Dec 28, 2021

கர்நாடக யாத்திரை 3 - 2021

கர்நாடக யாத்திரை -3:  2021

2 வருஷங்களாய்டுச்சி டூர் போயி.  "ஆப்ரஹ்ம கீட ஜனனீ" என்று லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (ஆதிசக்தியின் ஆயிரம் நாமங்கள்) ஒன்று வரும்.  ப்ரஹ்மன் முதல் கிருமி வரை அனைத்திற்கும் தாய் என்று... கொரோனா மறந்த, விட்டுப்போன பழக்கங்களை நினைவு படுத்தியிருக்கு.  ஆசாரம், மடி, தர்மம் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்த போது முட்டாள் தனம், மூடப்பழக்கம், தீண்டாமை அது இது என்று அனத்தியவர்களும் இன்று அவன் கையால் அவன் முகத்தைத் தொடவே பயப்படும் நிலை... கொசுவுக்கும், ஈசலுக்கும் மனிதன் நூறு வருடங்கள் உயிர் வாழ்வான் என்றால் அதுவும் மூடநம்பிக்கை என்றே சிரிக்கும்.  இறந்தவர் வீட்டுக்கு, வெளியே சென்று வந்தால் குளிக்கனும். படுக்கை, செருப்பு, உடை, எச்சில் உணவை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்ற ஒழுக்கங்களை இன்று மருத்துவ உலகம் வழியாக உணர்ந்து கடைபிடிக்கப் படுகிறது... இதெல்லாம் சனாதனமான ஹிந்து தர்மங்கள் என்று தெரிந்தும் வேறு வழியில்லை... மறு வார்த்தை இன்றி எல்லா கழகத்தாரும் தலை குனிந்தோ, நிமிர்ந்தோ... ஃபாலோ பண்ணுகிறார்கள்.


நம்ம கதைக்கு வருவோம்... தீர்த்தங்கள், தலங்கள் வரலாறுகளை, பெருமைகளை புராணங்கள், இதிஹாஸங்கள், பரம்பரை வழியாக தெரிந்து கொண்டு, சென்று நீராடி, தரிசித்து பூஜிக்கும் பெரும் பேறு பெற்ற மண்ணைச் சேர்ந்தவர்கள் நாம்.  இந்த முறை கர்நாடக மாநில யாத்திரை வழக்கம் போல திட்டமிடாத ஒன்றே... சென்னையிலிருந்த போதே இரு முறை நண்பர்களோடும், குடும்பத்தோடும் பெங்களூர் வந்து வட்டமிட்டாயிற்று.  இப்போது பெங்களூருக்குக் குடியேறி 2 வருடங்களாயிற்று...  கர்நாடகாவின் தீர்த்த, தல யாத்திரைகளுக்கு மங்களூர்தான் ஸ்டார்ட்டிங்... ஆனா நம்ம ஒவ்வொரு முறையும் சென்னையிலிருந்து திருநெல்வேலி, ராமேஸ்வரம் போவது போல பெங்களூரிலிருந்து தான் கிலோ மீட்டர்கள் சுற்றுகிறோம்...

சென்ற இரு பயணங்கள் பற்றி:

கர்நாடகா யாத்திரை 2

கர்நாடகா யாத்திரை 1

நாட்கள் 18டிசம்பர்2021, சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் 23டிசம்பர்2021 வியாழன் இரவு 12 மணி வரை(6 நாட்கள்)

சென்ற இடங்கள்: 

மைசூர் பலமுரி அருவி, 

ப்ருந்தாவன் கார்டன், 

ரயில் ம்யூசியம், 

மிருகக்காட்சி சாலை,

நஞ்சுண்டேஶ்வரர் கோவில்,

சுக வனம், 

கோகர்ணம்,

யானா குகைகள்,

சொந்தே வாதிராஜ ப்ருந்தாவனம், ஜெயின் மடம்,

ஸிர்ஸி மாரிகாம்பா,

பனவாஸி மதுகேஶ்வரர்,

ஸுவர்ணவல்லி சங்கர மடம்,

ஸஹஸ்ர லிங்கம்,

கூடலி ஶ்ருங்கேரி சங்கரமடம் - உடகட்டி

ரெண்டு மூனு தடவை இந்த மைசூர் பென்டிங் லிஸ்ட் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கு. வீட்டிலும் சரியான டயர்டு... எங்கயாச்சும் ரிலாக்ஸா போயே தீரணும்! க்ருஷ்ணராஜபுரம் (KJM)ஸ்டேஷன்லேந்து மைசூருக்கு 100 ரூபாய்க்குள்ளதான் ட்ரைன் டிக்கெட்... சனிக்கிழமை ஹாஃபடே ஸ்கூல் முடிந்ததும் ஓடிப்போய் ஏறிட்டோம்... மன்னார் யாத்ரி நிவாஸ்னு ஒரு ஹோட்டல்ல நான் ஏசி ட்ரிபிள் பெட் ரூம்  24 மணி நேரத்திற்கு ரூ.1350என்று, இரு இரவுகள் தங்கினோம். ரூம் சைஸ் 12-12 அடிகள்... மற்றபடி வெந்நீர், சுத்தம் எல்லாம் நல்லா இருந்தது... என் நண்பன் நான் சொன்னேன்னு ப்ருந்தாவன் கார்டன்லயே இருக்கற ராயல் ஆர்ச்சிட்லயே போயி தங்கிட்டாரு... சீசன் என்பதால் ஒரு நாளைக்கு 12000+++ டும்... காசுக்கேற்ற வசதிகளோடு. 


                              


பாலமுரி அருவி: இரவு தூங்கிவிட்டு கார்டன் அருகில் இருக்கும் பலமுரி அருவிக்கு ஆட்டோவில் சென்று குளித்து, கார்டனில் ட்ராப்.  ஆட்டோவிற்கு ஆயிரம்.  வலம், இடமாக செல்லும் காவிரி நீர்த் தடுப்பணை அருவிதான் இந்த பலமுரி, இடமுரி அருவிகள். ப்ருந்தாவன் கார்டனிலிருந்து பக்கம்.  ஹீரோ, ஹீரோயின் போல அருவிக் கட்டையில் போஸ் கொடுத்து ஃபோட்டோ எடுக்கலாம்னு ப்ளான்.  ஆனால் ஃப்ளாப்., ரசிகர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.  தண்ணீர் நெறையா இருப்பதால் அதற்கு அனுமதி இல்லை... அடியில் கூழாங்கற்களோடு நதி பளிங்கு போல தெளிவா, சில்லுனு இருந்தது.  நண்பன் குடும்பம் வருவதாக அறிகுறி இல்லை.  நாங்கதான் முதல் டீம் நதியில் குளிக்க... அருமையான குளியல், கொண்டாட்டம்.  நாங்க தந்த உற்சாகம், ஊக்கத்தில் மேலும் சில குடும்பங்கள் இறங்கி சூடு தணிய குளிக்க ஆரம்பித்து விட்டனர்.  காலைக் குளியல், சந்த்யாவந்தனம் (சூரிய பூஜை), ஸமிதாதானம் (அக்னி பூஜை) முடித்துக்கொண்டு நண்பன் உத்தரவுப்படி ப்ருந்தாவன் கார்டனுக்கு வந்து சேர்ந்தோம்.  அருமையான இடம்.

ப்ருந்தாவன் கார்டன்: மைசூர் நகரிலிருந்து சுமார் முக்கால்-ஒருமணி நேரப் பயணம்.  க்ருஷ்ண ராஜ ஸாகர் (KRS)அணையில் இருக்கும் காவிரி நீரைக்கொண்டு ப்ரம்மாண்டமான பூங்கா, நீரூற்றுகள், விளக்கொளிகள், ஒலிகளோடு ஃபோட் ஷூட்டிற்கு உகந்த இடம்.  தற்கொலைப் படையினர் அதிகமாவதால் அணைக்கு மேலே செல்ல இப்போதெல்லாம் அனுமதி இல்லை.  அருமையான இடம்.

ரயில் ம்யூசியம்: மைசூர் ரயிலடிக்கு அருகில், ஆதி காலத்து ரயில் இஞ்சின்கள், பெட்டிகள், பொம்மை ரயிலோடு குழந்தைகள் முக்கால்-ஒருமணி நேரம் செலவழிக்க உகந்த இடம்., ஃபோட்டோக்கள் எடுத்துக்கொண்டோம். அருமையான இடம்.


