தென் தமிழகம் - கோடைச் சூறாவளி சுற்றுலா
பயண நாட்கள்: 13 ஏப்ரல் 2022 முதல் 18 ஏப்ரல் 2022 வரை, 7 நாட்கள்
பேக்கேஜ்காரன் ஸ்டைல்ல: 7 இரவு 6 பகல்
சென்ற இடங்கள்:
விராலிமலை
சித்தன்னவாசல்
இளையாத்தங்குடி
சங்கரன்கோயில்
குற்றாலம்
திருப்புடைமருதூர்
கன்னியாகுமரி
மண்டைக்காடு
தனுஷ்கோடி
திருவெற்றியூர்
பழனி
இந்த பசங்க பெங்களூர் வந்ததிலிருந்து சுத்தமா லீவே இல்லை, ஸ்டேட் போர்டுலேந்து சென்ட்ரல் போர்டு மாறினதுக்கு வேற பயம். எனக்கும் லீவு இல்லை… ஒரு வழியா சம்மர் லீவு கிடைத்தது, அதனால, தம்பி வெளில எங்கேயாவது மலை வாசஸ்தலம் போயிட்டு வரலாம் வாடான்னா, ஹேர்பின் பென்டு எனக்கு வாமிட் வருதுன்னு பசங்க பிரச்சினை. நம்ம எப்போதும் பிளான் பண்றதும் கிடையாது. குட் ஃப்ரைடே 15ஏப்ரல் ஒரு நாள் லீவு வந்தது. அதுக்கு முதல் நாள் தமிழ் வருஷப் பிறப்பு சித்திரை 1 சுபகிருது வருஷம் வருது. அதனால ஏப்ரல் 14 லீவு போட்டுட்டு 15, 16, 17 ஆபீஸ் லீவு யூஸ் பண்ணி ஒரு நாலு நாள் போயிட்டு வரலாம்னு பார்த்தா பஸ், ட்ரைன் ஒன்னும் கிடைக்கல. அண்ணா, தம்பி, அப்பா, பெரியப்பா கூட எல்லாரும் கன்னியாகுமரிக்கு போலாம்னா, நாம இருக்கிற இடத்திலிருந்து அங்க போறதுக்கு ப்ரைவேட் பஸ்ஸுல பார்த்தா 3000 ரூபாய் வரை கேக்கறான். லாங் லீவ், அரசாங்கத்துக்கும் இது தெரியாது, தெரிஞ்சிட்டா சட்டப்படி நடவடிக்கை எடுத்துடுவாங்க. அவ்வளவு தூரம் காரில் உட்கார்ந்து போறதுக்கு பயமா இருக்கு. முட்டிவலி பெண்டு எடுத்துடும். இப்படியே எகிப்து பொம்மை மாதிரி உட்கார்ந்து போக முடியாது. புளி மூட்டை மாதிரி உட்கார்ந்தே வேலை பார்த்து பழக்கமாச்சு. எல்லாரும் ஊருக்கு கிளம்பிட்டாங்க. இந்த லீவு விட்டா வேற எங்கேயும் போகமுடியாதுன்னு அமர்க்களம் பசங்க வீட்டில, கிலோமீட்டருக்கு 12 ரூபாய், ஒருநாள் பேட்டா 300 நைட் 10 லிருந்து 6 ஓட்டினா இன்னொரு பேட்டா, ஏசி எட்டியோஸ்.
டிரைவர் ரகுராஜ் அண்ணா 12ஆம் தேதி நைட் 10 மணிக்கு வந்துட்டாரு, 11 மணிக்கு கிடைச்சத அள்ளிப்போட்டு, டிக்கிதான் இருக்கே… கிளம்பிட்டோம் விடிய விடிய ஓட்டி திருச்சி வழியாக போலாம்னா, கூகுள் மேப் முசிறி காவிரி பாலத்திலிருந்து மணப்பாறை வழியா விராலிமலை போயிடலாம்னு ஷார்ட் ரூட் காமிச்சது. 13-ஆம் தேதி காலைல வந்து சேர்ந்தோம்.
விராலிமலைல ஒரு பூக்கார அக்கா காலங்காத்தால ரொம்ப அன்பா அவங்க புழங்கற பாத்ரூமை திறந்து விட்டாங்க. எல்லாரும் குளிச்சிட்டு தயாரானோம். அருணகிரிநாதருக்கு முருகன் இந்த மலைல உபதேசம் பண்ணினார், இங்கே முருகனை தரிசனம் பண்ணிட்டு தான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாப்பிடுவதுன்னு ஒரு பக்தர் இருந்தார். அப்படி ஒருநாள் அவர் வந்தபோது கடுமையான மழை, குளிரில் மாட்டிகிட்டு எப்படி தரிசனம் பண்றதுன்னு ஒரு இடத்தில ஒதுங்கி இருந்த போது, அங்க இன்னொருத்தர பார்க்கிறார், குளிர்ல கஷ்டப்பட்றார்னு இருந்த ஒரே ஒரு சுருட்ட அவருக்கு கொடுக்கிறார். அதுக்கப்புறம் மழை நின்று ரெண்டு பேரும் பேசிக்கொண்டே போறாங்க, பாதில அந்த இன்னொருத்தர காணோம், சரின்னு கோயில்ல போயி பார்த்தா முருகன் கிட்ட ஒரு பாதி எரிஞ்ச சுருட்டு இருக்குன்னு ஒரே அமர்க்களமா இருக்கு கோயில். அப்புறம் இவரோட அனுபவத்தை எல்லாரும் தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு அப்புறம் அன்றிலிருந்து இந்த விராலி மலை முருகனுக்கு சுருட்டு படைக்கப்படுகிறது, கோயில்ல சாமிக்கு போதைப்பொருள் படைக்கறதாவதுன்னு ஒரு ராஜா அதை தடுக்க நினைத்த போது, அவர் கனவில் முருகன் வந்து தடுக்க வேண்டாம்னு சொல்லிவிட்டார். ஒரு 250 படி இருக்கும். குடுகுடுன்னு ஓடிப்போய் அருமையான சாமி தரிசனம். நானும் பையனும் காலை பூஜை எல்லாத்தையும் முடிச்சோம், மயில் நிறைய இருந்தது. பூக்கார அக்காவுக்கு மரியாதை செய்து விட்டு பயணம் தொடர்ந்தோம்.
சித்தன்னவாசல் போனா இளையாத்தங்குடி கோயில் குளோஸ் பண்ணிடுவாங்கன்னு கவலைப்பட்டோம், குருக்கள் அண்ணா, இல்லை குழந்தைகளுக்கு ஒரு தடவை கூட்டிட்டு போலாம், சித்தன்னவாசல் போயிட்டு போங்க அப்படின்னார். சரின்னு சித்தன்னவாசல் கிளம்பி போனோம். காரு நுழைய காசு, அந்த டிபார்ட்மெண்ட் ஒரு டிக்கெட், தொல்பொருள் இலாகா ஒரு டிக்கெட், சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் பார்க்க டிக்கெட், சமணர் படுக்கைகள் பார்க்கிறதுக்கு டிக்கெட்… ரொம்ப எதிர்பார்ப்போட போனால் ஒன்றும் இல்லை. ஒரு 7 அடிக்கு இரண்டு அடியில் சில ஓவியங்கள் பழைய காலத்து முறைப்படி இலை, காய்கனிகளின் வர்ண கலவைகளால் பெயிண்ட் வரைஞ்சு வச்சுருக்காங்க. ஒரு 40 அடி மலைல ஏறி பாக்கனும், நம்ம துறை அதிகாரிகள் பராமரிக்கிறோம்னு பாதி இடத்துல வெள்ளை பெயின்ட் அடித்து வைத்திருக்கிறார்கள், மீதி பாதி பெயிண்டிங் கேமராவில் தான் தெரியுது. என் கண்ணுக்கு ப்ரமிப்பா தெரியல. சமணர் படுக்கைகள் ஒரு தடவ பாக்கலாம், 250 படிகள் ஏறனும், அருமையா அங்கிருந்து சுற்றுப்புற கிராமங்கள், நிறைய குரங்குகள், தமிழ் பார்க் ஒன்னு வச்சிருக்காங்க. பெத்தவங்களுக்குத் தெரியுமான்னு தெரியாம ஜோடிகள் அங்கங்க சௌகரியமா, பாத்ரூம் வசதி சரியா இல்லை. பேருக்கு இருக்கு, தண்ணி வசதி இல்லை, பராமரிப்பு இல்லை, அந்தத் துறை பார்த்துக்கும்முனு இந்தத் துறையும், இந்த துறை பராமரிக்கும்னு அந்த துறையும் விட்டுட்டாங்க போல. வெயிலடிக்குது எங்க பாத்தாலும் பாறையா இருக்கேன்னு பயந்தோம், ஒரு அரை மணி நேரம் மழை பெய்து அருமையான இயற்கை தரிசனம்.
அங்கிருந்து கூகுள் மேப் உதவியுடன் இளையாத்தங்குடி கிராமத்துக்கு போய் சேர்ந்தோம். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இந்த ஒரே கிராமத்தில பெருசு பெருசா 7 கோயில்களைத் தனித்தனிக் குளங்களோடு கட்டி பராமரித்து வராங்க. ஒரு சமயம் இங்கே காஞ்சிபுரம் காமகோடி பீடம் 65வது சங்கராச்சாரிய சுவாமிகள் வந்து இருந்தாங்க. அவங்க இந்த காய்ஞ்சு போன பொட்டல் காட்டில் ஒரு இடத்தை பார்த்து விட்டு, இந்த இடத்தை எனக்கு தரியான்னு நாட்டுக் கோட்டை பிரமுகர்கள் கிட்ட கேட்டிருக்கிறார். இந்த இடம் பராமரிப்பில்லாம மோசமா இருக்கு, வேற நல்ல இடமா தரோம்னு அவங்க சொல்லி இருக்காங்க, இல்லை எனக்கு இந்த இடத்தையே கொடுன்னு கேட்டு இருக்கார். அவங்களும் சரின்னு ஒத்துக்கிட்டிருக்காங்க. அதற்கு அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய் அங்கேயே அவர் சித்தி அடைந்து விட அவர் கேட்டுக் கொண்டபடியே ஒரு சிவலிங்க பிரதிஷ்டை பண்ணி அவர் ஆசைப்பட்ட இடத்துல அவருடைய சமாதி அமைச்சிருக்காங்க. காமகோடி பீடம் ஒரு பாடசாலையும் அங்கு நடத்தி வருகிறார்கள். எல்லாமே அந்த நாட்டுக் கோட்டை நகரத்தார் பராமரிப்பில் அருமையா இருக்கு, எல்லா குளங்களையும் தண்ணி நிறைய இருக்கு நாங்க, இந்த வரலாறு எல்லாத்தையும் ஆச்சரியமா தெரிஞ்சிட்டு நித்தியகல்யாணி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் குளத்தில் சாயங்கால சந்தியாவந்தனம், அக்னி ஹோமங்கள் எல்லாத்தையும் முடிச்சுட்டு தங்குவதற்கு சங்கரன்கோவில் போய் சேர்ந்து விட்டோம் இரவு பதினோரு மணிக்கு. காஞ்சி மகாபெரியவர்களுக்கு இந்த இளையாத்தங்குடி ரொம்ப பிடிச்ச இடம். அவங்க அறுபத்தி எட்டாவது குரு இந்த பரம்பரையில. இந்த இடத்தில் பல காலம் தங்கி சிறப்பு பூஜை, பண்டிதர்கள் எல்லாரையும் வெச்சு சபைகள் எல்லாம் நடத்தி இருக்காங்க. புது பெரியவங்கன்னு சொல்ற ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆரம்ப காலத்தில் இங்கு தங்கி படித்து இருக்காங்க. ஆதிசங்கரரின் முக்கிய பீடங்கள், அதிபதிகள் விபரங்கள் எல்லாம் கல்வெட்டுகளாக இருக்கு இங்க. எல்லாரும் தரிசிக்க வேண்டிய ஒரு முக்கியமான, அருமையான கிராமம் இது.
ஏப்ரல் 14 வியாழக்கிழமை, சுபகிருது தமிழ் வருஷப் பிறப்பு இன்னிக்கு. சங்கரன் அப்படிங்கற சிவனும் நாராயணரும் ஒரே கல்லில் இருக்கிற கோயில் இது. பாதி மேனிக்கு புலித்தோல், சந்திர பிம்பம் தலையில, ருத்ராட்ச மாலை இவைகளோடு அலங்காரம், அதே சிற்பத்தில் இடதுபுறம் பாதியில் சர்வ அலங்காரங்களுடன் சங்கு, பட்டுப் பீதாம்பரம் உடுத்தி நாராயணரும் இங்க இருக்காங்க. சங்கரலிங்க சுவாமி சிவன் சன்னதியும் இருக்கு. தன்னுடைய சரீரத்தின் இடபாகத்தை பார்வதிதேவிக்கு விட்டுக் கொடுத்தார் பரமேஸ்வரன்னு புராணம். இங்கே இந்த நாராயணரும் அந்த சிற்பத்தின் இடது பக்கத்தில் தான் இருக்கார். எல்லா சிவபுராணங்களும் ஹரி, நாராயணர பரமேஸ்வரனோட காக்கும் சக்தி அம்சமாகத்தான் சொல்லி இருக்கு. பரமாச்சாரியார் நிறைய தடவை சொல்லி இருக்காங்க. சிவ வைஷ்ணவ பேதம் பார்க்க முடியாது, சிவசக்தி பேதம் பார்க்க முடியாது, ஒரு பேப்பரோட இரு பக்கங்கள் போல தான் இந்த சக்திகள்னு பெரியவங்க நிறைய தடவை சொல்லுவாங்க. அதை இங்க நம்ம கண்கூடா தரிசிக்கலாம். மூலஸ்தானத்து பிரகார சுவர்களில் மிக அருமையான புடைப்பு சிற்பங்கள், சிவன் விஷ்ணு முருகன் காளியின் பல்வேறு குணங்களை வெளிப்படுத்தும் சிற்பங்கள் அழகழகா பொம்மை மாதிரி செதுக்கி இருக்காங்க, ரொம்ப அருமையான தரிசனம். சித்திரைத்தேரில் பிரம்மா தேரோட்டியா கைய, கால ஆட்டிக்கிட்டு குஷியா இருக்கார்.
அரசர்கள் காலத்தில் இந்த ஒவ்வொரு கோயில்களும் பூசாரிகள் மட்டுமில்லை, பூக்காரர்கள், பெயிண்ட் அடிக்கிறவங்க, படம் வரைபவர்கள், சிற்பம் செதுக்கறவங்க, பெருக்கித் துடைப்பவர்கள், செருப்பு பாத்துக்கறவங்க, பலகார கடை, ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, சத்திரம், தண்ணீர்ப்பந்தல், அன்னதானம், சமையல் வல்லுனர்கள், பரிமாறுபவர்கள், பாத்திரம் தேய்ப்பவர்கள், வண்டி ஓட்டுபவர்கள், கூத்தாடிகள்னு எல்லா துறைகளுக்கும் சம வேலைவாய்ப்பு கொடுத்திருக்கு. இன்னிக்கு எல்லாத்திலும் தர்மம் மலிஞ்சு போச்சு.
சங்கரன் கோயில் யானை பார்த்தோம். கோயிலிலேயே உட்கார்ந்து காலம்பர சந்தியாவந்தனம் (சூரிய வந்தனம்), சமிதாதானம்(ப்ரம்மசாரிகள் தினம் இருவேளை செய்யும் ஹோமம்) எல்லாத்தையும் குட்டிப்பையன் பண்ணினாரு. முடிச்சிட்டு அங்கிருந்து ஒரு சைவ ஓட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு ரூம் காலி பண்ணிட்டு, குற்றாலத்தை நோக்கி பயணம்.
நடராஜர் டான்ஸ் ஆடினது 5 தலங்கள், கனகம் ன்னா தங்கம், கனகசபைன்னு சிதம்பரத்துக்கு பேரு, மதுரையில சொக்கநாதர் கோயில் வெள்ளியினாலான சபை இருக்கு. காரைக்கால் அம்மையார் கைலாச நடனம் தரிசனம் பண்ணின திருவாலங்காடு சென்னை கிட்ட இருக்கு, அது ஒரு சபை. தாமிரத்தில் ஆன சபை திருநெல்வேலி சிவன் கோயில் இருக்கு. குற்றாலத்தில் இருக்கிறது சித்திரசபை. இங்க நடராஜர், எல்லாமே சித்திரத்தில் வரைந்து இருக்கும். இந்த குற்றாலீஸ்வரர் கோயில் மெயின் ஃபால்ஸ் பக்கத்திலேயே தான் இருக்கு. மெயின் ஃபால்ஸ்ல தண்ணி நிறைய வரும்போது கோவிலுக்குள் ஓடிவரும். சித்திர சபை கோயிலுக்கு வெளியில் இரண்டு கிலோ மீட்டர்ல இருக்கு. முதல் நாள் நிறைய தண்ணி வந்து இருக்கு, நாங்க போன அன்னிக்கி தண்ணி கம்மியா தான் இருந்தது, மக்கள் கூட்டம் அதிகம். அருவி முழுதும் சிவ லிங்கங்கள் அருமையா தெரிந்தது தண்ணி இல்லாததால. வெயிலைத் தாங்க முடியல. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரங்க எங்கேயானும் தனியார் ஃபால்ஸ், இல்லேன்னா பப்ளிக் டிரான்ஸ்போட் வராம இருக்கிற ஓல்ட் ஃபால்ஸ் போயிடுங்க இங்க கும்பலா இருக்குன்னு அட்வைஸ் பண்ணினாங்க. நாங்க அடுத்தது தாமிரபரணி கரையை நோக்கி போறதுனால இந்த அருவியில் குளிக்கிறத மொத்தத்தையும் கேன்சல் பண்ணிட்டு அடுத்த ஊருக்கு கிளம்பிட்டோம்.
மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்ட கோயில் மூனு. ஸ்ரீசைலம் கந்தபுராணத்தில் நிறைய இடத்தில் வருது, திருப்பருப்பதம்னு வரும். கந்த புராணத்தில் நிறைய காட்சிகள் இங்கே நடந்து இருக்கு, ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் ஆதி மருதூர். கும்பகோணம் திருவிடைமருதூர் பட்டினத்தார் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டது, இடை மருதூர். திருப்புடைமருதூர் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் கிட்ட இருக்கு. இது கடை மருதூர். ராஜா கிட்ட அம்புல அடிபட்ட மான் ஒரு மருத மரத்தின் பொந்தில் ஒளிந்து விட, உடனே அந்த மரத்தை வெட்டச் சொல்லி இருக்கிறார் ராஜா. இந்த அம்பு, கோடாரி பட்ட ரத்தம், தடங்களோடு வெளிப்படுத்திக் கொண்டார் சிவன். இதெல்லாம் சிவலிங்கத்தில் பார்த்தவுடனே ராஜாவுக்கு ரொம்ப வருத்தமாக போயிடுச்சு. அப்புறம் என்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காகத் தான் நான் இப்படி உனக்கு தரிசனம் கொடுத்தேன்னு சிவன் சொல்றார். கருவூரார்னு ஒரு சித்தர். அவர் பெயரில்தான் கரூர், திருச்சி கிட்ட இருக்கு. அந்த சித்தர் இங்கு வந்தபோது தாமிரபரணி வெள்ளத்தால கரையை கடந்து வர முடியாம எதிர் கரையிலிருந்து அவர் இனிமையா பாட்டு பாடுறார். அதைக் கேட்பதற்காக இங்கு இருக்கிற சிவன் தன்னுடைய தலையை சாய்த்து அதை கேட்டதா வரலாறு. அதனால சிவன் தலை சாய்ந்து இருக்கும். அவர் தன்னை வெளிப்படுத்தின மருதமரம் கோயிலுக்குப் பின்னாடி இருக்கிற தாமிரபரணிக்கரையில் பார்க்கலாம்.
காலையில சங்கரன்கோவில்ல டிஃபன் சாப்பிட்டது. வெயில், கும்பலால தென்காசி ராஜ கோபுர தரிசனம் மட்டும் தான், பெரிய கோபுரம், கோவில். நாங்க இந்த மருதூருக்கு வந்த போது கோயில் மூடியிருந்தது. மணி மூனு மத்தியானம், சாப்பாடு இல்ல, வழியில் எங்கேயும் சைவ கடைகளும் இல்லை. அப்ப யாரோ ஒரு பத்து பேர் பைக்குல வந்தவங்க தாமிரபரணி கரையில் அகத்தியர் தவம் செய்த இடம் இருக்கு, அதப் போய் தரிசனம் பண்ணிட்டு வாங்க, கோவில் மாலை 5 மணிக்குதான் திறப்பாங்கன்னாங்க. சாப்பிடல, கடை தேடிட்டு இருக்கோம்னு சொன்னோம் நாங்க. நீங்க முதல்ல அங்க போங்க, போய் பார்த்துட்டு வாங்க, எல்லாத்தையும் அகஸ்தியர் பார்த்துப்பார்ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க, அங்க போனா நதிக்கரையில் தவக்கோலத்தில் அகஸ்தியர், சிரிச்ச முகத்தோட சந்தனகாப்பு அலங்காரத்துடன் இருந்தார். பூஜைகள், அன்னதானம் எல்லாம் முடிஞ்சு, காரியஸ்தர்கள் 4-5 பேர்கள் மட்டும் சுத்தம் பண்ணிட்டு இருந்தாங்க. எங்களைப் பார்த்த உடனேயே அவங்க எடுத்து வைத்திருந்த, அகத்தியருக்கு படைத்த பிரசாதத்தை எங்களுக்கு சாப்பிடக் கொடுத்தாங்க. அகஸ்தியர், அவங்களோட மனைவி லோபாமுத்திரை எல்லாம் சக்தி வழிபாடு முறைகளை வகுத்துக் கொடுத்தவர்கள். அந்த வழிமுறைகள் இன்னிக்கு ரொம்ப பிரசித்தம். மேலும் பல விஷயங்களைப் பேசி விட்டு அங்கிருந்து கோவிலுக்குப் பின்னாடி இருக்கும் தாமிரபரணியில் அருமையான குளியல், சாயங்கால சந்தியாவந்தனம், சமிதாதானம் முடிச்சு தமிழ் வருடப்பிறப்பு அன்று பிரதோஷ காலத்தில் திருப்புடைமருதூர் சாமி தரிசனம் செய்தோம். உள்ளூர் காரர்கள் போட்டிருந்த வடை, பஜ்ஜி, சுண்டல், சுக்கு மல்லி டீ ஆகாரம், அதான் டின்னரான்னு தெரியாதே.
ஏப்ரல் 14 நைட் டின்னர், தங்கல் நாகர்கோவில் வந்துட்டோம். இந்த கோவிலில் மகா விஷ்ணு, சிவன் இரண்டு சன்னதியும் இருக்கு. அதைத் தவிர அஞ்சுதலை நாகராஜாவுக்கு தனியாக முக்கிய சன்னதி இருக்கு. இந்த கோவிலால் தான் இந்த ஊருக்கு நாகர்கோவில்ன்னு பேரு. கோயில் மதில் சுவர் மேல, குளக்கரை மேலன்னு எங்க பார்த்தாலும் திரும்பின பக்கமெல்லாம் நாகர் சிலைகள். கேரளாகாரங்க பூஜை. சுதந்திர காலத்தில் இந்த ஊர், சுசீந்திரம் எல்லாம் கேரளாவில் இருந்திருக்கு. அப்புறம் பிரித்த போது தமிழ்நாடோட வந்திருக்கு. வாழை இலையில புற்று மண்ணு, சந்தனம், புஷ்பம் ப்ரசாதமா கிடைத்தது. கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது ஒரு ஜன்னல் வழியா பார்த்தால் தெரியும், இந்த கோவிலுக்கு கான்க்ரீட் சீலிங் கிடையாது, ஓலைக் கொட்டகைதான் இன்னிக்கும். இந்த கோவில் குளம் பாசி பிடித்து ரொம்ப வழுக்குது. அதனால லீடரான நான் மட்டும் இறங்கி, தலைக்கு தண்ணி தெளிச்சிட்டு, மிச்ச பேருக்கும் தெளிச்சு, அருந்தினோம். டீக்கடை சம்சா, பிஸ்கெட், டீ காலை டிஃபன், அங்கிருந்து சுசீந்திரம் நோக்கி பயணம்.
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி 15-20 கிலோ மீட்டர் தான். ரயில் ரூட்ல இது ஒரு முக்கியமான ஜங்ஷன். காற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கிற விசிறிகள் நெறையா கண்ணுல படுது, ஒவ்வொன்னும் மூனு, நாலு தென்னமரம் ஒசரம். வேடிக்கை பார்த்துட்டே சுசீந்திரம் போய் சேர்ந்தோம். பெரிய கோவில், பெரிய சுதை சிற்பங்கள் நிறைந்த ராஜகோபுரம், பாசி நீர் நிறைந்த பெரிய குளம், நெருப்புத் தூணாய் சிவன் வந்தார் இல்லையா, அதனால சிவனுக்கு ஸ்தாணுன்னு பெயர். மால் என்றால் மஹாவிஷ்ணு, அயன் அப்படின்னா பிரம்மா. மும்மூர்த்தி ஸ்தலம் இது. தமிழ்நாட்டின் பெரிய அனுமார் சிலை இங்கு ஒன்னு இருக்கு. சிவன் சன்னதி, பெருமாள் சன்னிதி, தாணுமாலயன் சன்னதி, ஹனுமான் சன்னதி எல்லாத்தையும் அருமையாக தரிசனம் செஞ்சு முடிச்சிட்டு, காலை சந்தியாவந்தனம், சமிதாதானம் சுசீந்திரம் கோவில்லயே முடிச்சோம்.
இங்க இருந்து பத்மநாபபுரம் பேலஸ், திருப்பரப்பு அருவி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில், தொட்டிப்பாலம் எல்லாம் ஒரே ரூட்டு. பத்மநாபபுரம் பேலஸ் மதியம் 1-2 உணவு விடுமுறை! 12.30க்கே மூடிட்டாங்க. அதுக்கு அப்புறம் உள்ளே இருந்து வெளியே வரலாம், வெளியிலிருந்து உள்ளே போக முடியாது, திருப்பரப்பு போயிட்டு வாங்கன்னு காருக்கு டிக்கெட் போடாமலேயே நல்ல உள்ளத்தோட அனுப்பி வைத்தார் டிக்கெட் கலெக்டர். திருப்பரப்பு அருவியில் சரியான தண்ணி. பாகுபலி படத்துல வர்ற மாதிரி மேல ஒன்னு ரெண்டு மரங்கள் வேற. அது ஒரு தொட்டி அருவி மாதிரி தெரியுது. மேல தண்ணி தங்கி, அங்கிருந்து அருவியாக கொட்டுகிறது. சத்தியமங்கலம் கொடிவேரி ஃபால்ஸ் இருக்குமே, அது மாதிரி. ஜென்ட்ஸ், லேடிஸ் தனித்தனியாக குளிக்க, டிரஸ் மாத்த, கட்டண கழிப்பிடம் எல்லா வசதியும் இருக்கு. குற்றாலத்தில் வேற குளிக்கல. அதனால பசங்க நல்லா என்ஜாய் பண்ணாங்க.
திருப்பரப்பு அருவியில் இருந்து நாங்க பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்துட்டோம், மதியம் மூனு மணி ஆச்சு. அரண்மனை வாசலில் இளநீர், நுங்கு இதெல்லாம் சாப்பிட்டுட்டு அரண்மனைக்குள்ளே போனோம். அது ராஜாவோட வீடு. ஆறரை ஏக்கர் பரப்பு உள்ள இந்த இடத்தை பொதுமக்கள் பார்வைக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, அவங்க இப்போ திருவனந்தபுரத்தில் இருக்காங்க. வெளிநாடு ராஜா மாதிரி நம்மூர் ராஜா வீடு இல்லை. ரொம்ப எளிமையா இயற்கையோடு ஒட்டி, அதே சமயம் எவ்வளவு பேர் வந்தாலும் அவங்கள கௌரவிக்கிற மாதிரி வசதிகளோடு, பாதுகாப்போடு அரச குடும்பத்தினர் இங்க இருந்திருக்காங்க. ஸ்டாண்ட்ல செப்பல் வெச்சுட்டு டிக்கெட் வாங்கிட்டு அரண்மனைக்குள்ளே போறோம். ஒவ்வொரு ரூம்லயும் கேரள தொல்பொருள் இலாகா அதிகாரிகள் இருக்காங்க. அந்தந்த தகவல்களை நமக்கு சொல்றாங்க, கேமரா/ஃபோனுக்கு தனியா டிக்கெட் எடுக்கணும். அடுத்தவங்களுக்கு தொல்லை இல்லாமல் நிறைய போட்டோ எடுத்தோம். தமிழ்ல வருஷம்16, அமைதிப்படை இந்த படங்கள்ல எல்லாம் இந்த அரண்மனை வந்திருக்கு. பாக்கறதுக்கு கயிறு மாதிரியே தெரிகிற இரும்பு சங்கிலி, 90-100 மூலிகைகள் கலந்த மகாராஜாவிடம் கட்டில், ஒரே சமயத்துல இரண்டாயிரம் பேர் தினம் அன்னதானம் நடந்ததற்கான பெரிய பெரிய ஹால். எல்லாமே மரத்திலேயே. முதுமக்கள் தாழி மாதிரி இருக்கு பெரிய பெரிய பானை ஊறுகாய் இருக்குமாம் அதுல. கிச்சன்ல ஒரு அஞ்சு ஆறு ஆட்டுக்கல்லு. நிறைய சாதம், சாம்பார் எல்லாம் போட பெரிய பெரிய கல்தொட்டிகள், முழு சீலிங்கும் ஓலைக்கூரையில் இருந்திருக்கு. தொல்பொருள் இலாகா பராமரிக்க வசதியா இப்ப எல்லா இடத்திலேயும் ஓடு வேய்ந்திருக்காங்க. நல்ல குளுமையா வெளி வெயில் தெரியாம இருந்தது.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள், திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோவிலுக்கும் முந்தையது. நம்ம ஸ்டேட், ஆனால் கோவில் நிர்வாகம் கேரளா தேவஸ்தானம். அருமையான அமைதியான சுத்தமான கோவில். மாத்தூர் தொட்டிப் பாலம் காமராஜர் காலத்து திட்டம். ரெண்டு மூணு தென்னை மரம் ஒசரத்துல வாய்க்கால் தொட்டி மாதிரி பாலம் கட்டி ஓடினா எப்படி இருக்கும், அது தான் இந்த தொட்டிப்பாலம். போய் சுத்தி பார்த்து போட்டோ எடுத்துக்கலாம். ஏற்கனவே பார்த்த இடங்கள், இன்னும் சாப்பிடல, டயர்ட். அதனால நாங்க இந்த இரண்டு இடத்துக்கும் இந்த தடவை போகவில்லை. வழியில் நாகர்கோவில் குறிஞ்சி ஹோட்டல்ல சாயங்காலம் 4 மணிக்கு லஞ்ச். நைட்டு கன்னியாகுமரி அம்மன் தரிசனம். முற்காலங்களில் லைட் ஹவுஸ் மாதிரி இந்த அம்பாளோட மூக்குத்தி வெளிச்சம் கடல்ல இருக்கறவங்களுக்கு வழிகாட்டியா தெரியுமாம். இன்றும் அதே ஜொலிஜொலிப்பு. சித்திரை பௌர்ணமி நிலவொளி ஹிந்து மஹா சமுத்திரத்தில் பிரதிபலிக்க, மின்னொளியில் விவேகானந்தர் பாறை கோவில் மின்ன கடற்கரையில் இருந்தே தரிசனம். திருவள்ளுவர் சிலை வெளிச்சம் போதவில்லை, சொன்னா நம்மள அரசுக்கு எதிரானவன்னு சொல்வாங்க. கும்பலுக்கு பயந்து கோவிலில் இருந்து ஒரு ரெண்டு 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்குற விவேகானந்தபுரம் அப்படிங்கிற இடத்தில ஆன்லைன்ல ரூம் புக் பண்ணி இருந்தோம். அங்க போய் அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டிகளோட ஐக்யமாகி விட்டோம்.
ரெண்டு மூணு நாளாச்சு, டிரைவர் அண்ணாவுக்கும், குடும்பத்துக்கும் இரவு ஓய்வு கொடுக்கலாம். ஆனால் நிலைமை அனுசரணையா இல்ல… பசங்க 11-12 மணி வரை ஆட்டம், அப்பறம் தூக்கம். நாங்க தங்கி இருந்த விவேகானந்தபுரத்துல காலம்பற சூரிய உதயம் பாக்குறதுக்கு தனி இடம், ஏற்பாடு எல்லாம் இருக்குன்னு சொன்னாங்க. இந்த விவேகானந்தபுரம், ஒரு பெரிய நிலப்பரப்புல விவேகானந்தா கேந்திராவின் தலைமையிடம். உலக அளவிலும், இந்திய அளவிலும், மாநில, மாவட்ட அளவிலும் ஸ்கூல், மருத்துவம், யோகா, நிவாரண உதவிகள் பண்ணிட்டு இருக்காங்க. இந்த காம்பவுண்டு ஃபுல்லா முழு ராமாயணம், விவேகானந்தர் வரலாறு, அது இதுன்னு நிறைய எக்ஸிபிஷன், படங்கள், சாப்பிடுவதற்கு ஒரு ஹோட்டல், கைவினைப் பொருளகம் எல்லாம் வச்சிருக்காங்க. இதுக்குள்ளயே ஒரு நாள் செலவு பண்ணலாம். ஏப்ரல் 16 காலைல சூரியோதயம் தரிசனம் முடிச்சுட்டு உலக பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் நோக்கி, ஏற்பாடு செய்திருந்த வேனில் பயணம்.
மண்டைக்காடு பகவதி அம்மன் 15 அடி ஒசரத்துல சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்ட இடம். லட்சக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக பெண்கள், சபரிமலை மாதிரி இருமுடி அணிந்து, விரதம் இருந்து இந்த கோவிலுக்கு வருஷா வருஷம் பெரும் திரளாக வந்து தரிசனம் செய்து பலனடைகிறார்கள். புற்றோட மேல் பகுதியில சந்தன அலங்காரத்துல அவளோட முகத்த தரிசிக்கலாம். மத்திய பாகத்தில் வெள்ளியினாலான முகம் வச்சிருக்காங்க. கீழ்ப் பாகத்தில் உற்சவ மூர்த்தி இருக்கு. பூசாரி ஏணி மாதிரி ஒரு ஏற்பாடு வைத்து தான் அம்பாளுக்கு மாலை, அலங்காரம் எல்லாம் பண்றாரு. நாலஞ்சு அடியிலிருந்து அம்பாள் பக்கத்துல போய் தரிசனம் பண்ண முடிஞ்சது நாங்க போயிருந்த போது. கோயில் வாசலில் இருந்து பார்த்தாலே அம்பாள் அற்புதமாக காட்சி அளிக்கிறாள். உடல் உபாதைகள், குடும்ப பிரச்சனைகள் எல்லாத்துக்கும் அம்பாள் கிட்ட வேண்டிக்கறாங்க.
கன்னியாகுமரியில் இருந்து ஆறு மணி நேரம் பயணம் செய்து ஏப்ரல் 17 அதிகாலை புது ரயில்வே பாம்பன் பாலம் பாத்துட்டே ராமேஸ்வரம் தாண்டி, தனுஷ்கோடியும் தாண்டி, இடது பக்கம் வங்காள விரிகுடா, வலது பக்கம் ஹிந்து மஹா சமுத்திரம். இரண்டுக்கும் நடுவில் மத்திய சர்க்கார் மூழ்கிப்போன நம்மளுடைய நிலப்பரப்பை திரும்பவும் உயர்த்தி, வசதியா சூப்பரா ரோடு போட்டு இருக்காங்க. தனுஷ்கோடியில் கோதண்டராமர் கோவில் இருக்கு. தனுஷ்கோடியின் இந்த அழிந்து போன இடங்களைத் தாண்டி ஒரு 5-6 கிலோ மீட்டருக்கு மீண்டும் கடலுக்குள் அருமையான ரோட்ல ஒரு சூப்பர் பயணம் செஞ்சு, அரிச்சல்முனை அப்படிங்கற அந்த கடைசி மூலைக்குப் போய் சேர்ந்தோம். அங்க நம்ம இடது கை பக்கமா அமைதியான வங்காள விரிகுடா, பெண் கடல்னு சொல்றாங்க. வலது கைப்பக்கம் ஆக்ரோஷமான அலைகளோட இந்து மகா சமுத்திரம், ஆண் கடல்னு சொல்றாங்க. ராமர் இங்கிருந்து தான் இலங்கைக்கு சேது(சேது=பாலம்) கட்டினார். அதனால தான் ராமநாதபுரத்தில் மகாராஜாவுக்கு சேதுபதிங்கற பட்டம். அந்த பாலத்தைத் தலைமுறையா பாதுகாக்கும் பொறுப்பு இவங்களுக்கு இருந்திருக்கு. காலை 6 மணிக்கு தான் ராமேஸ்வரத்திலிருந்து இந்த ரோட்டுக்குள்ள பயணிக்க போலீஸ்காரங்க அனுமதிக்கிறார்கள். பைக் ரேஸ், வெளிச்சமில்லாமை இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் இருக்கறதுனால. இன்னைக்கு அருமையான சூரியோதய தரிசனம் இங்க செஞ்சுட்டு அடுத்த பயணம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத பழம்புற்றுநாதர் கோவில்.
சிவனை விட்டு பாகம் பிரியாள், சுயம்புவாக உருவான புற்றுநாதர். மஹாபலியின் தலைமேல் கால் வைத்ததனால் மஹாவிஷ்ணுவுக்கு உண்டான தோஷம் குணமாக இங்கு வாசுகி தீர்த்தத்தில் நீராடி, சிவ பூஜை செய்து நிவர்த்தி ஆனது. தீர்த்தமும், தலமும் சுற்று வட்டாரங்களில் மிக பிரசித்தி. மிஷி நரிகள் தாங்களும் ராஜகோபுரம், கொடிமரம்னு ஏசுவை ஏய்ப்பது இங்கும் உண்டு. சித்திரை 10-12 நாட்கள் ஜே ஜே என்று இருக்கும். விஷ முறிவு, உடல் வியாதிகள் தீர மக்கள் இரவு இங்கு தங்கி கோவில் ப்ராகாரங்களில் இருக்கும் உரல்களில் உலக்கைகளால் மாவு இடித்து, நெய் விளக்கேற்றுவது, பால் குடம், பாத யாத்திரை, இரவு கூத்து, தேர், பல்லக்கு என்று அமர்க்களமாக இருக்கும். குளத்தில் கும்மாளக் குளியல், சந்த்யாவந்தனம், சமிதாதானம் முடித்து கோவில் தரிசனம், திருநாளுக்கு ஏற்பாடு ஆகியிருந்த அன்னதானக் கூடத்தில் உணவுண்டு இரவு தங்க பழனிக்குச் சென்று விட்டோம்.
பழனி திருப்பூர் லாட்ஜ் நமக்குக் கட்டுபடியாகல. இந்த மொத்த டூர்லயே இந்த ஊர்ல தான் முதன்முதலில் தங்கின ரூமுக்கு (சிவா லாட்ஜ்) பில் கொடுத்தனர். பதினெட்டாம் தேதி காலம்பற எழுந்து, இந்த தடவ சண்முக நதியில் ஸ்நானம் பண்ணல, உடல் அசதி காரணமாக. ரூமிலேயே குளிச்சிட்டு அடிவாரத்தில் ஆவினன்குடி முருகனை தரிசனம் பண்ணிட்டு, யானை அடிப்பாதை வழியா ஏழு மணிக்கு நடக்க தொடங்கி, ஒரு ஏழரை மணிக்கு முன்னாடி மலை மேலே ஏறி விட்டோம். ஏழரை மணிக்கு பொது தரிசனம் மூட போறாங்க, அப்படின்னு சீக்கிரமா உள்ள போக சொன்னாங்க. திங்கள்கிழமை, ஒரு மணி நேரத்தில, கூட்டம் அதிகமாக இல்லாம பொது தரிசனத்தில் அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவை, வேதமூர்த்தி, சுவாமிநாதன் அலங்காரத்தில் தரிசனம் பண்ணிட்டு படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி வந்து விட்டோம். வழியில் குரா மரத்தடியில் காலை அனுஷ்டானம். கடைசி ஊரு, ஆமாங்க இது தான் கடைசி ஊரு. இதுக்கு அப்புறம் ஏழு நாள் களைப்புத் தீர வழியில் எங்கேயோ சாப்பிட்டு விட்டு டிரைவர் அண்ணாவ சுரீல்னு பெங்களூர் இல்லத்தை நோக்கி வண்டியை ஓட்டச் சொன்னோம். அருமையான ட்ரைவர், நண்பர். இரவு பதினோரு மணி போல வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். நம்மளோட நோக்கம், பக்தி, உணர்வு இவைகளில் உண்மை இருந்தா நம்ம ரெண்டு அடி எடுத்து வைக்கும் போதே தாயுமானவன் பத்தடி ஓடி வந்து நமக்கு உதவி செய்கிறார் அப்படிங்கறத இந்த சாகசப் பயணத்திலயும் உணர்ந்தோம். கொளுத்துற வெயிலில், ஆனா போன ஒவ்வொரு தலங்களிலும் நாங்க கால் வைக்கிறதுக்கு முன்னாடி அரை மணி நேரம் மழை பெய்து பூமி குளிர குளிர இருந்தது. பழனி கோவில் தரிசனம் முடிஞ்சு வேதங்களும் அந்த வழியாக வந்த வள்ளுவர் தாத்தாவும் சொன்னபடி எங்களால் முடிந்த அளவு பழங்கள், இட்லி, இளநீர் வாங்கி தர்மம் செய்தோம். பேங்க்ல டெபாசிட் செஞ்ச பணம் இந்த ஜென்மத்துக்கு வேணா உதவலாம். ஆனா இந்த தர்மங்களில் டெபாசிட் பண்ணினா, பல பிறவிகளுக்கு இந்த டெபாசிட் நமக்கு வரும் அப்படிங்கறது உண்மை. இதை வள்ளுவர் தாத்தா வைப்புழி அப்படின்னு சொல்றார். அந்த மனமகிழ்வோடும் நிறைவோடும் உறங்கப் போகிறோம், மீண்டும் அடுத்த பயணத்தில் பாரத தரிசனம் தொடர்வோம்.
2 comments:
A man with. Speed spirit direction.Achieved goal. Blessings
We enjoy the free spiritual journey with u and ur family. Your tour commentry is so nice and ralistic
Post a Comment