Jun 17, 2022

வட இந்திய யாத்திரை - 2

வட இந்திய யாத்திரை 1 ன் தொடர்ச்சி

பஞ்சாப்: ஐந்து நதிகள் ஓடும் மாநிலம். பஞ்ச என்றால் 5. ஆப் என்றால் நீர். சீலம், சீனா, ராவி, பியாஸ், சட்லெஜ் என்பதே இந்த ஐந்து நதிகள். இதில் மூன்று நதிகள் இப்போது பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாபில்.  விவசாயம்தான் பிரதானம். சீக்கியர்கள் பூமி, வடக்கே எல்லையோரம் இருக்கும் எல்லா மாநிலங்களிலுமே போராட்டங்கள், உயிரையும் பொருட்படுத்தாமல் மண்ணைக் காக்கும் குணம் இவைகள் பரம்பரை பரம்பரையாக ஆண் பெண் எல்லா குழந்தைகளுக்குமே ஊறி இருக்கிறது. பஞ்சாப், ராஜஸ்தான்காரர்கள் முகலாயர் படையெடுப்புகளை எதிர்ப்பதற்காக கொடுத்த நரபலிகள் லட்சக்கணக்கில் என வரலாறுகள் பறை சாற்றுகின்றன. குழந்தைகளையும் வயதானவர்களையும் கொன்று விடுவது, பெண்களை கெடுத்து விடுவது, குடும்ப உறவுகளை காட்டி பயமுறுத்தி ஆண்களை பலவந்தப்படுத்தி மதம் மாற வேண்டும், இல்லையேல் உயிர், உடைமைகளை விட வேண்டும் என்பதே வாய்ப்பு.



பஞ்சாப் அமிர்தசரஸ்-ஸரஸ் என்றால் குளம், பொய்கை. சீக்கியர்களின் தலைமைப்பீடம் இந்த பொற்கோவில். ஹர்மந்திர் ஸாஹிப், தர்பார் ஸாஹிப் என்று வேறு சில பெயர்கள் இந்தக் கோவிலுக்கு.  அவர்களின் வேத புத்தகமான குருக்ரந்த ஸாஹிப் இருக்கும் பூஜைக்குரிய இடம் இது. சீக்கியர்களுக்கு 1. மறைத்த குடுமி 2. மரத்தாலான சீப்பு, 3. வெள்ளை கச்சம், 4. வாள், 5. இரும்பு கை காப்பு என்ற ஐந்தும் கட்டாய அடையாளங்கள். பரம்பரையாக வந்த 10 குருமார்களின் போதனைகளையும் உள்ளடக்கிய பதினோறாவது குருவாக அவர்களின் வேத புத்தகமான குருக்ரந்த ஸாஹிப் மதிக்கப்படுகிறது. கோதுமை மாவு, நெய், ட்ரை ஃப்ரூட்ஸ், வெல்லம் கலந்த இலவச ப்ரசாதம் வினியோகம் நாள் முழுதும்.  காலை 3 மணிக்கு ஒரு அறையிலிருந்து பொற்கோவில் மூலஸ்தானத்திற்கு இந்த வேத புத்தகம் பல்லக்கில் பவ்யமாக கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு நாள் பூஜை, வழிபாட்டுக்குப் பின் இரவு 10.30 மணிக்கு மீண்டும் அதே அறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. 24 மணி நேரமும் திறந்திருக்கும் பொற்கோவிலின் நான்கு கதவுகள் வழியாகவும் யாத்ரீகர்கள் ஒரு தடையுமின்றி குளத்தைச் சுற்றிலும் ஓய்வெடுக்கிறார்கள்.  24 மணி நேரமும் சப்பாத்தி, தால்(பருப்பு), ஜீரா ரைஸ், டீ ப்ரம்மாண்டமான உணவுக் கூடத்திலிருந்து(லாங்கர்) எண்ணற்ற வாலன்டியர்களால் சமைத்து, பரிமாறப்பட்டு, சுத்தப்படுத்தப்படுகிறது.  நாமும் எதாவது சேவையில் பங்கேற்கலாம்.  உள்ளே நுழையும் போது தட்டு டபரா தந்து அனுப்புவார்கள், தரையிலோ நாற்காலியிலோ அமர்ந்து உண்ணலாம், எவ்வளவு வேண்டுமானாலும், வீணாக்காமல்.




















எல்லோரும் அவரவர்கள் நிலையிலிருந்தும், நான் எனது என்ற திமிர் நிலையிலிருந்தும் இறங்கி வழிபடவேண்டும் என்ற புரிதலுக்காக இந்த குளமும், அதன் நடுவில் இருக்கும் பொற்கோவிலும் பூமியின் நிலையிலிருந்து பதினைந்து இருபது அடிகள் தாழ்வில் இருக்கிறது. முன்பெல்லாம் இந்த குளத்து நீரை காலி செய்துவிட்டு, தூய்மை செய்யும் கர சேவக பணி மிகவும் பிரசித்தம். ரவி நதி நீர் இதற்கு மூல நீராக அரசர்கள் காலத்தில் இருந்து வந்துள்ளது, இப்போது நவீன தொழில்நுட்பங்களுடன் இந்தக் குளம் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. எந்த உயர்நிலையில் இருக்கும் சீக்கியராக இருந்தாலும் தன் குடும்பத்தோடு இங்கு வந்து சில காலம் எந்த காரியங்களிலாவது தன்னை, குடும்பத்தை ஈடுபடுத்திக் கொள்வதை மிகவும் புண்ணியமாக கருதுகின்றனர். நாமும் கலந்து கொள்ளலாம், தடையில்லை. கோவில் பொற்கோவில் குளத்தில் முழம் நீளத்திற்கு மீன்கள். எவரும் குளிக்கலாம் ஆர்ப்பாட்டமின்றி.  தடுப்பு சங்கிலிகளும்,  பிடித்துக் கொள்ளவும் சங்கிலிகள் பாதுகாப்பிற்கு இருக்கின்றன. எவர் கண்ணிலும் படாமல் குளிக்கவும், உடை மாற்றிக் கொள்ளவும் பெண்களுக்கு குளத்து நீரிலேயே ஆங்காங்கு அறைகள் இருக்கின்றன. அவர்கள் முறைப்படி பெண்களும் ஆண்களும் தலைமுடியை வெளியே தெரியாமல் துணியால் போர்த்தி இருக்க வேண்டும். செல்ஃபி போட்டோ, கம்பீரமாக போஸ் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் எல்லாரும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆங்காங்கு சீக்கியர்கள் பாரம்பரிய உடையில் வாள், ஈட்டியோடு பணியில் இருக்கிறார்கள். மற்றவர்களும் ஆர்வமாக எவரும் தவறு செய்தால் அதை அன்பாக திட்டுகிறார்கள், திருத்துகிறார்கள். நிறுத்துகிறார்கள். கோவிலை சுற்றியும் குளத்தை சுத்தப் படுத்துவதற்காக படகில் சீக்கிய காவலர்கள் உலவுகிறார்கள். 








இங்கிருந்து 16-20 கிலோமீட்டர் தொலைவில் வாகா. பாகிஸ்தான் எல்லை அடாரி உள்ளது. இங்கு தினமும் மாலை இரு நாட்டு ராணுவத்தால் நடத்தப்படும் கலாச்சார கொடியிறக்க நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். மிகப் பெரிய நாடு என்பதால் கிரிக்கெட் கிரவுண்டில் இருப்பதுபோல் நம் நாட்டு கேலரி உள்ளது. இருநாட்டு ராணுவ சீருடைகளில் படைவீரர்கள், மூடியிருக்கும் எல்லைக் கதவுகள், மாலை கொடி இறக்கும் நிகழ்வில் கதவுகள் திறக்கப்பட்டு, ஆடல் பாடல் கொண்டாட்டங்களுடன் ஐந்தரை மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. நம் பகுதியில் மாலை நாலரை மணியிலிருந்தே தேசபக்தி பாடல்கள், உற்சாக முழக்கங்கள் என்று களைகட்டி விடுகிறது. குளிர்ந்த குடிநீர், ஐஸ்கிரீம், தின்பண்டங்கள் சர்க்கஸ் கொட்டகை போல் கிடைக்கின்றன. பொம்மைகள் நினைவுச் சின்னங்கள் கிடைக்கின்றன. எல்லை கதவுக்கு அருகில், படைவீரர்களுக்கு நடுவில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளலாம். நம் பரம்பரைக்கு ஒரு பெருமையான நிகழ்வு இது. இங்கு கட்டுப்பாடுகள், அணிவகுப்புகள் முக்கியம் இல்லை. கலாச்சாரம், கொண்டாட்டமே முக்கியமாக உற்சாகப்படுத்தப்படுகிறது. 






ராமனின் வாரிசான லவன் குசன் இருவரில் லவனின் தலைநகரமான லாகூர் லாகூர் இங்கிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவுதான்.  பொசுக்கும் வெயிலில் ஒரு காலணியை கால்களுக்கும், மற்றொன்றை அமர்ந்து கொள்ளவும் இருக்கையாக்கி துண்டை போர்த்திக் கொண்டு 3 மணியிலிருந்து மாலை ஆறரை மணி வரை அங்கே அனுபவித்தோம்.  ஆட்டோ அமர்த்திக்கொண்டு சென்றோம் போகவர ஆயிரம் ரூபாய்.  தனியாக ஆட்டோவில் சென்றால் இஸ்கான் கோவில், வால்மீகி ஆசிரமம், குழந்தைகளுக்கான வைஷ்ணவி தேவி கோவில் இவைகளையும் தரிசித்து வந்துவிடலாம்.  வால்மீகி ஆசிரமம் நிம்மதியாகவும் பிரம்மாண்டமாகவும் பெரும் குளத்தோடும் இருக்கிறது. லவனும் குசனும் பிறந்து, குருகுலவாசம் இருந்து ராமாயணம் கற்றார்கள் என்று கூறுகிறார்கள்.  

துர்க்கியானா (துர்க்கை) மந்திரும் பொற்கோவிலே.  அதைப்போன்றே அமைப்பு. 2-3 நாட்கள் தங்கினால் இந்த பொற்கோவில், கோவில் ம்யூசியம், பார்டிஷன் ம்யூசியம், வாகா பார்டர், ஜாலியன்வாலா பாக், வால்மீகி ஆஶ்ரமம், துர்க்யானா டெம்ப்பிள், கண்ணாடி ஓவியங்கள், செயற்கை குகை, அருவி, ஓடைகள் அமைந்த லால் தேவி (வைஷ்ணவி) கோவில் என நிம்மதியாக பார்க்கலாம்.









எல்லா ஊர்க்காரர்கள் போலவும் ஏமாந்தால் ஏமாற்றுகிறார்கள். பொருள்கள் பத்திரம்.  கடின உழைப்பாளிகள்.  பாரதத்திலிருந்து பாகிஸ்தான் பிரிந்த துயரங்கள், பொருள்கள் பார்ட்டிஷன் ம்யூசியத்தில் இருக்கிறது.  திங்கள் கிழமை விடுமுறை.  சர்க்கரை சேர்த்த தயிர்(லஸ்ஸி), நெய் இனிப்புப் பண்டங்கள் இங்கு பிரபலம். இங்கிருந்து டெல்லி ரயில்வே ஸ்டேஷன் (NDLS) 8 முதல் 10 மணி நேர ரயில் பயணம்.

வட இந்திய யாத்திரை - 1

வட இந்திய யாத்திரை - 1

जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी || - वाल्मीकि रामायणम्
ஜனனீ ஜன்மபூமிஶ்ச ஸ்வர்காதபி கரீயஸீ - வால்மீகி ராமாயணம்
பொருள்: பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே - மஹாகவி ஸுப்ரமண்ய பாரதியார்

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் - மருதகாசி வரிகளில் TMS குரலில் பொன்மனச் செம்மல்

டூருக்குக் கூட நம்மூர்ல இல்லாத மலை, இயற்கை, வயல், அருவிகள், குளங்கள், ஆறுகள், பனி, குளிர், வெயில், உணவு வகைகள் என்று எதுவும் ஸ்பெஷலா ஃபாரின்ல இருக்காப்ல எனக்குத் தோணல.  

