Oct 29, 2009

M. K. T பாடல்கள் - 1

M. K. தியாகராஜ பாகவதர் (ஜனவரி 3, 1909 - நவம்பர் 1, 1959), கர்நாடக சங்கீத மேதை, ஏழிசை மன்னர், திரை இசை பாடகர், நாடக/திரைப்பட நடிகர், படத் தயாரிப்பாளர், தமிழ்த் திரைவுலகின் முதல் சூப்பர் ஸ்டார். மாயவரத்தில் (மயிலாடுதுறை) பொற்கொல்லர் குடும்பத்தில் பிறந்தார். திருச்சியில் வளர்ந்தார்.

1934 ல் பவளக்கொடி நாடகத்தில் அவர் அர்ஜுனனாக நடித்ததைப் பார்த்த ஒருவர், அடையாரில் ஒரு இடத்தை வாங்கி ஸ்டுடியோ அமைத்து (மீனாக்ஷி ஸ்டுடியோ, அப்பறம் சத்யா ஸ்டுடியோ, இப்ப எம்.ஜி.ஆர் காலேஜ்) அவரை வைத்து அந்த நாடகத்தைப் படமாக உருவாக்கினார். சம்பளம் 4000 ரூபா. 50 பாடல்கள். பாபநாசம் சிவன் அவர்கள் பாடலாசிரியராக அறிமுகம்.

அதன் பின் நவீன சாரங்கதாரா (1936), சிந்தாமணி (1937), சத்தியசீலன் (1938), அம்பிகாபதி (1938), திருநீலகண்டர் (1939), அசோக் குமார் (1940), சிவகவி (1942), ஹரிதாஸ் (1944), ராஜமுக்தி (1948), அமரகவி (1952), ஷ்யாமளா (1953), புதுவாழ்வு (1957), சிவகாமி (1959) ஆகிய படங்களில் நடித்தார்.

மதுரை பொண்ணு ஐயங்கார் என்ற வயலின் வித்வான் இவரின் குரு. பாகவதர் தங்கத் தட்டில் சாப்பிடுவார். பட்டு பீதாம்பரம், வைர வைடுரியம் அணிவார். சொந்தமாக குதிரை, கார்கள், மோட்டார் சைக்கிள், பங்களாக்கள் வைத்திருந்தார். சென்ற இடங்களிலெல்லாம் அவர் சென்ற ரயில் 4, 5 மணி நேரம் தாமதமாகத்தான் செல்லும். வழி நெடுக ரசிகர்கள். படித்தவர், படிக்காதவர், சங்கீத வித்வான்கள், பணக்காரர்கள், ஏழைகள் என பல ரசிகர்கள். தாராள குணம் கொண்டவர். கோவில், கல்வி நிறுவனங்கள் போன்றவைகளில் நடக்கும் கச்சேரிகளுக்கு பணம் வாங்க மாட்டாராம். திருச்சி ரேடியோ ஸ்டேஷன் சங்கீத வித்வான்.

முக்யப் பிரமுகர்களைப் பற்றி அசிங்கமாக மஞ்சள் பத்திரிகையில் எழுதி சம்பாதித்துக் கொண்டிருந்த லக்ஷ்மீகாந்தன் என்பவர் 1944 ல் கொலை செய்யப்பட்டதில் MKT யும், NSK யும் கைது செய்யப்பட்டு பல மாதங்களுக்கு பின் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர். அதன் பின் அதிகமாக படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாத MKT பல கோவில்களில் தங்கி, பாடல்களைப் பாடிப் பொழுதைப் போக்கி, பலர் அழைத்தும் திரும்பித் தன் பழைய வாழ்க்கைக்குத் திரும்பாது இறைவனடி சேர்ந்தார்.

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இவர் சமாதி உள்ளது. மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள்
http://en.wikipedia.org/wiki/M._K._Thyagaraja_பாகவதர் லும், அதிலுள்ள reference link களிலும் உள்ளது.

பாடல் வரிகள் சில:

1. ஆனந்த நடன விநோதா தேவ - ஜகன்நாதா (ஆனந்த)
கண் மூன்றுடையாய் கதிநீ ஹரனே
கருணையோடெனைக் கடைக்கண்பார் தயாளா (ஆனந்த)
நஞ்சார் அரவும் பணியாய்க் கொண்டாய்
அஞ்ச வரும் நஞ்சையும் உண்டாய்
தஞ்சமுன் குஞ்சித பாதம் தில்லைவாழ் (ஆனந்த)

2. ஆரனங்கே நெஞ்சம் நீயறியாய்
ஆருயிர் தங்களின் நேயமதே பெரும் மாயமதே நீயறியாய் (ஆரனங்கே)
அதரங்கள் ரெண்டும் அணைந்திடா போது
ஆனந்த சொல்லே வருவதும் ஏது
யாழின் தந்திதனை விரல் மீட்டாவிடில்
அமர நாதமே இல்லை யன்றோ (ஆரனங்கே)
வாசிக்கா போது மூங்கில் அன்றோ
வாசித்த போதே முரளி அன்றோ
நேசமாக வண்டு பேசிய போது
வாசத்தேன் மலர் வாழ்வல்லவோ (ஆரனங்கே)
மங்கையின் போல் எல்லாம் மனம் வேண்டாம் என்றால்
மானிடர் சந்ததி மாயும் அன்றோ
இங்கிதம் தெரிந்தே அந்த பரம் பொருள்
இந்நிலம் யுகம் யுகம் தோன்றுவதே (ஆரனங்கே)

3. அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்
திருவடியினைத் துணையென்றம்பா
வெம்பவ நோயற அன்பர் தமக்கருள்
கதம்ப வனக்குயிலே சங்கரி ஜக (அம்பா)
பைந்தமிழ் மலர்ப்பாமாலை சூடி உன் பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் எந்நேரமும் நின் திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதிமயங்கி அறுபகைவர் வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜகதீஸ்வரி எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி என் (அம்பா)

4. அன்னையும் தந்தையும் தானே - பாரில்
அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம் (அன்னையும்)
தாயினும் கோவில் இங்கேது - ஈன்ற
தந்தை சொல் மிக்கதோர் மந்திரமேது
சேயின் கடன் அன்னை தொண்டு - புண்ய‌
தீர்த்தமும் மூர்த்தி ஸ்தலம் இதிலுண்டு (அன்னையும்)
தாயுடன் தந்தையின் பாதம் என்றும் தலை வணங்காதவன்
நாள் தவறாமல் கோவிலில் சென்று என்ன காண்பான்
நந்த கோபாலன் வேண்டும் வரம் தருவானோ
பொன்னுடல் தன் பொருள் பூமி - பெண்டிர்
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
அன்னை பிதா இன்றி ஏது - மரம்
ஆயின் விதை இன்றி காய் கனியேது (அன்னையும்)

5. அரவா பரணன் திருவடி மறந்து
அடிமையின் மோகம் கொண்டழிவாரே (அரவா)
ஆயிரம் கற்றறிந்தென்ன பயன்
பகுத் தறிவிழந் துழல்வாரே (அரவா)
மங்கையர் மையல் எனும் மாயையில் ஆழ்ந்தவர்
சங்கரனை மனம் நினைவாரோ
நங்கையர் காதல் நிறைந்திடில் பாறை
மனந்தனில் சிவயோகம் பயிராமோ (அரவா)
வாத நோய்க் குலகில் மருந்துண்டு - பிடி
வாத நோயகல மருந்தேது
சாதனை யாக சிற்றின்பம் புகழ்பவர்
காதினில் ஞானமொழி ஏறாதே (அரவா)

6. அற்புத லீலைகளை யாரறிவார்
அகிலாண்ட நாயகனே ஹரனே உந்தன் (அற்புத)
சித்பரனே சிவனே உனதடியார்
செய்பிழைகள் பொறுத்தருளும் எனதையனே
திரு அபயவரக் கையனுன் (அற்புத)
பாட்டிலாசையால் அன்று பரவைமனை
தூது நடந்தவா விறகு சுமந்தவா
மாட்டுடையாய் தில்லை காட்டினிலே - அரு
ளாட்டுடையாய் தலை ஓட்டுடையாய் உன்னைக்
காட்டி மறைப்பாய் என்னை ஆட்டி அலைப்பாய் எம்பி
ராட்டியுடனே வாட்டமற இன்பம் ஊட்டுவை
துன்பம் ஓட்டுவாய் உந்தன் (அற்புத)

7. பூமியில் மானிட ஜன்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பதி
காலமும் செல்ல மடிந்திடவோ (பூமியில்)
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம்
சத்திய ஞான தயாநிதி யாகிய
புத்தரைப் போற்றுதல் நம் கடனே (பூமியில்)
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லை எனில் நர ஜன்மமிதே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ்மரமே வெறும் பாமரனே

8. சராசரங்கள் வரும் சுழன்றே
சகடு போலுன் அருளால் (சராசரங்கள்)
மலைகள் மாநதிகள்
அலை பொங்கும் ஆழி - பல்லூழி (சராசரங்கள்)
பரவும் நாதம் பறவைகள்
திருவிளையாடல் ஞானியார்
உணர்வார் ப்ரகாச நடேசா (சராசரங்கள்)

9. செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன் (செடி)
பிடிக்க வந்தாலே ஓடிடுவேனே
நிஜமே இது எனையே தொட முடியாது மானே
பாடும் குயிலே பாரு இப்போதே (செடி)
துள்ளி ஓடும் புள்ளி மானை நீங்கள் பிடிக்க முடியுமோ
ஆமை அல்ல நானே, முயல் என்று சொல்ல மாட்டேன்
வண்ண மலர் தூண்டிலில் என் ஜடைப் பின்னலைப் பிடித்திழுத்தால் வலிக்காதோ
மின்னலோடு நேசமுள்ள சின்ன இடை ஓடுவதால் ஒடியாதோ (செடி)

10. சிதம்பர நாதா திருவருள் தாதா-நின்
சித்தமிரங் காதா திருவடியல தொரு கதியிலன் (சிதம்பர)
பதஞ்சலியும் புலியும் பணியும்
குஞ்சித பதனே ஸஞ்சித மகலாதா (சிதம்)
நன்று தீது மறியேன் நொந்தேனே
ஞானமிலேன் உன்னை நம்பி வந்தேனே
மன்றிலாடும் மணியே செந்தேனே
வாதா அறுபகைத் தீயில் வெந்தேனே (சிதம்பர)

No comments: