Oct 15, 2017

தீபாவளி

தீபாவளி - தீப + ஆவளி - தீபங்களின் வரிசை

நம் உள்ளும் புறமும் இருக்கும் இருளை அகற்றி, எங்கும் அறிவான, மகிழ்வான, ப்ரகாசமான ஒளி பரவ வேண்டும் என்பதைக் கொண்டாடும் நாள், இதற்கடுத்த கார்த்திகை மாதத்தில் தினமும் எல்லா க்ராமங்களிலும் மாலை வீட்டு வாசல்களில் சிறப்பாக விளக்கேற்றுவர், மார்கழியில் விடிகாலை அப்படி செய்வார்கள்.

பரமேஶ்வரன் தவத்தின் பலனாக அம்பிகைக்குத் தன் இட பாகத்தைக் கொடுத்து, அர்த்த நாரீஶ்வரனான நாள்

காமரூபம் - ப்ராக்ஜோதிஷம் (இன்றைய அஸ்ஸாம்) நாட்டை ஆண்டு கொண்டிருந்த பௌமன் என்ற அஸுரனைக் கொன்று அவன் அன்னை விருப்பப்படி மக்கள் துயரம் தீர்ந்து, அவன் இறந்த அந்த நாளை அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் நாள்.  அவன் செயல்பாடுகளால் அவனுக்கு நரகாஸுரன் என்று பெயர்,  நாம் படும் நரகங்களிலிருந்து விடுபட பண்டிகைக்குப் பெயரும் நரக சதுர்த்தசி தான், நரகாஸுர சதுர்த்தசி இல்லை.  இந்த நாளில் விடிகாலை நாம் தேய்த்துக் குளிக்கும் எண்ணையிலும், நீரிலும், மற்ற பொருள்களிலும் லக்ஷ்மியும், கங்கையும், மற்ற தேவதைகளும் வாசம் இருப்பார்கள்.

தீர்க்கதமஸ் என்ற முனிவர் ஏற்கனவே கஷ்டங்களில் இருக்கும் மக்கள் மேலும் தங்களை வ்ரதங்களாலும், சாப்பிடாமல் உபவாசங்களாலும் கஷ்டப்படுத்திக் கொண்டுதான் இறைவனை அணுகி, அவன் அனுக்ரஹம் பெற வேண்டுமா என்று கேட்டதற்கு, சனாதனர் என்ற ரிஷி அருளிய பூஜை முறையே இந்த தீபாவளி.

பகீரதன் தேவலோகத்துக் கங்கையை பூமிக்கு வருவித்த நாள்

க்ருஷ்ணன் கூறியதைக் கேட்டு கோபர்கள் கோவர்த்தன கிரிக்கு பூஜை செய்த நாள்

இராவணேஶ்வரனை அவன் செய்த தவறான பிறன் மனை நோக்கல் என்ற குற்றத்திற்காகக் கொன்று, சீதையோடும், இராமானுஜனாம் லக்ஷ்மணனோடும் (அனுஜன் - தம்பி), விபீஷணன், சுக்ரீவன் தலைமையிலான ராக்ஷஸ, கரடி, குரங்குக் கூட்டத்தோடு அயோத்தி திரும்பிய நாள்.

மஹாவீரர் முக்தியடைந்த நாள்

சீக்கியர்களுக்கு முக்யமான நாள்

புத்தாடை உடுத்தி, துயரங்கள் தீர்ந்த மகிழ்ச்சியின் வெளிப்பாட்டில் பட்டாசு, மத்தாப்பு கொளுத்தி, கூட்டுக் குடும்பங்கள்ல எல்லாரும் சேந்து செஞ்ச பக்ஷணங்களை வெளுத்துக் கட்டி, ப்ரச்னை வராம இருக்க தீபாவளி லேகியம் உண்ணும் நாள்.

குழந்தைகளுக்கு, அடுத்த தலைமுறையினருக்கு இப்படி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி இந்த நாட்களிலாவது கூடி வாழும் முறையையும், பகிர்தலையும், சந்தோஷத்தையும் கொண்டாட வேண்டிய நாள்.  நிச்சயமாக நாள் முழுக்க டிவி முன்னாடியே ஒக்காந்து இருக்க வேண்டிய நாள் இல்ல.

ஷேர் அண்டு கேர் கூட்டுக்குடும்பங்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.   மீண்டும் சந்திப்போம்.  ஜய் ஹிந்த்.

Aug 2, 2017

தம்பி உடையான் பகைக்கு அஞ்சான்

மனைவி உடையான் விருந்துக்கு அஞ்சான்
வாஹனம் உடையான் வழிக்கு அஞ்சான்
ஆடை உடையான் அவைக்கு அஞ்சான்
கல்வி உடையான் பேச்சுக்கு அஞ்சான்
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் - வாரியார் சொற்பொழிவு

Jul 7, 2017

பாண்டிச்சேரி டூர்

17 ஜூன் 2017, சனிக் கிழமை.

பாண்டிச்சேரில ரெண்டு நாளைக்கு என்ன இருக்கு, பீச், மணக்குள வினாயகர், பக்கத்துல ஸ்ரீ அரவிந்தர் ஆச்ரமம்.  மொத்தம் 4 மணி நேரம் போறாதா,  வேற எதையாவது இந்த டூர்ல சேக்கமுடியாதா ன்னு இன்டர்னெட்ல சிவன் கோவில்களைத் தேடி கொஞ்சம் சேர்த்துண்டது தான் இந்த டூர்.  பெஸ்ட்.

1.  மதுராந்தகம்:  இப்பயும் காலை 6.30 மணிக்குப் போனோம், போன தடவை ராத்திரி 8.10 க்குப் போனோம்,  மூடியே இருக்கு ஏரி காத்த ராமர் கோவில்.  எப்ப தரிசனம் கிடைக்கும்னு தெரியல.  என் பையன் பேரும் ராம ஶர்மா.  கோவில் வாசல்ல அவன பாத்துட்டு, கோபுர தரிசனம் பண்ணிட்டுக் கெளம்பினோம்.

இந்த தடவ, மனைவி இட்லி, சட்னி, சாம்பார் எல்லாம் செஞ்சு கைல எடுத்துண்டு வந்திருக்காங்க,  அதனால எப்ப வேணும்னாலும் சாப்டுக்கலாம்னு அடுத்த ஊருக்குப் பயணமானோம்.    ஆஸ்தான ட்ராவல்ஸ், ஃபேமிலி ட்ராவல்ஸ், பெருங்களத்தூர், ட்ரைவர் டைசன்,  பாண்டிச்சேரி தானேன்னு எட்டியோஸ் காரையே இன்டிகா ரேட்டுக்குக் கொண்டு வந்திட்டார்.  8 ₹ கி.மீக்கு, 250 கி. மீ மினிமம் பயணிக்கனும் ஒரு நாளைக்கு,  இல்லாட்டியும் அதுக்கான காச குடுத்துடனும், ட்ரைவர் பேட்டா 350 ₹ ஒரு நாளைக்கு.

