Apr 20, 2009

பக்த மீரா பாடல் வரிகள் - 2

7. அரங்கா உன் மஹிமையை அறிந்தவர் யார்
அறிந்தவர் யார் எங்கும் நிறைந்தவனே

யானை அன்று ஆதிமூலமே என்று ஓலமிடவும் ஓடிவந்தனையே
ஈனர்கள் சபையில் த்ரெளபதி கதற மானங்காத்தனையே ஆஹா நீ (அரங்கா)

ப்ரஹ்லாதனையே பாலனம் செய்ய நரஹரியாய் வந்த நாரணனே
தாரணியில் உன்னை அன்றி வேறே யார் துணை சங்க கதாதரனே (அரங்கா)


8. மறைந்த கூண்டிலிருந்து விடுதலை
பிறந்த பறவை விரைந்தோடுதே
நிறைந்த வெளி நீல வானிலே - தன்னை
மறந்து இறைவன் அருள் பாடுதே (மறைந்த)

(மடை) திறந்த வெள்ளம் போல் என் உள்ளம் கண்ணனின் மலர்ந்த கருணைக் கழல் நாடுதே
பிறந்த பயன் இன்றடைந்த மீராவின் உயிர் உவந்து ஆனந்த கடல் ஆடுதே (மறைந்த)


9. உடல் உருக, உள்ளம் உருக, ஊனெல்லாம் நெக்குருக
குழல் ஊதி இசை பாடி தேடி வந்து
கடல் வண்ணத் திருமேனி எழிற்கோலம் காட்டி
கனவினிலே எனை மணந்த கண்ணா என் கிரிதரனே
படமுடியா துயரம் இந்தப் பேதை படவில்லையோ
பாவி உயிர் உன் பிரிவால் தேய்வதறிந்திலையோ

இடர்க் கடலில் மீராவைத் தவிக்க விட்டே
இன்று எங்கு சென்றாய் என்னரசே
எங்கு மறைந்தனையோ



10. ப்ருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ
நந்தகுமாரன் விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ (ப்ருந்தாவனத்தில்)

அனைவரும் கூடி அவன் புகழ் பாடி நிர்மல யமுனா நதியினில் ஆடி
வனம் வனம் திரிந்து வரதனைத் தேடி அனுதினம் அம்சனை தரிசனம் செய்த
அந்த நாளும் வந்திடாதோ (ப்ருந்தாவனத்தில்)

மானினம் நாணிடும் மங்கையரோடு
மா தவரோரும் மயங்கிடுமாறு
தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி
மானிடர் தேவரின் மேலெனச் செய்தான்
அந்த நாளும் வந்திடாதோ (ப்ருந்தாவனத்தில்)

கானனம் அருங்கானனம் சென்று ஆநிறைக் கன்று
கருணை மாமுஹில் மேய்த்திட அன்று
புனிதன் மேனியில் புழுதியும் கண்டு - வானோர்
பூமியை விரைந்ததும் உண்டு
அந்த நாளும் வந்திடாதோ (ப்ருந்தாவனத்தில்)

போதம் இல்லா ஒரு பேதை மீரா
ப்ரபு கிரிதாரி இதய சஞ்சாரி
வேதம் வேதியர் விரிஞ்சனும் தேடும்
பாத மலர்கள் நோக நடந்த
அந்த நாளும் வந்திடாதோ (ப்ருந்தாவனத்தில்)


11. எங்கும் நிறைந்தாயே - இன்று
எங்கு மறைந்தாயோ
எங்கும் உனை நான் தேடி அலைந்தேனே
தயாளன் உனையே (எங்கும்)

மண்ணுலகிலும் வானோர் வாழ்
விண்ணுலகிலும் உனை அல்லாமல்
கண்ணும் மனமும் எதையும் நாடாதே
ப்ரபோ முராரே (எங்கும்)


12. மாமதுரை தரும் பாலா - எங்கள்
மாமணியே நந்தலாலா
த்வாரகை வாழும் தயாளா - என்றும்
மீரா ஹ்ருதய விலோலா (மாமதுரை)


13. ஜனார்த்தனா, ஜகன் நாதா, நீ என் நாதன் அன்றோ
சுராசுரர் பணி பாதா அருள் தராத காரணம் ஏதோ
காண் மலர் விடுவேனோ தாமதம் இனி தாளேனே (சுராசுரர்)

கண்ணனே நான் பட்ட பாடு கண்டு கல்லும் கரையும்
(நான்) கடலில் குளித்தொரு முத்தெடுத்தேன் கைநழுவ விடுவாயோ
கருணையே புரிவாயோ கதியிலேன் கிரிதாரி

த்வாரகாபுரி வாசா சோதனை போதாதோ
தரிசனம் செய்ய கதவுகள் திறவாதோ


14. எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே
யதுவீரனை நந்தகுமாரனை நினைந்து (எனது)

மலரே இரு விழி, பங்கஜ மலரே திருமுகமும்
மலரே இரு கரம், தாமரை மலரே திருவடிகள்
மந்தஹாஸமும் தவழ்ந்த சுந்தர முஹார விந்தனை (எனது)

அன்னை தந்தை பதியும் அவன்
அரும் துணை நவநிதியும் அவன்
(என்) இன்பமும் அழகும் அவனே
எழில் தரும் அணிகலன் அவனே
மீரா ப்ரபு கிரிதர கோபாலனை வரதனை நினைந்துருகும் (எனது)

No comments: