Jan 25, 2022

ஆந்திரா(கர்னூல்) தல யாத்திரை - 2

ஆந்திரா(கர்னூல்) தல யாத்திரை - 2

பயணக்கட்டுரை எழுத முடியாத அளவுக்கு டயர்டு இந்த டூர்ல... மொத்த டூரும் அரசுப்பேருந்துகளிலேயே... அடுத்தடுத்த ஸ்டேட் பஸ்ஸு... அதுல விசாரிச்சு விசாரிச்சு கட் ஜர்னி வேற.

எங்களோட ஆந்திரா தல யாத்திரை - 1 லிங்க்: https://jagadhguru.blogspot.com/2019/01/blog-post_2.html

13ஜனவரி-18ஜனவரி2022, ஆறு நாட்கள்

சென்ற இடங்கள்:
தடிபத்ரி - சிந்தால வெங்கட்ரமண பெருமாள், புக்க ராமலிங்க ஸ்வாமி
பேலம் குகைகள்
யாகந்தி உமா மஹேஶ்வரர்
அஹோபிலம் நவ நரஸிம்மர்
மஹாநந்தி
மந்த்ராலயம்
ஆனேகுன்டி(கிஷ்கிந்தா) நவ ப்ருந்தாவனம்
ஹம்பி

இப்பத்தான் டூர் போய்ட்டு வந்து 2-3 வாரம் ஆகியிருக்கும்.  இந்த பொங்கல் லீவுக்கு கூட்டுக்குடும்பத்தோடு சேர முடியல கொரோணா இன்டெர் ஸ்டேட் லாக் டவுனால (மாநிலங்களுக்கிடையேயான பயணக் கட்டுப்பாடுகள்!!).  பெங்களூர்ல வேற கவுண்ட் ஜாஸ்தியாய்ட்டே வருதாம்.  மூனாவது அலை... மக்கள் பத்தோட பதினொன்னுன்னு கொரோணாவ மதிக்கறதில்ல இப்ப.  மாநில அரசுகளும் வருமானம் இல்லாம தாக்குபிடிக்க முடியல.  கட்டுப்பாடு விதிச்சாப்லயும் இருக்கனும்... ஆனா இருக்கவும் கூடாதுன்னு சில பல கட்டுப்பாடுகள். ஹம்பி, மந்த்ராலயம் மட்டும் தான் ப்ளான்.  ஹம்ப்பில வெள்ளி, சனி, ஞாயிறு தடை.  அதனால இந்த வாரக்கடைசி நாட்களை எங்க கழிக்கலாம்னு பார்த்தா அடிச்சது ஆந்த்ராவுக்குக் காத்து.  ஒரு கட்டுப்பாடும் இல்ல வெளி மானிலங்களிலிருந்து வருபவர்களுக்கு.  

இந்த யாகந்தி, மஹாநந்தி, அஹோபிலமெல்லாம் காஞ்சிபுரம் மஹாபெரியவா யாத்திரை உபயம்.  நான் பாட்டுக்கு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள், ராமாயண, பாரத தலங்கள், தீர்த்தங்கள்னு தான் இருந்தேன்.  இந்த ரெண்டு மூனு இடங்களுக்கு பெரியவாதான் ஶுக்லாம்பரதரம்.  ஒவ்வொரு ஊர்லயும் கெடச்ச கோவில், ஹோட்டல், தகவல் மையங்கள்ல ஃபோன் பேசி கட்டுப்பாடுகள், விதிமுறைகள் பற்றி தெரிஞ்சிண்டோம். இன்டெர்ஸ்டேட் பெர்மிட், பெங்களூர் டாக்சி டபுள் ட்ரைவர் பேட்டா, உடல் அசதி காரணங்களால் கார் பயணத்தைத் தவிர்ப்பதுன்னு முடிவெடுத்தோம்.

தடிபத்ரி - சிந்தால வெங்கட்ரமண பெருமாள், புக்க ராமலிங்க ஸ்வாமி

பெங்களூர் மெஜஸ்டிக்(SBC), Krantivira Sangolli Rayanna (KSR)... இன்னும் என்ன பேரெல்லாம் இருக்கோ!! சுவர்களில் வழிநெடுக அழகழகா சித்திரங்கள் . அனந்தபூர்(ஆந்த்ரா) வரை பெர்த் ட்ரைன்ல பயணம், வ்யாழன் நைட் ஏறி விடிகாலை 4 மணிக்கெல்லாம் இறங்கியாச்சு.

நாள் 1: அனந்தபூர் நகரம்... ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டெல்லாம் நல்லாத்தான் இருக்கு.  ஒரு இஸ்கான் கோவில் இருக்கு, பார்த்துட்டு தடிபத்ரிக்குப் போகலாம்னு பார்த்தா அந்த கோவில் 7 மணிக்குத்தான் திறக்கறாங்க.  


ரயில்ல வந்த ஒரு பையனோடு நடந்தே பஸ் ஸ்டாண்டுக்கு வந்தோம்.  10-15 நிமிஷ நடை மார்கழி மாத ப்ரம்ம முஹூர்த்தத்தில்.  அடிக்கடி பஸ் இருக்கு.  ஒன்னரை மணி நேரம் பயணித்து தடிபத்ரியில் இறங்கினோம்.  ஏற்கனவே மனைவி நெட்ல அன்னபூர்ணா லாட்ஜ் (ஓல்டு முனிசிபல் ஆஃபீஸ் எதிரில்)னு பார்த்து வெச்சிருந்தாங்க.  மொத்த டவுன்லயும் 15-20ரூ ஒருத்தருக்குன்னு ஷேர் ஆட்டோ.  50ரூபாய்க்கு லாட்ஜுக்கு காலை ஏழரை மணி போல வந்து சேர்ந்தோம்.  ஸ்டாஃப் ஃப்ரெண்ட்லியா இருக்காங்க, தகவல்கள் சொல்றாங்க.  ஆனா லாட்ஜ் புதுப்பித்துக் கொண்டிருந்ததால் எங்கயும் டஸ்ட் மயம் ரூமுக்குள்ளயும் பாத்ரூம், ஸ்க்ரீன், கட்டில் கீழ, டிவின்னு.  இந்த ஊர்ல பஞ்சாயத்துத் தண்ணி வரும்போது மோட்டர் போட்டு உறிஞ்சிட்றாங்கன்னு அந்த நேரத்துல கரண்டயும் கட் பண்ணிட்றாங்க.  அருமையான யோசனை. நாங்க அதுக்குள்ள பச்ச தண்ணிலயே குளிச்சிட்டு, காலை-மதிய பூஜை, அனுஷ்டானங்களயும் முடிச்சிட்டு சிந்தால வெங்கட்ரமணர் கோவிலுக்குப் போனா இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி, சிறப்பு தரிசன ஏற்பாடுகள், அலங்காரங்கள், தரிசன வரிசை கேட் வரைக்கும், மாஸ்க் கட்டாயம், ஒரு ஐநூறு பேர் போல க்யூல இருந்திருப்பாங்க.  விஷ்ணு ஸஹஸ்ர நாமம் மனைவி, பொண்ணோடு சொல்லிக்கொண்டே நகர்ந்தோம். க்யூ மூவாயிண்டே தான் இருந்தது.  ராஜ கோபுரத்தில் ஒரு 40-50 புறாக்கள் இருக்கும்.  அப்பப்ப கெளம்பறது, கோபுரத்த நாலு சுத்து சுத்தறது, திரும்பவும் கோபுரத்துல ரெஸ்ட்டுன்னு பிஸியா இருந்தன.  ஹார்மோனியம், ஜால்ராக்களோடு பஜனை கோஷ்டிகள் ஆண்கள், பெண்கள்னு பந்தலில் இறை நாமங்களை பாடிக்கொண்டிருந்தனர்.

சிந்தால வெங்கட்ரமண பெருமாள்: விஜய நகர ஸாம்ராஜ்யத்தால் எழுப்பப்பட்டது த்ராவிடக் கலையோடு.  சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது, தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது.  சிந்தாலம் என்றால் புளிய மரம் தெலுகு மொழியில்,  அந்த மரத்தடியில் இருப்பதால் வீற்றிருக்கும் வேங்கடரமணனுக்கு இந்தப் பெயர்.  ஹம்பி, திருவாரூரில் இருப்பது போல இங்கும் கருங்கல் தேர் இருக்கு.  ராமாயண நிகழ்வுகள் பலவும் கோவில் உள்புற சுவர்களில் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.  அழகுப்பெருமாள் அலங்காரத்தோடு.  உற்சவர் கருட, ஆதிசேஷன் வாகனங்களில்.  தெருவெங்கும் பிச்சைக்காரர்கள்.  40 நிமிஷங்களில் தர்ம தரிசனம் முடித்துக்கொண்டு புக்க ராமலிங்க ஸ்வாமி கோவிலுக்கு நடந்தோம்.

புக்க ராமலிங்க ஸ்வாமி: பெண்ணை நதிக்கரையில் இருக்கு இந்த கோவில்,  நதியில் அவ்வளவாக நீர் இல்லை, நெறையா வண்ணான்கள் தோய்த்துக் கொண்டிருந்தார்கள்.  விஜய நகர ஸாம்ராஜ்யத்தால் எழுப்பப்பட்டது . ஸ்வயம்பு லிங்கம் கடப்பா கல் தரை மூலஸ்தானம், ஏழிசை ஸ்வரங்களை எழுப்பும் இசைத்தூண்கள் இங்கும் உண்டு.  ஏதோ களிமண், பஞ்சலோக குழைசலில் வடிப்பது போல கற்களில் வடித்துள்ளார்கள், இவங்க ஊருக்குன்னு ஒரு கருப்பு கலர் பாறை வேற இன்னும் அழகோடு மிளிர்கின்றன ஒவ்வொரு படைப்பும், சின்னச் சின்ன பூக்கள், விரல்கள், நகங்கள்னு நேர்த்தி., ஒவ்வொன்றையும் தனித்தனியா ஃபோட்டோ தான் எடுக்க முடிந்தது நம்மால்.  இங்க சிலர் திருவண்ணாமலை, அங்க இங்கன்னு வருடந்தோறும் சைக்கிள், பாதயாத்திரை செய்பவர்களும் இருக்கிறார்கள், ரமணாஶ்ரமம், முதியோர் இல்லம், பள்ளி நடத்துகிறது. அம்மையப்பனை, நாராயணர் சன்னிதியை வேத மந்திரங்கள், தோத்திரங்கள் ஓதி தரிசித்துக் கொண்டோம்.  முகலாயர் படையெடுப்புகளில் பாழ்பட்ட தலங்களில் இவைகளும் உண்டு.  ப்ரிட்டிஷாரும் வழிபட்டிருக்கின்றனர் இங்கு.  சிவன் சன்னதிக்கு எதிரேயே பெண்ணை நதி.  ஸ்வயம்புவான இவர் தினந்தோறும் இங்கு நின்று பால் சொரிந்த பசுவால் கண்டு கொள்ளப்பட்டு, கோவிலாக எழுப்பப்பட்ட மூர்த்தி.  இன்றும் மூலஸ்தானத்து லிங்கத்தை சுற்றி அடியில் நீர் ஓடிக் கொண்டிருக்கிறது.  புக்க என்றால் வசந்தம், குளிர்ச்சி.