மைசூர் மிருகக் காட்சி சாலை: இந்த ஸூவில் இலைகளோடு மரங்கள், செடிகள்., தலைநகரம் என்ற ஒரு காரணம் தவிர நம்மூர் வண்டலூர் பூங்காவிற்கு இயற்கை, நீர், காற்றுன்னு எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.  இந்த மைசூர் ஜூவில் எனக்குப் பிடித்தது ஆசிய, ஆப்ரிக்க யானைகள், கருஞ்சிறுத்தை, ஒட்டகச்சிவிங்கி, நீர்யானை, காண்டாமிருகம் போன்ற அரிய விலங்குகள்.  நாங்க குழந்தைகளுக்குக் காண்பித்ததாக டிக் அடிக்கச் சென்றது போல மாலை 5 மணிக்குத்தான் உள்ளே சென்றோம் மற்ற இடங்களைச் சுற்றி ஓய்ந்த நேரத்தில்... இருட்டவும் தொடங்கி விட்டது.  சில விலங்குகளை நிழலாகப் பார்த்து விட்டு வெளியேறினோம்... அருமையான இடம்.


புரோஹித் ஹோட்டல்: இந்த வடக்கத்தி வெஜ். ஹோட்டல் எங்க யாத்ரி நிவாஸுக்குப் பக்கத்தில் இருக்கு.  அன்லிமிட்டெடா நார்த் இன்டியன் குஜராத்தி மீல்ஸ் போட்றாங்கப்பா இங்க... நெய் சப்பாத்தி, ஸ்வீட், தயிர், சாதம், பருப்பு, குழம்பு, காய்னு எதுன்னாலும் போட்றாங்க.  ஒரு மீல்ஸ் 250ன்னு நினைக்கறேன்... மைசூர்ல 20 ரூபாலேந்தே வயிற்றை நிரப்பிக்கொள்ளலாம்.  அரண்மனை கிட்ட மசால், பேல் பூரின்னு சாட் ஐட்டங்கள் எல்லாம் சரியான கும்பல்.   ஹோட்டல் ஒரிஜினல் விநாயகா மைலரின்னு இன்னொரு மெஸ்ஸு 3ஆவது தலைமுறையா ஃபேமஸ் போலிருக்கு.  மக்கள் காத்திருந்து சாப்பிடுகிறார்கள்.  மெனு ரொம்ப பெரிசு... தோசை, தோசை... தோசை... தேங்கா சட்னி மட்டும் தான்... காஞ்ச மாடு கம்பங்கொல்லைல பூந்தாப்ல சாப்ட்றாங்க மக்கள்.  இந்த ஹோட்டல் ஆஃபீஸ் நண்பர் பனிபூஷன் சிபாரிசு.



நண்பனையும் இரவு எங்க ஹோட்டல்லயே இன்னொரு ரூம் போட்டு தங்க வைத்து விட்டு, உறங்கினோம்.  நம்ம டூரையே டுர்ர்ருனு போறவங்க.  ஃபோட்டோஸ் மட்டும் இல்லாட்டி பெருமாள் அங்க நின்று கொண்டிருந்தாரா, ஒக்காந்திருந்தாரா, ஊர் பேர் என்னன்னே கொஞ்சம் யோசிக்கனும்.  நண்பர் குடும்பம் இப்பத்தான் டூர்கள் ஆரம்பிக்கிறார்கள்.  நல்லா சாப்டு, ஓய்வெடுத்து முடிஞ்ச இடத்த, முடிஞ்ச வரை நோகாம பார்த்திட்டு வரலாம்னு போறாங்க.  காலை 7-9 மணி அளவில் ஷார்ப்பாக! நண்பன் 7 சீட்டர் காரில் கெளம்பினோம்.  அவன் கார் ஓட்ட, நம்ம அவனை ஓட்டன்னு நஞ்சங்கூட்டை நோக்கி.

நஞ்சங்கூடு நஞ்சுண்டேஶ்வரர்: அருமையான இடம். அப்பப்பா என்னா சுதை வேலை.  கோவில் மதில்களில் நம்மூர்களில் நந்தி சிலைகள் இருக்கும்.  இந்த கோவில் மதில் சுவர்கள் மேல் இடைவிடாது பெயர்களோடு சிவனின் உருவங்கள் சிறு சிறு கோவில்களாக, பார்த்துக் கொண்டே இருக்கத் தோனுது.  தக்ஷன், தாட்சாயணி, பெரிய நந்தியோடு விஷங்கள் போக்கும் நீலகண்டன் கோவில், வானளாவிய கோபுரம்,  தேர்கள் இருக்கு, ஆனா நம்மூர் வேலைப்பாடுகள் தேரில் இல்லை.  கபினி நதிக்கரை.  அங்குமிங்கும் பிச்சைக்காரர்கள் வீதிகளில்... நம்மைப் பார்ப்பது போலவே இருக்கு.  40 வருடங்களாக பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாத்தையும் ஓட்டு போட்றோம்னு உரிமைகளை ஓசிப்பொருள்களுக்கு விக்கறோம்.  நண்பன் ராமநாதபுரம் கார்த்திக் மணிகண்டன் உபயத்தில் திருவாதிரை அன்று அருமையான உணவு, பயணம், ஆருத்ரா சிவ தரிசனங்கள்.  பசுவும், காளைகளுமாக கன்றுகள் தெருவுகளில், கொஞ்சி மகிழ்ந்தோம்.

சுகவனம்:  அருமையான இடம்.  கணபதி சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கிய ஆசிரமம்.  உலகில் இருக்கும் எல்லா கிளி வகைகளும் இங்கு பாதுகாக்கப்படுகிறது.  கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது இந்த பட்சி உலகம்.  இசையால் (நாத உபாசனையால்) இயற்கையை, உயிர்களை வசமாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்களில் இந்த சுவாமிகளும் ஒருவர் .  "சுகர்" என்ற "சுகப்ரஹ்மம்" மஹாபாரதம், வேதங்களைத் தந்த வியாசரின் மகன், கிளியின் உருவோடு தோன்றியவர், பிறவி ஞானி, அவர் பெயரிலேயே இந்த கிளிக்காட்டுக்கூண்டுகள், 200-300 ரூபாய்ன்னு பல்வேறு, உருவ, வடிவ கிளிகளை நம் கை, தலை, தோள்களில் வைத்துக்கொண்டு ஃபோட்டோ எடுத்துத் தருகிறார்கள்.  மெயில், பென் ட்ரைவில் சாஃப்டு காப்பி கேட்டா அதுக்குத் தனி சார்ஜ்.  மனதிற்கு மகிழ்வாக இருந்தது நிறங்கள், சத்தங்கள், புது உறவுகள், அனுபவங்கள்.  கலர் கலராக பெரிய சிறிய சைஸில் பறவைகள், ரெக்கைகள் சுதைகளாக நிறுவி இருக்கிறார்கள்., நமக்கு இறக்கை முளைத்தது போல நடுவில் நின்று கொண்டு ஃபோட்டோ எடுத்துக்கொள்ளலாம்.


போன்சாய் பூங்கா:  இயற்கையான முறையில் பெரிய மரங்களை சிறியதாக தொட்டியில் வளர்க்கும் மரங்களே போன்சாய் மரங்கள்.  நேரம் ஆகிவிட்டதால் மூடிவிட்டார்கள்.  இதுவும் ஆசிரமத்திற்குள்ளேயே.  வேறு சில கோவில்கள், வேத பாடசாலைகளும் இருக்கிறது ஆசிரமத்திற்குள்.  எல்லாம் மூடிவிட்டார்கள், இன்னொரு முறை நிச்சயம் செல்ல வேண்டும்.


நண்பன் இருநாள் பயணத்தில் மிகவும் உடல் களைத்தபடியாலும், அடுத்த ப்ரோக்ராம் இருப்பதாலும் அவர் பெங்களூர் திரும்ப வேண்டியிருந்தது.  வழியில் திப்பு சுல்தான் சமாதி, பீரங்கி, ஜெயில், நிமிஷாம்பாள் கோவில், காவிரி சங்கமம் இவைகளை ஸ்ரீரங்கப்பட்டினத்தில் பார்த்து விட்டு செல்லுமாறு பணித்து விட்டு, நாங்கள் மைசூர்-கோகர்ணம் படுக்கை வசதியோடு இருந்த பஸ்ஸில் இரவு 9 மணிக்கு ஏறினோம்.

கோகர்ணம்: மைசூர்-கோகர்ணம் பேருந்து பயணம் அருமை, மடிக்கேரி மலைப்பாதை இரவில், பௌர்ணமி ஒட்டிய நிலவொளியை அனுபவித்து காலை 8 மணி அளவில் கோகர்ணத்தில் இறங்கினோம்.  கட்டணக் குளியலறைகள் இருக்கின்றன.  நாங்கள் தங்கும் திட்டமில்லை.  கோவாவை ஒட்டிய இடம், 3-4 பீச்சுகள் வேற இருக்கு.  கோகர்ணம் மஹாபலேஶ்வரர் ஆத்மலிங்கம் ராவணனால் சிவபெருமானை வேண்டி இலங்கைக்கு எடுத்துச் செல்வதாக இருந்தது.  வழியில் அவன் குளித்து பூஜை, சந்த்யாவந்தனம் செய்யவேண்டி யாரிடமாவது இதை வைத்திருக்க நினைத்தான்.  கீழே வைத்து விட்டால் மீண்டும் எடுக்க முடியாது என்பது கன்டிஷன்.  தேவர்கள் விருப்பப்படி இந்த ஆத்மலிங்கம் பாரதத்தைத் தாண்டி சென்றுவிடாமல் இருக்க பிள்ளையாரே கதி.  வேறு எவரும் சிவனுக்கும், ராவணனுக்கும் இடையில் இந்த காரியத்தை சாதிக்க முடியாது.  அவர்கள் வேண்டியபடி கணபதி அந்தணச்சிறுவன் வடிவில் நின்றிருக்க, அவனிடம் வேண்டி ராவணன் கொடுத்துச்செல்கிறான்.  ஆனால் அவன் திரும்ப வருவதற்குள் தாமதமாகிவிட்டதாகக்கூறி கணேசர் அதைக் கீழே வைத்து விடுகிறார்.  தன் முழு பலத்தையும் கொண்டு முயற்சித்தும் அங்கிருந்து மீண்டும் அதை எடுக்க முடியவில்லை ராவணனால்.  அவன் பலம் கொண்டு முறுக்கியதால் லிங்கம் கோன் ஐஸ்க்ரீம் போல உரு மாறி விட்டது தான் மிச்சம்.  பசு(கோ)வின் காது(கர்ணம்)போன்ற உருக்கொண்டதால் இந்த தலத்திற்கு கோகர்ணம் என்று பெயர்.  இன்றும் விநாயகர் தலையில் குட்டியதால் ஏற்பட்ட குழி பிள்ளையார் கோவிலில் இருக்கிறது.  கழகங்கள் பயம் இல்லாததால் கோவில்களில் கருவறை வரை சென்று, இறை உருவங்களை நாம் தொட்டு, பூசனை செய்ய அனுமதிக்கிறார்கள்.  




பிள்ளையார் உண்மையாகவே பூதம் போன்ற குண்டு, குட்டைக்கால்களும், மனித உடலும், யானை முகத்தோடும் (க்ரீடமின்றி) கொழு கொழுவென்று அழகாய் இருக்கிறார்.  பக்தர்கள் அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து பாதம் தொழுது வழிபடுகிறார்கள்.  நாங்களும் அவ்வண்ணமே தரிசித்து மகிழ்ந்தோம்.  என் மகன் விதிப்படி பூணல் வைபவம் முடிந்து, வேத மந்திரங்களும் கொஞ்சம் தெரிந்து கொண்டிருப்பதால் முறைப்படி பூஜையும் செய்ய முடிந்தது மகிழ்ச்சி.  பத்து அடிகளில் சிவன் கோவில்.  உடுப்பி போலவே இங்கும் ராஜ கோபுரங்கள் இல்லை, உள்ளே இந்த சரித்திர நிகழ்வை உணர்த்தும் சுதைகள் இருக்கின்றது.  இலவசமாக செப்பல், பேக் வைத்துச்செல்ல வசதி இருக்கிறது.  பாரம்பரிய உடையோடும், மந்திரங்களோடும் தரிசனம் ஆயிற்று.  சிவலிங்கத்தைச்சுற்றி ஆவுடையார் இருக்குமே, அது மட்டுமே பூமிக்கு மேலே தெரிகிறது.  லிங்கம் ஆவுடையாருக்கு நடுவில் குழியில் கைவிட்டு தொட்டு தரிசிக்கலாம்.  எல்லாருக்கும் அபிஷேக, அர்ச்சனை அனுமதி இருக்கிறது.  மகிழ்ந்தோம்.  

காலை உணவு ஏதோ ஒரு வெஜிடேரியன் மெஸ்ஸில்.  கோகர்ணம் பீச்சுகள் ரொம்ப அசிங்கமாக, குப்பையாக இருக்கும் என்று இன்டெர்நெட்டில் போட்டிருக்கிறார்கள்.  அதைப்படித்து விட்டு அதே எண்ணத்தோடுதான் நாங்களும் வந்ததற்காகச் சென்று பார்ப்போம் என்றோம்.  ஆனால் தூய்மையாக இருந்தது மணலும், நீரும் பளிங்குபோல.  கோவிலிலிருந்து ஐந்து நிமிட நடை.  கடலுக்குள் சென்று மகிழ ஸ்ட்ரீமர், ஒட்டக சவாரி, சங்கராச்சாரியார் நினைவு மண்டபம்னு அருமையாக இருந்தது.  பல நாட்டுக்காரர்களும் வேண்டுதல்களோடும், நன்றியோடும் இங்கே வருகிறார்கள்.  இதே சரித்திர நிகழ்வு திருச்சி ஸ்ரீரங்கம்-மலைக்கோட்டைக்கும் உண்டு. பாத்திரங்கள் வேறு திருச்சியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து அவர்கள் பரம்பரையாக பூஜித்த பள்ளி கொண்ட பெருமாளைப் பரிசாக எடுத்துச் சென்ற விபீஷணனுக்கும் இதே தான் நடந்தது.   காளைக் கன்றுகள் தெருவுகளில், கொஞ்சி மகிழ்ந்தோம்.

யானா குகைகள்: ஸஹ்யாத்ரி மலைத்தொடரில் இருக்கிறது.  கோகர்ணத்திலிருந்து நாங்கள் ஸிர்ஸி செல்ல வேண்டும் வழியில் இந்த யானா குகைகளைப் பார்த்து விட்டு.  அசுரர்களைக் கொன்ற மோகினியாக நாராயணரும், பைரவரும் இங்கே மலைகளாக இருக்கிறார்கள்.  அசுரனின் சாம்பலால் எங்கும் மணலும், மலையும் இன்றும் கருப்பாக இருக்கிறது.  மோகினி சிகரம் என்ற மலை 80 மீட்டர்கள், பைரவேஶ்வர சிகரம் 120 மீட்டர்கள் உயரம்.  சுயம்புவாகத் தோன்றியிருக்கும் இறை உருவில் நீர் மேலிருந்து விழுந்து வெளியே வராமல் மறைந்தும் விடுகிறது.  கோவிலை ப்ரதட்சினம் செய்ய 20 படிகள் வரை ஏறி மலைக் குகைகளுக்குள்ளாகச் சென்றே வெளியேற வேண்டும்.  அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்குள் இருக்கும் இந்த இடத்திற்கு 2-3 கி.மீட்டர் நடந்து ஏறியும் வருகிறார்கள் வழியில் இயற்கை, அருவிகளை அனுபவித்துக்கொண்டு.  கோகர்ணத்திலிருந்து டூவீலர் வாடகைக்கு எடுத்துக்கொண்டும் செல்லலாம், ஆனால் சிக்னல் கிடைக்காமல், வழி தெரியாமல் மாட்டிக்கொள்வோம் வெளியூர்க்காரர்கள்.  டாக்ஸிகள் இருக்கின்றன.  கோகர்ணத்திலிருந்து யானா குகைகளைத் தரிசித்து விட்டு சுவர்ணவல்லி சங்கராச்சார்ய மடத்தில் ட்ராப் செய்ய நாலு, ஐந்து ஆயிரங்களில் தொடங்கி மூவாயிரம் ரூபாய்க்கு முடித்தோம். பாண்டுரங்கன் ட்ரைவர் அண்ணா நல்லா ரூட் தெரிந்து ஓட்டினார்.  வழியில் டூவீலர் காரர்கள் வழி தெரியாமல் ஆங்காங்கே காத்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்களுக்கும் உதவி செய்து கொண்டு சென்று சேர்ந்தோம்.  கடைசி 10 கிமீட்டர்கள் வழியெங்கும் சரளைக்கற்கள், ரோடு மோசம்.  மேலும் 2-3 கிமீட்டர்கள் கார்கள் செல்ல முடியாமல் நின்று விட்டார்கள் பலரும்.  அங்கே ஜீப், மலையில் செல்லும் லோடு வேன் ஒன்றும் இருக்கு.  ஒருவருக்கு 100 ரூ போக, வர என்று அதில் ஏறி ஒரு இடத்தில் இறங்கினோம்.  அங்கிருந்து மலைக் காட்டிற்குள் 15-20 நிமிட நடை.  ப்ரம்மாண்டமான கரிய, பெரிய மலைகள் அந்தக் காட்டிற்குள்.  ஒழுங்காக செதுக்காத மரச்சக்கைகள் போன்ற உருவம்.  கங்கா சண்டி பைரவேஶ்வரர் கோவில் ஐயர் கன்னடத்தில் வரலாற்றை விளக்கி, தீபம் காட்டி, ப்ரசாதங்கள் தந்தார்.  குகைக்குள் சென்று ப்ரதட்சினம் செய்து மீண்டும் கார் இருந்த இடத்திற்கு வந்து, அடுத்த இடத்தை நோக்கிக் கிளம்பினோம்.


