Jan 2, 2019

நிர்மிதாவின் சாகஸப் பயணங்கள் - தெலுங்கு தேச யாத்திரை

நிர்மிதாவின் சாகஸப் பயணங்கள் - தெலுங்கு தேச யாத்திரை

26டிசம்பர்2018, புதன் கிழமை... நேத்திக்கு காலை 2.30 மணிக்கு தான் வீட்டுக்கு வந்தோம், ஒரு நாள் ரெஸ்ட், இன்னிக்கு துணிகளையெல்லாம் தோச்சி போட்டு அடுத்த ப்ளான் ரெடி... சரியான சண்டை. இப்டி டூர் டூர் போயிட்டே இருந்தா உடம்பு ரொம்ப வலிக்குது,  குழந்தைகள் என்ன ஆகறது.  ஸ்கூல் ஹோம் வொர்க், வீட்டு வேலையெல்லாம் அப்டியே இருக்கு, ரெஸ்ட் எடுக்க டூர் கூட்டிட்டுப் போக சொன்னா, போய்ட்டு வந்து நாலு நாள் ரெஸ்ட் எடுக்கறாப்ல கூட்டிட்டு போறீங்க...அப்டி இப்டின்னு ஒரே புகார், அட்வைஸ், திட்டு...

சிவன்: பல்வேறு தொழில்களிலிருந்து 63 நாயன்மார்கள், சரியை, கிரியை, ஞானம், யோக வழிகளைக் காட்டிய நால்வர் பாடல் பெற்றவை, ஜோதிர் லிங்கங்கள், மோக்ஷ லிங்கங்கள்னு தலங்கள், சங்கரர் விஜயம் செய்தவை
பெருமாள்: 108 திவ்ய தேசங்கள், ஆழ்வார்கள் தலங்கள்
அம்பாள்: சக்தி பீடங்கள்
முருகன்: ஸ்கந்த புராணத்தில் வரும் தலங்கள்
தவிர இதிஹாஸ, புராணங்களில் வரும் தீர்த்த நதி தலங்கள், வரலாற்று பொக்கிஷங்கள்

இதுல நாம எந்த ஒரு லிஸ்ட்ல இன்ட்ரெஸ்ட் காமிச்சாலும் இந்தியா முழுக்க பாத்திட்டு வந்திடுவோம்.    அவ்வளவு புண்ய பூமி நம் தேசம்... பல நூறு பாஷைகள், உணவு, உடை, சீதோஷ்ண வித்யாசங்கள் எல்லாத்தையும் தாண்டி நம் ஒவ்வொருவரையும் பணக்காரன், உழைப்பாளி, படிச்சவன், பாமரன்னு இல்லாம ஒன்றிணைக்கும் நாடு நம் நாடு.   புண்யம் செய்தவனே இவைகளை தரிசனம் செய்ய முடியும், மக்களுக்கு பாகுபாடின்றி சேவகம் செய்ய முடியும் என்பது என் கருத்து....

கடைசில என் தரப்பு கருணையால் வென்றது.  பவானி அனுமதியளித்தாள், உடன் புறப்பட்டாள்.   வேலும், மயிலும் கூடவே.. இரவு 9.15 க்கு சென்னை சோழிங்கநல்லூரிலிருந்து விஜயவாடாவுக்கு YBM ஏசி ஸ்லீப்பர் பஸ்.  சூப்பரா இருந்துது தனித்தனி ஹெட்செட், டிவி, தலையணை, கம்பளி, ஸ்வீட், ஸ்னாக்ஸ், ஜூஸ், ஸ்டடி லைட், ஃபோன் சார்ஜர் வசதிகளோடு, அனைத்தும் வொர்க்கிங் கண்டிஷன்ல... பஸ் ஏறி ரெண்டு தமிழ்ப்படம் பாத்திட்டு காலை 5.30 மணி குளிர்ல விஜயவாடால இறங்கியாச்சு

1. ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர ஸ்வாமி தேவஸ்தானம், விஜயவாடா: சக்தி பீடங்களில் ஒன்று.  அசுரர்களை அழித்த மகிழ்ச்சியில் துர்க்கை இந்த தலத்தில் தங்க மழை பொழிந்து, கீலன் என்ற அசுரனின் தவத்திற்கு இரங்கி, இந்திரகீல முனிவர் வேண்டுகோளின் படி அவரே மலையாக, அவர் ஹ்ருதயத்தில் மகளாக வாசம் செய்கிறாள்.  தேவியின் வெற்றியை இந்த்ராதி தேவர்கள் கொண்டாடிய இடம் என்பதாலும் இந்த மலைக்கு இந்த்ரகீல மலை என்று பெயர்.  அதனாலேயே விஜயபுரி, விஜயவாடா என்ற பெயரும்.  இவளே இந்த ஊரின் காவல் தெய்வம்.  எங்கும் மலைகள் சூழ்ந்து க்ருஷ்ணா நதியின் வெள்ளப்பெருக்கு க்ராமங்களை அவ்வப்போது அழித்து வந்தது.  பக்தர்களின் பெரும் கோரிக்கையை ஏற்று பரமேஶ்வரன் இந்த மலைகளில் குகை, தெலுங்கில் பெஜ்ஜம் ஏற்படுத்தி வெள்ள அபாயத்திலிருந்து காத்ததால் பெஜ்ஜவாடா,  மலை முழுதும் மூலிகைகள் நிறைந்திருந்ததால் பீஜபுரி என்ற புராணப்பெயர்களும் உண்டு.   கோவில் அடிவாரத்திலேயே க்ருஷ்ணா நதியில் ஆந்த்ராவின் முதல் முதலமைச்சர் திரு. ப்ரகாசம் பெயரால் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.  தேவி விஜயதசமி அன்று க்ருஷ்ணா நதியில் படகில் அருள்கிறாள்.  பெரும் கொண்டாட்டம்.  காலை 5.30 மணிக்கு நதியில் நீராடி, கோவிலுக்கு சென்றோம்.  உள்ளூர் ஆட்கள் இது புண்ய நதி, பல் தேய்க்காதீர்கள், துணி தோய்க்காதீர்கள் என்று உரிமையோடு தடுத்துரைக்கிறார்கள்.  ஆணவம் அழிவதைக் குறிக்கும் பொருட்டு முடியிறக்குகிறோம் அல்லவா? அதற்கான மண்டபம், பாத்ரூம் நதிக்கரையில் உள்ளது.  ரயில் நிலையம், பேருந்து நிலையம், க்ருஷ்ணா படித்துறை, கோவில்களை இணைக்க இலவச பஸ் வசதி, ஷேர் ஆட்டோ (சர்வீஸ் ஆட்டோன்னு சொல்றாங்க இங்க).  இலவச செப்பல் ஸ்டாண்டு, பொருள்கள் காப்பகத்துல எல்லாத்தையும் வெச்சி டோக்கன் வாங்கிட்டு, தர்ம தரிசன டோக்கன் வாங்கி நுழைந்தோம்.  260 படிக்கட்டுகள்.  ஈசியா ஏறலாம்.  க்யூல அதிக கும்பல் இல்ல,  30-40 நிமிடங்களில் அருமையான தரிசனம்.  அன்னையின் உக்ரம் அடங்க ஸ்ரீ சக்ர ப்ரதிஷ்டையும் ஆதி சங்கரர் இங்கு செய்துள்ளார்.  அகஸ்த்யர், பாண்டவர்கள் பூஜித்துள்ளனர்.  5 ரூபாய்க்கு சூப்பர் புளிசாதம், 15 ரூபாய்க்கு சூப்பர் லட்டு நெய், ட்ரை ஃப்ரூட் போட்டு.  இலவச பாத்ரூம், குடிநீர் வசதிகள். 





2. உண்டவல்லி குகைகள், விஜயவாடா: கனகதுர்கா கோவில் எதிரில் ப்ரகாசம் தடுப்பணைலேந்து ஆட்டோல பயணம் செய்து இந்த இடத்தை அடைந்தோம்.   4-5ஆம் நூற்றாண்டுகளில் மலையை குடைந்து நாலு ஃப்ளோருக்கு கோவில்கள் செதுக்கியிருக்காங்க.  தொல் பொருள் இலாகா கன்ட்ரோல்ல இருக்கு.  பௌத்த, வைஷ்ணவ சிலைகள் 12 ஆழ்வார்கள், தசாவதாரம், ஜய விஜயர்கள் என்ற வைகுண்டத்து காவலர்கள், கருடன், ஹனுமான், பிள்ளையாரோடு, 20 அடி நீளத்துக்கு நல்லா புஷ்டியா பாம்பு படுக்கையில் பள்ளி கொண்ட பெருமாள்.  நான் தொட்டு, கட்டிப்புடிச்சி, காலில் பணிந்து பூஜித்த முதல் பெருமாள்.  இங்கிருந்து மங்களகிரி பானக நரசிம்மர் கோவிலுக்குச் செல்ல 25 கி.மீட்டர்களுக்குக் குகை உள்ளது.   பாதுகாப்பு கருதி மூடப்பட்டுவிட்டது.  மஹாபலியின் மகன் நமுசி என்ற அசுரனை அழித்த அந்த பெருமாள் உக்ரம் தணிய இன்றும் பானகத்தை சட்டி, சட்டியாக அவர் வாயில் ஊற்றுகிறார்கள்.  மடக் மடக் சத்தத்தோடு பானகம் போன இடம் தெரியவில்லை.  எங்கும் பானகம், தேங்காய் மூடிகள் இருந்தும் ஈ, எறும்புகள் இல்லை இந்த கோவிலில்.  பூமி வெடிப்பு, எரிமலை ஏற்பட்டு விடாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்திருக்கலாம் என்பது அறிவியலாளர்கள் கருத்து.  இங்கிருந்து பேருந்தில் ஸ்ரீ சைலம் சென்றோம்.  எல்லா இடத்துலயும் ஃபோட்டோ எடுத்திண்டோம் வரலாறு மிக முக்கியம்.    பவானி தீவுன்னு ஒன்னு இருக்கு வாட்டர் ஸ்போர்ட்ஸ், அட்வென்ச்சர் ஆக்டிவிடீஸோட... நாங்க அது எல்லா ஊர்லயும் இருக்கேன்னு போகல.  






3. ஸ்ரீ சைலம்: ஸ்கந்த புராணத்துல பல சாப்டர்கள் இந்த தலத்து பெருமையை பத்தி வருது.  தெய்வானையோடு முருகன் இருந்த தலம்.  சூரசம்ஹாரத்துக்கு முன் சிவபூஜை செய்த தலம்.  பன்னிரு ஜோதிர் லிங்கங்களில் ஒன்று.  க்ருஷ்ணா நதி பாதாள கங்கையாக 700 படிகளுக்கு கீழே ஓடுகிறது.  ஸ்ரீசைலம் டேம்.    சமயக்குரவர் மூவராலும் பாடல் பெற்ற ஆந்த்ர தேசத்து தலம் (திருப்பருப்பதம்).    வீரசிவாஜி அன்னையிடம் வாள் பெற்ற இடம்.    மருதமரம் (அர்ஜுன மரம்) ஸ்தல வ்ருக்ஷமாக உள்ள தலங்களில் மூன்று விசேஷம்.  அதில் இந்த மல்லிகார்ஜுனம் முதல், இடையில் உள்ளது திருவிடைமருதூர் - கும்பகோணம், கடைசி திருப்புடைமருதூர் - திருநெல்வேலி.    சிவனை மட்டுமே வழிபடுவேன் என்று ஒரு முனிவர் அன்னையுடன் சேர்ந்து இருந்த போதும், வண்டு (ப்ருங்கி) உருவெடுத்து சிவனை மட்டும் வலம் வந்தார்.  அவர் சக்தியை முழுதும் சினந்து க்ரஹித்து கொண்ட அன்னை மீண்டும் தவத்தால் மகிழ்ந்து அருளிய தலம்.   அன்னை ப்ரமராம்பிகை.  அன்னையின் ப்ரகாரம் முழுதும் பெண் தேவதைகள் மட்டுமே பரிவாரங்களாக யானை, குதிரை, தேர், காலாட்படைகளாக செதுக்கப்பட்டிருக்கின்றனர்.  இவர் பெயராலேயே சென்னை ப்ருங்கிமலை அழைக்கப்படுகிறது (இப்போதைய பரங்கிமலை).  பக்தர்கள் அனைவரும் கர்ப்பக்ரஹம் வரை சென்று மூலவரை தொட்டு பூஜை செய்யலாம்.  நாங்களும் செய்து சிலிர்த்து, பேறு பெற்றோம்.    தங்குவதற்கு வசதியான தேவஸ்தான ரூம்கள் ஆன்லைன் முன்பதிவு வசதியோடு உள்ளன.








4.  அக்கமாதேவி குகைகள்:  ஸ்ரீசைலம் பாதாள கங்கையில் குளிக்க 700 படிகளிலும் இறங்கலாம்.  எங்கள மாதிரி முடியாத சோம்பேறிகள் ரோப் கார்ல இறங்கி, அப்றம் ஒரு 100 படிகள் இறங்கி குளிக்கலாம்.  இங்கயிருந்து 16 கி.மீ தொலைவு 800 அடிகள் ஆழம் கொண்ட க்ருஷ்ணா நதியில் போட்ல பயணம் செஞ்சா அக்கமாதேவி குகைகளை அடையலாம்.   செல்ஃபோன் சிக்னல் எடுக்காது.  வீரசைவ மரபைச் சேர்ந்த இந்த மஹாதேவி கர்னாடகா மாநிலத்து சிமோகாவில் பிறந்து, ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரையே கணவனாக பாவித்தவர்.  நூற்றுக்கணக்கான பாடல்களை எளிதில் புரிந்து கொள்ளும் வசன நடையில் அருளியவர்.    பசவண்ணர் முதலானோர் கூடியிருந்த சபையில் பதில்களால் அதிசயிக்கச்செய்து ஏற்கப்பட்ட இவர் நிர்வாண நிலையை அடையும் போது இயல்பால் கலங்கியபோது, தாயுமானவனால் உடலெங்கும் மயிர்க்கற்றைகள் வளர அருளப்பெற்றவர்.  வீரசைவ சம்பிரதாயத்தில் அக்கா என்றால் அது அக்க மகாதேவியையே குறிக்கும்.  இந்த குகைகளில் தவம் செய்து 25 வயதளவில் 7 கி.மீ தொலைவிலுள்ள தத்தாத்திரேயர் தவமிருந்து முக்தி பெற்ற கதலிவனம் சென்று தவம் புரிந்து மல்லிகார்ஜுனரோடு ஐக்கியமானாள்.

70 அடிகள் குகைக்குள்ளே செல்ல வேண்டியுள்ளது.  ஸ்ரீசைலம் க்ருஷ்ணா (பாதாள கங்கை) படித்துறையிலிருந்து 1 மணி சுமார் போட் பயணம் செய்து இந்த இடத்தை அடைந்து 5 நிமிடங்கள் மலையில் நடந்து இந்த இடத்தை அடைந்தோம்.  இங்கு ஒரு கடை கூட கிடையாது,  குகைக்குள்ளே ஒரே கும்மிருட்டு.  ஒருவர் தான் ஒரு சமயத்தில் சென்று வர முடியும், கடைசி 30 அடிகள் குனிந்து செல்ல வேண்டும்.  குகையின் மேல் புறத்தில் லைட் அடித்தால் வௌவால்கள் மொத்தமாக கிளம்பி விடும்.  ஊதுபத்தி சாம்பல் போன்ற மணலில் கால் புதைக்க, மணல் தூசுகள் பறக்க நுழைந்து செல் ஃபோன் டார்ச் லைட் வெளிச்சத்தில் உள்ளே சென்று ஒரு ஜான் உயரம் கொண்ட ஸ்வயம்பூ லிங்கத்தை தரிசிக்கிறோம்.  அதன் மேலே சொட்டு சொட்டாக நீர் விழுந்து கொண்டிருக்கிறது இயற்கையின் அதிசயம், இறைவன் இஷ்டம்.  அவனருளாள் அவன் தாள் வணங்கி திரும்பினோம்.     போட், ரோப் கார் கட்டணம் 400 ரூபாய் ஒருவருக்கு. குழந்தைகளுக்கு 200 ரூபாய். 





காலைல தூங்கிட்டதால ஸ்வாமி தரிசனம் செய்யல.  அக்கமா தேவி குகைக்கு காலை 10 மணி டீம்ல போய்ட்டு மூணு மணிக்கு திரும்பினோம்.  பாதாள கங்கையில் மீன்களோடு போட்டி போட்டு குளித்து மதிய உணவு முடித்து 5.30 மணிக்கு 5ரூபாய்க்கு செப்பல், பேக், ஃபோன் டெபாசிட் பண்ணிட்டு தர்ம தரிசன ரூம்ல போய் சேந்தோம்.  ஸ்வாமி, அம்பாள் தரிசனம் முடிந்து வெளியேறின போது இரவு மணி 7. 30.  8 மணிக்கு ஹைதராபாதுக்கு கடைசி பஸ்.  அதுக்கு மேல ஃபாரஸ்ட் டிபார்மெண்ட் அனுமதி இல்லையாம்.  முப்பதே நிமிடங்களில் கோவில்லேந்து ரூமுக்கு போய் காலி பண்ணிட்டு வந்து பஸ் ஏறினோம். 

5. ஹைதராபாத்: விடிகாலை 2.30 மணிக்கு இறங்கி, 4.30 மணி வரை ரூம் தேடினோம்.  கடைசியா 2000 ரூபாய்க்கு ஒரு டொக்கு ரூம் தான் கிடைச்சிது  ஹேப்பி ந்யூ இயர் உபயம்.  எல்லா ஹோட்டலும் ஃபுல்.  11 மணிக்கு கிளம்பி ஹைதராபாத், செகந்த்ராபாத்துக்கு நடுவில் கடலோட பேக் வாட்டர்ல ஹுசைன் சாகர் ஏரில நிறுவப்பட்டிருக்கும் ஒரே கல்லினாலான 18 மீட்டர் (60 அடிகள்) உயரம் கொண்ட புத்தர் சிலைய லும்பினி பார்க்லேந்து போட்டுல போய் மேல ஏறி சுத்திப் பாத்தோம்.   ஆந்திர முதல்வர் என்.டி.ஆரால் நம்மூரு கணபதி ஸ்தபதியோட மேற்பார்வையில் 350 டன் எடை கொண்டது இந்த சிலை.   தலாய்லாமா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.   நாகார்ஜுன சாகர் அணை கட்டும்போதும் ஏறத்தாழ 50 கோவில்களை அப்படியே பழமை மாறாமல் பிரித்தெடுத்து பத்திரமாக வேறு இடத்தில் மீண்டும் உருவாக்கிக் கொடுத்தவர் இந்த ஸ்தபதி.  நம் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.   கன்யாகுமரியில் வள்ளுவர் சிலை வடிவமைத்த பேறு பெற்ற கணபதி ஸ்தபதி வேறொருவர். 

6. சார்மினார் ஷாப்பிங், அங்கிருக்கும் சிவன், பாக்யலக்ஷ்மி கோவில்கள், புறாக்கள் பறக்கும் மசூதிகளை பார்த்து விட்டு, ஹரே க்ருஷ்ணா இஸ்கான் கோவிலும் தரிசனம் செய்து, இலவச ப்ரசாதம் உண்டு இரவு 10 மணிக்கு பத்ராசலம் புறப்பட்டோம். 

7.  பத்ராசலம்:  சீதையை மடியில் வைத்து அமர்ந்த கோலத்தில் சங்கு, சக்ரம், கோதண்டமும், அருகில் தயாராக இராமானுஜனோடும் எழுந்தருளியுள்ளார் ராமதாஸருக்கு அருளிய ராமன்.  கோதாவரி நதிக்கரையில் உள்ளது.    கோபண்ணா (ராமதாசர்) அரசுப்பணியில் இருந்த போது கருவூலப்பணத்தை கொண்டு இந்த கோவிலைக் கட்டியதால் கோல்கொண்டாவில் சுல்தானால் சிறை வைக்கப்பட்டார்.    இவருக்காக ராமோஜி, லக்ஷ்மோஜி என்ற பெயரோடு சுல்தானிடம் வந்து ஆறு லட்சம் மொஹர்களையும் திரும்பச்செலுத்து ரசீதை கொண்டு போய் ராமதாசரின் தலையணைக்கடியில் வைத்து மறைந்தார்கள் ராம, லக்ஷ்மணர்கள்.  மறுநாள் உண்மை உணர்ந்த சுல்தான் ராமதாசரை விடுவித்து கோவில் பணிகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டான்.   இன்றும் கூட ஆந்திர அரசு இராம நவமியன்று முத்துக்களை அளிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது.

பத்ராசலம், அதனருகில் உள்ள பர்ணசாலா போன்ற கோவில்களில் நாம் கேமரா கொண்டு செல்ல அனுமதி இல்லை.  கோவிலுக்குள்ளேயே எக்சிபிசன் மாதிரி செட்டிங்க்ஸ் போட்டு அவங்க ஆளுங்க உடனடி ஃபோட்டோ ப்ரிண்ட் எடுத்து கொடுத்து காசு பார்க்கிறார்கள்.  கோதாவரியிலும் உள்ளூர்வாசிகள் நாம் துணி அலசுவது போன்றவை செய்தால் வருந்தி, வேண்டுகிறார்கள்.  இந்த டூர் முழுதும் ஆந்த்ரா, தெலுங்கானா உள்ளூர் ப்ரதேசங்கள்.  சுத்தமான தெலுங்கு, அவங்களுக்கு நாம சொல்றத எதுவும் தெரியல.  நமக்கு அவங்க சொல்றது தெரியல.  தமிலன் பரம்பரைன்னு சொல்லி ஹிந்தியும் நம்கி தெர்லே.  ரொம்ப கஷ்டம் இப்டி இருந்தா. 

பத்ராசலத்திலிருந்து விஜயவாடா 5-6 மணி நேரம் பேருந்தில் பயணித்து, இரவு 10 மணி YBM ஸ்லீப்பர் பஸ்ஸில் தூங்கி, 31 டிசம்பர் 2018, திங்கள் காலை 6 மணிக்கு வீடு சேர்ந்தோம். 


நிர்மிதாவின் சாகசப்பயணங்கள் - கொங்கு தேச யாத்திரை

நிர்மிதாவின் சாகசப்பயணங்கள் - கொங்கு தேச யாத்திரை

22 திசம்பர் 2018, சனிக்கிழமை...இங்க்லீஷ் மாசங்கள யூஸ் பண்ணுவோம்... ஆனா அத இப்டி தமிழ்ல திசம்பர்னு எழுதுவோம்...வி ஆர் டமிலியன்ஸ்.  இந்த சத்யமங்கலக் காடுகள்ல சந்தன மரங்கள் விசேஷம்.  அதனால பணம் பண்றவங்களும், அவங்களால வீரப்பனும் விசேஷம்.  நார்மல் சந்தனம், செஞ்சந்தனம் பூஜைகளுக்கு விசேஷம் தோன்றின காலத்திலிருந்து.  அப்டி கொஞ்சம் செஞ்சந்தனக்கட்டைகள் நேர்ல போனா கிடைக்குமான்னு இப்ப நா அந்த ஊருக்குப் போறது தான் விசேஷம்.  போன டூர்ல உடுப்பில விரல்கட்டை அளவுக்கு செஞ்சந்தனம்னு ஒன்ன வாங்கிண்டு வந்து அப்பா கிட்ட ஏமாந்திட்டன்னு திட்டு வாங்கினது தான் மிச்சம்.  அதனால செஞ்சந்தனம் பத்தி வனத்துறை அதிகாரிகளிடம் ஒரு உண்மை பேட்டி குட்டியா எடுக்களாம்னும் ஐடியா.   சந்தன மரங்கள் நாம வளக்க அனுமதி உண்டு.  ஆனா வெட்டினா அரசு டிப்போல தான் கொடுக்கனும்.  அவங்க தான் ஏலம் விட்டு கமிஷன் போக மிச்சக்காச நமக்குத் தருவாங்க.  அப்டி மூணு டிப்போ தான் நம்ம ஸ்டேட்ல இருக்கு, சேலம், சத்யமங்கலம், திருப்பட்டூர்ல.

அப்றம், கொங்கு நாட்டு பாடல் பெற்ற ஸ்தலங்கள் (அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர்கள் பாடினவை) 5-6 தான் மொத்தமே.  அவினாசி ஏற்கனவே பாத்தாச்சு, அது அருணகிரிநாதர் பாடல் பெற்ற முருகன் ஸ்தலமும் கூட.  கொடுமுடி, திருமுருகன்பூண்டி மற்ற சில.  இதத்தவிர சஷ்டிகவசங்கள் அறுபடை வீடுகள் மேலயும் பாலதேவராய ஸ்வாமிகள் அரங்கேற்றம் செய்த சென்னிமலை முருகன்,   இந்த ஆறு சஷ்டி கவசங்கள்ல திருச்செந்தூர் முருகன் மேல பாடின ஒன்னு தான் நாம தினமும் பாராயணம் செய்யும் ஒன்று,  சூலமங்கலம் சகோதரிகள் பாடி வெளியிட்டது.   அப்றம் சிவவாக்யர் பூஜை செய்த சிவன் மலை முருகன்.  காவிரி மேலாண்மை வாரியப்புகழ் மேட்டூர் டாம்,  பவானி சாகர் டாம் இதெல்லாமும் இந்த தடவை டூர் ப்ளான்ல.

ஆபீசர்கிட்ட பெர்மிஷன் வாங்கியாச்சு, பசங்களுக்கு ஸ்கூல்ல லீவு பெர்மிஷன் வாங்கறது இப்ப ரொம்ப கஷ்டம்.  ரெண்டு பசங்கள்ல ஒருத்தர் பெரிய காலேஜ்ல படிச்சு நெறையா காசு சம்பாதிக்க, அதுக்கு நல்ல ஸ்கூல்ல பளஸ்டூ படிக்க இப்ப நாலாங்க்லாஸ் படிச்சிட்டு இருக்காரு.  இன்னொருத்தரும் அதே தேசிய நோக்கத்தோட எல்.கே.ஜி படிச்சிட்டிருக்காரு.  இப்ப அரையாண்டு லீவு பத்து நாள்.  நானும் க்றிஸ்மஸ், ந்யூ இயர்னு எங்க மொதலாளிங்க லீவுல இருப்பாங்கன்னு லீவு வாங்கியிருக்கேன்.  ஒரு நாள் ட்ரைவர் பேட்டாவுக்கும், லாங் லீவ் ட்ராஃபிக்கும் காரணம் வெச்சி விடிகாலை....1 மணிக்கு கெளம்பறோம்..  வழக்கம் போல ஆஸ்தான ட்ராவல்ஸ் பெருங்களத்தூர் ஃபேமிலி ட்ராவல்ஸ்... இந்த தடவ புது பையன் வினோத் குமாரு இண்டிகா எடுத்திட்டு வந்தார்.

நைட் குளிச்சி சாப்டு வண்டி ஏறினோம்.   ஞாயிறு காலை 9-10 மணிக்கு தான் மேட்டூர் டாம் பாக்க அனுமதி.  நாங்க போகவும் சரியா இருந்துது.  வழில குளிர் தாங்கல ஆம்பூர் பக்கம்லாம்.  சரியான பனி.  20 நிமிஷம் வண்டிய ஓரமா நிறுத்திட்டு தூங்கிட்டு, பாதாம் பால் குடிச்சிட்டு கெளம்பினோம்.

1. மேட்டூர் டாம்: தமிழகத்துக்குள்ள வர்ற காவிரிய தேக்கி வைக்கும் முதல் அணை.  ஸ்டேன்லி என்பவர் மேற்பார்வையில் கட்டப்பட்டபோது இதுதான் ஆசியாவின் மிக உயரமான, பெரிய நீர் தேக்கம்.  2-3 முறை அப்போதைய மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் ப்ரிட்டிஷாரால் கைவிடப்பட்டு, பின்னர் தஞ்சை விவசாயிகள் கோரிக்கையை மைசூர் சமஸ்தானத்து திவான் திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யர் முயற்சியால் அனுமதிக்கடிதம் பெற்று கட்டப்பட்டது.  தண்ணீர் முழுவதும் குறையும் போது வரலாற்று சின்னங்கள் வெளியே தெரிகின்றன.  இப்ப நம்ம பசங்க மேல இருக்கற நம்பிக்கையா என்னன்னு தெரியல.  டாம் மேல போக யாருக்கும் அனுமதி இல்ல.  ஒவ்வொரு கேட்லயும் ஓய்வு ராணுவ அதிகாரிகளா இல்ல பணில இருக்காங்களா தெரியல பாதுகாப்புக்கு, டிக்கெட் செக் பண்றதுக்கு.  தூரத்துலேந்து தேங்கியிருக்கும் தண்ணிய வேடிக்கை பார்க்க ஜெயலலிதா அம்மா காலத்துல ஒரு டவர் கட்டி வெச்சிருக்காங்க 6 மாடிக்கு.  லிஃப்ட் வேல செய்யல.  ஒருத்தருக்கு 5 ரூபா டிக்கெட் படியேறி மேல போய் பாக்க.  என்னத்த பாக்க.  காவிரி குதிச்சி குளிச்சவன இதான் டேம்.  பாத்துக்கோன்னு கைதிகள பாக்க வரும் விருந்தாளிபோல தூரத்துல ஒரு கூண்டுல நிக்க வெச்சி காமிச்சா... ?  கொஞ்சம் பச்சை பசேல்னு வெச்சிருக்காங்க.  தண்ணி வரும் வழில வாய்க்கால்ல இறங்கி குளிக்க படிகள் இருக்கு.  தண்ணி பாசம் பிடிச்ச வாசனை மூக்க தொளைக்குது.  இங்க குளிக்கற திட்டமும் எங்களுக்கு இல்ல.  வரலாற்று பதிவுக்கு கெடைச்ச தடுப்புக்கம்பிகள் வழியா ஃபோட்டோக்கள் எடுத்திட்டு வழியில் ஒரு சின்ன ஹோட்டலில் டிஃபன் சாப்டு, கெளம்பினோம்.

2. கொடிவேரி தடுப்பணை நீர்வீழ்ச்சி: சத்யமங்கலம் டவுன்லேந்து 10 கி.மீ தூரத்துல பவானி ஆத்துல கட்டியிருக்காங்க.  இரண்டு முறை கட்டப்பட்டு மன்னர் திறப்புவிழாவிற்கு வரும்போது அணை வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டு, தானும் தன் குடும்பத்தாரும் வருவதை அன்னை பண்ணாரியம்மனும், நஞ்சுண்டேஶ்வரரும் விரும்பவில்லை போலும், நாங்கள் அங்கு வருவதில்லை இனி என்று மன்னர் கூறியதன் பின் மூன்றாம் முறையாக கட்டப்பட்ட தடுப்பணை இன்று நாம் காண்பது.  வரிப்புலிகள் இருந்ததாலும், கொடிவேலிகள் இருந்ததாலும் வந்த பெயர் மருவி கொடிவேரி என்று ஆகிவிட்டது.   சேற்று மணல் தன்னைத்தானே தூர்வாரிக்கொள்ளும் விதமாக அன்றே கட்டப்பட்டுள்ளது சிறப்பு.  தண்ணி எப்பவும் இருக்கும் போல.  சூப்பரா இருந்தது அரை மணி நேரத்துக்கும் மேல ஆட்டம் போட்டோம் ட்ரைவர் உட்பட.  பாசியில் வழுக்கி அங்கங்க எவனாவது விழுந்திட்டே இருந்தாங்க விழாம இருங்கறது, விழுந்துன்னு விதவிதமா வயசுப்பசங்க பெர்ஃபார்மென்ஸ்.  மாங்கா, அன்னாசி, கைல வாட்ச், மோதிரம் கட்டி விடுவாங்களே ஜவ்வு மிட்டாய், அதெல்லாம் சாப்டுட்டு சத்யமங்கலப்புகழ் ராம விலாஸ் ஹோட்டல்ல லஞ்ச்.  சூப்பரா இருந்துது சுத்தம், சுகாதாரம், சர்வீஸ்காரங்க ட்ரெஸ், சூடு, டேஸ்ட்.  அங்கயே இரவு தங்கவும் விசாரிச்சிட்டு கெளம்பினோம்.  மறுநாள் உள்ளூர் பவானி ஆத்துல குளிக்கலாம்னு.



3. பண்ணாரி மாரியம்மன்: காலைலேந்து இரவு வரை ஓய்வின்றி தரிசனம் தருகிறாள் அன்னை இங்கு.  காட்டுப்பகுதியோட அடிவாரத்துல இருக்கு கோவில்.  தங்க தேவஸ்தான ரூம்செல்லாமும் இருந்துது.  அருமையான தரிசனம்.  பொண்ணு சூப்பரா பாடினான்னு அம்மாள் மாலை ப்ரசாதமா போட்டாங்க.  பெருமையா ப்ரகாரங்கள்ல சுத்தி சுத்தி அதோட ஃபோட்டோ எடுத்திட்டு கெளம்பினோம். 

4. பவானி சாகர் டேம்: சூப்பரா இருக்கு தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணைக்கட்டு.  ஆசியாவின் மிகப்பெரிய மண் அணைக்கட்டு.  பூங்காவும், சிறுவர் விளையாட்டுகளும் பராமரிக்கப்படுகிறது.  இதன் நீர் வற்றும்போது தண்டநாயகன் (சேனாதிபதி) கோட்டை எனும் டணாய்க்கன் கோட்டை தெரியும்.

5. கொங்கு நாட்டு பாடல் பெற்ற தலங்கள்
அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்
திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில்
பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்
கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில்
கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்

இவைகளில் இம்முறை யாத்திரையில் அவினாசியப்பரையும், திருமுருகநாதரையும், மகுடேஶ்வரரையும் தரிசித்தோம்.  அவினாசி (திருப்புக்கொளியூர்) முருகன் அருணகிரிநாதராலும் பாடப்பெற்றவர்.  இந்த தலத்தில் தான் முதலையால் விழுங்கப்பட்ட சிறுவன் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் கட்டளைப்பாடலால் மீண்டும் 6ஆண்டு கால வளர்ச்சியோடு திரும்ப வந்த அதிசயம் நிகழ்ந்தது.

6. திருமுருகன்பூண்டி கற்சிற்பங்களுக்குப் புகழ் பெற்றவை.  ஒரே கல்லில் செதுக்கிய தெய்வச்சிலைகளில் மூக்கில் ஆடும் பில்லாக்கு, மேலும், கீழுமாக நகர்த்திப்பார்க்கும் கைவளையல்கள் என திறமையான வேலைப்பாடுகள் நிறைந்தவை.   முருகப்பெருமானால் வழிபடப்பட்டவர்.  சுந்தரர் இரவு தூங்கும்போது சிவபெருமான் பூதங்களைக் கொண்டு அவர் பொருள்களை களவாடினார்.    காலையில் கூப்பிடு விநாயகரிடம் முறையிட்டப்போது அவர் அருளால் பரமன் இருக்கும் இடத்தை அறிந்து, என் பொருள்களை களவாடப்பட்டிருக்கின்றன. "எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே " என்று உரிமையோடு பாடி வழிபட்டு மீண்டும் தன் பொருள்களை பெற்றுக்கொண்டார் சுந்தரர்.  அவினாசி கோவில் அளவு இங்கு விமர்சையாக கும்பல் இல்லை.  மறுநாள் திருவாதிரை.  இரவு சென்று திருப்பூரில் தங்கி மறுநாள் ஓய்வு.    குழந்தைகளுக்கு பனியன் மெட்டிரியல் ரெடிமேட் ட்ரெஸ்செல்லாம் வாங்கினோம்.

24டிசம்பர் 2018, திங்கள்.
7. சிவன் மலை:  காங்கேயத்துக்கு அருகில் உள்ளது.  அருணகிரிநாதரால் பாடல் பெற்றது.  500 படிகள் கொண்ட மலைக்கு கோவில் பேருந்திலும், நம்ம காரிலும் செல்லலாம்.    சிவவாக்கியரால் வழிபடப்பட்ட முருகன்.  ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து சிவன்மலை முருகன் ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட, அந்த பக்தர் அப் பொருளை இக்கோயிலுக்குக் கொண்டு வருகிறார். அதன் நம்பகத்தன்மைக்காக கடவுள் முன் பூப்போட்டுப் பார்த்து உறுதி செய்யப்பட்ட பின்னர் அப் பொருள் கடவுளின் முன் வைத்துப் பூசைசெய்யப்பட்டு, மக்கள் பார்வைக்காக முன்மண்டபத்திலுள்ள உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படுகிறது. வேறொரு பக்தரின் கனவில் மற்றொரு பொருளுக்கான உத்தரவு வரும்வரை பழைய பொருளே உத்தரவுப் பெட்டியில் நீடிக்கிறது. நடக்கப்போகும் நிகழ்வுகளின் முன்னறிவிப்பாக இப்பொருள்கள் முக்கியத்துவம் பெற்றவவை என்பது பக்தர்களின் நம்பிக்கை.  மூன்று கருக்கருவாள்கள் இருக்கின்றன இந்த பெட்டிக்குள் இப்போது.
8. சென்னிமலை: தேவராய சுவாமிகள் இங்குதான் ஆறுபடை வீடுகளுக்குமான கந்த சஷ்டி கவசங்களை அரங்கேற்றம் செய்தார்.  இத்தலத்தின் குன்றில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த 1300 மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்துள்ளது.  கோவில் பேருந்திலும், நம்ம காரிலும் செல்லலாம்.   கோவிலுக்கு பின்னே பிண்ணாக்கு சித்தர் தவம் செய்த குகை, சமாதி இருக்கின்றன.  பொய் சொல்லும் நாக்கு புண் பட்ட நாக்கு என்று அருளிய இவரை புண்ணாக்கு சித்தர் என்றாக்கியது நம் பெருமை.

9. திருப்பாண்டிக்கொடுமுடி மூவர் பாடல் பெற்ற ஸ்தலம்.  காவிரி இங்கு கிழக்காய் திரும்பி ஓடுகிறது.  மும்மூர்த்தி ஸ்தலம்.  மூன்று முகத்தோடிருக்கும் ப்ரஹ்மனுக்கு பின்னால் இருக்கும் வன்னி மரமே நான்காவது முகமாக அறியப்படுகிறது.  ஆண் மரமான இது பூ, காய் தருவதில்லை.   3000 ஆண்டுகளுக்கு மேலான இது மீளுருவாக்கப்பட்டு காக்கப்படுகிறது.  இதன் இலைகளை காவிரி நீர்க் குடங்களில் இட்டு பழனிக்கு பாதயாத்திரை செல்கிறார்கள்.  எவ்வளவு நாட்களானாலும் நீர் கெடாமல் இருக்கிறது.   காவிரி படித்துறை நன்கு பராமரிக்கப்படுகிறது.


10.  நாமக்கல் (நாமகிரி) நரசிம்மர், நாமகிரி தாயாருக்கு எதிரில் வெட்ட வெளியில் 18 அடிக்கு ஒரே கல்லில் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயர் தரிசனம் முடித்து இரவுப் பயணம் செய்து விடிகாலை வீடு திரும்பினோம்.  ட்ரைவர் சின்னப்பையன் ரொம்ப பயமுறுத்திட்டாரு ஓவர் டேக் செய்யும் போதும், முன்னாடி இருக்கும் வண்டிகளுக்கு வெகு அருகில் செல்வதுமாக.