Feb 28, 2018

ஜகத்குருவுடன் சில காலம்

ஜகத்குருவுடன் சில காலம்

- அவருக்குப் பணிவிடை செய்வதற்காக சிலர்.
- அவருடன் இருப்பதையே பாக்யமாகக் கருதி இருந்தவர் சிலர்.
- அவரிட்ட கட்டளைகளை பரதனைப் போல நடத்திக் கொண்டிருப்பவர் பலர்.
- பெரும் ப்ரச்னைகளாக அனுபவஸ்தர்களும், பதவியிலிருப்போரும் நினைத்துக் கொண்டிருப்பவைகளுக்கு, நிமிஷங்களல்ல, கேட்ட மாத்ரத்திலேயே நொடிகளில் அனாயாசமாக அவர் கூறும் தீர்வுகளை ரசித்து எப்போதும் ப்ரமித்துக் கொண்டிருப்பவர் சிலர்.

- குழந்தைகளோடு குழந்தையாகவும்
- நிர்வாகஸ்தர்களோடு தலைவராகவும்
- மூடர்களுக்குக் கருணாமூர்த்தியாகவும்
- பல்துறை வித்தகர்களுக்கு ஆச்சர்ய ரூபமாகவும்
- வேதாந்திகளுக்கும், அவர்கள் கூறும் சிக்கலான வேதாந்த தத்வங்களைப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு எளிய உதாரணங்களோடு அவைகளை சுருக்கமாக விளக்கி விடும் ஜகத்குருவாகவும்
- சர்வ மத சித்தாந்திகளுக்கும் உதார புருஷராகவும்,
- சமூக சேவகர்களுக்கெல்லாம் கலங்கரை விளக்காகவும்,
- கர்ம சன்யாசிகளுக்கெல்லாம் முன்னோடியாகவும்
- வேத பாடசாலைகள், பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், முதியோர் இல்லங்கள், ஊனமுற்றோர் மற்றும் நலிந்தோர், பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம், மறுவாழ்வு, மருத்துவமனைகள் என எண்ணிலடங்கா திசைகளில் சேவைகள் செய்பவர்களுக்குக் காரண கர்த்தாவாகவும்,
- பல பாஷைகளில் நிபுணராகவும்,
- எல்லோராலும் எளிதில் அணுகக்கூடிய  மடாதிபதியாகவும்,
- வேண்டி அழுது தொழுவோருக்கு தன்வந்த்ரியாகவும்,
- சமூக சீர்திருத்தவாதிகளுக்கு உறுதுணையாகவும்  இருந்தவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்.

பாரம்பரிய மடத்தின் வழித்தோன்றலாக முழு பாரதத்தையும் தன் குருவோடு காலடியாக சென்று அலங்கரித்தது, ஆதி சங்கரர் நினைவுக் கூடங்கள், வேத, சாஸ்த்ர, சம்ஸ்க்ருத, தமிழ் இலக்கிய பரிபாலனம்,  கடுங்குளிர், மழை, வெயில் காலங்களைப் பொருட்படுத்தாத ஓய்வறியாத உழைப்பு.

இதெயெல்லாம் இவரோட பதவிக்கும், சன்யாஸ ஆஸ்ரம தர்மத்துக்கும் செஞ்சிருக்க வேண்டியதே இல்ல.  கேக்கறதுக்கும் யாருமில்ல.  பாரதத்துல க்ருஷ்ணன், "நான் செய்ற எந்த நித்ய கர்மாவாலயும்  எனக்கு ஒன்னும் ஆகப்போறதில்ல.  ஆனா க்ருஷ்ணனே கடை பிடிக்கலையேன்னு பேச்சு வந்துடக்கூடாது" ன்னு சிரிப்பானாம்.  இவர் அவன் தான்னு சொல்லுவேன்.  மஹா பெரியவாங்க்ற ஞான ஸூர்யனோட எல்லா கனவுகளையும் எல்லைகளையும், தாக்குதல்களையும் அசகாயமாக எளிதில் தாண்டி, முடிச்சு வெச்ச வைராக்யம் கொண்ட பெரும் கர்ம யோகி.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் இப்படி ஒரு குண வரிசையைக் கூறி இப்படி யாராவது இருந்திருக்கிறார்களா என்று வால்மீகி முனிவர் கேட்டதற்கு, "இவை யாவும் ஒரே மனிதனிடத்தில் காண்பது மிகவும் அரிது.  ஆனாலும் அப்படி ஒருவன் இப்போதே அயோத்தியில் தசரதச் சக்ரவர்த்தித் திருமகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்" என்று நாரதர் பதில் கூறுவார்.

ஸ்ரீமத் வ்யாஸ பாரதத்திலும் "நல்லவைகளைக் காக்கவும், தீயவைகளை அழிக்கவும் நான் அவ்வப்போது அவதரிக்கிறேன்" என்று க்ருஷ்ணன் வாக்குறுதி கொடுத்திருக்கிறான்.

என்னைப் பொறுத்தவரை அப்படி ஒரு அவதாரம் தான் இந்த இருள் நீக்கியும்.

என் பணிப்பயணம் இவர் காலடியிலிருந்தே தொடங்கியது.
காலம்பற எழுந்திருக்கறது, மடத்துக்குள்ளேயே வாக்கிங் போறது, வாக்கிங்கோட கடைசி ரவுண்டுல தானே எல்லா லைட் ஸ்விட்ச்களையும் அணைக்கறது,  மஹா பெரியவா ப்ருந்தாவனத்துக்குப் பூஜை, சந்த்ரமௌளீஶ்வரர் பூஜை, பாஷ்ய பாடம் ன்னு எல்லாத்துலயும் பெரியவாளோட பன்ச்சுவாலிட்டி,  தண்டத்தைக் கைல வெச்சிண்டு பெரியவா நடக்கற ஸ்பீடு (சான்ஸே இல்ல, கூட ஓடித்தான் போகனும் எல்லாரும்) , காலை 4 மணிலேந்து ராத்ரி ஒரு பத்து, பதினோறு மணிவரை பெரியவா டைம் டேபிள் மனப்பாடம் எனக்கு அப்போதெல்லாம்.

எங்க தாத்தா அமரபாரதி நடராஜ ஶர்மா ஸ்ரீமடத்துல பெயர்.  மஹாபெரியவா சொன்னான்னு எங்க பாட்டியோட 100 பௌணுக்கு மேல சீரா இருந்த நகைகள் எல்லாத்தையும் வித்து ஸம்ஸ்க்ருதத்துக்குன்னு யுனிவர்சிட்டி திருச்சி சிந்தாமணில ஆரம்பிச்சு நடத்தி, பின்னாடி அதே பெரியவா சொன்னான்னு ஒரு வார்த்தை, ப்ரச்னை பண்ணாம வெளில வந்த மஹான்.  அவர் பையன்  RSS மனைவியோட பி.டபிள்யூ.டி இஞ்ஜினியர் வேலைய விட்டுட்டு முழு நேர ஸ்வயம்சேவக் - பெரியப்பா, பலதரப்பட்ட வேலைகளைப் பாத்துட்டு 14ஆவது வேலையா போலீஸ்ல கீழ் நிலைல சேந்து, முதலமைச்சர் விருது வாங்கிய இன்ஸ்பெக்டர் வேலைய விட்டுட்டு நம்ம க்ராமத்துக்கு, குழந்தைகளுக்கு நல்லதை விதைத்து, நல்ல எதிர்கால தலைவர்களாக்கனும்னு ஸ்கூல் நடத்தற எங்கப்பா, லிப்டன் டீ கம்பெனி வேலைய விட்டுட்டு கதாகாலக்ஷேபம்,  பக்திக்கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கும் சித்தப்பான்னு குடும்பத்தோட அடையாளம் தான் எனக்கு.  தனியா ஒரு சுக்கும், தகுதியும், அடையாளமும் கிடையாது.

யுனிவர்சிட்டில டீச்சர் வேலை, ரெண்டு, மூணு ஹாஸ்டல் பசங்களையும் இவன் பாத்துப்பான்னு வார்டன் பொறுப்பு  இதெல்லாம் பெரியவா என்னையும் மதிச்சு, நம்பிக் கொடுத்த வாய்ப்புகள்.
நான் தினமும் அந்த க்ராமத்துலேந்து மடத்துக்கு ராத்திரி வேதபாடத்துக்கு சைக்கிள்ல வந்துட்டுப் போறேன்னு, என்னையும், என்னோட குரு கருப்பத்தூர் ஸ்ரீ சந்த்ரசேகர கனபாடிகளையும் அழைத்து இன்னிக்கு ராத்ரி, நாளைக்கு காலம்பற 4 மணிக்குன்னு இவனுக்குப் பாடம் நடத்துங்கோ, என் கிட்டயே ஒரு ரூம் இவனுக்குக் குடுத்துடறேன், தினமும் வந்துட்டுப் போக வேண்டாம்னு அனுக்ரஹித்த தாயுள்ளம், ஐடியா ரத்னம்.

நான் தான் சம்பாதிக்கறேனே, நானும் மத்த மதங்கள்ல குடுக்கறாமாதிரி மாசா, மாசம் ஏதாவது சேவை கார்யத்துக்கு உபயோகமா மடத்துக்குக் காணிக்கை தரேன் சொன்னதுக்கு, நீ இங்க பாடம் படி, யுனிவர்சிட்டில பாடம் சொல்லிக் குடு, வேறெதுவும் பண்ண வேண்டாம்ன தகப்பன்.

வந்து சேந்த புதுசு.  மடத்துலயும், மடத்து நிறுவனங்கள், நிலங்கள்லயும் நெறையா தப்பு பண்றா நம்ம மனுஷாளேன்னு ஒரு தடவ பெரியவா கிட்ட சொன்னேன்.  "இது தர்ம ஸ்தாபனம், கவர்மெண்ட்  ஆபீஸ் மாதிரிதான்.  அவா, அவா வேலைய அவாளேதான் பாக்கனும்.   ஒருத்தர் 10 சதவீதம் தப்பு பண்ணுவா, இன்னொருத்தர் 20-30 சதவீதம் பண்ணுவா.  வேலைகள் இன்னும் நிறையா இருக்கு, மனுஷாள் 100 சதவீதம் சுத்தமானவாளா கிடைக்க மாட்டா.  அவா, அவா கிட்ட என்னென்ன கார்யம் நடக்குமோ, அதுதான் நடக்கும்.  சூர்யன்ட்ட போகும்போதும், கடினமான மலைல ஏறும் போதும் மேலப்போக, போக உஷ்ணம் தாங்காம இதெல்லாம் தானாவே உதிர்ந்து விழுந்துடும்.   ஸத்யமானவாலால மட்டும் தான் மேல வரைக்கும் போக முடியும்.  நீ இதையெல்லாம் பாத்துக் கொழப்பிக்காம, உன் வேலைய மட்டும் பாரு,  எதாவது சொல்லனும்னா சந்த்ரமௌளீஶ்வரர் கிட்ட போய் சொல்லிடு" ன்னு எனக்கும் கீதோபதேசம் செய்த ஆச்சார்யாள்.  அத பின்னாடி அனுபவத்துலயும் பாத்தேன்.

ஒரு தடவ பெரியவா வாக்கிங் போற பாதை கிட்ட  ஒக்காந்து காலை சந்த்யாவந்தன ஜபம் பண்ணிண்டு இருந்திருக்கேன்.  பெரியவா வரும் போது மரியாதையில்லாம, தெரியாம ஒக்காந்துண்டு இருக்கானேன்னு கூட வந்தவா கண்ண மூடிண்டு இருந்த என்ன எழுப்ப போறான்னு தெரிஞ்சதும், அவாளைத் தடுத்துட்ட பெரியவா, பூச்சிகள் ஒதுங்கனும்னு எப்பவும் பாத நுனியை சத்தப்படுத்திண்டு நடக்கற தன் பழக்கத்தையும் நிறுத்தி, சத்தப்படுத்தாம என்னைத் தாண்டிப் போனான்னு தெரிஞ்சுது.

வேதாந்த பாடம் நடந்துண்டிருந்த போது, பாஷ்ய வாத்யார் உப்புக் கரைஞ்ச தண்ணில உப்பு கண்ணுக்குத் தெரியரதில்ல, ஆனா ருசிக்கும் போது புலப்படறதுன்னு சொல்லிண்டு போறார்.  பெரியவா "அத குடிச்சதும், சுத்தமான தண்ணில ஆசமனம் (குடிச்சிட்டு) பண்ணிட்டு வா ன்னு ஏன் சொல்லியிருக்குன்னு" கேட்டா.  ஒருத்தர் அது ஆசாரம்னார், மத்தவால்லாம் ஒன்னும் விளக்கம் சொல்ல முடியல.  எதோ பெரிசா இருக்கும்னு ஆர்வமா பெரியவா கிட்டயே கேட்டா.  உப்பு தண்ணிய குடிச்சதும் அதும் உப்பு இருக்குன்னு தெரிஞ்சுப்பான்.  ஆனா சுத்தமான தண்ணில ஆசமனம் பண்ணினதும் மூளைல அந்த பதிவு அனுபவ வித்யாசத்தால இன்னும் ஸ்திரமா பதியும்னா.   மஹா பெரியவாளோட ப்ரதான சிஷ்யர் இப்படி வேதாந்தத்துக்கு ஒரு எளிய விளக்கம் குடுத்திருக்காளேன்னு ஆச்சர்யப்பட்டா, அது நிலா அழகா, குளிரா இருக்கேன்னு ஆச்சர்யபடறா மாதிரிதான்.

ஒரு முறை மடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பசங்களும் தெரிஞ்சிக்கட்டும், சேவை பண்ற பழக்கம் வரட்டும்னு ஸ்டூடண்ட்ஸ் கொஞ்சம் பேரக் கூட்டிண்டு போயிருந்தேன்.  அப்ப அங்க எங்களப் பாத்த பெரியவா ஆசிர்வாதம் பண்ணிட்டு, இன்னிக்கு லீவு இல்லியே, எங்க இங்க வந்தேள் எல்லாரும்னு கேட்டா.  நான் விஷயத்தை சொன்னேன்.  உடனே வார்டன் மாதிரி, "மடத்துல இப்படி தினமும் எதாவது நடந்துண்டேதான் இருக்கும், லீவு நாள்ல வந்து பாத்து, சர்வீஸ் பண்ணினா போறும், படிக்கறத விட்டுட்டு இங்கெல்லாம் வரக்கூடாது" ன்னு தீர்க்கமா சொல்லிட்டா.

அப்பா நடத்தற ஸ்கூலுக்குப் பணம் போதலைன்னு யுனிவர்சிட்டி வேலைய விட்டுட்டு ஐ.டி. கம்பெனி வேலைக்குக் கிளம்பி, ராஜினாமாவ வைஸ் சான்ஸ்லரும் அங்கீகரிச்ச போது, பெரியவா யுனிவர்சிட்டிக்கு வந்திருந்தா.  நண்பர்கள் யோசனைப்படி நான் டவுனுக்குப் போயிருந்தேன், பெரியவா பேசி, போக விடமாட்டான்னு.  எல்லா உயரதிகரிகள், ஸ்டூடண்ஸ், அலுவலர்கள் ன்னு பேசிட்டு எல்லார் முன்னாடியும் என்னை எங்கன்னு கேட்டிருக்கா.  எல்லாரும் கேம்பஸ் முழுக்கத் தேடி, விட்லயும் தேடறா, உன்னைப் பாக்கறதுக்காக ஒக்காந்திருக்கான்னு நண்பர்கள் ஃபோன் பண்ண, பதறியடிச்சிண்டு ஓடி வந்து, நமஸ்காரம் பண்ணி, அழுதேன்.  எல்லாரையும் வெளில இருக்கச் சொல்லிட்டு, என் கூட யுனிவர்சிட்டி லைப்ரரி கண்ணாடி ரூம்ல கும்பகர்ணன், விபீஷணன் கதைய சொல்லி, குழந்தைகளை வெளில அனுப்பு, நீ போய்டாதன்னு சொல்லி, வைஸ் சான்ஸ்லர் பி.ஏ வ கூப்டு, அந்த ரெஸிக்னேஷன் லெட்டர கிழிச்சிப் போட்டுடு, அவன் எங்கயும் போகலன்னு உத்தரவு இந்த ஃபவுண்டர் அண்டு பேட்ரன்.

அழைத்தும் எங்கும் எளிதில் வந்து விடாத இந்த இந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கம்பரசன்பேட்டை எங்க இல்லத்துக்கு ரெண்டு, மூணு தடவ கூப்டாமலேயே, எதிர்ப்பார்க்காத இன்ப அதிர்ச்சி இன்ஸ்பெக்ஷன், எழுந்தருளினது, குழந்தைகளை ஆசிர்வதித்தது, எங்காத்து விக்ரஹங்களுக்குப் பூஜை செய்ததெல்லாம் நாம் இன்னும் நெறையா எதிர்பார்ப்பில்லாத, எதிர்ப்புகள மீறின சேவைகளைத் தொடர்ந்து செய்யனும்க்ற உத்வேகத்தைக் கொடுக்கும் அங்கீகாரமே.

திரும்பி ஒரு தடவ பெரியவா கிட்டயே பர்மிஷன் வாங்கிண்டு, படிச்ச படிப்பு அனுபவத்துல எங்க, எப்படி உபயோகப்பறதுன்னு பாத்துட்டு, இன்னும் கத்துண்டு வந்துடறேன்னு வெளில வந்திருக்கேன்.  மேய்ச்சல் நிலத்துல மேஞ்சிண்டிருக்கற மாட்ட கட்டியிருந்த கொம்ப இப்ப காணோம்.  சிவன் இனிமே யார, எப்ப அனுப்பிச்சு, திரும்பி வழி நடத்தப் போறான்னு தெரியல.  இவாகிட்டேந்து எப்ப இதையெல்லாத்தையும் கத்துக்கறது,  நடைமுறைப்படுத்தறது ?  இந்த மாதிரி இவாளோட விஶ்வரூபத்தோட பல முகங்களைக் கூட இருந்து ரசிச்ச த்ருப்தி மட்டும் தானோ ! ! !

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.- திருமூலர் திருமந்திரம்

தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகரில்லாத தனித் தலைமை தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடி என் சென்னிமிடை வைத்த பெரும் தெய்வம் - ராமலிங்க அடிகள் திருவருட்பா

என்று தோன்றினை என்று கூறவும் இயலா
தொன்மை வாய்ந்தவா இறைவா தொழுதழுகின்றோம்
எந்த நாளும் உந்தன் புகழ் ஓங்கி உயர்ந்திட - குருவே
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்.

ஜய ஜய பகவா குருவே ஜய ஜய பகவா
ஜய ஜய பகவா கொடியே ஜய ஜய பகவா

6 comments:

Unknown said...

HE has been and will be with us and guide us. He has just relinquished the mortal body. Radheshyam!!

Unknown said...

Sir you are blessed by the kankanda deivam and we are also so blessed as you are our teacher... Namaskaram.... Seeking bleedings forever.....Gurubyo Namaha..

Anonymous said...

Guruva Saranam...

Anonymous said...

Guruva Saranam...

Anonymous said...

Guruva Saranam...

Anonymous said...

Guruva Saranam...