விவசாயிகள், உழைப்பாளிகள்... எங்கும் நான் வெஜ் கடை தான், மணி கடை, குருவாயூர் மெஸ் இன்னும் சில நான் ப்ராமின் நடத்தும் ப்யூர் வெஜ் கடைகள் இருக்கு., எல்லா எழுத்தும் தெலுகுவில்.  விசாரித்து சாப்பிடனும்.  காலை கோவிலுக்குச் செல்ல வேண்டுமென்பதாலும், பழக்கத்தாலும் மதியம் ஒரு மெஸ்ஸில் சித்ரான்னம், டிஃபன் என்று லஞ்ச் முடித்துக் கொண்டு ஓய்வெடுத்தோம்.  இரவு 4-5 மணி நேர ரயில் பயணம், தூக்கம் இல்லை.  சுத்தமான ஆந்த்ரா கார உணவுகள்.  ஒவ்வொரு வேளையும் தண்ணீர் கலந்து பிசைந்து சாப்பிட்டோம், முடிவில் ஐஸ்க்ரீம் தவறாமல்.  டிஃபன், சித்ரான்னம் 20-30 ரூபாய்க்குள்ளாகத்தான் இருக்கு.  பசங்க ரெண்டு பேருக்கும் ஆன் லைன் க்ளாஸுக்கு டொக்கு.  மாலை ஆன் லைன் பரீக்ஷை.  ஹோட்டலிலேயே முடித்தோம்.  எக்ஸாம் ஹால் காசு கொடுத்து புக் பண்ணினவங்க நாங்களாக்கும் !!  ஹோட்டல் ஓனர் தமிழர் போலிருந்தது.  ரூம் நிலையை வீடியோ எடுத்துக் காட்டி வேற ரூம் கேட்டு, ரெண்டாவது (மொட்டை) மாடியிலிருந்து க்ரவுண்ட் ஃப்ளோர்ல ஒரு ரூமுக்கு மாற்றிக்கொண்டோம்.  இந்த ரூம் நல்லாயிருந்தது, டிவி வொர்க் ஆச்சு, பசங்க எதையோ கார்ட்டூன பத்து நிமிஷம் பார்த்திருப்பாங்க.  நல்ல ஓய்வு.  காலை ஒரு ஏழு மணிக்கா கெளம்பி பேலம் குகை பாக்கலாம்னு ப்ளான்.

நாள் 2: பேலம் குகை: இதுவும் கர்னூல் மாவட்டம் தான், அனந்தபூர்-தடிபத்ரி. தடிபத்ரி-பனகனபள்ளி(பங்கனபள்ளி) ரூட்ல ஒரு மணி நேர பஸ் பயணத்துல இருக்கு.  ஆர்ச், ஆந்த்ரா டூரிஸம் தங்கும் ரூம்கள், பாத்ரூம், உணவக வசதிகளோடு, டிக்கெட் 40-60 வரை, ஃபோனுக்கு எதுவும் டிக்கெட் இல்லை,   காலை 10 மணி முதல் மாலை 5 வரை அனுமதி.  காலைல எழுந்து குளித்து பூஜைகளை முடித்து, குருவாயூர் மெஸ்ஸுல டிஃபன் முடிச்சு பஸ் ஏறும்போது மணி 10.   மெஸ் சூப்பர், எண்ணெய், காரம் எதுவுமின்றி.   ஆந்த்ரா தாண்டும் வரை இது போலவே இனி போகுமிடங்களிலெல்லாம் உணவு விடுதியை விசாரித்துக்கொண்டு தான் உண்பது என்று முடிவு செய்து கொண்டோம்.  

பத்தாயிரம் வருடங்களுக்கு முந்தைய இயற்கையான குகை.  பூனைப் பொந்து போல இருக்கும் நுழைவு என்பதால் இந்த பெயர்.  நூற்றுக்கணக்கான புத்த பிக்ஷுக்கள் இங்கு தவம் புரிந்துள்ள சான்றுகள் கிடைக்கின்றன.  பொக்கிஷங்கள் நம் கையில் பாழாகிவிடாமல் எடுத்து ம்யூசியமில் பத்திரப்படுத்தி உள்ளது அரசு.  பெரிய புத்தர் சுதைச்சிலை ஒன்றை சான்றுக்கு நிறுவி உள்ளது செல்ஃபி எடுத்துக்கொள்ள.  இந்தியாவின் முதலாவதான நீண்ட குகை மேகாலயாவில் இருக்கு.  இது பொது மக்களுக்குத் திறக்கப்பட்டுள்ள இரண்டாவது நீண்ட குகை.  குப்பை மேடாக இருந்ததை உள்ளூர் முக்யஸ்தர்கள் ஒன்று கூடி அரசிடம் கோரிக்கை வைத்து சுற்றுலாத் தலமாகி, அதற்காக மத்திய அரசிடம் பாராட்டும் பெற்றுள்ளது.  

நாம் நுழைய வசதியாக குகை வாயில் பெரிது படுத்தப்பட்டுள்ளது.  நூற்றைம்பது அடி ஆழத்தில் இருக்கிறோம் நாம்.  மொத்தம் மூனரை கி.மீட்டரில் பயன்பாட்டிற்கு இரண்டரை கி.மீட்டர் வரை அனுமதி, இன்-அவுட் ஏரோ மார்க்குகள் ஆங்காங்கே.  மீட்டிங், த்யான ஹால், நூற்றுக்கணக்கில் புற்றுகள் தலைகீழாகத் தொங்குமிடம் (கோடி லிங்கம்), பாதாள கங்கை, ஸ்வயம்பு லிங்கம், பூமிக்கடியில் ஓடி மறைந்து போன சித்ராவதி நதியால் உருவான இந்த குகை ப்ரிட்டிஷாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மலைக் குகைகளை பார்த்த நமக்கு முதல் முறை பூமிக்கு அடியில் அனுபவம்.  நுழைவு வாயிலிலிருந்து ஒரு அரை கி.மீ நடந்து குகையை அடைந்தோம்.  எங்க இருக்குன்னே அடையாளம் தெரியல.  பாத்தா ஒரு 20 படி கீழ இறங்கி போக வேண்டியிருக்கு.  புழுதி பறக்காம இருக்க மார்பில், கடப்பா கற்களால் பாதை அமைத்துள்ளார்கள்.  இந்த கடப்பா, மார்பில் கற்கள் இந்தூர்ல குப்பை மாதிரி ரோட்டோரம் கொட்டிக்கெடக்கு, லாரி எடுத்திண்டு போனா ஓசில எடுத்திட்டு வர்லாம் போல.  தடிபத்ரிலேந்து இங்க வரும் வழி பூரா மலை போல குவிச்சி கெடக்கு, வீட்டு காம்பவுண்டு, வீடு, கடை சுவர்களெல்லாமே செங்கல் எதுவுமின்றி இந்த கற்களை வெச்சே எதோ கோவில் கட்டுவது போல கட்டிக்கறாங்க.  

எதோ நாம தான் பிட்சுக்கள், அலிபாபா திருடர்கள், புராண கால பத்திரப்படுத்தி வளர்க்கப்பட்ட ராஜ வாரிசுகள்னு நினைவுகள், ப்ரமிப்புகள்,  பூமி மேலே இருந்து ஃபேன் வெச்சு ரெண்டு மூனு இடத்துல காற்று வாங்க ஏற்பாடு பண்ணியிருக்காங்க.  சில இடங்களில் செல்லத் தடை.  பல கோணங்களில், கிறுக்கல்களில், வார்ப்புகளில், அமைப்புகளில் பாறைகள்.  ஆங்காங்கே ஃப்ளட் லைட் வழி தெரிய.  சேறு சகதிகள் சில இடங்களில்.  மேல இருக்கும் ஆந்த்ரா வெயிலுக்கு இது கொடைக்கானல் போல.  எங்களுக்கு ஒரு மணி நேரம் ஆச்சு.  வெளியே வந்தோம்.  ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு நுழைவு வாயிலுக்கு வந்தோம்.  குகைக்குச் செல்லும் வழியில் வெயில் வீணாகாமல் காலையில் நனைத்த துணிகளை மரங்களில் போட்டுச் சென்றிருந்தோம்.  நினைவாக எடுத்துக் கொண்டோம்.

யாகந்தி உமா மகேஶ்வரர் கோவில்: பேலம் கேவ்ஸ்லேந்து இந்த பங்கனபள்ளி 1 மணி நேர பேருந்து பயணம்.  பங்கனபள்ளிலிருந்து யாகந்திக்கு பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் இருக்கு.   ஒரு அரை மணி நேரப்பயணம்.  இந்த தடிபத்ரி, பங்கனபள்ளி ஏரியாக்களில் கணிசமான அளவு முஸ்லீம்களை பார்க்க முடிகிறது அவர்கள் பாரம்பரிய உடை, அடையாளங்களோடு.  அவங்களாவது கடைபிடிக்கறாங்களேன்னு ஒரு த்ருப்தி.  சில விஷயங்கள், பழக்கங்கள், பெருமைகள் வளர்ப்பில் மட்டுமே சாத்தியப்படுகிறது.   ஒன்றே பரம்பொருள், ஆறு கால பூஜைகள், கண்ணியமான உடை, பெண்கள் பாதுகாப்பிற்கான கட்டுப்பாடுகள், வேத வழியில் தர்மத்தை ஒட்டி சிறுகக் கட்டி வாழ்தல்னு நமக்கும் அவங்களுக்கும் நெறையா ஒற்றுமைகள்.  ரெண்டு டீமும் இதை அஸ்திவாரமாகக் கொண்டு தேசத்திற்காக ஒன்று சேர்ந்தால் மேலும் சிறப்பு.  

விக்னேசுவரா ஆரிய வைசிய சைவ மெஸ்ஸில் ப்யூர் வெஜ்ஜுனு சொன்னாங்க பஸ் ஸ்டாப்ல,  ஒரு அரை கி.மீ. நடந்து சென்று சாப்பிட்டோம்.  மொத்த டூர்ல ஒரு இடத்திலயும் காசு கொடுத்து தண்ணி வாங்கல.  பழக்கத்தால் கிடைக்கும் குடிநீரையே கொண்டோம்.  நைட் ஸ்டே, டின்னர் அஹோபிலம் போகனும், மணி மாலை நாலு.  பாஷை, பஸ் டைம் ப்ரச்சினைகள்,  மெஸ் வாசல்லயே ஒரு ஆட்டோவை நாங்களே 450 ரூபாய்க்கு அமர்த்திக்கொண்டு கெளம்பினோம்.  கோவிலில் வெயிட்டிங், திரும்ப பங்கனபள்ளி பஸ் ஸ்டாப்ல ட்ராப்.  பத்து பேருக்கு ஷேர்னா ஒருத்தருக்கு 40 ரூபான்னு சொன்னாங்க ஒரு வழிக்கே.  ஓகேன்னு எங்களுக்கு மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பிட்டோம்.  வழியில் தெலுங்கு டப்பிங் ஹிட் அருந்ததி பேய் சினிமாவோட பங்களா ஒரு குன்று மேல இருக்குன்னு காமிச்சார் ட்ரைவர்.  பயம்லாம் இல்ல, டைம் இல்லங்கறதால, கீழே இருந்தே முக்யஸ்தலம் என்பதால் ! ஃபோட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு சென்றோம்.

யானு சிவனே கண்டி (நான் சிவனைக் கண்டேன்) என்று ஒரு பக்தரால் அறியப்பட்ட தலம் இன்று மருவி யாகந்தி என்றாகி இருக்கிறது.  அகஸ்த்யர் பெருமாள் கோவில் அமைப்புகளை சிறப்பாகச் செய்து மூலவரை ப்ரதிஷ்டை செய்யலாம்னு பார்த்தா, முடியவே இல்ல.  கனவில் ரிஷபவாஹனன் தோன்றி கைலை போலிருக்கும் இந்த இடத்தில் என்னையே ப்ரதிஷ்டை செய் என்று அருளியதால் உமா மஹேஶ்வரர் கோவில் ஆனது.  மூலவர் சுயம்பு, மூலஸ்தானம் வரை சென்று தொட்டு, நமஸ்கரித்து பூஜிக்க அனுமதி இருக்கு.  பாதி உருவம் சிவச்சின்னங்களோடும், பாதி உமையின் மஞ்சள் அலங்காரத்தோடும் வழிபாட்டில் அர்த்தநாரீஶ்வரராகக் (அர்த்தம் - பாதி, நாரீ-பெண், ஈஶ்வரன் - தலைவன்) காட்சி அளிக்கிறார் உலகநாயகர்.  இந்தக்கோவிலின் குளத்திற்காக ஆண்டு தோறும் வற்றாமல் இறைவனின், நந்தியிடமிருந்து வந்து நிரம்பும் சுனையின் ஆரம்பம் இன்றும் அதிசயமே, மர்மமே.  நம் விஶ்வகர்ம பரம்பரையினரின் அற்புதங்களில் ஒன்று.  கொரோணா கட்டுப்பாடுகளால் குழாய்களில் இந்த சுனையின் நீர் பக்தர்கள் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.  கட்டணக் குளியல், கழிவறை, உடைமாற்றும் அறை வசதிகளும் உள்ளது.  வெங்கடேசர் குகை, அகஸ்த்யர் குகை, சங்கரர் குகைகள் இந்த மலையிலேயே உள்ளன 20-40 படிகளில்.  இதுவும் மற்றுமொரு விஜயநகரப் படைப்பு.  வீர ப்ரஹ்மேந்த்ரர் எனும் ஞானி இங்கு தவமிருந்து படைப்புகளை அருளியுள்ளார்.  இங்குள்ள நந்தி சிலை வளர்ந்து வருகிறது என்பதை ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அற்புதமான படைப்புகள் நம் முன்னோர்கள் கைவண்ணங்கள், அர்ப்பணிப்புகள்.  காஶ்மீரம் தொடங்கி கன்யாகுமரி வரை ஒரு மன்னன் கூட தங்கள் அரண்மனைகளை இது போல அமைத்துக்கொள்ளவில்லை என்பதே நம் மண்ணின் வளர்ப்பு, பெருமை, உயர்வான உண்மை தத்துவத்தின் அனுபவம்.  ஒவ்வொரு கோவிலும் பூசாரி, ஓதுவார், நடன-இசை கலைஞர்கள், பூக்காரர்கள், போக்குவரத்துத்துறை, சத்திரம், தண்ணீர்ப்பந்தல், மிதியடி வைக்குமிடம், கடைவீதி என்று எவ்வளவு பேருக்கு ஆண்டு முழுதும் வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம்.  தர்மத்தோடு, இயற்கையோடு, உண்மையோடு, தத்துவத்தோடு இசைந்த இயல்பான வாழ்வியல் நம்முடையது.

