காவடி இல்லை இது. ரெண்டு பக்கத்துலையும் மரத்தால் பிள்ளையார், தண்டபாணி, இடும்பன், வள்ளி தேவசேனா சமேத ஷண்முகர் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கும். இந்த தடவை நீயே எடு, நான் ஆத்து பூஜை பண்றேன்னு தம்பி பரத் அனுமதி. காவேரியில் காவடிக்குக் காலை 6 மணியிலிருந்து ஒன்பது மணி வரை எல்லா அபிஷேகங்களும் குடும்பத்தோடு செய்து, காவேரி நீர் கலச அபிஷேகத்தில் முடித்து, மணிகள் ஒலிக்கும் அந்தக் காவடியில் விக்ரஹங்களுக்கு வீட்டில் தயாரித்த விபூதி, சந்தன, குங்குமம் சார்த்தி, மயில்தோகைகள், பால் சொம்புகள், வேல் கட்டி, எடுத்து செல்பவருக்கு வெயில் கொளுத்தாமல் இருக்க மேனா என்ற ஒரு பட்டுத்துணியையும் கட்டி, சஷ்டி கவசம், திருப்புகழ், அரோஹரா கோஷங்கள் முழங்க, தீர்த்தக் குடங்களோடு கிளம்பும் எங்கள் காவடி.
வடக்குத்தெரு பிள்ளையார்க் கோவிலில் அண்ணாவுக்குப் பூஜை செய்து, சூரத்தேங்காய் உடைத்து, அக்ரஹாரத்தின் மேற்குத் தொடக்கத்தில் மாமனைக் கும்பிட்டு அங்கொரு தேங்காய் தெறிக்க, வழியில் விபூதி ப்ரசாதம் கொடுத்துக் கொண்டு, ஆங்காங்கே கொதிக்கும் கால்களுக்கு இதமாய் பக்தர்கள் குடம் குடமாய் நீரால் நனைக்க, வேல் வேல் வெற்றி வேல், வீர வேல், ஞான வேல், சக்தி வேல் என்று கோஷித்துக் கொண்டு சிவன் கோவில் முருகன் சன்னிதியில் உள்ளூர் சிவாச்சாரியார் பேபி மாமா குடும்பத்தார் பூஜித்து, இறக்கி வைப்பர். இந்த முறை பேபி மாமா, சதீஷ் அண்ணா, செந்தில், உதவிக்கு விக்னேஷ் என்று அவங்க டீம். முதல் நாளே கோவிலை சுத்தம் செய்து, மாக்கோலமிட்டு, வாழைமரம், தோரணங்கள் கட்டி, பூஜை சாமான்கள் அவர்களிடம் சேர்த்து விடுவோம். நாங்க காவேரிலேந்து வருவதற்குள் அவர்கள் தீர்த்தக் குடங்களில் முருகன், வள்ளி, தேவானையை வருவித்து இருப்பார்கள். மற்ற சன்னிதிகள் நித்யப்படி அபிஷேக அலங்காரங்களும் நடந்திருக்கும். 10 மணிக்குக் கோவிலில் மஹான்யாஸ, ருத்ர, சமக, சூக்தங்கள் என்று வேத மந்த்ரங்கள், திருப்புகழ், பக்திப் பாடல்கள், கோஷங்களோடு அபிஷேகங்கள் தொடங்கி, வள்ளி, தேவானையோடு அலங்காரம், அஷ்டோத்திர, ஸஹஸ்ர நாம அர்ச்சனைகள், ப்ரசாத வினியோகம் முடிந்து வீட்டுக்குக் காவடியோடு திரும்பும் போது மணி மதியம் இரண்டாவது ஆகியிருக்கும்.
இந்த நாலு- ஆறு மணி நேரத்தில் வீட்டு பூஜையும் முடிந்திருக்கும், வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து, சூரத்தேங்காய் உடைத்து, காவடியை ஸ்வாமி ரூமில் அதன் பீடத்தில் இறக்கி, அர்ச்சித்து, நமஸ்கரித்து, பின் பெற்றோர், பெரியோரிடம் ஆசி பெற்று, சுற்றமும், நட்பும் சூழ இல்லத்தரசிகளின் கைவண்ணத்தில் முன்னாள் திட்டமிட்டு, இன்னாள் காலையிலிருந்து தயாரான சூடான, சுவையான, வகையான அன்லிமிட்டெட் சுப்ரமண்ய ஸ்வாமி கல்யான சமையல் சாதம் பரிமாறி, உள்ளூர் சிவ-விஷ்ணு கோவில் பட்டர்கள், நண்பர்கள், வெளி மனிதர்கள் விடைபெற்றதும், வீட்டு மக்கள், குழந்தைகள், பெரியோரோடு பந்தியில் அமர்ந்து பரிமாறும் பெண்டுகளை மிரட்ட, அவர்கள் மிரள, கடைசி பந்தியில் நாம சாப்ட ஒக்காந்து அதிகமா மிஞ்சினத அள்ளிப்போட்டு, குறைவா இருக்கறத காலியாக்கி, தீர்ந்து போனவைகளுக்கு சத்தம் போட்டு, சாப்பிடற வகையறாக்களில் நொள்ள, நொட்ட சொல்லினு, கால நீட்டி சாப்டும் சொகம் இருக்கே, அடடடடடடா. சாப்ட தொப்ப மூட்டைய தூக்க முடியாம தூக்கி, கை, கால், வாய் சுத்தம் செய்து கட்டைய நீட்ட, அவங்க பாத்ரங்கள தேய்க்க ஒழிச்சி போட்டு, உள்ள வரும்போது 4 மணியாச்சே டீ, காபி ஏதாவது குடுங்கோம்மான்னு நாங்க, கேட்க, பாக்க, அவங்க கிட்டேந்து ஒரு அன்பும், பண்பும் அளவில்லாம பொங்க கொதிக்க, கொதிக்க அந்த பாழாப் போனா காபிய கொண்டாந்து குடுப்பாங்க பாருங்க. சான்ஸே இல்ல.
முதல் நாள் வந்தா ப்ளான், ப்ரிபரேஷன் வொர்க்குன்னு எதாவது இருக்கும். மறுநாள் இருந்தா க்ளீனிங் வொர்க், பத்தாக்குறை, குறை தீர்ப்பு பட்ஜெட் மீட்டிங் இருக்கும்னு மேக்சிமம் யாரும் இருக்க ட்ரை பண்றதில்ல. இருக்கவே இருக்கு அவர் ஐடி கம்பெனி, டெய்லி ராத்திரி லேட்டா தான் வரார். ஒழுங்கா சாப்பிடறது, தூங்கறது கூட இல்ல, லீவே குடுக்க மாட்டேங்கறான், இவனுக்கு ஸ்கூல் ப்ரமோஷன் மீட்டிங், அவளுக்கு புக்ஸ் வாங்க வரச்சொல்லி இருக்கான்னு எவ்வளவோ இருக்கு காரணங்கள் நமக்கு. இந்த பங்குனி உத்தரம் வேற ஒவ்வொரு வருஷமும் அன்ப்ளான்டா வந்துடறது. ஊருக்கு இளைத்தவன் புள்ளையார் கோவில் ஆண்டி, எங்களுக்கு இளைச்சவன் உள்ளூர்ல இருக்கறவங்க. இப்ப கொஞ்சம் பரவாயில்ல, வீட்டு வேலைக்கு ஆள், சாமான் வாங்கி காவேரி, வீடு, கோவில் பூஜைக்குப் பிரிச்சு வெச்சா போறும், பூ, சாப்பாடெல்லாம் வீட்டுக்கே வந்துடும்.
இதுக்கு முந்தின இல்ல பிந்தின நாள்ல எந்த நாள் வசதியோ, அந்த நாள்ல மொத்தக் குடும்பமும் குல தெய்வக் கோவிலுக்குப் போய், பூஜை, வழிபாடுன்னு ஏற்பாடு. அதுக்கு ஒரு வண்டி, பாட்டு, கும்மாளம், க்ராமக்கோவில்ல போயி டண்டக்கு டண்டான்னு இறங்கினதும் பூசாரி பூஜைகள் செய்ய, இந்த, மூத்த தலைமுறை பெண்கள் பூஜைக்கு ஏற்பாடுகள் செய்ய, நாங்க ஐயர் கடைல ஆர்டர் பண்ணி எடுத்துனு போன டிஃபன், காபிய காலி பண்ணி உதவி பண்ணன்னு எல்லாமும் ரொம்ப பிசி. காலை ஏழு மணிக்குக் கிளம்பி ரெண்டு கோவில்களில் பூஜை, தரிசனம் முடிந்து, இப்ப இருக்கற ஊர் எல்லைக்கோவில்லயும் தரிசனம் முடிச்சு வீட்டுக்கு ஒரு 12-1 மணிக்கு வந்தா, பார்றா, வீட்லயும் லஞ்ச் வந்திருக்கு. திருப்பி சலிக்க, சலிக்க சாப்டு, தூங்கு, காபி குடி, வூட்டு வம்பு, ஊர் வம்பு, இந்திய வம்பு, இன்டர்னேஷனல் வம்பு, ப்ரச்னைகளுக்குத் தீர்வுகள், தீர்ப்புகள். இங்க வந்த ஒன்னு ரெண்டு நாள்லயும் தனிக்குடித்தன டீம்கள், ஹைஜீனிக் சோப்புகள், அலங்கார சாமான்கள், நாலு துணிய, சார்ஜர மறந்துட்டு, ரெண்டு நாள் கடின உழைப்புக்கு ஈடா, மறுநாள் ஆஃபீஸ்க்கு தோதா தத்கல்ல புக் பண்ணின, இல்ல ஸ்லீப்பர் ஏசி பஸ்ல ஏறி, விடிய விடிய ஊர் வந்திருக்குமோ நிம்மதியா விழித்திருந்து, வேலை பாக்கற ஊருக்கு வந்து, மிஸ் பண்ணிட்டு வந்த பொருள்களுக்கு ஊருக்கு ஃபோன் பண்ணி, அப்படியே பத்ரமா வந்து சேந்துட்டோம்னும் சொல்லி, தூங்கி, எழுந்து, குளிச்சு ஆஃபீஸ்க்கு வந்தாச்சு, ஆசம், ஆசம், சாப்பாட்டு டப்பாவ வீட்லயோ, எங்கயோ மறந்துட்டு வந்தாச்சு.
No comments:
Post a Comment