சனாதன ஹிந்து தர்மம்
- நண்பர்களே உங்கள் முழு ஆற்றலையும் வெளிப்படுத்துங்கள். வாழ்க்கை முழுவதும் தூங்கி கழிப்பதா ? காலம் பறந்து கொண்டிருக்கிறது. உங்கள் சாதனைகள் உலகத்தின் பார்வைக்கு வரட்டும். உங்களுக்கு ஆசிகள் பல வந்து குவியும், அதிகமான சாபங்களும் குவியும். அதுதான் உலகத்தின் இயல்பு. இதுவே ஏற்ற காலம்
- இறைவனான நம் குருதேவர் தனித்தன்மை வாய்ந்தவர். அவரைப் போன்றே நாமும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில் எதற்கும் பயனற்றவர்களாகவே ஆகிவிடுவோம்
- குடும்ப வாழ்க்கையாகிய நெருப்பில் எரிந்து கொண்டிருக்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் குருவின் அமுத மொழிகளை கேட்டும், படித்தும் இன்று அமைதி கண்டு வருகின்றனர். நோயுற்று படுத்த படுக்கையாக கிடக்கும் காலங்களிலும் குருவின் அமுத மொழிகள் தான் நாம் வாழ்வதற்கு ஊன்றுகோலாக இருக்கிறது.
- க்ருஷ்ணா! உன் அமுதமொழிகள் துன்பத்தைத் துடைப்பவை. ஞானிகளால் போற்றப்படுபவை. பாவங்களை போக்குபவை. கேட்பதற்கு இனியவை. செல்வத்தை அளிப்பவை. உன் அமுத மொழிகளைப் பேசிடும் நல்லோர் புண்ணியம் செய்தவர்கள் - கோபிகா கீதம்
- நம் குருவானவர் நமக்கு எப்போதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலேயே மிகுந்த அக்கறையும் சிந்தனையும் கொண்டிருக்கிறார்
- சமாதி, பரவசநிலை எல்லாம் பிரேமையின் விளைவு தான். நமது நுண்ணுடல் ஸ்ரீகிருஷ்ணனின் திருப்பாதங்களையே சுற்றிச் சுற்றி வருவது போல் தோன்றும்
- எனது கண்ணனின் இனிய நாமத்தை இன்பமாய் இசைக்க இயலாத அந்த வீட்டில் போக மாட்டேன் - கோபிகா கீதம்
- திருக்கோவில் போன்ற இடங்களில் தேவையில்லாத பேச்சுக்களையும், வேண்டாத வேலைகளையும் தவிர்த்து இறைவனைப் பற்றியே நினைக்க வேண்டும்
- பெரிய மனிதர்கள் என்ற கோமாளிகளையும் முகஸ்துதி காரர்களையும் நம்முடன் வைத்துக் கொண்டிருந்தாலும் நம் குருவானவர் நம்மை கடைத்தேற்றி விடுவார்
- நம்மிடமிருந்து ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்று நம்முடனேயே நட்பு பாராட்டி சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் முகஸ்துதி காரர்கள் அவர்களுக்கு நம்மிடமிருந்து ஒன்றும் கிடைக்காது என்று தெரிந்ததும் ஓடிவிடுகிறார்கள். எருதோடு சுற்றிக் கொண்டிருக்கும் நரியின் நிலைதான் அவர்களுக்கும்
- உலகம் இறைவனிலிருந்து வேறானது என்றால் அதையும் நீ துறக்கலாம் - வசிஷ்டர்
- ஞானமும் பக்தியும் ஒருசேர ஒருவரிடம் உண்டாக முடியாதா ? அது மிக உயர்ந்த நிலையில் சைதன்யர் போன்ற ஈஸ்வர கோடிகளுக்கு உண்டாகும். சாதாரண மனிதர்களின் விஷயம் வேறு. ஜோதி தரிசனம் ஐந்து விதமானது. தீபம், அக்னி, சந்திரன், சூரியன் மற்றும் சந்திர சூரியனுடைய ஒளி. பக்தி சந்த்ரன், ஞானம் சூரியன். சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கும் போது சந்திரன் இருப்பதை காண முடிகிறது. அவதார புருஷர்களிடம், இறையருள் பெற்றவர்களிடமும் பக்தியாகிய சந்திரனையும் ஞானமாகிய சூரியனையும் ஒரே சமயத்தில் காணலாம். ஒரு படி பாத்திரத்தில் 5 படி பாலை வைக்க முடியாது அல்லவா ? பக்தியின் வாயிலாக இரண்டும் கிடைக்கும். தேவையானால் இறைவனே பிரம்ம ஞானத்தையும் அருள்வார்
- உருவ சாதனையை செய்யாமல் அருவ சாதனை முடியாதா ? ஏன் முடியாது ? ஆனால் அந்தப் பாதை மிகவும் கடினமானது. முனிவர்கள் தங்கள் குடிலில் இருந்து, அதிகாலையில் புறப்பட்டு நாள் முழுவதும் தவம் செய்து, மாலையில் சிறிது பழம், கிழங்குகளை உண்பார்கள். ப்ரஹ்மம் என்ன என்பதை கடும் தவத்தின் விளைவாக உணர்வில் உணர்ந்தனர், அனுபவத்தில் உணர்ந்தனர். இந்த சாதனையில் உலகப்பற்று ஒரு துளி இருந்தாலும் பலன் கிடைக்காது உலகப் பொருள்களின் சுவை, ஒளி, ஒலி, தொடு உணர்ச்சி, மணம் இவற்றின் நிழல் கூட மனதில் இருக்கக்கூடாது அப்போதுதான் மனம் தூய்மை ஆகும். தூய மனம் எதுவோ அதுவே ஆன்மா. அப்போது மற்றொரு நிலை ஏற்படுகிறது நான் என்ற எண்ணம் அடியோடு மறைந்து எல்லாம் இறைவனே, நான் அல்ல என்ற அனுபவம் ஏற்படுகிறது.
உள்மன சமாதி என்று ஒன்று உண்டு. சிதறிக்கிடக்கின்ற மனதை திடீரென்று ஒன்றுபடுத்துவது. இந்த சமாதி நிலை அதிக நேரம் நிலைக்காது. உலகியல் எண்ணங்கள் வந்து கலைத்துவிடும். அப்போது யோகிகள் யோகத்தில் இருந்து நழுவி விடுகிறார்கள்.
சுவற்றின் சந்துகளில் கீரிப்பிள்ளைகள் சுகமாக வசித்துக் கொண்டிருக்கும். சிலர் அதன் வாலில் கல்லைக் கட்டி விடுவார்கள், அதன் பாரத்தால் அது வெளியே விழுந்து விடும். மீண்டும் சுகமாக இருப்பதற்காக அது எத்தனை முயற்சி செய்தாலும், அத்தனை முயற்சியும் செங்கல்லின் பாரத்தால் பாழாகி விடும். உலகியல் எண்ணங்களும் இப்படித்தான்.
சாதாரண மனிதர்களுக்கு கூட எப்போதாவது சமாதி நிலை வாய்க்கலாம். சூரியன் உதித்ததும் தாமரை மலர்கிறது, ஆனால் மேகத்தால் சூரியன் மறைந்தால் அது கூம்பி விடுகிறது. உலகியல்தான் அந்த மேகம். சேரவேண்டிய இடத்திற்கு முட்காடு வழியாகவும் போகலாம் நல்ல வழியாகவும் போகலாம்
- அம்புப் படுக்கையில் படுத்திருந்த போது பீஷ்மர் அழுததற்கான காரணம், அம்பின் வேதனையால் அல்ல, சாட்சாத் நாராயணனே அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தும் பாண்டவர்களின் துன்பங்களுக்கு முடிவு ஏற்படவில்லையே, இறைவனுடைய லீலையைப் பற்றி எதுவும் புரிந்துகொள்ள முடியவில்லையே என்பதை நினைத்து தான்
- நாள், திதி, நட்சத்திரம் என்று எதுவும் எனக்குத் தெரியாது. என் நினைவெல்லாம் ராமர் மட்டுமே - ஹனுமான்
- சன்னியாசிகளுக்கான விருந்து ஒன்று ஏற்பாடு ஆயிற்று. பல சம்பிரதாயங்களை சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள். எங்கள் சம்பிரதாய சாதுக்களுக்கு முதலில் சாப்பாடு. பிறகு தான் மற்றவர்களுக்கு என்று எல்லோருமே சொன்னார்கள். ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை. நோக்கம் ஒன்றாக இருந்தாலும் இவர்களின் சடங்கு சம்பிரதாயங்களால் கடைசியில் எல்லோரும் போய்விட்டார்கள் அந்த விருந்து நடைபெறாமலே போயிற்று. தங்கள் கடிகாரமே சரியான மணியைக் காட்டுகிறது என்றுதான் எல்லோருமே சொல்கிறார்கள்.
- காட்டிலோ, எங்கோ குகையிலோ இருந்தாலும், பதவி, பணம், புகழ் இவற்றின் துணையேதுமின்றியே, ஒரு ஞானியினுடைய தவ வலிமையும், ஆன்மீக அனுபவமும் கண்ணுக்குத் தெரியாத அதிர்வலைகளாக வெளியில் கலந்து உலகத்தை உயர்த்தியே தீரும்