யாகந்தி-பனகனபள்ளி-கோயில்குண்ட்லா-ஆல்லகட்டா-அஹோபிலம் தான் எங்க அடுத்த ரூட். நேரமின்மை, ஸூர்யன் அஸ்தமிக்கும் நேரம் காரணமாக ஆட்டோக்காரர் சொல்படி பனகனபள்ளிலிருந்து ஒருவருக்கு 25ரூபாய் என்று ஷேர் ஆட்டோவில் கோயில்குண்ட்லா(16 கி.மீ) சென்று இறங்கிவிட்டோம்.  சொகுசு! இடமின்மை காரணமாக நானும், குழந்தைகளும் பின்னால் லக்கேஜ் வைக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டோம். பேருந்தில் ஆல்லகட்டா-அஹோபிலம் கடைசி பஸ்ஸை 7 மணிக்குப் பிடிக்க விரைவாக சென்று இறங்கினோம்.  பஸ் அரை மணி நேரம் லேட்.  இந்த பஸ்ஸுக்குப் பின் வன ப்ரதேசம் என்பதால் அனுமதி இல்லை.  இரவு எட்டரை - ஒன்பது மணி போல அஹோபிலம் வந்து இறங்கினோம்.


நாள் 3: அஹோபிலம்(சிங்கவேள் குன்றம்) நவ நரஸிம்மர்: குழந்தை பிரகல்லாதனை அவன் அப்பனிடமிருந்தே காக்கவும், அந்த ஹிரண்யகசிபுவிடமிருந்து உலகைக் காக்கவும் மஹாவிஷ்ணு தன்னை பாதி மனிதன், பாதி சிங்கமென்று வெளிப்படுத்திக்கொண்ட திருத்தலம்.  நூறு தடவை நல்லவர்களாகவோ அல்லது மூன்று முறை தீயவர்களாகவோ அவதரித்து சாபத்திலிருந்து விடுதலை பெறலாம் என்ற நிலை ஒரு ஸமயம் வைகுண்டத்தின் வாயில் காப்பவர்களான ஜயன், விஜயனுக்கு நேர்ந்தது.  அவர்கள் நீண்ட காலம் நாராயணனை பிரிந்திருக்க அஞ்சி மூன்றே பிறப்பில் எங்களை நீங்களே கொன்று சாபம் தீர்த்தருள வேண்டும் என்று வேண்டி முதல் முறை ஹிரண்யாக்ஷன்(வராஹ அவதாரம்)-ஹிரண்யகசிபு(நரசிம்ம அவதாரம்), 2ஆம் முறை ராவண-கும்பகர்ண(ராமாவதாரம்), மூன்றாம் முறை கம்சன்-சிசுபாலன்(க்ருஷ்ணாவதாரம்) என்று தங்கள் சாப விமோசனம் அடைந்தனர்.   நாராயணனின் அவதாரங்களில் நொடியில் தொடங்கி, எங்கு, எப்போது வெளிப்படவேண்டும் என்ற குழப்பங்களோடு, மிகக் குறுகிய காலம் நடந்த அவதாரம் இது.  

மனைக்கு உள்ளே-வெளியே, ஆயுதங்களால், மிருகம்-மனிதன்-தேவனால், ராத்ரி-பகல், விண்ணில்-மண்ணில் தனக்கு மரணம் நேரக்கூடாது என்பது கடும் தவத்தால் அவன் பெற்ற வரம்.  அதன் படியே உள்ளே-வெளியே இல்லாமல் வாசல்படியில் வைத்து (அதனால் தான் நம்மை படியில் கால் வைக்கக்கூடாது, நிற்கக்கூடாது என்பார்கள்), மிருகம்-மனிதன்-தேவனாக இல்லாமல் நரஸிம்மமாக, எந்த ஆயுதங்களுமின்றி தன் சிங்க நகங்களாலேயே, ராத்ரி-பகல் இரண்டுமின்றி சங்கமிக்கும் வேளையில் (சந்த்யா காலம்), விண்ணில்-மண்ணில் இன்றி வீட்டு வாசப்படியில் அமர்ந்து மடியில் போட்டுக்கொண்டு (யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்) மஹாவிஷ்ணுவின் எட்டுக்கரங்களில் இரு கரங்கள் அவன் தலை, கால்களை பிடித்துக்கொள்ள, இரு கரங்கள் உடலைக் கிழிக்க, உடல் குடலை இரு கரங்கள் மாலை போல எடுக்க, மீதமிரு கரங்களில் சங்கு சக்ரங்களோடு அவனை அழித்த பின்னும் அந்த ரத்தத்தை உறிஞ்சியதாலும், சிங்கத்தின் ஸ்வபாவத்தாலும் பெரும் உக்ரத்தோடு இருந்தார் மஹாவிஷ்ணு.  பரமேஶ்வரன் ஶரபேஶ்வரனாக உருவெடுத்து அவரை அடக்கினார் (கும்பகோணம் சரபேஸ்வரர்), ப்ரஹல்லாதன் தன் பக்தியால் அவரைத் துதித்ததும் சாந்தமானார் என்பதும் வரலாறு.

இந்த வைபவம், அவதாரம் நிகழ்ந்த தலமே அஹோபிலம். பெரும் பலம், அளவிடமுடியாத பலம், சிங்கம் வெளிப்பட்ட குகை என்பதெல்லாம் பொருள். 

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் |
ந்ருஸிம்மம் பீஜனம் பத்ரம் ம்ருத்யோர் ம்ருத்யோர் நமாம்யஹம் ||

- என்பது நரஸிம்மரின் துதி.  நாம நினைப்பது போல எதோ நம்ம வீட்டுத் தூண், திருமலை நாயக்கர் மஹால் தூண் போல எதோ ஒன்னுலேந்து வெளிப்படல நரஸிம்மர்.  அந்த தூணே இன்றும் உக்ரஸ்தம்பம் என்று போற்றப்படும் பெரும் மலையாக இங்கு இருக்கிறது.  அப்படியென்றால் அவன் அரண்மனையை கற்பனை செய்து கொள்ளுங்கள்.  ஆந்த்ராவின் நல்ல மலைக் காடுகளை படமெடுக்கும் ஆதிசேஷனாக உருவகித்துக்கொண்டால் அதன் வால் பகுதியில் மல்லிகார்ஜுனனின் ஸ்ரீஸைலம் , மத்தியப் பகுதியில் மாலோலனின் அஹோபிலம், தலைப்பகுதியில் வெங்கடேசனின் திருமலையும் உள்ளது.

ஜ்வாலா அஹோபில மாலோல க்ரோத காரஞ்ச பார்க்கவா:|
யோகானந்த சத்ரவட பாவனோ நவ மூர்த்தய: || 

- எனும் ஶ்லோகம் இந்த ஒன்பது நரஸிம்மங்களில் பெயர்களை நினைவில் கொள்ள உதவும்.

1. ஜ்வாலா நரஸிம்மர்: மேல் அஹோபிலம்.  மலைக் காட்டிற்குள் நடக்கனும்.  கருடாசலம், வேதாசலம் மலைகளுக்கு நடுவே தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இந்த நரசிம்மர் குகை பல காலத்திற்கு பசும் புல்லையும் பொசுக்கி விடும் உக்ரமான தீ ஜ்வாலையுடனேயே இருந்திருக்கிறது.  பவநாசினி நீர்வீழ்ச்சி, சம்ஹாரத்திற்குப் பின் தன் ரத்த கரங்களைக் கழுவிக்கொண்டதால் இன்றும் அதே சிவப்பு நிறத்தில் ரத்தகுண்டம் எனும் குளம். 

2. அஹோபில நரஸிம்மர்: மேல் அஹோபிலத்தின் ப்ரதானக் கோவில் இது.  கீழ் அஹோபிலத்திலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் மலை மேல் உள்ளது.  டாடா குழுமம் கோவிலுக்கென்று இலவசப் பேருந்துகளை அர்ப்பணித்திருக்கிறது.  இங்கிருந்து மேலே ஏறிச்செல்ல வழி ஆரம்பிக்கிறது.  நாங்க சென்ற இரு தினங்களுக்கு முன் தான் இங்கு சிறுத்தை வந்திருந்ததால் எங்களுக்கு மேலே செல்ல அனுமதி இல்லை.  கேட் பூட்டிட்டாங்க வனத்துறையினர்.  பூஜை செய்யும் பட்டர் மட்டும் பாதுகாவலர்களோடு மேலே சென்று பூஜை முடித்து வந்து கொண்டிருக்கிறார்.  அந்த சிறுத்தையை ரகசியக்கேமராவில் கிடைத்தால் பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் பிடித்து விட வாகனம் கூண்டோடு தயாராக இருக்கிறது.  

காபாலிகர்களின் தலைவன் ஆதி சங்கரர் பலி கொடுப்பதைத் தடுக்கிறார், அவர் நம் மதத்திற்கு எதிரானவர் என்றும் தன் யாகத்திற்கு பலி கொடுக்க ஒரு சன்யாசியின் தலை வேண்டும் என்றும் அவரிடமே வேண்டினான்.  அவரும் தன் அழியும் உடலும் பயன்படுகிறதே என்று ஒருவருக்கும் தெரியாமல் இரவில் பைரவர் கோவிலுக்கு வருகிறேன், அங்கு என் தலையை எடுத்துக்கொள் என்று இசைந்து அதன்படியே வந்து சமாதி நிலையில் அமர்ந்தார்.  குருவைக் காணாமல் கலங்கிய சீடர் பத்மபாதருக்கு அப்போது நரசிம்ம சாமி வந்து, வாளால் வெட்ட ஓங்கின கையோடு இருந்த காபாலிகனை ஓடி வந்து கிழிந்து எறிந்து விடுகிறார்.  சமாதி கலைந்து நடந்தவைகளை அறிந்த பகவத்பாதர் நரசிம்மர் மீது லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரத்தால் துதித்தார்.  சிவலிங்கம், நரசிம்ம சுதர்சன சக்ர ப்ரதிஷ்டையும் இங்கு செய்துள்ளார்.  ராமாவதாரத்தின் போது இந்த நரசிம்மரை பூஜிக்கிறான் ராமன்.  குகைக்குள் சென்று நரசிம்மரைத் தரிசிக்கச்சென்ற ஆறாவது ஜீயர் குகையும் இங்கு சமாதியாக மூடப்பட்டுள்ளது.  வேடர் குலத்தில் பிறந்து மஹாவிஷ்ணுவை மணந்த செஞ்சு லக்ஷ்மித் தாயார், சிவலிங்கம், ராமர், ப்ரஹல்லாதன்,  அவதாரத்தின் போது தன்னை விட்டு வந்த பெருமாளைத் தரிசிக்க வந்த கருடன் திருச்சிற்பங்கள் இங்கே இருக்கின்றன.

3. மாலோல நரஸிம்மர்:   மலைக் காட்டிற்குள் நடக்கனும்.  மேல் அஹோபிலம்.  மா என்றால் லக்ஷ்மி, லோலன் என்றால் ப்ரியன்.  ஒன்பது நரசிம்ம உருவங்களில் எதை ப்ரதானமாக, உற்சவமாக எடுத்துச் செல்வது என்று குழப்பம் ஏற்பட்ட போது மாலோலனையே கொள்ளலாம் என்று ஜீயருக்குக் கனவில் அருளினான் நாராயணன்.

4. க்ரோத (வராஹ) நரஸிம்மர்:  மேல் அஹோபிலம்.   மலைக் காட்டிற்குள் நடக்கனும்.  ப்ரஹல்லாதன் குருகுல வாசம் செய்த ப்ரஹல்லாத மேடு (மெட்டு-படி) இங்கே இருக்கிறது.

5. காரஞ்ச நரஸிம்மர்:  மேல் அஹோபிலம். பேருந்தில் 2 ஆவது நரசிம்மரைத் தரிசிக்கச்செல்லும் வழியில் சாலைக்கு வலது பக்கம் இருக்கிறது.  ஹனுமான் ராமனின் தரிசனத்தை இந்த தலத்தில் பெற வேண்டும் என்று தவமிருந்தபோது நரசிம்மர் தோன்றி அருளினார்.  நான் ராமனை வேண்டி தவம் இருக்கிறேன், சிங்க முகத்துடன் வந்திருக்கும் நீங்கள் யார் என்று கேட்கிறார்.  நானே நாராயணன், நரசிம்மன், ராமன் என்று கூறியும் அவர் மறுக்க, நாராயணனின் அடையாளங்களான ஆதிசேஷன் குடை பிடிக்க, இரு கரங்களில் சங்கு, சக்ரங்களைத் தாங்கி, ராமனின் கோதண்டமெனும் வில்லை ஒரு கரத்தில் ஏந்தி மீண்டும் அவருக்கு தரிசனம் கொடுத்து அருளிய தலம்.  கரஞ்சம் என்றால் புங்கமரம்.

6. பார்க்கவ நரசிம்மர்: கீழ் அஹோபிலத்தில் இருந்து இரு கி.மீட்டர்கள் ஜீப்பில் வனத்திற்குள் பயணித்து, 130 படிகளில் ஏறி இவரை தரிசிக்கலாம்.  உள்ளூர் வாசிகள், பக்தர்கள் நடந்து தரிசிக்கிறார்கள்.  ப்ருகு முனிவரின் பரம்பரையில் வந்த பரசுராமர் குளம்(பார்க்கவ அக்ஷய தீர்த்தம்) உண்டாக்கி, தவத்தால் தொழுதபோது அவர் வேண்டியபடியே தசாவதாரங்கள் புடை சூழ நரசிம்மமாகக் காட்சி அருளிய தலம்.

7. யோகானந்த நரசிம்மர்: ஸம்ஹாரம் முடிந்த பின் ஆனந்தமாக ப்ரஹல்லாதனுக்கு யோக சாத்திரங்களைக் கற்பித்தவர். கரங்களில் யோக முத்ரைகள். 

8. சத்ரவட நடசிம்மர்: ஆல(வட)மரமே குடையாய் (சத்ரம்)இருக்க அதன் கீழமர்ந்த நரசிம்மர்.  உக்ரத்தைத் தணிக்க ஹாஹா, ஹூஹூ என்ற இரு கந்தர்வர்கள் பாட்டுப் பாடிக்கொண்டிருக்கின்றனர் இங்கு(சிலைகள் உள்ளன). இவர் கைத்தாளம் போட்டு ரசிக்கிறார்.  ஒரே இடத்தில் ஒன்பது நரசிம்மர்களையும் ஒவ்வொரு நவக்ரஹ அதிபதியாகத் துதிக்க, தரிசிக்க இங்கு பக்கத்திலேயே ஒரு சன்னதி இருக்கிறது.

9. பாவன நரசிம்மர்: கீழ் அஹோபிலத்தில் இருந்து 22 கி.மீட்டர்கள் ஜீப்பில் மலை, பாறை, ஓடை, கல், முள் வனத்திற்குள் கட கடவென்று பயணித்து இவரை தரிசிக்கலாம்.  வழி முழுதும் ஜீப்பே நடந்து தான் செல்கிறது.  தனித்தனியாக அரிசி, உளுந்து, தண்ணீர், உப்பு சாப்பிட்டிருந்தாலும் இந்த பயணத்தில் அவை வெந்து, கலந்து, இட்லி, தோசையாகி, ஜீரணமும் ஆகிவிடும்.  உள்ளூர் வாசிகள், பக்தர்கள் நடந்து வேறு ஒரு வழியாக வந்து தரிசிக்கிறார்கள் (போக வர 10 கி.மீ.)  இந்த ரூட்லயும் பைக்ல இறங்கி, இறக்கி, ஏறி, ஏற்றி என்று வருபவர்களையும் கண்டோம்.  சந்தன மரங்கள், வனப் பாதுகாப்பு கருதி ரோடு போடாமல் இருக்கிறார்கள்.  வேடுவப் பெண்ணான செஞ்சுவை மணப்பதற்காக இங்கே அருளினார்.   அவளுக்காக மிருகங்களை வேட்டையாடி உணவாக்கினதைக் கருதி இன்றும் இங்கு பலி நடக்கிறது.  குறத்தி வள்ளிக்கணவனின் மாமன் தானே இவன்.  இங்கு பூஜைக்காக 15 நாட்களுக்கு வரும் ஐயர் இங்கேயே குடும்பத்தை, சொந்த, பந்தங்களை விட்டுத் தனியே அறையில் உணவு சமைத்துக்கொண்டு இருக்கிறார்.


2, 5, 7, 8 நான்கு நரசிம்மத்தையும் தரிசிக்க ஆட்டோ 400.  மற்ற மூன்றும் கைத்தடி, கைடு உதவியோடு மேல் அஹோபிலத்தில் காட்டிற்குள் நடந்து.  ஆறாவது, ஒன்பதாவது நரசிம்மரைத் தரிசிக்க ஷேர் ஜீப் இருக்கு.  நாங்க தான் நேரம் கருதுவோம்ல.  தனியா எடுத்திட்டு போனோம்.  3000ரூபாய் டும்.  ஷேர்ல போயிருந்தா ஒருவருக்கு 400-500 ரூ. போலிருக்கு.  6ம் 9ம் மறுநாள் ப்ளான் பண்றாங்க சாமிய நிம்மதியா தரிசிக்கனும்னு ரிலாக்ஸா வர்றவங்க.  2 வருடங்களாக காத்திருந்த கைடு எங்களிடம் 2000 ரூபாய் பிடுங்கிக் கொண்டார்.  அதுவும் ஆறு நரசிம்ம தரிசனத்திற்கு.  காலியா இருந்த சன்னதிகளில் விஐபி தரிசனம்னு 10ரூ டிக்கெட்ட 100ன்னு சொல்லிட்டார்.  

எங்கு பார்த்தாலும் குரங்குகள், அடர்ந்த காடுகள், க்ராமத்து வாசிகள், எருமை, ஆட்டுக் கூட்டங்கள் என்று இயற்கையோடு ஒரு நாள்.  நேற்று இரவு வந்து தங்கினோம்.  இன்று காலை ஆறரை மணிக்குக் கீழ்க் கோவிலில் இருக்கும் நரசிம்மரைப் பள்ளியெழுச்சியின் போது குளித்து, மடி உடை உடுத்தி, காலை அனுஷ்டானங்கள் முடித்துச் சென்று வேத மந்திரங்களோடு துதித்து, தரிசித்தோம்.  எங்களை முதலில் உள்ளே அழைத்து, பெரிய பட்டர் தாத்தாவும் தரிசனம் செய்வித்து, ப்ரசாதங்கள் தந்து ஆசிர்வதித்தார்.   வெளியே வந்து நெறைய ஐயப்பசாமி, பக்தர்களோடு ப்ரசாதங்களைப் பகிர்ந்து கொண்டோம்.  இந்த நரசிம்மர் ஒன்பது தலங்களில் சேராதவர்.  தை மாதத்தில் தொடங்கி 45 நாட்கள் கீழே காடு, க்ராமங்களில் உலா வருவதற்காக ஜ்வாலா நரசிம்மர் இங்கு எழுந்தருளி இருக்கிறார். 

காலை ஆறரை மணி தொடங்கி மதியம் மூன்று மணிக்குள், மேல் அஹோபிலம், காரஞ்ச நரசிம்மர் டாடா இலவச பேருந்திலும், சத்ரவட நடசிம்மர், யோகானந்தரை 400ரூபாய்க்கு ஆட்டோவிலும், பாவன-பார்க்கவர்களை ஜீப்பிலும் தரிசித்து முடித்தோம்.  ஜீப்பில் ஏறும் முன் ராகவேந்த்ரா மெஸ்ஸில் டிஃபன்.  இங்கு வெங்காயம், பூண்டு ஒன்னும் கிடையாது... நாங்க போன போது  உப்புமா, கேசரி, மாவு உருண்டைகள், கார சேவு, அவல் மிக்ஸர் தான் இருந்தது.  முடித்துக்கொண்டோம்.  பார்க்கவ நரசிம்மர் சன்னதி பூட்டி இருந்ததால் அங்கு இருந்த தீபங்கள் விற்கும் குட்டிப்பெண் தன் டார்ச் லைட்டை அடித்து ஓட்டை வழியாக மூலவரை தரிசனம் செய்வித்தாள்.  திரிந்து கொண்டிருந்த குரங்குகளுக்கு மெஸ்ஸில் வாங்கியிருந்த ஸ்னாக்ஸை காலி செய்தோம்.  உரிமையாக, அன்பாக கை நீட்டினால், எடுத்து அவசர அவசரமாக அடுத்தவர் வரும் முன் வாயில் அடைத்துக்கொள்கின்றன.  குழந்தைகளுக்கும் ஸ்னாக்ஸ், சம்பாவனை மரியாதை செய்து கிளம்பினோம்.

https://www.ahobilamutt.org/us/home/contactus.asp வெப்சைட்டில் இருந்துஅஹோபிலம் மாலோல கெஸ்ட் ஹவுஸ் மேனேஜர் திரு. பத்ரி நாராயணன் அண்ணா அவர்களைத் தொடர்ந்து தொல்லைப்படுத்திக்கொண்டே இருந்தேன்.  கொரோணா, என்ன கட்டுப்பாடுகள், தரிசனம் உண்டா, தங்குமிடம், சாப்பாடு, எப்படி வருவது, பஸ் டைம் என்ன, முதல் தடவைன்னு, கெளம்பிட்டோம், இங்க இருக்கோம், அங்க இருக்கோம், வந்திண்டிருக்கோம், வந்திட்டோம்ங்க்ற வரை.  எங்களுக்காகக் காத்திருந்து ப்ராம்மண சத்திரத்தில் தங்குமிடம், சாப்பாடுக்கு ஏற்பாடு செய்து விட்டு வீடு சென்றார்.  மறுநாள் கைடு, தரிசன வரிசை, ஆட்டோ, இலவச பேருந்து எல்லாம் ஏற்பாடு செய்தார்.  என்னைக் கேட்காமல் அவர் கேட்டார் என்று அளவில்லாமல் கைடு ஃபீஸ்னு கொடுத்திருக்கிறீர் என்று உரிமையாகக் கடிந்து கொண்டார்.  வேறு சிலரும் நான் இப்ப கொடுக்கும் மூடில் இருக்கேன்.  இது நரசிம்மன் தலம்.  எனக்குத் தரான், வாங்கி இன்னொருத்தன் கிட்ட தரான், இது அவன் வேலை என்பதை அனுபவத்தில் உணர ஆரம்பித்திருக்கிறேன்.  கைடு அல்லது வேறு யாரா இருக்கட்டும், கொள்ளையடிக்கறார்னா அது அவருக்கும் நரசிம்மனுக்கும் நடக்கும் வழக்கு. நிற்காமல் செல்வதால் தான் அது செல்வம் என்று எங்க தாத்தா 'அமரபாரதி' நடராஜஶர்மா சொல்வார்.   பொங்கல் தைத்திங்கள் முதல் நாளில் மனம் நிறைய மாலோலன் தரிசனம்.

ப்ராம்மண சத்ரத்தில் தங்குமிடம் ஏசி 1100 ஒரு நாளைக்கு.  உணவு அன்னதானம் - சாதம், சாம்பார், ரசம், மோர், ஊறுகாய்.  இரவும், மறுநாள் மதியமும் சாப்பிட்டு விட்டு அன்னதான டொனேஷனாக 500ரூபாய் கொடுத்தோம், தங்குமிடம், டொனேஷனுக்கு பில் தந்தார்.  ப்ராம்மணர் அல்லாதோரும் முன் கூட்டி ஃபோன் செய்தோ, நேரில் வந்தோ தங்கி, சாப்பிட்டுச் செல்கிறார்கள்.  முதல் நாள் தடிபத்ரி, 2ஆம் நாள் அஹோபிலம் தங்கியாச்சு, இன்றிரவு தங்க மஹாநந்தி சென்று விட கிளம்பினோம்.  அல்லகட்டாவிற்கு பஸ் ஏறி, அங்கிருந்து நந்தியால் பேருந்தில் பயணம், ஒரு வழியா நைஸ் ரோடுக்கு வந்திருக்கோம். நந்தியாலிலிருந்து மஹாநந்தி செல்லவேண்டும்.


மஹாநந்தி நந்திகேஶ்வரர்: நந்தியாலிலிருந்தும் நேரம் கருதி ஷேர் ஆட்டோவை எங்களுக்கே அமர்த்திக்கொண்டு (250 ரூபாய்) இரவு 7.30 மணி அளவில் வந்து சேர்ந்தோம்.

சிலாத மஹரிஷியின் இரு புதல்வர்களில் ஒருவர்,  இந்த தலத்தில் தவத்தால் ஈஶ்வர பட்டம் பெற்ற சிலரில் ஒருவராக உயர்ந்து, பொன் தடி கொண்டு கைலை வாயில் நிர்வாகம் செய்கிறார்.  இவரிடம் வேதம், சாத்திரம் பயின்றோர் தேவர்கள், ரிஷிகள் பலர்.  நந்தி தவமிருந்த இடம் புற்றாகி, அங்கு ஒரு பசுவின் கால் குளம்பு பட்டு சிதைந்தும் விடுகிறது.  இந்த அடிபட்ட புற்றே சுயம்பு லிங்கமாய் இன்று.  சட்டையைக் கழட்டிவிட்டு கருவறை உள் சென்று வேதியர் மந்திரம் சொல்ல நாம் சங்கினால் பால், நீர் அபிஷேகம் செய்யலாம்.  எந்த தீட்டு, எச்சில், பஸ், ரயில் பயணம் செய்தோர், அசுத்தம் என்றெல்லாம் பார்ப்பதில்லை.  முழு சுற்றுப் பயணமும் சில ஐயர்கள் மட்டும் இன்று உடுத்தும் பாரம்பரிய பஞ்சகச்ச உடையில் இருந்த த்ருப்தி மட்டுமே எங்களுக்கு.  உள்சென்று எங்களுக்கும் அந்த மந்திரங்கள் தெரிந்திருந்ததால் அவருடன் சேர்ந்து அமர்ந்து மந்திரங்களை ஓதி குடும்பத்தோடு அபிஷேகம், அர்ச்சனை செய்தோம்.  எல்லா உயிரும் இன்புற்றிருக்க ஒவ்வொரு தலத்திலும் வேண்டிக்கொள்கிறோம்.  அந்த வரை உணர்வு தந்திருக்கிறான் அவன்.  சுவாமி, அம்பாள் மற்ற சன்னதிகளில் இருந்த பூஜகர்களுக்கும் சிறுவன் மந்திரம் சொன்னதில் மகிழ்ந்து, 8.45க்கு வெள்ளிக்கவசம் எடுத்து விடுவார்கள்.  மூலவரான புற்றீஶ்வரரை நன்கு நின்று தரிசித்து செல்லுங்கள் என்று பணித்தார்கள்.  வேற என்ன பேறு.  அருமையான தரிசனம்.  

இரவு ப்ராம்மண சத்திரத்தில் 400 ரூபாய்க்கு பெரிய நான் ஏசி ரூம் வித் அட்டாச்டு பாத்ரூம்.  தரிசனம் முடிந்து விட்ட த்ருப்தி, நல்ல தூக்கம்.  தமிழகத்தில் எங்கெங்க இருக்குன்னு தெரியல இந்த மாதிரி. மசாலா, வெங்காயம், பூண்டெல்லாம் போடாம, இன்றும் ஹோட்டலில் சாப்பிடாத ப்ராம்மணர்களுக்கான அன்னதான சத்திரங்கள்.  பத்ராசலம், மஹாநந்தி, அஹோபிலம் க்ஷேத்திரங்களில் இதுவரை தங்கி உணவுண்டு இருக்கிறேன்.  ஒரு ட்ரெஸ்ட் மூலம் இந்த தர்ம காரியங்களை செய்து வருகிறார்கள்.  யாத்திரை வருபவர்களுக்குத் கட்டணம் கொடுத்து தங்க, குளித்துத் துணி தோய்த்து பூஜைக்காக மடியாக உணர்த்திக்கொள்ள இடம், இலவசமாக ரெண்டு வேளை சாப்பாடு.  புறப்படும்போது நம்மால் முடிந்த தொகையை இஷ்டப்பட்டால் அன்னதானக் கொடையாகக் கொடுத்து ரசீது பெற்றுச் செல்லலாம்.  இந்த மஹாநந்தி சத்திரத்தில் பெரிய கல்யாணங்கள் நடத்தும் அளவிற்கு ஹாலும் இருக்கு.  இரவு அரிசி உப்புமா, ஊறுகாய், மோர் பரிமாறினார்கள்.  மறுநாள் மதியம் சாதம், சாம்பார், பருப்பு, நெய், தொகையல், ரசம், மோர், ஊறுகாய்.  

நாள் 4: காலை நானும், குழந்தையும் எழுந்து குளித்து, துணிகளைக் காயப் போட்டு விட்டு, நிம்மதியாக சந்த்யாவந்தனம், ஸமிதாதானம்(அக்னிபூஜை), ப்ரம்மயக்ஞம்(தேவர்கள், அறிவுச் சுரங்கமான வேதங்களைத் தந்த ரிஷிகள், பித்ருக்களுக்கான தினசரி நீர்க்கடன்) முடித்துக்கொண்டு, ஃபோட்டோ ஷூட்டுக்குக் கிளம்பினோம்.  நேற்றிரவு நாங்கள்தான் கடைசி பக்தர்கள், நிம்மதியாக தரிசனம் செய்து விட்டோம்.  லைட்டிங் சரியாக இல்லாததால் வெளியிடங்களை நன்றாகப் பார்க்க முடியவில்லை என்பதால் இப்போது சுற்றக்கிளம்பினோம்.  

பவானி ஹோட்டல் என்று ஒரு சைவ விடுதி இருக்கு.  ப்ரேக் ஃபாஸ்ட் முடித்தோம்.  ஆந்த்ரா டூரிஸம், தேவஸ்தான சத்திரம் என்று தங்க வசதிகள் இருக்கு.  இந்தக் கோவில் குளத்திலும் குளிக்க அனுமதி இல்லை, கொரோணா காரணத்தால் வெளியே ஷவர், உடைமாற்றும் வசதிகள் வைத்திருக்கிறார்கள்.  புல்லாங்குழல், வீணை, மத்தளம், தபேலா, ஜால்ரா, நாதஸ்வரம் போல இசைக்கருவிகளை வாசித்துக்கொண்டிருப்பது போல பெரிய, பெரிய விநாயகர் சுதைகள் கோவில் பார்க்கில் வரிசையாக.  ஸ்வாமி, அம்பாள் சிலைகளும்.  கோவில் நுழைவாயில் வரை பேருந்து வருகிறது.  அங்கே கரும்பாறையில் ஒரு நந்தி ரவுண்டானா.  ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம்.  

சற்று தூரத்தில் தனியார் அவர்களாக ஃபோட்டோ எடுத்து, உடனே தரும் வகையில் ஒரு பெரிய வெள்ளை நந்தி வானுயர வைத்து நிர்வகிக்கிறார்கள்.  மைசூர் சுகவனத்தில் இது போலத்தான் ஃபோட்டோ எடுத்துக் கொடுத்தார்கள், 200-300 ரூபாய் ஒரு காப்பி என்று, ப்ரிண்ட், எங்கள் முகம், கிளிகள் எல்லாம் மோசமாக இருந்தது, திருப்தியாக இல்லை.  நாமே ஃபோட்டோ எடுக்க அனுமதியும் இல்லை.  அந்த அனுபவத்தில் இந்த நந்தியிடம் நாங்கள் உள்ளே செல்லவில்லை, வெளியிலிருந்தே அதை பேக்ரவுண்டாக வைத்து, ஃபோட்டோ எடுத்துக்கொள்ள முடிகிறது.  எடுத்துக்கொண்டு சத்திரத்தில் லஞ்ச் முடித்துக்கொண்டு கிளம்பினோம்.  

நாங்கள் நேற்றிரவு ஷேர் ஆட்டோவில் வந்ததை மற்றொரு ஆட்டோக்காரர் நோட்டம் பார்த்துள்ளார்.  இரவிலிருந்தே எங்களை அன்புத்தொல்லை செய்து கொண்டிருந்தார்.  அவர் ஆட்டோவிலேயே நந்தியால் வந்து சேர்ந்தோம்.  நந்தியால் வாழை விவசாயம் அப்போது சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.  ஸ்ரீஸைலம், க்ருஷ்ணா நதி வாய்க்கால்கள், மோட்டார் பம்ப்பு நீராதாரங்கள் மேற்கண்ட ஆந்த்ரா க்ராமங்களுக்கு.  கர்னூல்-யமிக்ஞனூர் வழியாக மந்த்ராலயம் ஸ்ரீராகவேந்த்ரர் ஜீவ ஸமாதி ஆன தலத்திற்கு இரவு 7 மணி போல வந்தடைந்தோம்.  

மந்த்ராலயம் ஆந்த்ராவில் துங்கபத்ரையாற்றின் கரையில் இருக்கிறது.  கோவிலுக்கு அருகில் ஆற்றில் இறங்கிக் குளிக்க வசதிகள் இருக்கின்றன.  நீர்வரத்து இப்போது குறைவு.  நடுவே ஓடிக்கொண்டிருக்கிறது.  தாமிரபரணி போல எங்கும் பாறைகள்.  இந்த துங்கா, பத்ரா இரு ஆறுகளும் கர்நாடக மாநிலத்தில் ஶிமோகா வுக்கு ஒரு 16 கி.மீ தொலைவில் கூடலி எனுமிடத்தில் சங்கமிக்கின்றன.  இந்த கூடலி (ஶ்ருங்கேரி) சங்கர மடத்தில் தேவி ஸரஸ்வதி ஆதிசங்கரருக்குக் கட்டுப்பட்டு நின்ற கோலத்தில் அருளுகின்றாள்.  அமர்ந்திருக்கும் நிலையில் அவள் அருள்புரியும் ஶ்ருங்கேரி தலம், சங்கர மடம் துங்கா நதிக்கரையில் அமைந்திருக்கிறது.

மந்த்ராலயத்துல இருக்கோம்ல..! ராகவேந்த்ரர்(ராயர் என்றழைக்கிறார்கள்) ரவுண்டானா, ஆர்ச், சத்திரங்கள் என்று கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  குடும்பம், குடும்பமாக வந்து தங்க எண்ணற்ற தேவஸ்தான ரூம்கள் பெரிது, பெரிதாக சுத்தமாக, சுடுநீர் வசதியோடு.  இந்த இடத்தில் பூர்வீகமாக ஆட்சி செய்து கொண்டிருந்த மாஞ்சோலை அம்மனிடமிருந்து ஸ்ரீராயர் விரும்பி, வேண்டி இடத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.  எனவே முறையாக மாஞ்சோலையம்மனை முதலில் வணங்கி, உள்ளே சென்றோம்.  தினமும் இங்கு ப்ரஹல்லாதனின் அவதாரமான ஸ்ரீராயருக்கு வெள்ளி யானை, ரதம், என்று இரவு ஐந்து புறப்பாடுகள் கோவில் ப்ராகாரத்திலேயே.  2022 காலண்டர் வாங்கிக் கொண்டோம்.  ரதங்கள் உலாவையும், ப்ருந்தாவனத்தையும் நன்றாக தரிசித்துக் கொண்டோம்.

பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாயச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே || என்று சொல்லிக்கொண்டே வலம் வந்தோம். எங்கள் பாரம்பரிய உடை, தமிழை அடையாளம் கண்டு, இரவு 9 மணி அளவில் இப்போது பரம்பரையில் வந்திருக்கும் ஆசார்யர் ஸ்ரீ ஸுபுதேந்த்ர தீர்த்தர் தரிசனமும், மூல ராமருக்கும், ப்ருந்தாவனத்திலும் தன் கரங்களால் அர்ச்சித்த மந்த்ராக்ஷதையும் அருளுவார், தரிசித்துச் செல்லுங்கள் என்று அர்ச்சகர்கள், பணியாளர்கள், பக்தர்கள் சிலர் பணித்தனர்.  குழந்தைகளுக்குப் பசி.  காத்திருந்தோம்.  ஸ்வாமிகள் வந்தார், எல்லா பக்தர்களும் பெரிய பெரிய கல்கண்டு, அட்சதையோடு ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டே வரிசை நகர்ந்தது.  100பேர்கள் இருந்திருப்போம்.  குழந்தை வேதம் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டதும் நிற்கச் சொல்லி, கேட்டு, கூடவே தானும் சொல்லி, எந்த ஊர், என்ன செய்கிறோம் என்றெல்லாம் கனிவாக தமிழிலேயே விசாரித்துக்கொண்டு சால்வை, கல்கண்டு, பழங்கள், பணம், கல்கண்டு, மந்த்ராக்ஷதைகளை அளித்து மேலும் வேதப்படிப்பை விடாமல் தொடர உற்சாகப்படுத்தி அருளினார்.  


ப்ரசாதங்களை முறைப்படுத்தி, பைகளில் வைத்துக்கொண்டிருந்த போது மற்றுமொரு சிப்பந்தி, மடியாக மடத்துக்குள்ளேயே இரவு உணவு பந்தி நடக்குமிடத்திற்கு வழி காட்டி விரைவாக செல்லச் சொன்னார்.  வழியில் பெரிது, பெரிதாக 3 சமாதிகளைத் தரிசித்துக்கொண்டே சென்றோம். நாங்க நாலுபேர் தான் கடைசி, சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.  எங்களைப் பார்த்து விட்டு ஒருவர் தனியாக மீண்டும் அமர்த்தி விரைவாக திருப்பதி போல தள்ளுவண்டிகளில் இருந்த சாதம், ரசம், தயிர்சாதத்தைக் கனிவாக விசாரித்து, பரிமாறி, ஓய்வெடுக்கும் இடங்களுக்கு வழி காட்டிச் சென்றார்.  செப்பல் ஸ்டாண்டிலும் நாங்கள் தான் கடைசி.  மனைவி, பெண்ணுக்கு தொடர் பயணம், பல ஊர் தண்ணீர் என்று களைப்பில் ஜொரம் வந்தாகி விட்டது.  இரவு 10 மணி அளவில் ரூமுக்குள் நுழைந்தோம்.  திருப்பதி போலவே யாத்ரீகர்கள் இந்த திருத்தலத்தில் செய்யக்கூடியவை, கூடாதவை என்று போர்ட் வைத்திருக்கிறார்கள்.  400 ரூபாய் நான் ஏசி டபுள் காட் (தனித்தனியாக) அட்டாச்டு டூம் கீஸர் வசதியோடு.  நிம்மதியான நினைவுகளோடும், களைப்போடும் ஓய்வு.

நாள் 5: காய்ச்சலால் ஒன்பது மணி வரை எழுப்பவேயில்லை ஒருவரையும்.  நதியில் நீர்க்குறைவாயிருப்பதால் ரூமிலேயே குளித்து விட்டோம்.  நேரே வீடு சென்று விடலாமா, இல்ல ஹம்பி(கிஷ்கிந்தா)யா,  ரயிலிலா, பஸ்ஸிலா, ட்ராப் டாக்ஸியிலா என்று ஒரு மணி நேரத்திற்கு சில பல சுற்றுகள் பேச்சு வார்த்தைகள்.  வேண்டுமென்றால் மீண்டும் இவ்வளவு தொலைவு வரவேண்டும் ஹம்பிக்கு.  இங்கிருந்து 4 மணி நேரம்.  யார் மேல் பழி போடலாம் சொந்தங்களிடமும், வரலாற்றிலும் :) ஒரு வழியாக இன்று ஹம்பி சென்று விட்டே செல்லலாம் என்று முடிவானது.  வரலாற்றில் என் பெயர்(ஆரம்பத்திலிருந்தே) பதிவானது.  4சீட்டர் காரில் இங்கிருந்து ஹம்பி சென்று, சில இடங்களை சுற்றிக்காட்டி, இறக்கி விட 4-6 ஆயிரங்கள் வசூலிக்கிறார்கள் லோக்கல் டாக்சிக்காரர்கள்.  ட்ராப் டாக்சிக்காரர்கள் 3-4 ஆயிரங்கள் ட்ராப்பிற்கு மட்டும்.  ஜொர மாத்திரைகளை வாங்கி இன்று காலை, இரவு உணவிற்குப் பின் மனையாளும், பெண்ணும் போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்து கொண்டோம் 2 தினங்களுக்கு.  வீட்டிற்குச் சென்று விட்டால் என் மனைவி எந்த உபாதை, யாருக்கு என்றாலும் நம் பாரம்பரிய உணவு, கஷாயங்களால் அதை ரெண்டே நாளில் பின்னங்கால் பிடரியில் பட தெரித்து ஓடச் செய்து விடுவாள்.  பார்ப்போம் அந்த விளம்பரமெல்லாம் வீட்டுக்குப் போனா தானே.  ரெண்டு நாளா என் மனைவிக்கே நாம இந்தியா தாண்டலைங்கறது மட்டும் தான் நினைவில் இருக்கு.  எந்த ஸ்டேட்ல, எந்த ரூட்ல, எந்த தலத்தில் இப்ப இருக்கோம்னு கேட்டாலே குழப்பம் தான்.  அப்படி தயார் நிலைல கொண்டு வந்து வெச்சிருக்கேன்.  

ரூம் காலி செய்து, நதிக்கரை, மாஞ்சோலையம்மன், மடத்தை மீண்டும் கேமராவில் பிடித்துக்கொண்டு டாக்சியில் ஏறினோம்.  மந்த்ராலயத்தில் டிஃபன், வழியில் லஞ்ச். துங்கபத்ராவின் எதிர்க்கரை கர்நாடகா.  சாலைப் போக்குவரத்து இரும்புப் பாலத்தில் பாதி ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும். ஹம்பி கொரோணா காரணத்தால் வெள்ளி, சனி, ஞாயிறு க்லோஸ்னு முதல்ல சொன்னேல்ல.  அதனால நாம அந்தத் திட்டப்படியே திங்கள் கிழமை இன்று ஹம்பிக்குப் பயணிக்கிறோம்.  இந்த ரூட்ல ஹம்பி என்ட்ரென்ஸ்ல திரும்ப ஒரு துங்கபத்ரா ஆத்துப்பாலம் வருது. அந்த பாலம் தாண்டி லெஃப்ட் போனா 4-6 கி.மீ. ல விஜயவிட்டலன் கோவில், ஹம்பி.  ரைட்டுக்கா போனா 10-12 கி.மீட்டர்ல யானேகொன்டி க்ராமம்.  மாலை அஞ்சு அஞ்சரைக்கெல்லாம் ஹம்பி எல்லா இடங்களும் மூடிட்றாங்க தொல் பொருள் இலாகா.  மணி இப்பவே 4.45 போல.  

விஜய விட்டலன் கோவிலில் தான் சுழலும் சக்கரங்களோடு அமைக்கப் பட்டிருக்கும் கல் தேரில் பெருமாள் சன்னதிக்கு எதிரில் கருடன் இருக்கிறார்.  நம்ம பசங்க சுத்திவிடாம இருக்க, துறையினர் இந்த சக்கரங்கள் சுழலாதிருக்க சிமெண்ட் கலவை வெச்சு தடுத்திருக்காங்க.  மனம் மயங்கும் மாலை வெயில் சாயும் நேரம்.  கோவிலைச் சுற்றி மோட்டார் வாகனங்கள் அனுமதி இல்லை.  பேட்டரி கார்கள் ஏற்பாடு இருக்கு போக வர 80-100ரூ.  300 அடிதூரம் தான் இருக்கும், நடங்கும் போகலாம்.  இந்த கோவில், விரூபாக்ஷர் கோவில், லோட்டஸ் மஹல், ம்யூசியம்னு 3-4 இடங்கள் சேர்த்து நுழைவுக்கட்டணம் 40-60 ரூபாய்.  நாங்க இதத்தவிர வேறெதையும் இன்று பார்க்க முடியாது.  வழியில் நேர்த்தியா விளையாட்டு மைதானத்தோட பெவிலியன் போல கல் மண்டங்களே தொடர்ச்சியா கோவில் நுழைவாயில் கோட்டைக்கு இரு புறத்திலும் நீண்டு இருக்கு.  ஹம்பியோட 4-5 பெரிய பெரிய ராஜா கால கடைவீதி அமைப்புகளில் இதுவும் ஒன்று.  சிதைந்த ராஜ கோபுரம், கட்டுமானங்கள், கூரை இல்லாத அர்த்த மண்டபம் (கர்ப்பக்ரஹத்திற்கு முன் உள்ள அறை), விக்ரஹம் இல்லாத மூலஸ்தானம், 4-5 படிக்கட்டுகளில் இறங்கி பாதாள வழியில் ப்ரதட்சிணம் செய்யும் வழி, ப்ரம்மாண்டம், நுணுக்கம், ஒவ்வொரு சிற்பத்தையும், தூணையும் கோப்புப்படுத்தத் தூண்டுகிறது.


வாலி-சுக்ரீவன் சண்டை செய்த இடம், ருத்ராக்ஷ மண்டபத்தில் காசி விசாலாக்ஷி, விஶ்வநாதர்:  இந்த இடங்கள் ஆனேகொந்தி க்ராமத்திலேயே இருக்கு.  உள்ளூர் மக்களிடம் வழியை மட்டும் விசாரித்துக் கொண்டு நாமே சென்று ஏறி, இறங்கி பார்த்து வரலாம்... இல்லையென்றால் சில பலருக்கு கைடு ஃபீஸ் நூறுகளில் கொடுக்க வேண்டியிருக்கும்.  ராமர் தவம் இருந்த குகை, பாதங்கள், வில், சூலம் அடையாளங்கள் இருக்கின்றன.  நாலு தூண்கள், கூரை கோபுரம்னு முழுதும் ருத்ராக்ஷ மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சன்னதியில் ருத்ராக்ஷ மண்டபத்தில் காசி விசாலாக்ஷி, விஶ்வநாதர்.  இருளப்போகிறது, ஓட்டைகள் வழியாக தரிசனம் செய்து கொண்டோம்.  குளிக்கலாம்னு பாத்தா உள்ளூர்வாசிகள் இருட்டி விட்டது, இறங்க வேண்டாம்னு சொல்றாங்க.  ரொம்ப ஆச்சரியம், நானே சொல் பேச்சு கேட்டு சரி வேண்டாம்னு ராகவேந்த்ரர் ப்ருந்தாவனத்துக்குப் போறோம்.  எங்களுக்குத் தங்குமிடம், சாப்பாடுக்கு, மறுநாள் சுற்றுவதற்கு இடங்களைச் சொல்லி ஐடியா கொடுத்து விட்டு கார் அண்ணா கிளம்பிட்டார் திரும்ப மந்த்ராலயத்துக்கு.  அனுபவத்தில் அவருக்கு நன்றாக தெரியும் நாம இன்னிக்கு இதத் தவிர எதையும் பார்க்க முடியாதுன்னு.

ஆனேகொந்தி ராகவேந்த்ரர் ப்ருந்தாவனம்: இந்த க்ராமத்தில் இப்போது 4-8 ப்ராம்மண குடும்பங்கள் இருக்காங்க.  துங்க பத்ரா வெள்ளம், இடிபாடுகள், வேலை வாய்ப்பு காரணங்களால் மற்ற க்ராமங்கள் போல.  சமூகம், தேசத்தோட ஒன்று பட்ட உயர்வுக்கு ப்ராஹ்மணர்கள் வேதம், துறை சார்ந்த அறிவு, அஹிம்ஸை, ஸத்யம், பொறுமை, எளிமை இவைகளால் ஒளி காட்டி வழி நடத்த வேண்டும்.  இந்த கல்வியாளர்களின் பங்களிப்பே எந்த நாட்டிற்கும் பொக்கிஷம்.  இதனால் மற்றவர்கள் இவர்களைக் காக்க வேண்டும்.  இது எல்லா நாடுகளிலும் இன்றும் பொருந்துகிறது, நடைமுறையில் இருக்கிறது வெவ்வேறு பெயர்களோடு.  இன்று மூலமான வேதத்தை மூடம் என்று தூர வைத்திருக்கிறோம், வெளிநாட்டுக்காரன் போற்றி எடுத்துச் சென்று சாதிக்கிறான்.

இந்த மடத்தில் ஒரு நாளைக்கு 400ரூபாய்க்கு நான் ஏசி டபுள்காட் ரூம், காமன் பாத்ரூம், டாய்லெட், கிணறு வசதிகள்.  1000ரூபாயிலிருந்து வித் அட்டாச்டு நான் ஏசி, ஏசி ரூம்கள், கீஸரோடு கிடைக்கின்றன.  சுத்த சைவ சாப்பாடுக்கு மடத்திற்கு எதிரில், அருகில் என்று முன் கூட்டி சொன்னால் 1-2 மணி நேரத்தில் ஏற்பாடு செய்கிறார்கள்.  ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் 100ரூ கொடுத்தோம்.  மாலைக் குளியல் இரவு 7 மணி போல முடித்து, சந்தியாவந்தனம், சமிதாதானம் செய்து கொண்டு சாப்பிட்டு ஓய்வெடுத்தோம்.  100 ரூபாயிலிருந்து பூஜைகளுக்கு இங்கும், நவ ப்ருந்தாவனத்திற்கும் கைங்கர்யம் செய்து ப்ரசாதம் பெற்றுக் கொள்ளலாம். 


நாள் 6 - ஹம்பி: 6 மணி போல எழுந்து குளியல், பூஜை, ராகவேந்த்ர ப்ருந்தாவனம் தரிசனம் முடித்துக்கொண்டோம்.  காலை 7.30 மணிக்கு விஜய விட்டலன் கோவில் அருகே (தல்வார்கட்டா) நதிக்கரையில் நேற்றே ஒரு ஆட்டோ அண்ணாவை ஏற்பாடு செய்து வைத்தோம்.  அவர் வந்துட்டார்.  நாங்க தங்கியிருந்த மடத்துலேந்து படகுத்துறைக்கு ஒரு 1 கிமீ நடை.  20 ரூபாய் க்ராஸ் பண்ண.  போட் ஏதோ மோட்டார் ரிப்பேர் எதிர்க்கரைலயே இருக்கு.  ஒரு வழியா 8.30 மணி போல இக்கரைக்கு வந்தது.  உள்ளூர்க்காரர்கள் 10-15 கி.மீ சுற்று வழியைக் குறைக்க, நேரம் மிச்சம் பண்ண பைக்-கையும் இந்த போட்லயே ஏத்திட்டு டிப் டாப்பா எதிர்க்கரைலேந்து சொய்ன்னு போறாங்க.  ஆட்டோல ஏறி விரூபாக்ஷர், க்ருஷ்ணன், ரெண்டு பெரிய பெரிய பிள்ளையார்கள்(கடலேகலு, சசிவேகலு கணேசர்கள்), ஹேமகூட க்ரூப் கோவில்கள், பாதாள சிவன்(ப்ரஸன்ன விரூபாக்ஷர்), ஹசரா ராமர், படவி லிங்கம், பெரிய லக்ஷ்மி நரசிம்மர், கோட்டையின் கல் கதவுகள், ராணி புஷ்கரணி, குயின்ஸ் பாத் எல்லாம் பாத்துட்டு ஆனேகொந்திக்கு எதிர்க்கரையில் இறங்கிக் கொண்டோம்.  7.30 மணிலேந்து மதியம் 12.30 வரை, 800ரூபாய் சந்தோஷமாக வாங்கிக் கொண்டார்.  

விரூபாக்ஷர் வெள்ளிக் கவசத்தோடு இருந்தார்.  மூலஸ்தானம் கிட்ட, உள்ளே போயி தரிசனம் பண்ண இலாகாவுக்கு டிக்கெட் காசு 30-50 தரனும்.  வெளிலேந்து அருமையா தெரியறது.  ராஜ குரு ஸ்ரீ வித்யாரண்ய பாரதி ஸ்வாமிகளால் பூஜிக்கப்பட்டவர்.  சிற்பங்கள், சித்திரங்கள், போர்-திருவிழா மேளம்-பேரிகைகள், துர்க்கை சன்னிதி, குளம்.

கோபுரத்துக்கு இடது பக்கம் ஹேமகூட கூட்டுக் கோவில்கள் குன்றுகள் மேலே தெரிகின்றன.  ஏறிச்சென்றால் பார்த்து விட்டு, கடலேகலு பிள்ளையாரை மூலஸ்தானத்திலேயே சென்று ப்ரதக்ஷிணமாக வலம் வந்து தொட்டுப் பார்க்கலாம், அருகே ஒரு மண்டபத்தில் சசிவேகலு பிள்ளையார் இருக்கிறார். அருகில் செல்லாமல் சங்கிலி தடுப்பு வைத்திருக்கிறார்கள்.  பாதாள சிவன் கோவில் (ப்ரஸன்ன விரூபாக்ஷர்) ஒரு 10 படிகள் இறங்கிச் செல்ல வேண்டும். மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மஹா மண்டபம் எல்லாமே ஒரு ஜான் அளவு தண்ணீர் தேங்கி இருக்கிறது.  ஹசரா ராமர் கோவில் சுவர்கள் முழுதும் ராமாயண நிகழ்வுகள், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனனின் கோவில் போல ரத, கஜ, துரக, பதாதிகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.  (தேர், யானை, குதிரை, காலாட்படை - இன்னும் கொஞ்ச நாள்ல இந்த தமிழும் புரில, தமிழ் இல்லன்றுவான் நம்ம பய, தமிழோட சேந்து ஒசந்து வளருங்கடான்னா, அவன் இவன் சொல்றத கேட்டினு, தமிழையும் தரை, பாதாளத்துக்கு இஸ்தினு போறான்).  

படவி லிங்கம் ஆவுடையாரோட 2 ஆள் உசரம், பக்கத்துல இருக்கும் லக்ஷ்மி நரசிம்மர் 3 ஆள் அடி உசரம் இருக்கும். படவி லிங்கத்துக்குக் கீழ ஒரு நீரோட்டம் இருக்கறதால லிங்கத்தை சுத்தி முழங்கால் அளவு தண்ணீர் இருக்கு.  லக்ஷ்மி நரசிம்மர் அற்புதம், ஆனால் பாகங்கள் சிதைக்கப்பட்டு.  இந்த தொல்பொருள் இலாகா துறை இப்ப வந்து சுத்தி சங்கிலி போட்றது, தினம் குப்பையில்லாம (காட்டுக்குள்ள இருக்கா என்ன ? !!) கூட்டி வைப்பது, புல் வளர்க்கறது, டிக்கெட் போட்றதுன்னு பெரும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.


ஆட்டோ அண்ணா இறக்கி விட்ட இடத்தில் இருந்தும் எதிர்க்கரை (ஆனேகுன்டி க்ராமம்)யிலிருந்தும் நவ ப்ருந்தாவனத்து தீவுக்குப் மோட்டர் படகு, தோணியில் போகலாம்.  40-60-80ன்னு வாங்கறாங்க ராசி, இல்ல இங்கி-பிங்க்கி-பாங்க்கி அடிப்படைல.  இந்த உலக ப்ரசித்தி பெற்ற இடத்துல லிஸ்டோட ஆட்டோ, படகு டிக்கெட் ரேட் போட்டு அங்கங்க வெளிப்படையா போர்ட் வைக்கலாம்.  அவங்க கிறுக்கி, சொரண்டி, போஸ்டர் ஒட்டி அழிச்சிப்பாங்க.   நவ ப்ரந்தாவனத்துல நரசிம்மாச்சார்யார் அண்ணா ஒவ்வொரு ப்ரதிஷ்டை, சிலைகள், வரலாறு, தங்க, சாப்பிட வசதி, போக்குவரத்து, பூஜை கைங்கர்ய கட்டண விபரங்கள் எல்லாத்தையும் விளக்கினார்.  நாங்க வரோம், வெயிட் பண்ணுங்கோன்னு கேட்டுண்டதால மதியம் 12.30 வரை அந்த வெயில்ல காத்துக்கொண்டிருந்தார்.  தேன் அபிஷேகத்துக்கு தக்ஷிணை கொடுத்திருந்தோம்.  தீபாராதனை தரிசனம் செய்து ஒன்பது ப்ருந்தாவனங்களையும் ப்ரதக்ஷிணம் செய்து அபிஷேகத் தேன் பெற்றுக்கொண்டோம்.  கொராணாவால் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக இவர்களுக்கும் வருமானம், வசதி இன்றி சிரமம் தான்.  போட் வருவதற்குள் எங்க குட்டிப்பையன் துங்கபத்ராவில் இறங்கி ஒரு கும்மாளம் போட்டான்.  5 நிமிஷத்துல படகுல க்ராமத்துக்கு க்ராஸ் பண்ணும் போது பாத்தா ஒரு முதலை கல்லு மேல ஏறி படுத்திண்டிருக்கு.  ரூமுக்கு வந்தோம், நரசிம்மன் அண்ணா மீதம் விட்ட இடங்களையும் பார்க்க வழி, ஐடியா, ஆட்டோ ஏற்பாடு செய்து கொடுத்தார்.  


2 மணிக்கு சாப்பிட்டு விட்டு 3 மணிக்கு ரூம காலி பண்ணிட்டு ஆட்டோவில் 250ரூபாய்க்கு ஏறி, வழியில் துங்கபத்ரா மேல க்ராஸ் பண்ண பாறாங்கற்களாலேயே தென்னை மரம் உசரத்துல பாலம். யார் உபயமோ, உள்ளூர் வருமானத்துக்கோ தெரியல உடைஞ்சிருக்கு,  தரைப்பாலம் வழியா க்ராஸ் பண்ணி, ஹனுமான் பிறந்த அஞ்சனாத்ரி மலை வழியா விரூபாக்ஷர் கோவிலுக்கு எதிர்க்கரையில் இறங்கினோம்.  போட்ல க்ராஸ் பண்ணி மீண்டும் ஒரு ஆட்டோ 150ரூபாய்க்கு யந்த்ரோத்தாரக ஹனுமான், கோதண்டராமர், சக்ர தீர்த்தப் பாறைகளில் பள்ளி கொண்ட பெருமாள், ராஜ குடும்பங்கள், தசாவதாரங்கள், ஆழ்வார்கள், நரசிம்மர், கோடி லிங்கம் வெயிட்டிங், மீண்டும் பஸ் ஏற விரூபாக்ஷர் கோவில்ல ட்ராப்.

கோதண்டராமர் கோவில்ல சீதா, ராம, லக்ஷ்மணர்கிட்ட கூப்பிய கரங்களோடு சுக்ரீவன். ஆஞ்சனேயர் இங்க இல்ல.  நதியில் வெள்ளம் வந்தால் இந்தக் கோவிலுக்குள் தண்ணீர் வந்துடும்.  இந்த கோவிலுக்கு அருகே மேலே ஏறிச்சென்றால், ஆறுமுக சக்ரத்துக்குள் மத்வ சம்ப்ரதாய ஆசார்யரால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட யந்த்ரோத்தாரக ஹனுமானை தரிசிக்கலாம்.  இந்த இடத்தில் நதியின் போக்கு சுற்றிச்செல்வதால் சக்ர தீர்த்தம் என்று அழைக்கிறார்கள்.  பரிசல்ல கோடி தீர்த்தம் காமிச்சிட்டு கீழ இறங்காம திரும்பி வர தலைக்கு 800 ரூபாய் கேட்டாங்க.  பேரம் பேச எல்லாம் தயாரா இல்ல அவங்க.  மாலை 5 மணி.  வெளிச்சம் கொஞ்சம் இருக்கு.  நடந்து பாறை, மலைகளில் ஏறி பார்த்து விடுவது, வழி இருக்கு என்று தெரிந்து கொண்டு கெளம்பிட்டோம், ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டே.  எதிரில் வந்தவர்கள், ஆடு மேய்க்கும் அம்மாவிடம் கேட்டுக்கொண்டே கடினமான பாறைகளில் ஏற்றி, இறக்கி சக்ர தீர்த்தப் பாறைகளில் பள்ளி கொண்ட பெருமாள், ராஜ குடும்பங்கள், தசாவதாரங்கள், ஆழ்வார்கள், நரசிம்மர், கோடி லிங்கம் என அதிசயங்களை, ரகசியங்களைக் கண்டு பிடித்து, அபாயமான நேரம், மலை, முதலை இருக்கும் நதியின் ஓட்டத்துக்கு நடுவே கண்டு கொண்டோம்.  சாதனைகளை கேமராவில் பிடித்துக்கொண்டோம்.  போன வழி, வந்த வழி ரெண்டும் வேறு.  ரெண்டு வழியிலும் மறைந்து மறைந்து அற்புதங்கள்.  திரும்ப கோதண்டராமர் கோவிலுக்குத் திரும்பிய போது 6.30 மணி.  எதிர்பாராத ஒன்னரை மணி நேர ட்ரெக்கிங்.  டயர்டு... மொத்தமா 400 ரூபாய்க்குன்னு ஒப்புக்கொண்டு ஆட்டோ பையன் ஹோஸ்பேட் ரயில்வே ஜங்க்ஷன்ல கொண்டு வந்து விட்டார்.  


மஹாபலிபுரம் தோற்கும்... எங்க பாத்தாலும் நடக்க இடம் விட்டு, குவியல் குவியலா, மலை மலையா பெரிய பெரிய கற்கள், பாறைகள், செதுக்கல்கள், சிற்பங்கள், சித்திரங்கள்.  காஞ்சிபுரத்துல 108 பெருமாள், சிவன் கோவில்கள் முடிக்கப்பட்டு, பூஜையில் இருக்கு, அதுக்கு போட்டி ப்ளானா ? என்ன திட்டத்துல இருந்திருப்பாங்கன்னு தெரியல.  இது மட்டும் சாம்ராஜ்யத்தோட கனவுப்படி முடிஞ்சிருந்தா... ? மஹாபலிபுரத்துல இருக்கற 2-3 இடத்த பார்க்கவே டிக்கெட்.  இங்க பரவாயில்ல... டிக்கெட் போட முடியலியா, என்ன காரணம்னு தெரியல. விஜய விட்டலன் கிட்ட சொல்லியிருந்த டிக்கெட் தவிர வேறெங்கும் டிக்கெட் இல்ல.

விஜய விட்டலன் தவிர மற்ற எல்லா இடங்களும் விரூபாக்ஷர் கோவிலுக்கு அருகருகேயே இருக்கின்றன.  பஸ்ஸில் வந்து இறங்கினால் ஒரு கைடும் 1000 கணக்கில் தேவையில்லை இந்த டாகுமென்ட் படிச்சிட்டா.  ஆட்டோ மட்டும் 1000-2000ரூ. உங்க-அவங்க சாமர்த்தியத்தைப் பொறுத்து புடிச்சிட்டா அதிக பட்சம் ஒரு நாள், காலை ஒரு 7-8 மணிலேந்து மாலை 5 மணிக்குள்ள இந்த எல்லா இடங்களையும் பொறுமையா, ஈஸியா இளநீர், கரும்பு ஜூஸ், சாப்பாடு, டிஃபனோட பார்த்திடலாம் வயசானவங்களும்.  ஏற்கனவே வந்த டீம், இல்ல வாய்ல இருக்கு வழி, விசாரிச்சு விசாரிச்சுப் போயிப்போம்னா டூவீலர், சைக்கிள் வாடகைக்குக் கிடைக்கிறது.  இந்த கூகுள் மேப் எல்லாம் கொஞ்சம் சிக்னல் கஷ்டம். ரெண்டு நாள் தங்கினா விஜய விட்டலன், நவ ப்ருந்தாவனம், அது இதுன்னு மொத்த இடத்தையும் ஒன்னு விடாம நிம்மதியா பாத்திடலாம்.  இன்னும் நீங்க எங்கயாவது காணாப் போயி, ரூட் மாறி கண்டுபிடிச்சு நெட்ல போட்டீங்கன்னா அதையும் கைடு, வெப்சைட் காரங்க ஹம்பி பார்க்க வேண்டிய இடங்கள் லிஸ்ட்ல சேத்துப் போட்டுப்பாங்க.  லோட்டஸ் மஹல், ம்யூசியம்லாம் போகல இதயெல்லாம் தாண்டி அங்க என்ன புதுசா இருக்கும்னு.

விரூபாட்சர், கோதண்டராமர்னு 2-3 இடங்கள் தவிர எங்கும் பூஜை, எண்ணெய் தீபங்கள் கூட கிடையாது.  கோவில்களைத் தேடிச்சென்று தரிசிக்க இந்த ஹம்பியை நிச்சயம் சிபாரிசு செய்ய முடியாது.  நான் ஒரு பழமை வெறியன், ராஜ பரம்பரையின் படைப்புகளைப் பார்ப்பதில் பெரும் ஈடுபாடு கொண்டவன் என்பவனும் இங்கு ஒரு முறை வந்தால், விஜய நகரத்தின் தலைநகரம் எப்படியெல்லாம் வெறித்தனமாக, அர்ப்பணிப்பு உணர்வோடு, கனவுகளோடு எழுப்பட்டிருக்கிறது என்பதை நிச்சயம் கண்டு ப்ரமிக்கலாம்.   ஆனால் வேதனையும், ஆக்ரமிப்பாளர்கள் மீதான கோபமும், இழந்த படைப்புகள், பெருமைகள், நிலையாமையின் பயமும் நிச்சயம் கூட சேர்ந்து கொள்ளும்.  ஃபோட்டோ, வீடியோக்களாக ஆவணப்படுத்திக் கொள்ளலாம்.  

வெறும் சுயநலம் அதுவும் சொந்தங்கள், பெற்றோர்களைக் கூட விட்டு விட்டு தனித்தனிக் குடும்பம் என்று காசுக்காக சிதைப்பட்டிருக்கும் வாழ்வில், நடைமுறையில்........ குடும்பம், சமூகம், பணி சார்ந்த துறை, தேசம் எங்கும் ஒரு சிறு அடையாளத்தைக் கூட விட்டுச்செல்ல முடியாத பெரும்பாலான கையாலாகாத வெட்டி வேந்தர்களான நமக்கு முன்னோர்களின் இந்த படைப்புகள் ஒவ்வொன்றும் பெரும் பெரும் பாதிப்புகளை மனதளவில், உணர்வில் சுயநினைவை, சொரணையை இன்றும் நிச்சயம் தட்டி எழுப்பும். அன்னாந்து பார்க்க முடியாத உயரத்தில் இருக்கும் எல்லையில்லாத பங்களிப்புகள், வாழ்க்கை முறைகள் அவமானத்தையும், திருந்தி அர்த்தமுள்ள ஒரு வாழ்வை ஏற்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பையும் நிச்சயம் ஏற்படுத்தும்.

ராத்ரி 7 மணி... ப்ளாட்ஃபார்ம் ஸ்டால்லயே தோசை, இட்லி சாப்பிட்டு மாத்திரை போடுபவர்கள் போட்டுக்கொண்டார்கள்.  இருந்த குழாய்ல குடிநீர் பிடித்துக்கொண்டோம்.  8.30 மணிக்கு பெங்களூர் யஶ்வந்த்பூருக்கு ஸ்லீப்பர் பெர்த்.  மொழி தெரியல, ட்ரைன் அனுபவம் அதிகம் இல்ல ப்ளான் பண்ணி போற பழக்கம் இல்லாததால. இங்க்லீஷ்ல இருந்தாலும் ரெண்டு, மூனு பேர் கிட்ட உறுதி படுத்திக்கொண்டோம் ஸ்டேஷனுக்கு வந்ததுலேந்தே.  காலை 7.30 மணிக்குத்தான் போகும், நிம்மதியா இப்போதைக்கு 10 மணி நேரமெல்லாம் படுத்ததில்ல, தூங்கினதில்லன்னு பாத்தா, லைட் அணையவே இல்ல எங்க பெர்த் கிட்ட.  

ஸ்விட்ச் வொர்க் ஆகலன்னு எதோ புதுசு புதுசா மெசேஜ், வாட்ஸப், ஃபோனெல்லாம் பண்ண ரயில்வே மினிஸ்ட்ரி ஏற்பாடு பண்ணி, அறிவிச்சிருக்கேன்னு பாத்ரூம் கிட்ட ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்ல போய் நம்பர், வழிமுறைகள் படிக்கலாம்னு பாத்தா... தொடர்ந்து அஞ்சு ஆறு பொட்டில நானும் போயி பாக்கறேன்.  கிறுக்கி, அழிச்சு, கிழிச்சு வெச்சிருக்காங்க.  மேலே ஆள்றவன், பிரதமர், மந்திரி, அமைச்சகம் என்ன உதவி பண்ணலாம்னு நினைச்சாலும் யூனியன் மெம்பர் இருக்கற வரை... திட்டங்கள் வெற்றியடைவது கேள்விக்குறிதான்.  5-10 நிமிஷம் டி.டி.யார் அங்க இங்க போனார்., பொட்டியோட மெயின் பாக்ஸ தொறந்து அவரே ஒவ்வொன்னா அணைச்சுப் பாத்து... சபாஷ்... வெற்றி.  நன்றிகள்.   சரியான நேரத்தில் கெளம்பின வண்டி காலை 9.30 மணிக்கு ரெண்டு மணி நேரம் தாமதமா வந்து சேர்ந்தது.  பஸ் நம்பர் இன்னும் தெரிஞ்சி வெச்சிக்கல... 4 நாள் லீவு வேற போட்டாச்சு ஆஃபீஸ், ஸ்கூலுக்கு... இப்ப கொஞ்சம் ஜொரம் பரவால்ல... ஆட்டோல 380ரூபாய்க்கு வீடு வந்து சேர்ந்தோம்.  

குறைஞ்சது நாளு நாளைக்கு போட்டத சாப்டனும், ஒரு வேளை கபசுரக் குடிநீர் இல்லாட்டி நிலவேம்புக் குடிநீர் அரை டம்ப்ளர்.  வெத்தலை, தோலோடு நறுக்கின எலுமிச்சை, மிளகு, ஜீரகம், சமையல் மஞ்சள் பொடி, கல் உப்பு போட்டு கஷாயம் இன்னொரு வேளை.  கல் உப்பு, சமையல் மஞ்சள் தூள் ஆவி புடிக்கறது, மஹாசுதர்சனம் மாத்திரை, பருப்பு, கீரை சமையல், வீட்ட விட்டு வெளில போகக்கூடாதுன்னு மந்திரி உத்தரவு, உதவிப்படி. 5 நாள்... இதோ எல்லாரும் நார்மல்.  மீண்டும் சந்திப்போம்.

No comments: