Jun 14, 2017

வால்பாறை - அதிரப்பள்ளி டூர்


மே 26, 2017, வெள்ளிக்கிழமை.

தண்ணீர் ! தண்ணீர் !!  எங்க இருக்கு சென்னைல, தமிழ் நாட்ல ?

சில்லுனு ஒரு க்ளைமேட் - எங்க இருக்கு சென்னைல, தமிழ் நாட்ல ?

இப்டி பல பேர் தேடிட்ருக்கோம்,  ஐ.டி கம்பனீஸ்லேந்து.  

வீட்ல ஏசி இருக்கு.  குடிக்க தண்ணி இருக்கு,  நாலு பேர் குளிக்கவும் க்ரௌண்டு வாட்டர் இருக்கு.

ஆமா, தனி வீடு தான்,   ஃப்ளாட்ல லாம் தண்ணி காசு குடுத்து தான் வாங்கறாங்க.  

காஞ்சி சங்கராச்சார்யர் போற எடத்துலெல்லாம் தொட்டி கட்டி, தண்ணீல முங்கி தான் குளிப்பாங்க.   நாங்களும் காவிரிக் கரைலேந்து வந்த கும்பல்ங்க்றதால அப்டி முங்கி குளிச்சு பழக்கம்.  எங்க போறது இப்போ ?  ஸம்மர் லீவு பசங்களுக்கு, இப்ப போனா நான் மட்டும் லீவு போட்டா போறும்.  ஸ்கூல் தொறந்தா, லீவு போட மனஸே வராது.  

இருக்கறது ரெண்டு ஆப்ஷன்.  ஒன்னு ரிசார்ட்,  இல்லனா எங்கயாவது ஆத்தங்கரை.   ரிசார்ட் பாத்தா எல்லாம் புக்டு.  பெரியவங்க முங்கி குளிக்கற பாத் டப்புக்கு பேர், ஜகூஸி யாம் !!. அது, ஸ்விம்மிங் பூல் இருக்கற ரிசார்ட் பாத்தாலும் சென்னை கிட்ட க்ளைமேட்டுக்கு என்ன பண்றது ?   ஐடியல் பீச் ரிசார்ட்ல 10 அடி ஆழத்துல ஸ்விம்மிங் பூல் இருக்காம்.   ஓசன் ஸ்ப்ரே ரிசார்ட்ல ப்ரைவேட் ஸ்விம்மிங் பூல் இருக்காம்.  மினிமம்  நாலாயிரத்லேந்து பதினாறாயிரம் வரை.  கெடைக்கவும் இல்ல.  போக வர டாக்ஸி, சாப்பாடு எல்லாம் சேத்தா பத்துலேந்து முப்பதாயிரம் வரை டும்.

ஆத்தங்கரை ஏதாவது இருக்கான்னு பாத்தா மினிமம் 500, 600 கி. மீ போக வேண்டியிருக்கும் போல இருக்கு.  எங்கயும் ப்யூர் வெஜ். சாப்பாடு கெடைக்கறதும் இப்பெல்லாம் ரொம்ப கஷ்டமாய்டுச்சு.  வீட்லேந்து செஞ்சு எடுத்திட்டு போலாம்னா,  எப்ப, எப்டி ஆஃபிஸ்லேந்து செவுரு ஏறி குதிச்சு போவோம்னு தெரியல.  ப்ளான்டு லீவெல்லாம் சரி பட்டு வரல,  போன தடவையே 2-3 ஆயிரம் ரூபா கேன்ஸல் பண்ணதுல போய்டுச்சு.   தனிக்குடும்பம்,  சாப்ட மட்டும்   நெறையா பேர் இருக்கோம்.  செய்யறதுக்கு ஒரு வொய்ஃப் தான் இருக்கா !!  அவங்களுக்கு ஒரு ரெஸ்ட் குடுக்கனும்னு தான் டூரே.

மே 1, வீக் என்ட்லதான் வந்துது.  அதுவும் இப்டி தான் ப்ளான் பண்ணாம, பாஹுபலிலயே போய்டுச்சு.   இப்ப மே 29ம் வீக் என்ட்லதான் வருது.  அமெரிக்கால என்னவோவாம்.  அதுக்கு நமக்கு லீவு.    வீட்டுக்குப் போயாச்சு. ஒரு ப்ளானும் இல்ல.  மூணு  நாள் லீவு,   கொடைக்கானல், ஊட்டி ஏற்கனவே போயாச்சு.  மொத்த  ஊரும் இப்ப அங்கதான் இருக்கு.   திருநெல்வேலி, கன்யாகுமரில க்ளைமேட் இல்ல.  மைசூர், பெங்களூர்ல ஆறும் இல்ல, க்ளைமேட்டும் இல்ல.  வால்பாறை, அதிரப்பள்ளி ஃபால்ஸ் போன வாரம் நண்பர் ப்ரேம் போய்ட்டு வந்திருக்காரு.  அவர் தங்கியிருந்த கனவா (Kanova Resort) ரிசார்ட்  ரூம் வாசல்ல  அதிரப்பள்ளி  ஆறு.    இதெல்லாம் பேசிட்டு தூங்கவும் தூங்கியாச்சு.

காலைல திருப்பி மேல எழுதி இருக்கற எல்லாத்தையும் பேசிட்டு,   பஸ் ரேட்டு பாத்தா, 2000 ரூபாய்கு கம்மியா எந்த தண்ணி இருக்கற எடத்துக்கும் டிக்கெட் இல்ல.,  தெரிஞ்சது தானே.  டிஸ்டண்ட்ஸ் ஜாஸ்தி, படுத்திட்டு போகனும், ஏசி வேணும்,  ட்ரைன் ட்ரை பண்றதே இல்ல.  அதெல்லாம் ப்ளான் பண்ணி போறவங்களுக்கு.   மணி காலை 11,  டாக்ஸிக்கு ஃபோன் பண்ணியாச்சு,  கி.மீ. க்கு 8.30 ரூபா, ஒரு  நாளைக்கு ட்ரைவர் பேட்டா 300,   ஏசி எட்டியோஸ்ஸ்ஸ்.  ட்ரைவர் டைசன்,   ஏற்கனவே  நாகப்பட்ணம், வேதாரண்யம் டூர்ல எங்கள்ட்ட அனுபவப்பட்டவர்.  இன்னும் சாப்டல. 

12.30 AM க்குக் கெளம்பினோம்.  விழுப்புரம் டோல் வரைக்கும் குழம்பம் தான்.  டைசன் ஊர் கன்யாகுமரிதான்னாரு.  அவரையும் அங்க க்ளைமேட், திருப்பரப்பு ஃபால்ஸ் தண்ணி எல்லாம் விசாரிக்க சொன்னோம்.  ஒரு ஹோட்டல்ல ஃப்ரைடு ரைஸ், கர்டு ரைஸ், அது, இதுன்னு பார்ஸல் வாங்கிட்டு,  ஓட்ற கார்லயே  நிமிஷத்துல காலி பண்ணிட்டு, விழுப்புரம் டோல்ல தங்க  நாற்கரச் சாலைலேந்து (இது மட்டும் சுத்தத் தமிழ்ல!!) ரைட் எடுத்து, சேலம்  நோக்கி பயணம்.    சேலம், அவினாசி, பொள்ளாச்சி, வால்பாறை, அதிரப்பள்ளி.  இதான் ரூட் ப்ளான்.  

அவினாசி: அருணகிரிநாதர்  பாடல் பெற்ற முருகர் ஸ்தலம்.  

"இறவாமற் பிறவாமல் எனையாள்சற்       குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத்         தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற்    குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப்     பெருமாளே"

வள்ளி மணவாளா ! அவினாசிப் பெருமாளே !!, அறம் முதலான  நாலையும் அளிப்பவனே,   எனக்குக் குருவாயிருந்து என்னை இந்த பிறப்பு, இறப்பு சுழலிலிருந்து  காத்து ஆண்டருள்வாய்.  

இந்த கோவில் சாமி கருணாம்பிகா ஸமேத அவினாசியப்பர்.  63 நாயன்மார்களில் முக்யமானவர்களில் ஒருவரான சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் இந்த ஊர்ப்பக்கம் வந்த  போது, எதிரெதிர் வீட்ல, ஒன்ல அழற சத்தமும், இன்னொரு வீட்ல மங்கல ஓசையும் கேட்க, இதென்ன விஷயம் என்று கேட்டார்.   ஊரார், "இந்த இரண்டு வீட்டுக் குழந்தைகளும் நண்பர்கள்.   மூன்று வருஷங்களுக்கு முன் குளத்துக்கு  நீராடப் போயிருந்த போது, ஒருவனை அங்கு இருந்த முதலைக் கடித்து உண்டு விட்டது.    அவன் நண்பனுக்குத் தான் இன்று இந்த வீட்டில் பூணூல் போடுகிறார்கள்.  இறந்தவன் இருந்திருந்தால் அவனுக்கும் இந்த நிகழ்வெல்லாம் இப்போது நடந்திருக்கும்.    நண்பனின் வைபவத்தில் தானும் கலந்து, மகிழ்ந்திருப்பான் என்றெல்லாம் எண்ணி இறந்தவன் வீட்டார் அழுது கொண்டிருக்கிறார்கள்" என்று விளக்கினர்.    இதைக் கேட்ட ஸுந்தரர் அவர்கள் மீது கருணை கொண்டு, ஸ்வயம்புவான அவினாசியப்பரிடம் குழந்தையை மீட்டுத் தருமாறு கட்டளையிடும் தொணியில் வேண்ட, வற்றியிருந்த குளத்தில்  நீர் பெருகி, அதில் முதலையும் உண்டாகி, இன்றைய வயதில் சிறுவனைத் திருப்பித் தந்தது.  இந்தக் குளம் கோவிலிலிருந்து 1/2 கி.மீ தொலைவில் உள்ளது.  முதலை வாயில் சிறுவன் மீண்டு வரும் சிலைகள் உள்ளன.  

“உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய் 
  அரைக்கு ஆடு அரவர் ஆதியும் அந்தமும் ஆயினாய் 
  புரைக் காடு சோலைப் புக்கொளியூர் அவினாசியே   
  கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே”
  
உரைப்போர் உள்ளத்தும்,   நினைப்போர் உச்சியிலும்  உறைவோனே ! அரையில் அரவை அணிந்தவனே !   ஆதியும், அந்தமுமானவனே ! எழிற்சோலைப் புக்கொளியூரில் உறையும் அவினாசியே ! முதலையும், காலனையும் பிள்ளையைக் கொண்டு வந்து தரச்சொல்.

போகும் போது இந்த ஊருக்குப் போக முடியல.  பொள்ளாச்சில போய், சீதாராம் லாட்ஜ்ல ஒரு ரூம் வேண்டி, ராத்திரி 12.30 மணிக்குப் புகுந்தோம்.   பழைய வீட்ட லாட்ஜா வெச்சிருக்காங்க.  நல்லா இருந்துது.  நான் ஏசி 600 ரூபா குடுத்தோம்.  காலை 5.30 மணிக்குக் கெளம்பிடலாம்னு ப்ளான்.  நம்ம ப்ளானாச்சே,  நடக்குமா ?   12 மணி நேரம் கார் பயணம்.  ட்ரைவர் திரும்பிப் பாக்கறதுக்குள்ள கதவ சாத்தி, காருக்குள்ளயே தூங்கிட்டாரு.  நான் மட்டும் அலாரம் வெச்சு எழுந்திட்டேன்.  மனைவி, குழந்தைங்கள்லாம் டயர்டா தூங்கிக்கிட்டிருக்காங்க.  5, ...6...7 மணிக்குக் குளிச்சு, ரெடியானோம்.  வால்பாறை போயி, அதிரப்பள்ளி போகனும்.  லாட்ஜ் ஓனர் மாலை 6 மணிக்கு மேல, வால்பாறை-அதிரப்பள்ளி ரூட்ல விட மாட்டாங்க,   வால்பாறைல லேட் பண்ணாம நேர அதிரப்பள்ளி போய்டுங்கன்னாரு.    வெஜ் சாப்பாடு வழில உருப்படியா ஒன்னும் கெடைக்காது.  இங்கயே கௌரி க்ருஷ்ணா ஹோட்டல்ல சாப்டுட்டு, வெரைட்டி ரைஸ் பார்ஸல் வாங்கிண்டு போய்டுங்கோன்னார்.  கௌரி க்ருஷ்ணா கொஞ்சம் காஸ்ட்லி,  பட் நோ டைம், நோ ஐடியா, டிஃபன் சாப்டோம்.  பார்ஸல் ரெடியாகல.  கெளம்பியாச்சு.  8 மணிக்குக் காலைல பொள்ளாச்சில கெளம்பி, மதியம் ஒரு 3 மணி போல அதிரப்பள்ளி வந்து சேர்ந்தோம்.

வழில மங்க்கி ஃபால்ஸ், மங்க்கி தான் அங்கயும், இங்கயும் விழுது.  தண்ணி விழல.  வரலாற்றுப் பதிவுக்காக ஃபோட்டோ எடுத்துட்டு, கெளம்பினோம்.  ஆழியார் டாம், பார்க்,   சோலையாறு டாம் எல்லாம் வழில க்ளிக்கிண்டே போனோம்.  கூழாங்கல் ஆறு, சிரபுஞ்சிக்கு அடுத்ததா அதிகமா மழை பொழியற சின்னக் கல்லாறு இதெல்லாம் பாக்கல.  ஆழியாறு டாம் வ்யூ மேல போற ரோடு வளைவுகள்லேந்து பாத்தா சூப்பரா இருக்கு.  




வால்பாறைல கருமலை எஸ்டேட்டோட பாலாஜி கோவில் ஒன்னு சின்னதா அழகா, அவங்களோடு ப்ரைவேட் கார்டன்குள்ள இருக்கு.  ஃபோட்டோ, வீடியோ அனுமதி இல்லயாம் !!  அங்க தரிசனம் பண்ணிட்டு அதிரப்பள்ளி நோக்கிப் பயணித்தோம்.  வழி நெடுக எங்க பாத்தாலும் ஒரே பசுமை, அப்பப்ப கொஞ்சம் தூறல், மே மாசத்துல தமிழ்நாட்ல மிஸ்ட்டு (பனி ப்பா!!) படர்ந்திருக்கும் இன்னொரு இடம்.  சில்லுனு ஒரு பயணம், ஏசிய ஆஃப் பண்ணி, கார் ஜன்னலை எறக்கி விட்டோம்.  ஒரு நாப்பது கொண்டை ஊசி வளைவுகள்.   தமிழ் நாடு பார்டர் வரைக்கும் ரோடு அகலமா இருக்கு, அங்கங்க டீ கடைகள், வீடுகள்னு பாக்க முடியுது.  நம்ம ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் எல்லைக் கதவு தாண்டினதும் ரோடு அகலம் கொறஞ்சிடுச்சி.   10 அடில கேரள வன எல்லை ஆரம்பிக்குது, அவங்க கேட்ல குழந்தைங்க, ட்ரைவர் உட்பட எத்தனை பேர், போறீங்க, எங்க போறீங்கன்னு கேட்டு,  வண்டி நம்பர், நபர்கள் எண்ணிக்கை எல்லாத்தையும் எழுதி, ட்ரைவர்ட ஒரு ஃபார்ம்ல கையெழுத்து வாங்கிட்டு, நமக்கும் அப்டி ஒரு டிக்கெட் குடுக்கறாங்க.  அத பத்ரமா கொண்டு போய் அதிரப்பள்ளில அதே மாதிரி இருக்கற ஒரு பூத்ல குடுக்கனும்.  திரும்பி வரும்போதும் அதே மாதிரி இந்த பூத்ல ஒரு டிக்கெட் வாங்கிட்டு, நம்ம பார்டர்ல இருக்கற கேரளா கேட்ல குடுக்கனும்.  சீட்டு பத்ரம்.
















கேரளாக்குள்ள  வந்தாச்சு.  அதிரப்பள்ளி வரை இதே ரூட்ல போய்ட்டு திரும்பி வந்தா டாக்ஸிக்கு கேரளா பர்மிட் தேவையில்லை.  ஆனா வால்பாறை வழியா அதிரப்பள்ளி போய்ட்டு அப்டியே திருச்சூர், கோயம்புத்தூர் வழியா வந்திடலாம்னு நெனைச்சா பர்மிட் வேணும்.  ஒரு கார் போற அளவுதான் ரோடு அகலம், அடர்ந்த காடுகள்.  ஒரு ஆள் நடமாட்டமும் இல்லை.  யானை வரும், சிறுத்தை வரும், கரடி வரும், முதலை கடிச்சிடும்னு வழி  நெடுக போர்டுகள்.  வால்பாறை-அதிரப்பள்ளி ரூட்ல டீ, காபி, டிஃபன் கடைகள்னு ஒன்னும் கெடையாது.  இந்த வால்பாறை-அதிரப்பள்ளி ரூட் மாலை 6 மணிலேந்து மறு நாள் காலை 6 மணி வரை மூடிடுவாங்க, விலங்குகளுக்காக. ( நம்மளுக்காகவும்).  சூப்பர் ஃபாரஸ்ட், எஸ்டேட்ஸும் கெடையாது.  கேரளா வண்டி எல்லாம் சல்லு, சல்லுன்னு வராங்க,  குருட்டு டர்னிங்க்ல கூட ஹாரன் அடிக்கறதில்ல, ஸ்லோ பண்றதில்ல.  மத்த ஸ்டேட்ஸ் வண்டிங்க தான் பாத்து, பாத்து ஹாரன் அடிச்சு, ஸ்லோ பண்ணி, ரோட விட்டு எறங்கி போகனும்.  பஸ் அதிகமா இந்த ரூட்ல இல்ல, பஸ்ல வந்தா இப்டி நிறுத்தி, நிறுத்தி வேடிக்கை பாத்திட்டு, ஃபோட்டோ எடுத்திட்டெல்லாம் போக முடியாது.  இன்னும் சில கூட்டுக் குடும்பங்கள் பாரம்பர்ய டூர் முறைப்படி வீட்டு சாப்பாடு கட்டிட்டு வந்து சாப்படறாங்க.  

ஞாயிறு காலை 8.30 மணிக்கு பொள்ளாச்சில கிளம்பி, ஒரு 3 மணி போல அதிரப்பள்ளி வந்து சேந்தோம்.   நண்பர் ப்ரேம் நாத் போன வாரம் தான் இதே பேக்கேஜ் போய்ட்டு வந்திருந்தார்.  எல்லா வழிலயும் உதவியா இருந்துது அவரோட டிப்ஸ்.  அவர் தங்கியிருந்த கணவாய் ரிசார்ட்ல தான்  நாங்களும் ரூம் புக் பண்ணியிருந்தோம்.  நான் ஏசி 24 மணி நேரத்துக்கு 1350 ₹.  நாங்க ரிக்வெஸ்ட் பண்ணினோம்னு வெஜ் சாப்பாடு வேற அவங்க தங்கையே செஞ்சு குடுத்தாங்க.  ரூம் கொல்லை பக்கத்துலயே அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியோடு ஆறு ஓடுது.  இங்க தான் கமலோட புன்னகை மன்னன், விக்ரமோட ராவணன், பாஹுபலி ஷூட்டிங் எல்லாம் எடுத்திருந்தாங்க.   வந்த டயர்டுக்கு மோக்ஷத்தை பாத்தா மாதிரி இருந்துது.  ஒரு ரெண்டு மணி நேரம் கொட்ற மழைல ஆத்துல ஆட்டம் போட்டோம்.   தண்ணி இங்க இருக்கு மே மாசத்துல, குடிக்கலாம், முங்கி குளிக்கலாம், பூஜை பண்ணலாம், எல்லாம் பண்ணினோம்.  நைட் ஒரு ஏழு மணிக்கு அன்லிமிடெட் சப்பாத்தி, தால், பொன்னி ரைஸ், ரசம், பப்படம், தயிர், நல்ல தூக்கம், சாயந்தரம் 6 மணிக்கு போட்ட ஜனரேட்டர், காலைல தான் அணைச்சாங்க.  அடிக்கடி மரம், ஏதாவது விழுந்து இப்டி ஆய்டுமாம்.  காலைல தான் வந்து சரி பண்ணுவாங்களாம்.  நல்ல உபசரிப்பு. நல்ல மெய்ன்டனென்ஸ்.  







காலை எப்ப வரும், ஆத்துல குளிக்கலாம்னு ரெண்டு, மூணு தடவ எழுந்து, எழுந்து பாத்தேன்.  ஒரே இருட்டு.  காலை எட்டு மணிலேந்து மாலை 5 மணி வரைக்கும் தான் ஃபால்ஸ்க்கு அனுமதி, பெரியவங்களுக்கு 30₹,  நேத்திக்கு சரியான கும்பல், இன்னிக்கு வொர்க்கிங் டே ங்கிறதால கும்பல் அதிகமா இல்ல.  நாங்க தான் ஃபர்ஸ்ட் டீம், என்ட்ரன்ஸ்லேந்து ஒரு பத்து நிமிஷம் நடந்தா அருவி மேல வந்து சேந்துடறோம்.  அங்கிருந்து கீழ போக வழி இருக்கு, நாங்க போகல, திருப்பி ரூம்க்கு வந்து ஆத்துல குளியல், டிஃபன் பூரி, கிழங்கு, புட்டு, கடலைக்கறி, தோட்டத்து மாம்பழம்.  சாப்டுட்டு  மதியம் 12 மணிக்கு ஊருக்குக் கெளம்பினோம்.  பொள்ளாச்சில ஒரு டிஃபன், சேலத்துல டின்னர், நான் ஸ்டாப் தாம்பரம் காலை 3 மணிக்கு, 

ட்ரைவர் டைசன் ஆஃஸம், ப்ரேம் ப்ளான், ட்ராவல்தான் வெரி ஹெக்டிக், டோல் சார்ஜ்ஜே 1000 ₹ மேல ஆய்டுச்சுப்பா,  பொள்ளாச்சி வரை பஸ்ல போய்ட்டு, அங்கிருந்துதான் டாக்ஸி எடுக்கனும்.  பாப்போம், தூங்கி, ஒரு பக்கெட் குளியல் போட்டு ஆஃபீஸ் கெளம்பனும்,  

மீண்டும் அடுத்த டூர்ல சந்திப்போம்.




1 comment:

Unknown said...

megavum payanulla thagaval..... nandri