முதல் யுகமான கிருத (ஸத்ய) யுகத்தில் தேவசேனாபதி முருகன் இமயமலையில் அவர் இருப்பிடமான கந்தமாதனத்தில் தொடங்கி இலங்கையையும் தாண்டி அவர் வரும் வழியெங்கும் தரிசனம், பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்கள், 

இரண்டாம் யுகம் திரேதா யுகத்தில் வால்மீகி ராமாயணத்தில் ராமன் காட்டுக்குள் கடந்து வந்த வழிகள், தீர்த்தங்கள்,  க்ஷேத்ரங்கள், சீதையைத் தேட டீம்களை அனுப்பும்போது சுக்ரீவன் நான்கு திசைகளிலும் செல்பவர்கள் எந்தெந்த இடங்கள், நதிகள், மலைகளை, மனிதர்களை, ஆபத்துகளை எல்லாம் கடந்து செல்லவேண்டி வரும் என்ற அபாரமான வர்ணனை, 

மூன்றாவது யுகத்தில் மகாபாரதத்தில் விதுரர், அர்ஜுனன், பீமன், பலராமன்னு பலர் செய்த யாத்திரைகள், 

நாம் இருக்கும் இந்த நான்காவதான கல்கியின் கலியுகத்தில் ஆதி சங்கரர், காஞ்சி மஹாஸ்வாமிகள், வள்ளலார், சமயக் குரவர் நால்வர், ஆழ்வார்கள் பாடல் பெற்ற தலங்கள் என்று எவ்வளவு புண்ய பூமிகள்.... ஆயுசு நிச்சயம் போதாது.  மஹாஸ்வாமிகள் 75 வருடங்கள் ஏறத்தாழ பாதயாத்திரையிலேயே பாரதத்தை வலம் வந்தார். 

இவ்வளவு வளமான, பெருமையான வரலாற்றைக் கொண்ட நாம இன்னிக்கு செல்ஃபோன், கூகுள் மேப், பஸ், காரு, ட்ரைனு இன்னும் என்னென்னவோ வசதிகள் வெச்சிருந்தாலும், காசு, பணம், துட்டுன்னு அனுபவிக்கப் போறோமான்னு ஒரு உத்தரவாதமும், நேரமும் இல்லாம ஓடிட்டே இருக்கோம்.

அதுவும் ஒவ்வொரு நதி, தலம், மூர்த்தி, சரித்திரப் புகழ், சாதனைகள் படைத்த முன்னோர்களைத் தெரிந்து கொண்டு இந்த இடங்களுக்கெல்லாம் சென்று நாம் அங்கு அதில் குளித்து, தரிசனம் செய்து, மண்ணில் உலவும் போது நிச்சயம் சிலிர்க்கிறது.  உருப்படியாக காசு, நேரம், வயது, வாழ்க்கையை செலவு செய்கிறோம் என்று. வாழ்க்கையில் அடுத்தடுத்த பணிகள், குடும்பம், வேலை என மற்ற படிக்கட்டுகள், பயணத்திற்கும் அது உற்சாகத்தைத் தருகிறது.  