சுவர்ணவல்லி சங்கர மடம்: தற்போதைய 54ஆவது பீடாதிபதிகள் ஸ்ரீ கங்காதரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் சன்யாஸம் வாங்கிக்கொண்டவர்.  அவரைப் போலவே பாரம்பரிய மடத்துப் பொறுப்புகள், பூஜைகளைத் தாண்டி தேசம், சமூகப் பணிகளில் தன்னை முழுதாக ஈடுபடுத்திக்கொண்டவர்., அதே ஸ்பீடு, பங்க்சுவாலிட்டி.  சொந்தே அல்லது சொந்தா எனும் இந்த கர்நாடக க்ராமத்தின் மடாதிபதியாக 23 வயதில் பொறுப்பேற்றுக்கொண்ட பண்டிதர்.  மது, இயற்கை ஆக்ரமிப்புகளுக்கு எதிராக போராடுபவர்.  கல்வி நிலையங்கள் வரை பகவத் கீதையை ஒரு வாழ்க்கை முறையாகப் போதிக்கும்படி மக்களிடம் எடுத்துச்சென்றவர்.  ஓரிரவு மடத்தின் யாத்ரி நிவாஸில் தங்கி, மறுநாள் தரிசித்தோம்.  கிராமத்தில் ஒரு வசதியும் தென்படவில்லை.


ஸொந்தா: சால்மலா நதிக்கரையின் இந்த க்ராமத்தில் சங்கர மடம் தவிர, த்வைத பீடாதிபதிகள் வாதிராஜ தீர்த்தரின் ப்ருந்தாவனம்(சமாதி)யும் இருக்கிறது.  ஸ்ரீமத்வாச்சாரியார் படைப்புகளை பெருமளவில் நிறுவியவர்களில் ஒருவரான இவர் தன் எட்டு வயதிலேயே துறவு கொண்டவர்.  நாடு முழுதும் 20ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுப்பயணம் செய்து அருளியவர்.  உடுப்பி க்ருஷ்ணன் கோவிலைப் புதுப்பித்து அதைச்சுற்றிலும் பூஜை, நிர்வாக முறைகளைக் கவனிக்கவும், ஒழுங்கு படுத்தவும் எட்டு மடங்களை நிறுவியவர்.  இந்த ஸோதே மடத்தின் முதல் குரு ஸ்ரீமத்வரின் சகோதரரான ஸ்ரீ விஷ்ணு தீர்த்தர்.  19ஆவது குருவான ஸ்ரீவாகீஸ தீர்த்தரே இவரது ஆஶ்ரம குரு.  120 வருடங்கள் எட்டு மடங்களில் ஒன்றான இந்த மடத்தை அலங்கரித்த இவர் ஜீவஸமாதிக்குள் இருந்து இன்றும் அருளுகிறார்.  வாமனனான(குட்டை) வந்து மஹாபலிச்சக்ரவர்த்திக்குத் தன் திருவிக்ரம(பேருவம்) அவதாரம் காட்டியவனுக்கும் இங்கு கோவில் இருக்கிறது.  தற்போதைய பீடாதிபதிகள் ஸ்ரீ விஶ்வவல்லப தீர்த்தர் உடுப்பியில் இருப்பதால் தரிசிக்க முடியவில்லை.


பூதராஜா வரலாறு: ப்ராஹ்மணனான ராவணனைக் கொன்றதால் வந்த ப்ரஹ்மஹத்தி பாபம் தீர என்ன செய்வது என்று ராமர் அவையினரைக் கேட்ட போது தபோதனர் எனும் ப்ராஹ்மணர், அதைத் தீர்க்க தம்மைத் தவிர அங்கிருக்கும் வேறெந்த ப்ராஹ்மணருக்கும் தவ பலம் இல்லை என்று கூறினார்.  இதைக் கேட்ட ராமர் சிரித்துக்கொண்டே இப்படி ப்ராஹ்மண அவமதிப்பு செய்தால் ப்ரஹ்மராக்ஷஸனாகப் பிறக்க நேரிடுமே என்று கூறினார்.  சிரித்துக்கொண்டே சொன்னாலும் சுத்த ப்ரஹ்ம வடிவினனான ராமன் வாக்கு தவறாதே என்று அந்த ப்ராஹ்மணரும் வருந்தி மன்னிப்பும், ப்ராயச்சித்தமும் கேட்டார்.  இரு பிறப்புகளில் இந்த பிரம்மராட்சதன் வடிவம் தாங்கி, பின்னர் விடுபடுவாய் என்று அருளினார்.  இந்த தபோதனர் தான் மஹாபாரத காலத்தில் பிரகல்லாதனின் அவதாரமான பாஹ்லீக ராஜனின் மகன் ஸோமதத்தன்.  பின்னர் கலியுகத்தில் வாதிராஜரின் சீடரான நாராயண ஶர்மா.  ஒரு ஸமயம் வ்யாஸராஜர் (மத்வரின் மற்றொரு சீடர் பரம்பரை)வாதிராஜரின் மடத்திற்கு வந்திருந்தார்.  அப்போது த்வாதசி திதி.  வாதிராஜர் பூஜை முடிந்ததும் அவருடனேயே சாப்பிடுகிறேன் என்று காத்திருந்தார் வ்யாஸராஜர்.  ஏகாதசி விரதமிருந்து வந்திருக்கும் அதிதி (விருந்தினர்)காத்திருக்க வைத்திருப்பது பாவம் என்று வாதிராஜரும் வந்து சாப்பிடுகிறார்கள்.  அதற்குப் பிறகு சீடர்கள் அனைவரையும் இந்த மடத்திலேயே இருக்கச்சொல்லி விட்டு தான் மட்டும் வெளியே சென்று விடுகிறார் வாதிராஜர்.  அருகில் ஓடிக்கொண்டிருக்கும் சால்மலா நதியின் மத்தியில் ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு தன் யோக மஹிமையால் உண்ட அனைத்து பதார்த்தங்களையும் பரிமாறிய படியே சூடாக, புதிதாக வெளிக்கொணர்ந்து ஒரு பெரிய இலையில் வைத்து விட்டு, தன் பூஜைகளை முடித்து, உணவருந்தி திரும்புகிறார்.  வழியில் சீடன் நாராயண ஶர்மாவைப் பார்க்கிறார்.  அவன் குருவின் மஹிமையைக் கண்டு தெரிந்து கொண்டதாகவும், மன்னிப்பும் கேட்கிறான்.  குரு வாக்கியத்தைக் காப்பாற்றாததால் அவனை பிரம்மராட்சதனாகி, கேள்விக்குப் பதில் கேட்டு அலையும் படியும், அதற்குத் தக்க பதில் கிடைத்ததும் தான் விமோசனம் என்றும் சபித்து விடுகிறார்.  அதுவும்  "யார் ஆ-கா-மா-வை யில் குளிக்க மாட்டார்கள் (ஆ-கா-மா-வை கோ ந ஸ்னாத:) என்று கேட்டுக்கொண்டே அலைகிறது.  பதில் கூறாத எவரையும் தின்று விடுகிறது.  சீடன் நிலை கண்டு கருணை கொண்ட குரு தானே அவ்வழியில் வருகிறார்.  இது கேட்ட கேள்விக்கு, "தவறான பிறப்பாளர் ஆ-கா-மா-வை யில் குளிப்பதில்லை(ரண்டபுத்ர த்வம் ந ஸ்னாத:) என்று பதிலளித்து விமோசனம் அளிக்கிறார்.  (நிலவின் பாதை கொண்டு கணக்கிடப்படும் காலக்கணக்கு சாந்த்ரமானம், சூரியனின் பாதைப்படி கணக்கிடப்படும் மாதங்களுக்கு சௌரமானம் என்று பெயர், ஆ-கா-மா-வை என்பது சாந்த்ராயன ஆஷாட(ஆடி), கார்த்திகை, மாக(மாசி), வைஶாக(வைகாசி) மாதங்கள்., இந்த மாதத்து பௌர்ணமிகளிலாவது சூர்யோதயத்திற்கு முன் நதியில் நீராடுவது புண்ணியம்).  இந்த சீடரே நாராயண பூதர் என்கிற பூதராஜா.  இவர் இப்போதும் பெரும் சக்தியோடும், குருவின் ஆசியோடும் க்ஷேத்ரபாலராக அங்கு எழுந்தருளி, நித்தியம் ஆராதிக்கப்படுகிறார்.  பத்ரிகாஶ்ரமத்தில் இருந்த ப்ரஹ்மா பூஜித்த த்ரிவிக்ரமர் சிலையை குருவின் கட்டளைப்படி இந்த க்ராமத்தில் நிர்மாணிக்கக் கொண்டு வந்தவரும் இந்த பூதராஜாவே.  அப்படிக் கொண்டு வரும் போது வான்வழியில் எதிர்த்த ஒரு தைத்யனை (அஸுரன்) தேர்ச்சக்கரம் ஒன்றை பிடுங்கி வீசிக் கொன்று விடுகிறார்.  இன்றும் இங்கே எழுந்தருளி இருக்கும் த்ரிவிக்ரமர் மூலஸ்தானம் தேர் அமைப்போடும், ஒரு சக்கரம் இல்லாமலுமே இருக்கிறது.

ஜெயினர்களுக்கான மிகப்பழமையான திகம்பர மடமும் இங்கே பெரிய அளவில் ப்ரசித்தம்.  ஆதி குருவான ரிஷபேஷ்வரர், 22, 23ஆவது தீர்த்தங்கரர்களுக்கும் இங்கே கோவில்கள் இருக்கின்றன.  வர்த்தமான மஹாவீரர் 24ஆவது தீர்த்தங்கரர்.  கூஷ்மாண்டா போன்ற தேவியின் உருவங்களுக்கும், க்ஷேத்ர பாலகர் பூதராஜா சன்னதிக்கும் சிறப்பாக பூஜைகளும், விழாக்களும் நடக்கின்றன.  ரிஷபேஷ்வரர் பார்வையில் இருக்கும் கோடிதீர்த்தம்(முக்தி தீர்த்தம்) என்ற குளத்து நீர் ஒவ்வொரு நாளும் மூன்று நிறங்கள் மாறுகிறது.  கஜகேஸரி பீடம் என்ற ஒரு பீடம் இங்கிருக்கிறது. அதன் ஒவ்வொரு வேலைப்பாடுகளும் காரணம் கொண்டவை.  90 வயதுக்கும் மேலாகத் தொண்டாற்றிச்சென்ற குருவிற்குப் பின் தற்போதைய குரு(Bhattakalanka Bhattaraka என்று அழைக்கிறார்கள்) 2013ல் இருந்து பொறுப்பில் இருக்கிறார்.  நன்றாக தமிழில் பேசி, குழந்தையின் வேத மந்த்ரங்களையும், எங்களைப் பற்றியும் கேட்டு அருளி, உணவுண்டு, மற்ற தலங்களைப் பற்றியும் விரிவாகக் கூறி தரிசித்துச் செல்ல பணித்தார்.  அப்படியே செய்தோம்.  காலை கோகர்ணத்தில் ஒரு தோசை சாப்பிட்டது, நல்ல பசி., அருமையான அமுது.


இங்கிருக்கும் மூன்று மடாதிபதிகளும் (சமண, த்வைத, அத்வைத) இளம் வயதினர், துருதுருப்பாக சமூக, தேச, இறை பணிகளில் பெரும் பங்களித்து அருளுகிறார்கள்.  மூன்று மடங்களிலும் பசிப்பிணி போக்கும் அரும்பணியும் நடக்கிறது பாரபட்சமின்றி.  

ஸிர்ஸி மாரிகாம்பா: மரத்தாலான இந்த எட்டுக்கை துர்க்கை ஒரு குளத்தில் இருந்து எடுக்கப்பட்டவள், பெரிய உருவமும், ராஜ அலங்காரமும் கொண்டு சிங்கத்தின் மீதிருப்பவள், இரண்டு வருடங்களுக்கொருமுறை இங்கு நிகழும் ரதயாத்திரை கர்நாடகாவில் மிக ப்ரஸித்தி.  கனகதாஸர், காந்தி காலங்களில் இங்கு நடந்து கொண்டிருந்த எருமை பலி நிறுத்தப்பட்டுள்ளது.  விஶ்வகர்மா குலத்தினர் இந்தக் கோவிலின் முக்கிய பூசாரி.

பனவாஸி மதுகேஶ்வரர்: மது-கைடபன் என்ற இரு அஸுரர்களைக் கொன்ற பாவம் தீர நாராயணர் இங்கு லிங்க ப்ரதிஷ்டை செய்து பூஜித்துள்ளார்.  லிங்கம் தேன் நிறத்தில் உள்ளது, பல்வேறு காலங்களில் ஆண்ட அரச பரம்பரையினர் ஒவ்வொரு மண்டபங்களாக விரிவாக்கம் செய்துள்ளனர்.  கண் கொள்ளா கலைவண்ணம் கல்லிலே. நம் ஒவ்வொரு அசைவையும் இரண்டிரண்டாக ப்ரதிபலிக்கும் நாட்டிய மண்டபத்தின் நான்கு தூண்கள், உற்சவர் எழுந்தருளும் கல் மண்டபம், பார்வதி பரமேஶ்வரனை சுற்றி துணைவியரோடு வாகனங்களில் வீற்றிருக்கும் எண் திசைக்காவலர்கள் (கிழக்கு-இந்திரன், தென்கிழக்கு - அக்னி, தெற்கு-யமன், தென்மேற்கு-நிருருதி, மேற்கு-வருணன், வடமேற்கு-வாயு, வடக்கு-குபேரன், வடகிழக்கு-ஈசானன்) சன்னதிகள், ராமேஸ்வரம், பண்டரிபுரம், கோகர்ணம், கேதார்நாத் என்று தலங்களின் லிங்கங்கள் ப்ராகாரத்தில் அற்புதம், அற்புதம் நுணுக்கங்கள்.  மஹாராஷ்ட்ர ராணி சமர்ப்பித்த பஞ்சலோக ஆலய மணி ஒரு நிமிடத்திற்கு தொடர்ந்து ஓங்காரம் எழுப்புகிறது.  தசாவதார வட்டத்திற்குள் நாராயணர், குழந்தை பேறுக்கு நன்றி செலுத்த கேரள ராணி ப்ரதிஷ்டை செய்த நாகர்.  திரிலோக மண்டபம் - கூர்மம் (ஆமை), அதற்கு மேல் ஆதிசேஷன், திசை யானைகளோடு பாதாளலோகம், அதற்கு மேல் சாத்விக, தம, ரஜோ குணங்களை ப்ரதிபலிக்கும் மூன்று படிகளின் மேல் உமா மஹேஶ்வரர் என்று பூலோகம், மத்தளம் வாசிக்கும் நந்தி, விஷ்ணு, திக் பாலர்களோடு கைலாஸம்.  கடலை தின்னும் குரங்கு, கரும்பு தின்னும் குரங்கு சிலைகள், சிவனாருக்கு எதிரில் இருக்கும் பெரிய நந்திகேஶ்வரர் ஒரு கண்ணால் பெருமானையும், மறுகண்ணால் சன்னதி ஜன்னல் வழியே பார்வதியையும் தரிசித்துக்கொண்டிருக்கும் கைவண்ணம். வரதா நதிக்கரையில் சிவலிங்க ப்ரதிஷ்டைகள் வெள்ளம் வந்தால் நீரில் மூழ்கும் வண்ணம்.  மர வேலைகள் நிறைந்த தேர். கோவில் வாசலில் மரச்சிற்பங்கள் போல் தோன்றும் கல் யானைகள், ஜன்னல்கள், தூண்கள்.  எங்களையே சுற்றிக்கொண்டிருந்த நாய்க்குட்டிகளுக்கு பிஸ்கெட்டுகள் போட்டு மகிழ்ந்தோம்.

ஸஹஸ்ரலிங்கம்: சொந்தே க்ராமத்தின் அருகிலேயே சால்மலா நதியின் நடுவிலேயே பாறைகளில் ஒரு சில கிலோமீட்டர்களுக்கு எங்கு பார்த்தாலும் சைஸ் வாரியாக லிங்கம், நந்தி உருவங்களை செதுக்கியிருக்கிறார்கள்.  இதே போல் ஹம்பி சக்ர தீர்த்தம், கம்போடியால கூட இருக்கு.  ஒரு தொங்கு பாலமும் இருக்கு.  குரங்குகளுக்கு கடலை மிட்டாய் தந்து தரிசித்தோம்.


கூடலி ஶ்ருங்கேரி சங்கராச்சார்ய மடம்:  வரலாற்றின் படி தேவி ஸரஸ்வதியை வாதில் ஜயித்த சங்கரர் அன்னையையும் தங்களோடு பயணிக்க வேண்டுகிறார்.  ஒப்புக்கொண்ட தேவி திரும்பிப்பார்த்தால் அங்கேயே நின்று விடுவேன் என்ற நிபந்தனையோடு தொடர்கிறாள்.  துங்கா மற்றும் பத்ரா நதிகள் சங்கமிக்கும் கூடலி என்ற தலத்தில் சென்று கொண்டிருக்கும் போது மணலில் வாணியின் கொலுசின் ஓசை கேட்காததால் திரும்பிப் பார்த்து விட, அங்கேயே நின்று விடுகிறாள் அன்னை சாரதா.  அதுவே இந்த மூல தக்ஷிணாம்னாய சாரதா பீடம்.  வனதுர்கா மந்த்ரங்கள் மூலம் தேவியை ப்ரதிஷ்டை செய்த சங்கரகுரு மேலும் பின் தொடர வேண்டுகிறார்.  துங்கா நதிக்கரையில் ஒரு நாகம் கர்ப்பமாயிருக்கும் தவளை ஒன்றை மழையில் நனையாமல் குடை பிடிப்பது போல படமெடுத்துக் காத்துக்கொண்டிருக்கும் இயற்கைக்கு மாறான அற்புதக் காட்சியைக் கண்டு அதிசயித்த சங்கரர் வேண்டுதலால் நவராத்ரி தினங்களில் ஶ்ருங்கேரியில் அமர்ந்த கோலத்தில் அன்னை சாரதை காட்சி அளிக்கிறாள்.  இரு மடங்களுக்கும் ஒரே சீடர் பரம்பரை.  ராஜ சன்யாஸ மடம், படிப்பில் சிறந்த மடம், கர்நாடக அரசர்களுக்கு குரு பீடம் என்றெல்லாம் பெருமை சேர்த்த பரம்பரை.  யாத்திரை சென்ற பீடாதிபதிகள் வெகுகாலம் வராத காரணத்தால் வேறு வழியின்றி முறைப்படி சீடரை அடுத்த பீடாதிபதிகளாக்கி பூஜித்தனர் அரச பரம்பரையினர்.  ஆனால் வெளிச்சென்ற குரு திரும்பி வந்து, நடந்தவைகளை அறிந்து ஶ்ருங்கேரியில் தனக்கென்று புது பரம்பரையை உண்டாக்கிக் கொண்டார்.  கூடலி சங்கராச்சாரியார் சச்சிதானந்த வலுகேஶ்வர பாரதி ஸ்வாமிகள்(96) பிறகு அவரது சீடர் இப்போதிருக்கும் பீடாதிபதிகள் ஸ்ரீ வித்யாபிநவ வித்யாரண்ய பாரதி ஸ்வாமிகள் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார்.  மிகவும் எளிமை, சுலபமாக அணுகும் தன்மை, அன்பு, கனிவான உற்சாகமான பேச்சு, வந்திருப்பவர்கள் உணவு, தங்குமிடம், வசதி ஏற்பாடுகளில் பரிவு.  நாங்கள் இம்முறை சென்ற போது, பெரியவர்கள் உடகட்டி எனும் க்ராமத்தில் அவர்களுடைய பழைய மடங்களில் ஒன்றில் முகாமில் இருந்தார்கள். நாங்கள் ஸிர்ஸியிலிருந்து பேருந்து வசதி போதாத காரணத்தால், சொந்தே கிராமத்திலிருந்து நாங்கள் வந்த ஆம்னி கார் ட்ரைவர் அண்ணா வெங்கட்ராம ஹெக்டே அவர்களை வேண்டி ஏற்கனவே மேற்சொன்ன இடங்களுக்கு மூவாயிரம் தந்தாயிற்று, எங்களோடே சாப்பிட்டு இருநாள் கூட இருந்தார்.  இப்போது மேலும் 2700 ரூபாய்க்கு எங்களை ஸிர்ஸி-ஹவேரி-ராணிபென்னூர் - மேட்லெரி வழியாக உடகட்டி மடத்தில் விட ஏற்பாடாயிற்று.   இரவும் பகலும் ஸ்வாமிகள், பூஜை தரிசனம்.  இங்கு, முன்பிருந்த ஐந்து ஸ்வாமிகளின் பிருந்தாவனம் இருக்கிறது.  ஸ்ரீ சதுர்த்த நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள்(கம்பத்து ஸ்வாமிகள்) ஜீவ ஸமாதி ஆகி, ஒரு கல் தூணும் ப்ரதிஷ்டை செய்து தினம் அபிஷேகம், ஆராதனைகள் நடக்கிறது. விஜய் அண்ணா என்பவர் குடும்பத்தோடு இங்கேயே தங்கி, தினம் துங்கபத்ரை நதியில் நீராடி, பூஜைகள், கைங்கர்யங்கள் செய்கிறார்.  அன்பான, ஆசாரமான கிராமத்துக் குடும்பம்.  



இங்கிருந்து சித்ரதுர்கா மடத்திற்கும், கோட்டைக்கும் சென்று விட்டு பெங்களூர் திரும்ப திட்டம்.  களைப்பாலும், நேரமின்மையாலும் இரவு ஓய்வெடுக்க ராணிபென்னூரிலிருந்து பெங்களூர் பஸ் ஏறி, யல்ஶ்வந்த்பூர் முன்பாக கோரகுண்டேபால்யா எனும் இடத்தில் இறங்கி ஆட்டோவில் வீடு வந்து, ஆறு நாட்கள் பூட்டிக்கிடந்த இடத்தை சுத்தப்படுத்தி, மனைவி கையால் இரவு உணவு சமைத்துப் படைக்க, பன்னிரெண்டு மணிக்கு உறங்கினோம்... அடுத்த யாத்திரையில் சந்திப்போம்.

Oct 16, 2021

நவராத்ரி நாயகியர் - தேவியின் 9 வடிவங்கள்

 நவராத்ரி நாயகியர் - தேவியின் 9 வடிவங்கள்

प्रथमं शैलपुत्री  द्वितीयं ब्रह्मचारिणी।
तृतीयं चन्द्रघण्टेति कूष्माण्डेति चतुर्थकम् ।।
पंचमं स्कन्दमातेति षष्ठं कात्यायनीति च।
सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमम् ।।
नवमं सिद्धिदात्री  नवदुर्गाप्रकीर्तिता:
उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना ।।
ப்ரதமம் ஶைல புத்ரீசத்விதீயம் ப்ரஹ்மசாரிணீ,
த்ருதீயம் சந்த்ரகண்டேதிகூஷ்மாண்டேதி சதுர்த்தகம்
பஞ்சமம் ஸ்கந்தமாதேதிஷஷ்ட காத்யாயனீதி 
ஸப்தமம் காலராத்ரீதிமஹாகௌரீதி சாஷ்டமம்
நவமம் ஸித்திதாத்ரீச நவதுர்காப்ரகீர்திதா:
உக்தான்யேதானி நாமானி ப்ரஹ்மணைவ மஹாத்மனா.
 
ஶைலபுத்ரீ(மலைமகள்)ப்ரஹ்மசாரிணீ (மாணவி), சந்த்ரகண்டா(பிறைசூடி), கூஷ்மாண்டா (பேரண்ட பூசணி வடிவானவள்), ஸ்கந்தமாதா, (கந்தக்கடவுளின் அன்னை), காத்யாயனீ(காத்யாயன ரிஷியின் மகள்), 
காளராத்ரீ (கும்மிருட்டு போன்ற கரிய உருவினள்), மஹாகௌரீ (ஐந்து வயது 
குழந்தை வடிவினள்), ஸித்திதாத்ரீ (பலனளிப்பவள்என்று 
நவதுர்க்கைகள் போற்றப்படுகிறார்கள்
ஸ்ருஷ்டிகர்த்தாவான ப்ரஹ்மாவால் இந்தப் பெயர்கள் கூறப்பட்டன

                                                                நாள் 1: ஶைலபுத்ரீ
(மலைமகள்)
वन्दे वाञ्छितलाभाय चन्द्रार्धकृतशेखराम्
वृषारूढां शूलधरां शैलपुत्रीं यशस्विनीम्‌ 
வந்தே வாஞ்சிதலாபாய சந்த்ரார்த்தக்ருத சேகராம்
வ்ருஷாரூடாம் ஶூலதராம் ஶைலபுத்ரீம் யஶஸ்வினீம்
பொருள்
பாதி நிலவை சிரத்தில் சூடியவளும்காளையின் மேல் ஆரோஹணித்து 
வருபவளும்சூலத்தை ஆயுதமாக கொண்டவளும்புகழைத்தரும் 
ஶைலபுத்ரியுமாகிய உன்னை விரும்பிய பலன்களின் பொருட்டு 
வணங்குகிறேன்

                                                          நாள் 2: ப்ரஹ்மசாரிணீ
(ப்ரஹ்மஸ்வரூபம் அடையும் எண்ணம் கொண்டவள்)
दधाना करपद्माभ्यामक्षमाला-कमण्डलू 
देवी प्रसीदतु मयि ब्रह्मचारिण्यनुत्तमा॥
ததாநா கரபத்மாப்யாம் அக்ஷமாலா கமண்டலு
தேவீ ப்ரஸீதது மயி ப்ரஹ்மசாரிண்யனுத்தமா
பொருள்
அக்ஷமாலைகமண்டலத்தை தன் தாமரைக் கரங்களில் ஏந்தியவளும் , 
கற்பனைக்கெட்டாத மேன்மையானவளுமான அன்னை பிரம்மச்சாரிணி 
எனக்கு அருள வேண்டும்

                                                            நாள் 3: சந்த்ரகண்டா
(பிறைசூடி)
पिण्डजप्रवरारूढा चण्डकोपास्त्रकेर्युता।
प्रसादं तनुते मह्यं चन्द्रघण्टेति विश्रुता॥
பிண்டஜப்ரவராரூடா சந்த்ரகோபாஸ்த்ரகேர்யுதா
ப்ரஸாதம் தனுதே மஹ்யம் சந்த்ரகண்டேதி விஶ்ருதா
பொருள்
சிம்மத்தின் மீது ஏறி வருபவளும்சந்த்ரகண்டா என்று புகழப்படுபவளும்
கடும் கோபமும் ஆக்ரோஷமும் கொண்டவளுமாகிய தேவி 
எனக்கு ப்ரஸாதம் அளிக்கட்டும்

நாள் 4: கூஷ்மாண்டா
(பேரண்ட பூசணி வடிவானவள்)
सुरासम्पूर्णकलशं रुधिराप्लुतमेव च।
दधाना हस्तपद्माभ्यां कूष्माण्डा शुभदाऽस्तु मे॥
ஸுராஸம்பூர்ண கலஶம் ருதிராப்லுதமேவச
ததாநா ஹஸ்த பத்மாப்யாம் கூஷ்மாண்டா ஶுபதாஸ்துமே
பொருள்
தாமரை போன்ற கரங்களில் ரத்தத்தின் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்கள் நிறைந்த இரு கலசம் ஏந்தியவளும் ஆன தேவி குஷ்மாண்டா எனக்கு நன்மை அளிப்பவளாக இருக்கட்டும்
 
நாள் 5: ஸ்கந்தமாதா
(குமரக்கடவுளின் அன்னை)
सिंहासनगता नित्यं पद्माश्रितकरद्वया।
शुभदाऽस्तु सदा देवी स्कन्दमाता यशस्विनी॥
ஸிம்ஹாசனகதா நித்யம் பத்மாஶ்ரிதகரத்வய
ஶுபதாஸ்து சதா தேவி ஸ்கந்தமாதா யஶஶ்வினீ
பொருள்:
எப்பொழுதும் அரியணையில் வீற்றிருப்பவளும்இருகரங்களில் தாமரை மலர்களை ஏந்தியவளும்ஸ்கந்தனின் தாயும்புகழோங்கியவளுமான தேவி எப்பொழுதும் நன்மையை அளிப்பவளாக இருக்கட்டும்
 
நாள் 6: காத்யாயனீ
(காத்யாயரின் மகள்)
चन्द्रहासोज्ज्वलकरा शार्दूलवरवाहना।
कात्यायनी शुभं दद्याद्देवी दानव-घातिनी॥
சந்த்ரஹாஸோஜ்வலகரா ஶார்தூலவர வாஹனா
காத்யாயனீ ஶுபம் தத்யாத் தேவி தானவ-காதினி
பொருள்:
ஒளி வீசும் சந்த்ரஹாஸம் என்ற வாளைக் கையில் கொண்டவளும்வலிமைவாய்ந்த புலியின் மீது வீற்றிருப்பவளும்அசுர சக்திகளை அழிப்பவளுமான அன்னை காத்யாயனி நன்மையை அளிக்கட்டும்
  
நாள் 7: காளராத்ரீ
(கும்மிருட்டு போன்ற கரிய உருவினள்)
एकवेणी जपाकर्णपूरा नग्ना खरास्थिता।
लम्बोष्ठी कर्णिकाकर्णी तैलाभ्यक्तशरीरिणी॥
वामपादोल्लसल्लोहलताकण्टकभूषणा।
वर्धन्मूर्धध्वजा कृष्णा कालरात्रिर्भयङ्करी॥
ஏகவேணீ ஜபாகர்ணபூரா நக்னா கராஸ்திதா
லம்போஷ்டீ கர்ணிகாகர்ணா தைலாப்யக்தஶரீரிணீ
வாமபாதோல்ல ஸல்லோஹலதாகண்டக பூஷணா,
வர்தன்மூர்த்தத்வஜா க்ருஷ்ணா காலராத்ரி பயங்கரி
பொருள்:
ஒற்றை ஜடையுள்ளவளும்செம்பருத்தி மலர்களை காதுகளில் அணிந்தவளும்,  ஆடையற்றவளும்கழுதை மேல் வீற்றிருப்பவளும்இருகாதுகள் வரை நீண்ட நீளமான உதடுகளை உடையவளும்எண்ணெய் பூசிய உடலை உடையவளும்இடது பாதத்தில் மலர்கள் நிறைந்த முற்கொடிகளை கொலுசாக அணிந்தவளும்கருப்பு நிற கொடியைக் கொண்டவளும் அச்சத்தைத் தருபவளுமான காளராத்ரியை வணங்குகிறேன்.
 
நாள் 8: மஹாகௌரீ
(ஐந்து வயது குழந்தை வடிவினள்)
श्वेते वृषे समारूढा श्वेताम्बरधरा शुचिः।
महागौरी शुभं दद्यान्महादेव-प्रमोददा॥
ஶ்வேதே வ்ருஷே ஸமாரூடா ஶ்வேதாம்பரதரா ஶுசி:
மஹாகௌரீ ஶுபம் தத்யான் மஹாதேவ ப்ரமோததா
பொருள்
வெண்மையான காளையின் மீது ஏறி வருபவளும்தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்தவளும்தூய்மையானவளும்மகாதேவருக்கு மகிழ்ச்சியை அளிப்பவளுமான மகாகௌரி நன்மையை அளிக்கட்டும்
 
நாள் 9:ஸித்திதாத்ரீ
(பலனளிப்பவள்)
सिद्धगन्धर्व-यक्षाद्यैरसुरैरमरैरपि।
सेव्यमाना सदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी।।
ஸித்தகந்தர்வயக்ஷாத்யைஅஸுரைஅமரைரபி
ஸேவ்யமானா ஸதா பூயாத் ஸித்திதா ஸித்திதாயினீ
பொருள்:
சித்தர்கந்தர்வர்யக்ஷர்அஸுரர்கள்ஸுரர்கள் (தேவர்கள்என அனைவராலும் எப்போதும் வணங்கப்படுபவளான ஸித்திதாத்ரி  வேண்டிய பலனளிப்பவளாக இருக்கட்டும்

Aug 18, 2021

மன்னித்து ஏற்றுக்கொள் - நம: சிவாய

அடியாரை தரிசிக்க விடாமல் துரத்தினேனா... மன்னித்து ஏற்றுக்கொள் - நம: சிவாய 

ஆண்டவனை தரிசிக்க காசு கேட்டேனா... மன்னித்து ஏற்றுக்கொள் - நம: சிவாய

இனிதாகப் பேசாமல் எரிஞ்சு விழுந்தேனா... மன்னித்து ஏற்றுக்கொள் - நம: சிவாய

ஈட்டுவதற்காக உன்னை விட்டு தூரம் சென்றேனா... மன்னித்து ஏற்றுக்கொள் - நம: சிவாய

உன்னையே கதியென்று இருக்காமல் பொருள் தேடினேனா... மன்னித்து ஏற்றுக்கொள் - நம: சிவாய

ஊரறிய உன் புகழைப் பேசாமல் இருந்தேனா... மன்னித்து ஏற்றுக்கொள் - நம: சிவாய

எவரெவர் பேச்சையோ கேட்டு உனக்குக் குறை வைத்தேனா... மன்னித்து ஏற்றுக்கொள் - நம: சிவாய

ஏய்த்துப் பிழைப்பதை மந்திரத்திலும்... முறைகளிலும் வைத்தேனா... மன்னித்து ஏற்றுக்கொள் - நம: சிவாய

ஐக்ய பாவத்தை மறந்து உன்னை அன்னியமாய் வைத்து பூஜித்தேனா... மன்னித்து ஏற்றுக்கொள் - நம: சிவாய

ஒன்றிய மனதோடு பூஜிக்காமல் கடமைக்கு பூஜித்தேனா.. மன்னித்து ஏற்றுக்கொள் - நம: சிவாய

ஓய்ந்திருக்கும் வேளையிலும் உன் பெயரை மறந்தேனா.. மன்னித்து ஏற்றுக்கொள் - நம: சிவாய

ஔஷதம் நீயிருக்க எங்கெங்கோ அலைந்தேனா... மன்னித்து ஏற்றுக்கொள் - நம: சிவாய

ஆசாரம் குறைந்தேனே... ஆகமம் பயிலேனே.... ஆகமத்தை விற்றேனே

ஓதாமல் இருந்தேனே... பெற்றோரை அதட்டினேனே... பெரியோரைப் பெயரிட்டு அழைத்தேனே

பாக்குப் போட்ட வாயால் பஜனை செய்தேனே... அதிகாரமாய் இருந்தேனே...

பவ்யத்தை மறந்து பகட்டாய் இருந்தேனே... உன்னை அறியாமல் இளமையைக் கழித்தேனே

அத்தியாவசியத்தை மறந்து ஆடம்பரத்தைத் தேடினேனே... 

சத்தியத்தை மறந்தேனே... சந்தியில் நின்றேனே...

திக்கற்றவருக்குத் தெய்வம் துணை என்றுணர்ந்தேனே...

மன்னித்து ஏற்றுக் கொள் நம: சிவாய

அம்மையே அப்பனிடம் பரிந்து பேசு... 

ஐங்கரா அகங்காரத்தைக் கெடு...

குஹா குருவாய் என் இருளகற்று...

நந்திகேஶ்வரா தயை கூர்... தடையகற்று...

நாதனே... நாயேன் என்னை மீண்டும் நல்லவனாக்கி நின் தொண்டில் கொள்

நம: சிவாய... நம: சிவாய... நம: சிவாய

Jul 24, 2021

குரு பௌர்ணமி - வியாஸ பூஜை

 குரு பௌர்ணமி - வியாஸ பூஜை



ஆடி மாத பௌர்ணமியை குரு பௌர்ணமியாகக் கொண்டாடி,  வியாஸரை பூஜித்து இன்று முதல் நான்கு மாதங்களுக்கு நம் பாரத தேசமும் தாண்டி உலகெங்கிலும் உள்ள துறவிகள் உலக நன்மை, அமைதியை வேண்டி அடியார்களுக்கு உபதேசங்கள் அருள்வது அனாதியாய் தொன்று தொட்டு வரும் மரபு.

அது ஏன் எவ்வளவோ ஞானிகளை, ரிஷிகளை, முனிவர்களை உலகிற்கு அளித்த நம் பாரத தேசம் குறிப்பாக வியாஸரை இன்று குருவாகக் கொண்டாட வேண்டும் ?

நாராயணர், ப்ரஹ்மா, வஸிஷ்டர், ஶக்தி, பராஶரர், க்ருஷ்ண த்வைபாயனர் என்ற வியாஸர் என்று இவருடைய வம்ஶம் மிகப் பெருமை வாய்ந்தது.  கறுப்பு நிறத்தவர் என்பதால் க்ருஷ்ணன், தீவில் பிறந்ததால் த்வைபாயனர்.  ஆனால் இதுவா காரணம் ? தினசரி வழிபாட்டில் வியாஸர் முதலான ரிஷிகள் என்று வருகிறது... அதாவது இவருக்கு முன்னால் இருந்த ரிஷிகளுக்கும் இவரே முதல்வர் என்றாகிறது.  இவர் சாதனைகள் வியக்க வைக்கின்றன அப்படி.

சனாதனமான நம் ஹிந்து மதத்திற்கு வேதங்களே ஆதாரம். இந்த வேதங்கள் எல்லா துறைகளுக்குமான விஷயங்களை, முறைகளை ரஹஸ்யமாக வைத்துள்ளது.   இதில் எந்த ஒரு மாறுதல்களும் செய்ய எவருக்கும் அதிகாரம் இல்லை.  பரமேஶ்வரனின் மூச்சுக்காற்றான இதை இன்று நமக்கு உபயோகமாகும்படி வகுத்துத் தந்தவர் இந்த வியாஸரே.

ஐந்தாவது வேதம் என்கிற மஹாபாரதத்தை பகவத் கீதையோடு நமக்கு உபதேசித்தவர் இந்த வியாஸரே.

மும்மூர்த்திகள், முருகன், தேவதைகள் உபாசனை, பக்தி, தர்மம், உலக உற்பத்தி, ஸூர்ய, சந்த்ர வம்சத்து அரச பரம்பரைகளை ப்ரஸித்தப்படுத்திக் கொண்டிருக்கும் கந்த புராணம் முதலிய 18 புராணங்களை தந்தவர் இந்த வியாஸரே.

உருவ வழிபாடுகளைத் தாண்டி ஏகம் ஏவ அத்விதீயம், அஹம் ப்ரஹ்மாஸ்மி, தத்வமஸி என்றெல்லாம் வேதங்கள் கொண்டாடும் ஒன்றான பரம்பொருளின் இலக்கணத்தை, ப்ரஹ்ம ஸூத்ரம் என்று நமக்கு வர்ணித்தவரும் இந்த வியாஸரே.

உலக உற்பத்தி, காக்கும் வழிமுறைகள், ஒடுக்கம் என்பனவெல்லாம் மிகவும் தெளிந்த இந்த வியாஸர் நான்கு முகங்களற்ற ப்ரம்மா, நான்கு கைகள் இல்லாத மஹாவிஷ்ணு, முக்கண் இல்லாத பரமேஶ்வரன்.

குரு என்ற வார்த்தை இருளை அழிப்பவர் என்ற பொருள் கொண்டது. 
இந்த ப்ரஹ்ம ஸூத்ரம், வேதங்கள், உபநிஷதங்கள், மாபாரதம், புராணங்கள் இல்லையென்றால் இன்று நமக்கு ஒரு பிடிமானமும் இல்லாமல் அனாதைகளாயிருக்க வேண்டியதுதான்.  நாம் இன்று சனாதனிகள், ஹிந்துக்கள் என்று பெருமையோடு உலகிற்கு வழிகாட்டுவது இவராலேயே.  

துஷ்டர்களை அழிக்க அவ்வளவு அவதாரங்கள் எடுத்த மஹாவிஷ்ணுவே வியாஸராக தர்மத்தை நிலை நிறுத்த வந்தார்.  ஆதி சங்கரர் உட்பட இன்றைய எல்லா குருபரம்பரைக்கும் இவரே ஆதி குரு.

எல்லா குருக்களுக்கும் இன்று நம்முடைய சிறப்பு நமஸ்காரங்களை அர்ப்பணிப்போம்.