வடக்கே, இந்த அமிர்தசரஸ் பஞ்சாபில் இருக்கே அது, பொற்கோவில், பாகிஸ்தான் பார்டரில் வாகா பெரேடு, ஜாலியன் வாலாபாக், டெல்லி, மதுரா கிருஷ்ணன் பிறந்த இடம், பிருந்தாவனம், அயோத்தி ராமர் பிறந்த இடம்,  பிரயாகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்று நதிகளின் திரிவேணி சங்கமம், காசி படித்துறைகள், விஶ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, கல்கத்தா ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பூஜை பண்ணின தட்சிணேஶ்வர் காளி, பூரி ஜெகன்நாதர், சங்கர மடம், கொனார்க் சூரியன் கோவில் இதெல்லாம் பாத்துட்டு வரணும்னு ஒரு லிஸ்ட். இது ஒரு பத்து பதினஞ்சு வருஷமாவே இருக்கு. ஆனா பேச்சுலரா இருந்தப்பவும், கல்யாணம் ஆனதுக்கப்புறமும், குழந்தைகள் பிறந்ததுக்கு அப்புறமும் காசும் இல்லை, லீவும் இல்லை. சரின்னு கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து, எப்படா லீவு வரும்னு காத்திருந்து காத்திருந்து இந்த வருஷம் கிளம்பியாச்சு. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ஹரித்வார், ஹ்ருஷிகேஶ் போயிட்டு வரலாம்னு பார்த்தா ரெண்டு வருஷம் கொரோணா கொண்டாட்டம் முடிஞ்சு மொத்த கும்பலும் இந்த வருஷம் அங்கதான் இருக்கு.  ஆகஸ்ட் மாசம் வேணா வாங்க, ஆகஸ்ட்-செப்டம்பரில் ஃப்ரீயா இருக்கும் அப்படின்னு அங்க இருக்கறவங்க எல்லாம் சொல்றாங்க.  அப்ப நம்மளுக்கு, ஸ்கூலுக்கு லீவு கிடைக்காது.  சரி இந்த ஸ்கூல் சம்மர் லீவ்ல எங்கேயாவது போயிட்டு வந்தே தீரனும்னு கிளம்பியாச்சு.

பெங்களூரில் 20 டிகிரி வெயில்.  இந்த டெல்லி, பஞ்சாப், ஆக்ரா, மதுரா, காசி எல்லாம் பார்த்தா 48-45-50 டிகிரி வெயில்.  டிசம்பர்-ஜனவரியில் இங்கெல்லாம் பத்து டிகிரி இன்னும் குளிரா இருக்கும். லீவும் இருக்காது. அப்பயும் போக முடியாது. ஒவ்வொரு வருஷமும் டெல்லியில வெயில்லையும், குளிரிலும் 10-15 பேராவது உயிரிழப்பு குளிர்-வெயில் தாங்க முடியாம.  திருச்சி பிறந்த ஊர் தாண்டி, காஞ்சிபுரம், மெட்ராஸ் வந்ததுக்கப்புறம் சப்பாத்தி, ரொட்டி, சப்ஜி இதெல்லாம் பழக்கம் ஆயிடுச்சு. அதே தானே வடக்க கிடைக்கப் போறது, பாத்துக்கலாம்னு கிளம்பியாச்சு.  நம்ம பாக்காத வெயிலான்னு கிளம்பியாச்சு. மொத்த ஊரையும் ரெண்டு வாரத்துல முடிச்சு தீரணும்னு பிளான். ஒரு ட்ரெயின்லயும் டிக்கெட் இல்லை. அடிச்சு புடிச்சு அம்ருத்ஸர் போய் சேர்ந்து ரெண்டே நாள்ல ஜுரம், எல்லா ஓட்டையிலிருந்தும் லூஸ் மோஷன். அனல் காத்து காலை ஏழு-எட்டு மணியிலிருந்து மாலை ஏழு-எட்டு மணி வரைக்கும். முகத்தை வெளியில காண்பிக்க முடியவில்லை. எல்லாரும் வெள்ளைத்துணில முக்காடு போட்டுனு சுத்தறோம் உள்ளூர்க்காரங்க போல.


15 வருஷத்துக்கு முந்தின நிலை இல்லையானாலும் இப்பயும் வடக்கே கிட்டத்தட்ட எல்லா இடங்களிலுமே உத்திரபிரதேஷ், டெல்லி, ஆக்ரா, மதுரா, கங்கை, யமுனை, பஞ்சாப், கல்கட்டால பாக்கு பாக்கு பாக்கு போடாத ஆளுங்களே இல்லை. அம்பல பொம்பளன்னு எல்லாரும் பாக்கு போட்டு விளையாடும் இடம், ஜன்னல், நடுரோட்டில், சுவர் ஓரமான்னு ஒரு இடம் பாக்கி இல்லாமல் எல்லா இடத்திலேயும் தூ தூ தூ தான். காலையில் கண் விழித்ததும் இரவு உறங்கும் வரை பாக்கு இல்லாத நாக்கு அபூர்வமாக உள்ளது. படிச்சவன் அடுத்தவனுக்கும் வெடி வைக்கறாப்ல சிகரெட்டு, பாமரனுக்கு பாக்கு, புகையிலை.


ஏரோப்ளேன் அனுபவம்: ரொம்ப கேவலம்.  பயண நேரம் கம்மிங்கறதும் எல்லா இடத்துக்கும் இல்ல.  ஏர்போர்ட் போறது, தனித்தனியா ஒவ்வொருத்தருக்கும் ஹார்டு காப்பி ஐடி கார்டு செக்கிங் (டிஜி லாக்கர், சாஃப்டு காப்பி எல்லாம் எல்லா இடத்துலயும் ஒத்துக்கறதுமில்ல), ஏறுவது, இறங்குவதுன்னு 5-6 மணி நேர பஸ், ட்ரைன் பயணத்துக்கு சரியா நேரம் ஆய்டுது.  ரெண்டு இட்லி 200-300 ரூபாய்ன்னு ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுல கடைகள்.(அவன் கரெண்ட் பில், சம்பளம், வாடகை… குடுக்கனுமில்லன்னு சப்பக்கட்டுகள்), ஃப்ளைட்டுக்குள்ளயும் இதே சர்க்கஸ் கொட்டகை விலை தான்.  2-3 ஜானுக்கு டிலக்ஸ் பஸ் சீட்டு போல அமரும் இருக்கை , புஷ் பேக் 4 விரலுக்குப் பின்னாடி சாயும்.  கால் நீட்டிக்க முடியாது.  ஏசி போட்ட 2+3 சீட் கவர்மென்ட் பஸ் அப்டியே.  குழந்தைகளுக்கும் ஃபுல் டிக்கெட் சார்ஜ். ஓசிப்பயணம், திமிர், அன்ப்ளான்டு அவுதி, எங்கயும் போகனும் தவிர்க்க முடியல 60 வயசுக்கு மேலயும்னெல்லாம் காரணம் இருந்தா போகலாம்.  ராத்திரி போனா போனதுக்கு ப்ரூஃபா நாரதர் போல மேகத்துக்கு நடுப்பற ஒரு ஃபோட்டோவும் எடுக்க முடியாது.  சம்ப்ரதாய நிகழ்வாக எத்தன வழிகள் இருக்கு, பெல்ட் எப்டி போட்டுக்கறதுன்னு அந்தப் பவுடர் பொண்ணுங்க பேசறதும் புரியாது, காது கேக்காதவங்களுக்கான ந்யூஸ் பாக்கறாப்ல இருக்கும்.  ஏறி இறங்கறதுக்குள்ள ஷெல் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போல அந்த ஏர் ஹோஸ்டஸ் நடிப்பும் மனப்பாடப்பகுதி மாதிரி பாவமா இருக்கும்.


பயண முறை: திட்டமிடாத !! பொதுப் போக்குவரத்து

இடங்கள்: பஞ்சாப்: அம்ருத்ஸர், ஜாலியன்வாலாபாக், வாகா பார்டர், வால்மீகி ஆஶ்ரம், பார்டிஷன் ம்யூஸியம், துர்க்யானா மந்திர்

டில்லி: செங்கோட்டை (லால்கிலா, ரெட்ஃபோர்ட்), இந்தியா கேட், ராஷ்ட்ரபதி பவன், பிர்லா மந்திர், இஸ்கான் கோவில், லோட்டஸ் டெம்பிள், அக்ஷர்தாம், குதுப்மினார், ஜந்தர் மந்தர்

மதுரா: க்ருஷ்ண ஜன்மபூமி, பிருந்தாவன்

ஆக்ரா: ஃபோர்ட், தாஜ்மஹல்

ப்ரயாக்ராஜ்: திரிவேணி சங்கமம்

காசி:

அஸ்ஸாம்: காமாக்யா கோவில், உமானந்தர் கோவில்

கல்கத்தா: ராமக்ருஷ்ண மடம், காளி

யாத்திரை நாட்கள்: 17 நாட்கள்