2. அச்சிறு பாக்கம்:   தாருகன், கமலாக்ஷன், வித்யுன்மாலி அப்டீன்னு மூணு அசுரப்பசங்க, பயங்கரமா தவம் பண்ணி, இரும்பு, வெள்ளி, தங்கத்துல நினைக்கற எடத்துக்குப் பறக்கற ஊர் கேட்டு வாங்கிட்டாங்க,  இந்த மூணு ஊரும் ஒரு எடத்துல சேரும் போது ஒரே ஆயுதத்தால மூன்று புரங்களையும் அழிச்சா தான் நாங்க அழியனும்னும் வரத்த வாங்கிட்டாங்க.  அவ்ளோதான், ஒருத்தர விடாம எல்லா உயிர்களையும் துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி ரொம்ப அராஜகம் பண்ணிட்டு இருந்தாங்க.  தேவர்கள், முனிவர்கள்னு எல்லாரும் யாராலயும் இவங்கள ஒன்னும் பண்ண முடியல, நீங்க தான் எங்களக் காப்பாத்தனும் நமஸ்காரம் பண்ணினாங்க.  அவரும் ஒரு தெய்வீகத் தேர்ல கெளம்பினார்.  தேர்ல குறை, நேரத்துல குறைங்கறது கவனிச்ச பிள்ளையார பூஜிக்கவே இல்ல,  தேர் அச்சு முறிஞ்சுது,   தேர் சக்ரங்கள்ல அச்சாணியா இருந்த வாயு மற்றும் அக்னி தேவதைகளை, மஹாவிஷ்ணு தண்டாக இருக்கும் அம்போட பின்பக்கத்துலயும், முன்பக்கத்துலயும் இருக்கப் பண்ணினார்.  காஷ்டை, முஹூர்த்தம் ன்னு நேரத்தைக் குறிக்கும் தேவதைகளைத் தேர்ச் சக்ரங்களுக்கு அச்சாக இருக்கச் சொன்னார்,   ஸ்வாமியும் பிள்ளையார பூஜை பண்ணிட்டு புறப்பட்டுப் போயி சண்டைல ஜெயிச்சார்.  அந்த அச்சு முறிச்ச வினாயகர் சன்னதி சிவன் கோவில் ராஜ கோபுரத்துக்கு எதிர்க்க சின்ன கோவிலா இருக்கு,  ராஜ கோபுரத்துக்கு எதிரில் நீரில்லா குளம், தேரடி.  ஸ்வாமி ஆட்சீஸ்வரர்,  பாடல் பெற்ற ஸ்தலம்.   சூப்பர் கோவில்.



3. மைலம் முருகன் கோவில்: மயில் சத்தம் எங்க பாத்தாலும், 7-8 மயில்களையும் பாத்தோம்.  30-50 படிகள் இருக்கும், மலை மேல ஏறி, இறங்க தனித் தனி ரோடுகள் போட்டிருக்காங்க.  20₹ அதுக்கு டிக்கெட்.  கும்பல் விசேஷ நாட்கள்ல இருக்கும் போல,  முருகன் சன்னிதில தூரத்துலேந்தே தரிசனம் பண்ண சௌர்யமா படிக்கட்டுகள் அமைச்சிருக்காங்க.  ரொம்ம அமைதியா, ரம்யமா இருந்துது கோவிலும், கோவிலைச் சார்ந்த இடங்களும்,  ஃப்ரீ டாய்லெட் கோவிலுக்கு வெளில இருக்கு தனித்தனியா, க்ளீனா, தண்ணி வசதியோட.  பொம்மபுரம் (ப்ரஹ்மபுரம்) ஆதீன ஸ்வாமிகளோட பராமரிப்புல இருக்கு இந்தக் கோவில்.  ஸ்வாமிகளும் தீபாராதனையின் போது சன்னிதில இருந்தார், அவரையும் தரிசிச்சோம்.



4. திருவக்கரை:  பாடல் பெற்ற ஸ்தலம்.  சந்த்ரஶேகரர் ஸ்வாமி பேர்.  லிங்கத்துலயே மூன்று முகங்கள் புடைப்புச் சிற்பமா மூலஸ்தானத்துல இருக்கார், மும்மூர்த்தி ஸ்வரூபம்னு குருக்கள் சொன்னார்.  திருவானைக்காவல் அகிலாண்டேஶ்வரி அம்பாள் சன்னதி கிட்ட இருக்கற வாசல் வழியா வெளில வந்தா, அங்க எதிர்க்க வேதபாடசாலை இருக்கு,  அதுக்குள்ள பஞ்ச முகேஶ்வரர் (அஞ்சு முகங்களோட) இதே மாதிரி தான் இருப்பார்.  ஒவ்வொரு முகத்தையும் பார்க்க ஜன்னல் இருக்கும்.  தரிசனம் பண்ணினோம்.

- துர்முகி ன்னு ஒரு ராக்ஷஸி,  அம்பாள் எட்டுக்கையோட காளி ரூபத்துல அவ கூட சண்டை,  அவ கர்ப்பமா இருக்கறத பார்த்த அம்பாள் கருணையோட அந்தக் குழந்தைய அவள்டேந்து எடுத்து, தன் காதுல குண்டலம் மாதிரி போட்டுண்ட்டு, அவள மட்டும் அழிச்சா இந்த ஸ்தலத்துல.  அந்த அஷ்ட புஜ வக்ரகாளிகாம்பாள பக்கத்துலேந்து பாத்தோம்.   பின்னாடி இருக்கற சுதைல இந்த உருவம் அழகா தெரியறது.

இப்பெல்லாம் பாடல் பெற்ற சிவன் கோவில்லல்லாம் கூட பெரிசா ஒண்ணும் கும்பல் இல்ல, ப்ரதோஷ காலத்துல கொஞ்சம் பேர் வராங்க.  இந்த மாதிரி பணம் குடுக்கிற பெருமாள், படிப்பு குடுக்கற ஹயக்ரீவர், நமக்கு எதிரா இருக்கறவங்கள அழிக்கற உக்ரமான காளி, ப்ரத்யங்கரா, சரபர், க்ரஹ நிலைகள சரி பண்ற நவக்ரஹங்கள், எக்சிபிஷன், தீம் பார்க் கோவில்கள், கெடுபிடிகள் இருக்கற கோவில்கள் இப்படி ஏதாவது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் இருந்தா தான் சாமிக்கே கும்பல் வருது,  ஒன்னுமில்லாட்டி மினிமம் 10 அடிக்கு மேல ஒசரமாவாவது இருக்கனும்.  அலையட்டும், மனஸு அலைஞ்சு முடிஞ்சு அவங்களே சிவனேன்னு வருவாங்க. ! !  சுந்தரன், ஆசுடோஷ், சௌலப்யன்,  ஈசியா ஞாபகம் வெச்சுக்கறா மாதிரி லிங்க வடிவத்துலயும் வருவான்,  சித்தத்துல டான்ஸ் ஆடற அம்பலத்தரசனாகவும் வருவான்.

- இந்த ராக்ஷஸியோட அண்ணன் வக்ரனை அழிச்ச கோலத்துல மஹாவிஷ்ணு ப்ரயோகம் பண்ற ஸ்டைல்ல சக்ரத்தைக் கையில புடிச்சிண்டு இந்த கோவில் ப்ராகாரத்துல இருக்கார்.  பட்டர் அண்ணாவும் அன்பா துளசி, புஷ்பம், கேசரி ப்ரஸாதம் குடுத்தார்.  சாப்டு அங்கயே பைப்புல கை அலம்பிண்டோம்.

- பழமையான காலத்தில் புதைந்து அழிந்த மரங்கள் இந்த ஏரியால கற்கள், பாறைகளா மாறி அங்கங்க கிடக்கு,  அப்படி வலிமையான கரையைக் கொண்டதாலும், இதற்கு வக்கரைன்னு பெயர்.  கோவில்லேந்து ஒரு 1-2 கி.மீட்டர்ல இந்திய புவியியல் துறை இந்த கல்மரங்கள் நிறைந்த பூங்காவை பராமரிச்சிட்டு இருக்காங்க.  குழந்தைகள் நிச்சயம் போய், பார்த்து, தொட்டு தெரிஞ்சுக்க வேண்டிய இடம்.




5. சுத்தி, சுத்தி ஒரு வழியா பாண்டிச்சேரி வந்து சேந்தோம்.  வண்டிக்கு 300 ₹ க்குப் பெர்மிட் வாங்கிட்டு,  3-4 ஹோட்டல்கள் நெட், நேர்ல பாத்து, கேட்டு, பேசிப் பாத்தோம்.  மினிமம் 1500-2000.  நாங்க வர்றதுக்குள்ள பூஜை முடிஞ்சு பாண்டிச்சேரி ஸ்ரீ வேத புரீஶ்வரர் கோவில் நடை சாத்தியாச்சு.  அந்த கோவில் குருக்கள் அரசு அண்ணா தருமபுரம் சிவாகம பாடசாலைல படிச்சவர்,  சகஜமா பேசினார்.   மணக்குள வினாயகர் கோவில் யானை பின்னாடி தான் இருக்கு, கொஞ்ச நேரம் பாத்துட்டு, பக்கத்துல சற்குரு வெஜிடேரியன் ஹோட்டல்லயே தங்கிடுங்கோ.  நன்னா இருக்கும்னார்.  2500₹ 24 மணி நேரத்துக்கு, ஃப்ரீ வை-பை இன்டர்னெட், காலை காம்ப்லிமென்டரி பஃபே ப்ரேக் ஃபாஸ்ட்,  ரூம் அருமையா மெயிண்டெய்ன் பண்றாங்க,  சுகாதாரமா இருக்கு, வென்னீர், தண்ணீர், குடி நீர், கரெண்ட் ப்ரச்னை இல்ல, கார் பார்க்கிங் இருக்கு.  ட்ரைவர்ஸ் தங்க ஒரு ஹால் இருந்துது.  பாத்ரூமோட,  ஆனா அங்க பராமரிப்பு நல்லாவே இல்லைன்னார் டைசன்.  நாங்க லஞ்ச் முடிச்சிட்டு 2.00 மணி போல ரிசெப்ஷன்ல போயி நாங்க நாளைக்கு சாயந்தரம் 4 மணி போல தான் ரூம் காலி பண்ணுவோம்.  26 மணி நேரம் அட்ஜஸ்ட் பண்ணிப்பீங்களான்னு ரிக்வெஸ்ட் பண்ணினோம்.  மேனேஜர் ஓகே சொல்லிட்டார்,  சென்ட்ரலைஸ்டு ஏசி,

நாலு மணிக்கு எழுந்து கோவில், பீச், ஷாப்பிங் போலாம்னு நெனைச்சோம்,  எழுந்திருக்கும் போது மணி 5.30.  ரெடியாகி, வேதபுரீஶ்வரர் கோவில் தரிசனம் பண்ணினோம்,  மதியம் ஒரு அரை மணி நேரம் போல மணக்குள வினாயகர் கோவில் லக்ஷ்மி யானை கூட விளையாடியாச்சு.  பாகன் அண்ணா நெறையா விஷயங்கள் லக்ஷ்மியோட டைம் டேபிள், என்னென்ன, எப்பப்ப, எவ்வளவு சாப்பிடும், முதுமலை யானைகள் முகாம் உபயோகமா இருக்கா, இது பரம்பரை தொழிலா, இல்ல யார் வேணும்னாலும் ட்ரை !! பண்ணலாமான்னு கேட்டுனே போனோம்,  அவரும் எல்லாத்துக்கும் பொறுமையா பதில் சொன்னாரு.  இப்ப திருப்பி மணக்குள வினாயகர் கோவில் வாசல்ல யானை மேல என் பொண்ணையும், பையனையும் ஏத்தி வைச்சு சந்தோஷப்பட்டோம்.   பாஹுபலி பார்ட் 2 படம் வந்திருக்கு, பல போஸ்கள் அந்தப் படத்தோட சாயல்ல போட்டோஸ்ல பதிவாச்சு.  மணக்குள வினாயகர் வேதபுரீஶ்வரர் கோவில் மாதிரி இல்ல, கொஞ்சம் மாடல், லக்சுரி லுக்கு.  பாண்டிச்சேரி வி.ஐ.பி இல்ல, சும்மாவா.

பக்கத்துலயே அன்னை (அன்னை மிர்ரா அல்ஃபாஸா) ஆச்ரமத்துக்குப் போனோம்.  ஸ்ரீ அரவிந்தர் சமாதி, மேலயே அன்னை சமாதியும் உள்ளது,  குழந்தைகள் அனுமதி கிடையாது, ஃபோன் சைலண்ட்ல போட்டு கூட எடுத்துட்டுப் போகக் கூடாது,  ஆஃப் பண்ணி தான் எடுத்துட்டுப் போகனும், அப்படி, இப்படி நிற்கக் கூடாதுன்னு கொஞ்சம் பயமுறுத்தறாங்க.  ஃபாரினர்ஸ் இருக்கறதாலையோ என்னமோ தெரியல,  சமாதி தவிர வேறொரு இடமும் பார்வைக்கு இல்லை,  2-3 நிமிஷம் ஆச்சு, உள்ள போயி சமாதியை தரிசிச்சிட்டு வந்தோம்.  வறுகடலை வாங்கி சாப்டோம், இள நீர் குடிச்சோம்,  ரோடெல்லாம் அகலமே இல்ல, ரெண்டு பக்கத்துலயும் டூ வீலர், கார்ன்னு எல்லா எடத்துலயும் வண்டிகள் நிறுத்தி இருக்கு எல்லா இடத்துலயும்,  நம்ம ஊரா இருந்தா திடீர்னு ஒரு நாள் வந்து லாரில அள்ளிட்டுப் போயிருப்பாங்க, இங்க எப்படின்னு தெரியல.

6. வில்லியனூர் கோகிலாம்பா சமேத காமேஶ்வரர் கோவில்:  நல்ல குளம், நெறையா மீன்கள், பாத்துட்டு ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு வந்தோம்.  பாண்டிச்சேரிலேந்து ஒரு 10 கி.மீ இருக்கும்.  சத்குரு ஹோட்டல் காஸ்ட்லி,  மெட்ராஸ் சரவண பவன் ஆரம்பிச்சு வச்ச பழக்கம், தரம்ங்கிற பேர்ல காஸ்ட்லியா கொஞ்சூண்டு சாப்ட தராங்க இப்ப எல்லா ஹோட்டல்லயும்.  நாங்க வெளில ஒரு தரம் குறைந்த ஹோட்டல்லயே டின்னர் முடிச்சிட்டு தூங்கினோம்.

18 ஜூன், 2017, ஞாயிறு

காலை வெஜிடேரியன் பஃபே ப்ரேக் ஃபாஸ்ட்,  நாங்க தான் முதல் ஆளா போயி, கடைசி ஆளா வெளில வந்திருப்போம்னு நெனைக்கறேன்.  ஜூஸ், பால், டீ, காபி, கார்ன் ஃப்ளேக்ஸ், ப்ரட், பட்டர், ஜாம் (டோஸ்டருடன்!!), இட்லி, வடை, பொங்கல், வெஜிடபிள் ஊத்தப்பம், சப்பாத்தி, பூரி, கிழங்கு, சாம்பார், சட்னி வகைகள், தயிர்... நல்லா சாப்டோம்.  ஒன்னும் கெடுதல் பண்ணல.



7. திருக்காஞ்சி கங்கை வராக நதீஶ்வரர்:  பாண்டிச்சேரிலேந்து ஒரு 10 கி.மீ குள்ள இருக்கு, வில்லியனூர் போயி போனோம் நாங்க.  மஹாவிஷ்ணு வராக அவதாரம் செஞ்சப்ப, அவர் கொம்பால கீறின போது தோன்றின நதி, அதனால வராக நதி,  அகஸ்த்யர் பூஜை பண்ணின இடம்,  இப்ப கும்பாபிஷேகம் ஆகி இருக்கு,  நேத்து ராத்திரி எட்டு மணி ஆய்டுச்சு,  இது ஊருக்குள்ள விசாரிச்சுப் போகனும், கோவிலும் திறந்திருக்குமான்னு சந்தேகம் தான்னு சொன்னாங்க, வில்லியனூர் கோவில்ல, அதான் காலைல வந்தோம்.  இப்ப கட்டியிருக்கற சன்னதிகள்ல அகஸ்த்யருக்கும் தனியா ஒரு சன்னிதி, அவர் கையில குட்டி சிவலிங்கத்தை வெச்சிட்டிருக்கார், பக்கத்துலயே மனைவி லோபாமுத்திரை.  குருக்கள் டீம் பொறுப்பெடுத்து நல்லா செய்றாங்க.

வெள்ளம் வந்த போது ஸ்வாமி இந்த கரைலயும், அம்பாள் எதிர்க் கரைலயும் சேந்திட்டாங்க,  அவங்களுக்கு அங்கயே விஶ்வ நாதர் புதுசா ப்ரதிஷ்டை பண்ணி ஒரு கோவில், வராக நதீஶ்வரருக்கு  இந்தக் கரைல காமாக்ஷி, மீனாக்ஷி ப்ரதிஷ்டை பண்ணி ஒரு கோவில்.  கோவிலுக்கு எதிர்ல இருக்கறவங்களுக்குக் கூட ஸ்வாமி பேர சொன்னா தெரியல.  சிவன் கோவில்னு சொன்னதும், தோ ! ! ன்னு காமிச்சாங்க.

தரிசனம் முடிச்சிட்டு சுண்ணாம்பாறு போட்டிங் போனோம்.  புதுவை அரசு நிர்வாகம், 200₹ ஒரு டிக்கெட், பொண்ணுக்கு 130 ₹. போட்டுல சூப்பரா போனோம், ஒரு 5-10 நிமிஷப் பயணம்,  ஒரு தீவுல பாரடைஸ் பீச்சுன்னு இறக்கி விட்டாங்க.  பீச்சு தண்ணி சூப்பரா இருந்துது,  நானும், பொண்ணும் நல்லா ஆட்டம் போட்டோம்,  கரைலயே ஓசில ரெண்டு, மூணு ஷவர் பைப் இருக்கு,  நல்ல தண்ணில குளிக்க,  திரும்பி அங்கயும் குளிச்சோம்.  வெஜிடேரியனுக்கு சாப்ட ஒன்னும் இல்ல.  வெயில்,  ஷவர் தண்ணி நல்லா இருந்துது, குடிச்சோம்.  பாட்டு போட்டு, மழையில நனையறா மாதிரி ஒரு ஏற்பாடு,  ரெண்டாளடி ஒசரத்துக்கு உள்ள பெல்ட்ல கட்டி, உருட்டிட்டு போக ஒரு பெரிய காத்தடைச்ச பந்து,  வேடிக்கை பாத்துட்டு இன்னொரு போட்டுல ஏறி இக்கரைக்கு வந்தோம்.  போகும் போது லோயர் டெக்கு, வரும் போது அப்பர் டெக்கு பயணம்.  சுத்தி தென்னை மரங்கள்.


எங்கள ரூம்ல சாப்டு, தூங்க வெச்சிட்டு, மனைவி நைஸா வெளில ஷாப்பிங் போய்ட்டு வந்திட்டாங்க,  ஏக குஷி.

9. இரும்பை மாகாளம்:  மாலை 4 மணிக்குக் கெளம்பினோம்,  பாண்டிச்சேரி பீச் ரோடு நான் சின்னப் பையனா இருந்தப்ப, அப்பா கூட போனது.  அப்பாவோட நண்பர் சின்னப்பன் மாமா வீட்டுக்குப் போயிருந்தோம்,  அவங்க எங்களுக்கு முழு பாத்திர செட்டும் புதுசா வாங்கி இருந்தாங்க, நாங்க அவங்க வீட்டு சமையல் சாப்பிடனும்னு.  ஊர் சுத்தி காமிச்சாங்க.  இப்ப பீச் ரோடு இன்னும் அகலம் பண்ணியிருக்காங்க.  கப்பல்ல மணலைக் கொண்டு வந்து கொட்டி, இன்னும் அகலம் பண்ணிட்டு இருக்காங்க.  சுண்டல் சாப்டு, சறுக்கு மரம் வெளையாடிட்டு, கப் ஐஸ் க்ரீம் வாங்கிட்டு கார்ல ஏறிட்டோம்.

கடுவெளிச் சித்தர் ஒரு சித்தர்,  அவர் தொண்டை நாட்டு (காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஏரியாக்கள்) சிவ ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு வந்த போது, இந்த இடத்தில் வந்து தவம் செய்து கொண்டே இருந்தார்,  தவத்தின் உக்ரத்தால் மழையுமின்றி தவித்த மக்கள், மன்னனிடம் பயத்தால் முறையிட்டனர்.  மன்னனும் முனிவரை எப்படி தவத்திலிருந்து கலைப்பது என்று யோசித்து, கோவிலில் நாட்டியமாடும் தேவதாசியான வள்ளியிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்தான்.  புற்றுக்குள் இருந்த முனிவர் தினமும் அவர் கையில் விழும் அரச இலையை மட்டும் உண்டு கொண்டிருப்பதைக் கண்ட வள்ளி, அதற்குப் பதிலாக மாவில் செய்த அப்பளங்களைத் தினமும் கையில் வைத்துக் கொண்டிருந்தாள்.  நாளடைவில் உடல் கொஞ்சம் பெருத்த சித்தர், புற்று உடைந்து, தவம் கலைந்து எழுந்தார்.  மன்னனோடு, வள்ளியும், மக்களும் வறட்சியைப் போக்குமாறு வேண்ட, அவர் அருளால் மழை பொழிந்தது.

மன்னன் இதைத் திருவிழாவாகக் கொண்டாடி, கோவிலில் வள்ளியின் நடனத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தான்.  சித்தர் அவளை சிவ ஸ்வரூபமாகவும், நடராஜரின் நாட்யமாகவும் அனுபவித்து, லயித்திருந்தார்.  அப்போது அவள் காலில் இருந்து சிலம்பு கழன்று விழுந்தது,  உடனே பதறிப்போன சித்தர் ஓடிப்போய் மீண்டும் அதை எடுத்து அணிவித்து விட்டார்.  தாசியின் காலை சித்தர்  பிடித்ததும், பார்த்துக் கொண்டிருந்த மக்களும், மன்னனும் அதிர்ச்சி அடைந்தனர்.  அவரின் தூய்மையில், ஒழுக்கத்தில் சந்தேகம் கொண்டு, கோபித்தனர்.  சித்தர் உடனே சிவனைப் பார்த்து உனக்கு நடந்ததெல்லாம் தெரியாதா ?  என்று ந்யாயம் கேட்டார்.  சித்தருக்காக மனம் குளிர்ந்த சிவபெருமான், மக்களிடமும், மன்னனிடமும் கோவம் கொண்டார்.  சிவ லிங்கம் மூன்றாகத் தெரித்து விழுந்தது.  உடனே தங்கள் தவறை உணர்ந்து அனைவரும் சித்தரிடம் மன்னிப்பு கேட்டனர்.  அவரும் அவர்களுக்காக உடைந்த பாகங்களை ஒன்று சேர்த்து, தாமிரப் பட்டையால் கட்டியுள்ளார்.  இன்றும் இந்த மஹா காளேஶ்வர் அப்படியே உள்ளார்.

இந்த கதைகளெல்லாம் கோவிலில் இப்போது அழகாக செதுக்கப்பட்டுள்ளன.  குருக்கள் அழகாக பூஜை செய்து வைக்கிறார்.   ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது.





10. ஒழிந்தியாம்பட்டு:  இரும்பையிலிருந்து இந்த கோவில் அருகில் உள்ளது,  இதும் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.  ராஜா வேட்டையாடும் போது மானொன்றைத் துரத்திச் சென்றார்.  அது ஓடி ஓடி ஒளிந்தது.  அப்படி ஒளிந்திருந்த போது அம்பை ஒரு முறை எய்தார்.  மான் மறைந்து இரத்தம் ஒழுக சிவ லிங்கமாக மாறியது.   அதுவே ஒளிந்தியாம்பட்டு என்று மருவியது.  வாமதேவர் என்ற முனிவர் இங்கு ஓரிரவு அரச மரத்தடியில் துயிலிருந்தார்.  மறு நாள் காலை, அயர்ந்து உறங்கியதை நினைத்து,  நமக்கு ஒரு நாள் இந்த மரத்தடியில் உறங்கியதே இவ்வளவு சுகமாக இருக்கிறதே,  இந்த இடத்தில் எப்போதும் சிவபெருமான் இருந்தால் அவருக்கு எவ்வளவு சுகமாக இருக்கும் என்று நினைக்க, அவருக்கு அருள்வதற்காக அரசலீஶ்வரராக ஸ்வாமி இங்கு தோன்றினார்.






11. மரக்காணம்: ஒழிந்தியாம்பட்டிலிருந்து க்ராமங்களின் வழியாகக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சேர்ந்தோம்,  ரோடு ஓஷன் ஸ்ப்ரே ரிசார்ட்க்கு எதிரில் போய் சேர்ந்தது.  மரக்காணம் பூமீஶ்வரர் கோவில் சோழர் காலத்தைச்  சேர்ந்தது.  வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை சிவ பூஜை செய்து விட்டு தான் சாப்பிடுவேன் என்றாராம்.  அவருக்காக சிவ லிங்கம் ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்த மரக்கால் (அளக்கும் கருவி) ஒன்றை கவிழ்த்து வைத்து, சிவலிங்கம் போல் செய்து, அவரை அழைத்து, பூஜையை முடித்து, உணவளித்தார்கள்.  அதன் பின் அந்த மரக்கால் அந்த இடத்தில் இல்லை,  ஒரு ஸ்வயம்பு சிவலிங்கம் தோன்றி இருந்தது அங்கு.  மரக்கால் காணோம் என்றது நாளடைவில் மரக்காணம் என்றானது.

தரிசனம் முடித்து தாம்பரம் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம், இரவு 10.00.  நாளை ஆஃபிஸ். பை பை.


Jul 3, 2017

வடலூர் டூர்

தங்கை வசுந்தரா தேவிக்குக் கல்யாணம் செய்து இன்றைய சூழலின் இயல்பின்படி வருடங்களுக்குப் பிறது குழந்தை பிறந்திருக்கான், சந்த்ரசேகரன்.  தாயும், சேயும் நலம்.  தர்மபுரி கிட்ட பெரியாம்பட்டி ங்கிற ஊர்ல பரம்பரை வீட்ல இப்ப மாமனார், மாமியார் கூட இருக்கா.  சொந்தத்துல தான் கல்யாணம்.  எங்களுக்கும் நாள் வித்யாஸத்துல ரெண்டாவது குழந்தை, ராம ஶர்மா பிறந்திருக்கான்.  அதனால் இன்னும் குழந்தைங்க ரெண்டு பேரும் பாத்துக்கல.  இப்ப அங்க போறது தான் முக்ய நிகழ்ச்சி, மத்ததெல்லாம் அத சுத்தி.

02 ஃபிப்ரவரி 2017, வியாழக் கிழமை, வழக்கம் போல ஃபேமிலி ட்ராவல்ஸ், பெருங்களத்தூர் பசங்கள்ட ஒரு இண்டிகா எடுத்தாச்சு.  ட்ரைவர் ஜெய், சின்னப் பையன், ஆனா ஸ்பீடு ப்ரேக்கர், ஹை வேஸ் னு எல்லாத்துலயும் பொறுப்பா ஓட்டினார்.  செல் நம்பர் தான் நாதஸ்வர வித்வான் மாதிரி மாத்திட்டே இருந்தாரு.  இன்னும் எங்கெங்க போறது, எத்தன நாள் ரெஸ்ட், எதுவும் ப்ளான் பண்ணல.    பூந்தமல்லி, வண்டிக்கு பெட்ரோல் போட்டு, மோட்டல் ஹைவே ல லஞ்ச் முடிச்சுட்டு,  மாலை 6 மணிக்கு வேலூர் ஸ்ரீ புரம் தங்கக் கோவில் தரிசனம் செஞ்சோம்.  கோமாதா பூஜை, அம்பாள் தரிசனம்னு ஒருத்தருக்கு 300₹ டிக்கெட் வாங்கினோம்.  நல்ல திமிளோட இருக்கற நாட்டுப் பசுவுக்கு வேத மந்திரங்களை சொல்லி அரை மணி நேரம் போல பூஜை.  முடிஞ்சு அம்பாள் தரிசனம்.  போன், பை எல்லாம் வெளிலயே கவுண்டர்ல வாங்கி வெச்சிக்கறாங்க.  மூலஸ்தானம், அதற்கடுத்த மண்டபங்கள்ல இன்னும் சிட்டுக் குருவிகள நெறையா பாக்க முடியுது,  போன ஜன்மத்துப் புண்யமா, இல்ல ரிஷி, முனிவர்களான்னு தெரியல!!, தங்க வேளைப்பாடுகளுக்கு நடுவுல இவங்க விளையாடல்கள், கீச்சுக் குரல்கள்,  ரம்யமா இருந்துது.  தங்க வீடு, அதுவும் ஓசில எல்லாருக்கும் கிடைக்குமா என்ன ?  மூலஸ்தானத்த சுத்தி இருக்கற தண்ணி குளத்துல நம்ம மக்கள் நெறையா காசு போட்டிருக்காங்க,  தங்கக் கோவில் அம்பாளுக்கே!!

சேலத்துல ஸ்ரீ சரவண பவன்ல டின்னர் முடிச்சோம்.  பெரிய ஹோட்டல் க்ரூப் சேலத்துல, ஏற்காட்டு மலைமேல இருக்கற ப்ராஞ்ச்ல பாத்தோம்.  இட்லிய ப்ளாஸ்டிக் பேப்பர்ல மாவு ஊத்தி செய்றாங்க.  கடை முழுக்க போர்டுகள்,  நாங்க வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தரமான பொருள்கள பயன்படுத்தி உணவு வகைகளத் தயார் பண்றோம்னு.   ப்ளாட்ஃபார்ம், தள்ளுவண்டில கடை போடறவங்க கூட துணி பயன்படுத்தறாங்க, இல்ல இட்லி குக்கர்ல எண்ணெய ஊத்தி பண்றாங்க.    புலம்பியாச்சு, ஓகே, நைட் ஏற்கனவே புக் பண்ணியிருந்தபடி ஓகேனகல் தமிழ் நாடு டூரிஸம் ஹோட்டல்ல போய், ரூம்ல தூங்கியாச்சு, க்ளீனா இருந்துது,  நைட் 11-12 ஆய்டுச்சு, குடி தண்ணி குடுக்கத்தான் அங்க, இங்க ஓடினாங்க.  பெரிய இடம், நூறு கார் கூட நிறுத்தலாம்.  நல்லா தூங்கினோம்.

03 பிப்ரவரி, 2017.  காலை அருவிக்குப் போனா தண்ணி கம்மியா இருந்துது,  பரிசல் 12 வயதுக்குள்ள இருக்கற குழந்தைகள ஏத்திக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க.  ஜென்ட்ஸ் குளிக்கற எடத்துல நல்லா தண்ணி கொட்டிச்சு, போயி நானும், பொண்ணும் ஆட்டம் போட்டோம்.  லேடீஸ் குளிக்கற எடத்துல பைப்புல வர்றா மாதிரி தண்ணி விடறாங்க,   தண்ணி கம்மியா இருக்குன்னு பரிசல்ல போறதையும் நிறுத்திட்டாங்க.  குளிக்க தண்ணி இல்ல, பரிசல் இல்ல, வெஜிடேரியன் ஹோட்டல் ஒன்னு கூட இல்ல மொத்த ஒகேனகல்ல.  ஸ்னாக்ஸ் வாங்கினா குரங்கு பிடிங்கிட்டுப் போய்டுச்சு, தணைவி கொஞ்சம் அப்செட்.  நான்வெஜ் கடைகள், மீன் வெரைட்டி தான் எங்க பாத்தாலும்.  100₹ க்கு மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் வாங்கினோம்,  தமிழ் நாடு ஹோட்டல் வாசல்லயே ஒருத்தர் நீட்ட வாக்குல சூப்பரா போட்டுட்டு இருந்தாரு.  நேத்து ராத்திரி சேலத்துல சாப்டது.  குழந்தை ஹோட்டல்லயே அட்ஜஸ்ட் பண்ணி இட்லி, தோசை சாப்டா.  இனிமே இங்க இருக்கக் கூடாது, நை ட் டின்னர் முழுச்சாப்பாடு ஆர்டர் குடுத்தாச்சு தங்கச்சி கிட்ட.  சரியான பசி, டிஃபன் வேண்டாம்னு சொல்லியாச்சு.

இந்த அருவிக்கு எங்கிருந்து தண்ணி வருதோ, அங்க எங்கயாவது போய்க் காவிரி ஆத்துல குடும்பத்தோட குளிக்கலாம்னா,  ஒரு இடமும் தெரியல.  அப்பறம் ஒருத்தர் கிட்ட நடந்ததெல்லாம் சொல்லி ரிக்வெஸ்ட் பண்ணினோம்.  அவர் வீட்டுக்குப் பின்னாடியே கார மறைவா விட்டுட்டுப் போய்க் குளிச்சிட்டு வரச் சொல்லி, கதவத் திறந்து விட்டாரு.   வண்டிய அப்படியே விட்டுட்டு, அவர் வீட்டு பின்னாடி பாறைகளைத் தாண்டிப் போனோம்.  காய்ஞ்சி போன பாறைகளைத் தாண்டினா, ஒரு இருபது அடி அகலத்துக்கு காவிரியாறு அசைவில்லாம ஓடிட்டு இருந்துது,  இடுப்பளவு ஆழம், இழுப்பும் இல்ல, ஒண்ணும் இல்ல.  ஒரு மணி நேரத்துக்கும் மேல நல்லா ஆட்டம் போட்டோம்,  தண்ணிக்குள்ள மூழ்கி எண்ற வெளையாட்டு, தண்ணில பத்மாஸனம் போட்டு மெதக்கறது, ரொம்ப தூரம் மூழ்கிப் போறதுன்னு பல போட்டிகள் எனக்கும், என் பொண்ணுக்கும்.  முடிச்சு தண்ணிலேந்தே சந்த்யாவந்தனம்,  மாத்யாஹ்னிகம் (சூரிய பூஜை) செஞ்சு முடிச்சேன்.  அண்ணாதுரை ன்னு என் நண்பர் பக்கத்துல தான் ஊர்,  இப்போ காக்னிசன்ட்ல வேலை பாக்கறார்.  அவர் இங்க ஒன்னு, ரெண்டு இடங்களை சொல்லி இருந்தார்.  அதன் படி முதலைப் பண்ணைக்குப் போனோம்.  நம்ம வண்டலூர் பூங்கா, இன்னும் சில இடங்கள்ல இருக்கிற மாதிரி சிலையா இல்லாம கொஞ்சம் நகர்ந்து காண்பித்தன.  சைஸ் வாரியா, ஜாதி வாரியா வகைகள்.  தண்ணி கஷ்டம் கொஞ்சம்.  ஆனா ரொம்ம பக்கத்துல, கைக்கு எட்டற தூரத்தில்,  நமக்கும், அவைகளுக்கும் நடுவுல கம்பி, கண்ணாடி வேலி தான், ரொம்ப பக்கத்துல பாத்தோம்.  பக்கத்துல மீன் பூங்கா ஒண்ணும் இருந்துது.  5₹ டிக்கெட்.  மொத்தம் 2-3 மீன் தான் இருந்தது.  20-30 வெரைட்டி இருக்கும்னும், இப்ப இல்லன்னும் சொன்னாங்க.    அவ்ளோதான் ஒகேனகல் டூர்,  வந்த டயர்டுக்கு ரூம்லயே தூக்கம் போட்டோம்.  நா மட்டும் மதியம் ஒரு 3 மணி போல எழுந்து திரும்பவும் ஃபால்ஸ்ஸுக்குப் போயி, ஒரு மணி நேரம் சரியான குளியல், பூஜைகள்.    ராத்திரி சாப்பாட்டுக்கு பெரியாம்பட்டிக்குக் கெளம்பிட்டோம்.  வெளியே வர்ற வழில போலீஸ் நிறுத்தி, ட்ரைவர் போதைல இருக்காரான்னு செக் பண்றாங்க.  நம்ம பசங்கள்ட அந்த பழக்கம் எல்லாம் கிடையாது.  இன்னொரு க்ரூப்ப திரும்பவும் ஊருக்குள்ளயே அனுப்பிச்சிட்டாங்க.  நாங்க கெளம்பிட்டோம்.  இன்னும் மோடிஜீ யோட செல்லாக்காசுத் திட்டத்தோட பாதிப்பு குறையல.  பெரியாம்பட்டி ஏ.டி.ஏம் ல பணம் போட்ருக்காங்கன்னாங்க.  போயி நாலாயிரம் எடுத்துட்டு தங்கச்சி வீட்டுக்குப் போனோம்.  முழுச்சாப்பாடு, நல்ல வரவேற்பு.  சரியான தூக்கம்.

04 பிப்ரவரி 2017,  சனிக்கிழமை.  என் பையனுக்கும், தங்கை பையனுக்கும் ஒரே வயஸு, ரெண்டும் ஒரே அமர்க்களம்.   தங்கச்சி பொறுப்பா காலை டிஃபன், சாப்பாடு, பார்சல்னு தூள் கெளப்பிட்டா.  அத்தங்காவுக்கும், அத்தானுக்கும் நாங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்.  எல்லாருக்கும் ட்ரெஸ் எடுத்துக் குடுத்தாங்க.  திரும்பவும் வந்து, தங்கிட்டுப் போகச் சொன்னாங்க.  ரெண்டு பேருமே இன்னும் எங்க வயஸுப் பசங்க மாதிரி நல்லா நட்பு பாராட்டினாங்க.  மாப்ளை ஹிமாலயா ப்ராடக்ஸ்ல அதிகாரியா இருக்காரு.  அப்பா, பையனுக்கு ஊருக்குள்ள நல்ல மரியாதை,  எல்லா வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், ஐயப்ப பூஜைகளுக்கும் இவங்க தான் அங்க எல்லாமே.   தொடர்ந்து ஐயப்ப மலைக்குப் போறவங்க.  மாப்ளையும் எங்க கூட வந்தாரு.  அவர் கார சேலத்துல சர்வீஸ்க்கு விட்டிருந்தாரு.  சேலம் வரைக்கும் அவரே ஓட்டிட்டு வந்தாரு.  ட்ரைவர் ஜெய்க்கு ரெஸ்ட்டு,  பொதுவா வண்டிய யாருக்கும் குடுக்க மாட்டாங்க ட்ரைவர் எல்லாரும்.   பழக்கத்தால நம்பி குடுத்தாரு ஜெய்.  மாப்ளையும் அவர் நம்பிக்கைய காப்பாத்திட்டாரு.  அவர சேலத்துல எறக்கி விட்டுட்டு, நாங்க ஏற்காட்டுக்குப் போனோம்.  வீக் எண்டு,  ரூம் ஒன்னும் உருப்படியா கெடைக்கல,  மனைவி மெனக்கெட்டு இன்டர் நெட்டுல தேடி, ராயல் ரிசார்ட் ன்னு ஒரு எடத்தக் கண்டு பிடிச்சாங்க.  1000₹ ஒரு ஏசி டபுள் ரூம் 24 மணி நேரத்துக்கு.  நல்ல மேனேஜர்,  நல்ல சர்வீஸ் பாய்ஸ்,  போட் ஹவுஸ், சேர்வராயன் சினிமா தியேட்டர் கிட்ட தான் ரூம்,  வெஜ் சாப்பாடு வெளில சாப்டுக்கங்க சார் ன்னு மேனேஜர் ரிக்வெஸ்ட் பண்ணினாரு.  வெளிய ஒரு ரெண்டு ஒக்காந்துக்கறா மாதிரி ஊஞ்சல் போட்டிருக்காங்க.  நாங்க செட்டிலாயிட்டு,  தங்கச்சி குடுத்திருந்த பார்சல் எல்லாத்தையும் காலி பண்ணி, ஒரு குட்டி தூக்கம் போட்டோம்.  மாலை தெருப்பண்டங்கள் சாப்டுட்டு, பெடல் போட்டிங் போனோம்.  அந்த எடத்துக்குப் போக ஒரு டிக்கெட்டு, போட்டிங்க்கு தனியா ஒரு டிக்கெட்டு,  பெடல் போட்டிங் போகும் போதே கரைல புள்ளி மான்கள் வேடிக்கைப் பார்த்தோம்.   முடிஞ்சு 20 ₹ பஞ்சு மிட்டாய் குச்சில சுத்தி, சுத்தி ஃப்ரெஷ்ஷா ஒருத்தர் போட்டிட்டிருந்தார்.  2 வாங்கி சாப்டோம்.   போட்டிங் கரையிலயே ஒரு க்ரூப் டி-சர்ட்ல போட்டோ ப்ரிண்ட் பண்ணி சூடா தராங்க.  ஒரு டி-சர்ட் முன்னூறு ரூபாய்ன்னு ஞாபகம்.  ஒரு ஃபேமிலி போட்டோ புடிச்சி, ரெண்டு குழந்தைகளுக்கும் டி-சர்ட்ல ப்ரிண்ட் போட்டு வாங்கினோம்,  

நைட்டு சேர்வராயன் ஹோட்டல்ல டின்னர் முடிச்சுட்டு,  ஒருத்தருக்கு 100 ₹ சேர்வராயன் த்யேட்டர்ல டிக்கெட்டு,  ஃபேமிலி ஷோஃபா போட்டு இருக்காங்க,  தனியாவும் சீட்டு இருக்கு,  எங்க வேணாலும் ஒக்காந்துக்கங்க சார்,  உங்க இஷ்டம்னு சொல்லிட்டாரு டிக்கெட் கவுண்டர்ல.   பெரிய த்யேட்டர்,  பகல்ல, சம்மர்ல ஏசி போடுவாங்க போல இருக்கு,  எங்களுக்கு இப்பவே குளிர் தான்,   சூப்பர் த்யேட்டர்,  வாரக்கடைசில டெய்லி 5 ஷோ போல இருக்கு.  படம் போடற வரைக்கும், இன்டர்வெல், படம் முடிஞ்சதும்னு அருமையா எம்.ஜி.ஆர் கொள்கைப் பாடல்கள் ஸ்பீக்கர்ல,  எங்க வீட்ல எல்லாரும் எம்.ஜி.ஆர் ஃபேன்ஸ், என் குழந்தைங்க உட்பட,  வீட்ல டெய்லி கேட்ட பாடல்கள இங்க த்யேட்டர் ஸ்பீக்கர்ஸ்ல கேட்டதும் சரியான குஷியாயிட்டோம்.  மொத்தமா த்யேட்டர்ல 50 பேருக்குள்ள தான் இருப்போம்.   போகன் படம் பார்த்தோம்.   ஏற்காடு போற எல்லாருக்கும் நைட் இந்த த்யேட்டர்ல ஒரு படம் ரெகமெண்ட் பண்றேன்.  நல்ல சூழ்நிலை,  நல்லா என்ஜாய் பண்ணினோம் ட்ரைவர், பசங்க எல்லாரும்.  நைட் ரூம்ல தூக்கம்.

05 பிப்ரவரி, ஞாயிறு,
- ஊட்டி, கொடைக்கானல் ஒரே கும்பல், போரடிச்ச இடம், போயி ரெஸ்ட் எடுக்கணும் நெனைக்கறவங்களுக்கு ஏற்காடு பெஸ்ட்,
- 28 ஹேர் பின் வளைவுகள்,  நல்ல க்ளைமேட், பழ வகைகள், வெஜ் சாப்பாட்டுக்கு உள்ளூர், அப்பறம் சேலம் ஸ்ரீ சரவணா மாதிரி ஹோட்டல்கள்.
- சேர்வராயன் பெருமாள் கோவில் (காலை 7-8 மணிக்கு திறப்பாங்க, ஒரு 10-20 அடி மலைக் குகைக்குள்ள போகனும்  இந்த பெருமாள் பேர்ல தான் இந்த ஊர், மலை எல்லாமே),
- ரஜினி தரிசனம் பண்ணின நாகலூர் ஸ்ரீ சக்ர மஹா மேரு கோவில் ! ! (மூலஸ்தானத்து கோபுரம் மேரு வடிவத்தில இருக்கு),
- தென் இந்தியால இங்க மட்டும் இருக்கற தேசிய தாவரவியல் பூங்கா (பொட்டானிகல் கார்டன், பூச்சி சாப்பிடற செடி, அப்படி, இப்படின்னு நெறையா இருக்கு),
- காபித் தோட்டங்கள், மிளகுக் கொடிகள், தொப்பு, தொப்புனு விழற காட்டு பலாக்கள், நார்மல் மழை, குளிர்.
- போட் ஹவுஸ், குழந்தைகள் விளையாட பார்க்
- போட் ஏரி ரொம்பினா ! ! தண்ணி வழிஞ்சு, கிள்ளியூர் அருவிங்கற பேர்ல விழுது.  நெறையா படிக்கட்டுகள் எறங்கிப் போகனும்,  சரியா இன்னும் டீம் ரெடியாகல, அங்க தண்ணியும் இல்ல, அதனால போகல.
- முக்யமான விஷயம், பொதுவா மொத்த ஊரும் 8 மணிக்குத் தூங்கிடும்,   நைட்டு சுத்தற கும்பலுக்கு, ஐ.டி கம்பெனில வேலை பாத்து, லேட் நைட் சாப்பிடற கும்பலுக்கும்.  டீ, பிஸ்கெட் கூட கெடைக்காது.

மதியம் லஞ்ச் சேலத்துல முடிச்சுட்டு, வீட்டுக்கு வந்திட்டு மறுநாள்  வேலைக்குப் போகனும்.   எங்க போறது,  கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை தாண்டி வந்திட்டே இருந்தோம்.  அரசூர் ஜங்ஷன் ன்னு ஒரு இடத்துல போட்டாங்க ஒரு ட்விஸ்ட் என் துணைவி.  "வள்ளலார் கோவில் பாக்கனும்னு ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கோமே, இப்ப பாத்துட்டுப் போய்ட முடியாதா ?" ன்னாங்க.  வண்டி நின்றது. என் பொறியைத் தட்டி விட்டேன்.  எனக்கும் ரொம்ப வருஷமா, குழந்தையா இருக்கச்சேலேந்தே !! இப்டி இந்த ரூட்ல அடிக்கடி மெட்ராஸ்க்கு வந்திட்டு, வந்திட்டுப் போறோமே, வழில எவ்ளோ பாடல் பெற்ற ஸ்தலங்கள், இந்த சிவன் கோவிலையெல்லாம் எப்ப பாக்கப் போறோம்னு ஒரு ஏக்கம்.  இப்ப போனா வடலூர் வள்ளலார் கோவில் பாக்கவும் முடியாது.  மணி மாலை 5-5.30.  ஜெய் கிட்ட இன்னும் ஒரு நாள் போலாமா ன்னேன்.  அவரும் ஓகே சொல்லிட்டாரு.  அப்டியே ஒரு லிஸ்ட் ரெடி.  வண்டிய லெஃப்டுல விட்டோம்.  ஏற்கனவே ஒகேனகல், ஏற்காடு ரெண்டு ஊரு முடிஞ்ச்சுதா, ஒரு 5-10 கி.மீட்டர் குள்ள, திருவெண்ணெய் நல்லூர்.

3. திருவெண்ணெய் நல்லூர்:  ஒரு ஃப்ளாஷ் பேக், எப்பப்பாத்தாலும் சுடுகாட்டுல டான்ஸ், ஒடம்பு ஃபுல்லா அந்த சாம்பல், யானை, புலித் தோலுன்னு ட்ரெஸ், விஷப்பாம்புகள், மண்டை ஓட்டுல அலங்காரம், சடை புடிச்ச முடி,  தலைல எப்பப்பாத்தாலும் தண்ணி,  காளை மாட்டுல பவனி - இப்படி ஒருத்தர் இருந்தா மனைவிக்கு எப்படி இருக்கும்,  அதுவும் பணக்கார வீட்டுல பொறந்த பொண்ணு.  இதான் சிவன் நிலைமையும்.  அவரும் உலகத்துக்காக ஒரே ஒரு நாள் மஹாவிஷ்ணு மாதிரி ஸர்வ அலங்காரத்தோட அழகு பண்ணிட்டு கண்ணாடில போய்ப் பாத்தாரு.  அவர் அழகுல அவரே சொக்கிட்டாரு.  சுந்தரா, வா!! ன்னார், கண்ணாடில இருந்த பிம்பம் உருவத்தோட வெளில வந்துது.  இவர் திரும்ப தன்னோட பழைய அலங்காரத்துக்கே போய்ட்டார்.  சுந்தரர் சிவ கைங்கர்யம் பண்ணிட்டு இருந்தாரு.  ஒரு நாள் அவருக்குப் பெண்ணாசை அரும்பியிருக்குன்னு தெரிஞ்சிட்ட, சிவ பெருமான் பூலோகத்துல போய் இல்லற தர்மத்தை அனுபவிச்சுட்டு வா! ன்னு கட்டளை போட்டுட்டார்.  ஸுந்தரர் இனிமே இந்த மாதிரி நடக்காது, என்ன மன்னிக்கனும்னு கேட்க, சிவன் முடியாதுன்னுட்டார்.   உடனே சுந்தரர், சரி, நான் பூலோகத்துல பிறக்கிறேன்,   ஆனா நான் அங்க குடும்ப வாழ்க்கைல முற்படும் முன் நீங்க வந்து என்னைத் தடுத்து ஆட்கொள்ளனும்னு வரம் கேட்டார்.  அப்படி அவரை பூலோகத்துல தடுத்தாட்கொண்டு அருளின ஊர் தான் இந்த ஊர்,  அதற்குச் சான்றாக அங்க சிலைகள், சுதைகள் எல்லாம் இருக்கு,  ஏ.பி. நாகராஜன் இயக்கியபழைய திருவருட்செல்வர் படத்துல இந்தக் கதைய சுருக்கமா, அழகா படமாக்கியிருப்பாங்க.  சுந்தரர் சிவனைப் பார்த்து "பித்தா! பிறைசூடி!!" ன்னு பாடின திருத்தலம்.  ப்ரதோஷ காலத்துல இந்த ஸ்தல தரிசனம் முடிஞ்சு, திரும்பி பண்ருட்டி, நெய்வேலி வந்தோம்.

வடலூர் இன்னும் போனதில்ல, அங்க தங்க, தூங்க, திங்க எல்லாம் வசதிகள் எப்படி இருக்கும், தரிசன நேரங்கள் எதுவும் தெரியல.  கோவில் தொடர்புக்கும் ஒரு நம்பரும் உருப்படியா இல்ல.  ஒழுங்கா பதில் கிடைக்கல.  நண்பர் ரகுனாதன் திருவேங்கடாச்சாரிக்கு நெய்வேலி தான் ஊர்.   இப்ப, இந்த போஸ்ட் போடறதுக்கு முந்தின வாரம் தான் கல்யாணம் ஆகி இருக்கு அவருக்கு, சென்னைல பிசினஸ் அனலிஸ்ட்டா இருக்கார்.  இன்டஸ்ட்ரி, வெவ்வேற டொமைன்,  கொஞ்சம் டெக்னாலஜின்னு மனுஷன் பூந்து விளையாடுவாரு.   அருமையா க்ளையண்ட்ஸ ஹேண்டில் பண்ணுவாரு.  ஒன்னு, ரெண்டு ப்ராஜெக்ட்ல அவர் கூட வேலை பாத்திருக்கேன்.   அவருக்கு ஃபோன் போட்டு ஐடியா கேட்டோம்.   அவரு நெய்வேலிலேந்து வடலூர் 10-15 நிமிஷம் தான்.  இங்கயே தங்கிட்டு காலைல அங்க போயிக்கலாம்னு சொல்லிட்டு, நெய்வேலிலயே ரெண்டு, மூணு ஹோட்டல் சொன்னார்.  போயி விசாரிக்கறதுக்குள்ள 10-20 நிமிஷத்துல அவங்க அம்மா கிட்ட பேசி, அவங்கள எங்களோட பேச விட்டுட்டார்.    நெய்வேலி டவுன்ஷிப்ல தனி வீடு,  வீட்ட சுத்தி முக்கனிகளுடன் தோட்டம்.   இங்க வந்திட்டு, எங்க போய், ஏன் வெளில தங்கனும்னு சத்தம் போட்டு, வீட்டுல வந்து தங்கிட்டுப் போக சொல்லிட்டாங்க.  கொஞ்சம் கூட முன்னறிவிப்பில்லாம, வெறுங்கையோட அவங்க வீட்டுல போயி தூங்கினோம்.  நைட்டு எல்லாருக்கும் குடிக்க பால், உபசரிப்புகள்.  தாத்தா எங்களுக்காக முழிச்சிட்டு இருந்து எங்களோட பேசிட்டுத் தான் தூங்கப் போனார்.  பாட்டி காலங்காத்தால எழுந்து பெருமாளுக்குப் பூஜை, ஶ்லோகம் எல்லாம்.   அப்பா காலைல தான் மதுரைலேந்து வந்தார், வரும்போது, குழந்தைகள் வந்திருக்குன்னு பலகாரம் எல்லாம் வாங்கிட்டு வந்திட்டார்.

06 பிப்ரவரி, 2017, திங்கட்கிழமை.

4. நெய்வேலி நடராஜர்:  ஐம்பொன்னாலான சிலைகளில் உலகில் பெரிய சிலைகளில் இங்குள்ள நடராஜர் சிலை குறிப்பிடத்தக்கது.  10 அடிக்கும் மேல் இருக்கும் ப்ரம்மாண்டமான நடராஜர் சிலை,  நெய்வேலி டவுன்ஷிப்ல இருக்கும் இந்தக் கோவில் இருக்கற ஏரியாவ சிவபுரம்னே அழைக்கின்றனர்.  63 நாயன்மார்களுக்குத் தனியா கோவில்.  காலங்காத்தால இப்படி ஒரு சிவ தரிசனம்.

5. வடலூர் வள்ளலார்:  நெய்வேலிலேந்து வடலூர் சத்ய ஞான சபைக்குப் போனா,  அங்க திருமுறை பாடிட்டு இருக்கறவங்க 11 மணிக்கும், மாலை 7 மணிக்கும் தான் நடை திறப்பாங்கன்னு சொன்னாங்க.  மணி இப்பத்தான் 9-9.30 ஆகுது.  ராமலிங்க அடிகள் காலத்துல வாழ்ந்த எங்க அப்பா வழி தாத்தாவும், அவரும் ரொம்ப நெருங்கின நண்பர்கள்.  எங்க தாத்தாவும் ரொம்ப ஆசார சீலர், வள்ளலார் அரூப வழிபாட்டுக்குப் போகும் முன் தான் பூஜித்த விக்ரஹத்த, தாத்தா கிட்ட கொடுத்துட்டு, பூஜையத் தொடர சொல்லிட்டுப் போயிருக்கார்.  இன்னும் எங்க வீட்டு பரம்பரை பூஜைல அந்த விக்ரஹம் முக்ய இடத்துல இருக்கு.   அதனால எங்களுக்கு வள்ளலார் மேல தனி இஷ்டம்.  அவர் சித்தி அடைந்த மேட்டுக்குப்பம்ங்கிற ஊருக்குப் போனோம்.  3-4 கி.மீட்டர்ல இருக்கு அந்த வீடு,  அவர் த்யானத்துல இருந்து, சித்தி அடைஞ்ச ரூம் பூட்டி இருக்கு,  வருஷத்துல முக்ய நாட்கள்ல தான் திறக்கறாங்க.  அந்த நாட்கள் குறிச்சிருந்த காலண்டர் ஒன்னு 20₹, ரெண்டு வாங்கிக்கிட்டோம்.   இன்னும் ரெண்டு நாள்ல இந்த வருஷத்து தைப்பூசம், இந்த வீடு, அந்த சபைன்னு எல்லா இடமும் கோலாகலத்துக்குத் தயாராயிட்டு இருக்கு.  11 மணிவாக்குல திரும்பி சபைக்கு வந்தோம்,  பூஜை ஏற்கனவே ஆரம்பிச்சு நடந்திட்டு இருந்துது.  அடிகளார் முதல் கதவுகளைத் திறந்து வச்சு, அங்க இருந்த ஒரு அணையா தீபத்துக்குப் பூஜை, தீபாராதனை எல்லாம் பண்ணிட்டு இருந்தார்.  30 நிமிஷங்கள், இந்த பூஜைக்கே ஒரு 200-300 பேர் கூடி இருந்தாங்க.  ஆம்பள, பொம்பளன்னு நெறையா பேர் அடிகளார் கூடவே திருமுறைகளப் பாடிட்டு இருந்தாங்க.  பூஜை முடிஞ்சு எல்லாருக்கும் தூள் வெல்லம் ப்ரசாதமா குடுத்தாங்க.  வாங்கிட்டு, இன்டர்நெட், ஃபோன் எதுலயுமே சபை பூஜை காலங்கள் பத்தி நேரங்கள் சரியா கிடைக்க மாட்டேங்குது, கொஞ்சம் சரி பண்ணுங்க, எங்கள மாதிரி வெளியூர்லேந்து முதல் தடவ வர்றவங்களுக்கு உபயோகமா இருக்கும்னு சொல்லிட்டு வந்தோம்.

6. வ்ருத்தாசலம்:
- இந்த ஏரியால இருக்கற அருமையான பெரிய கோவில்
- ஊருக்கு ப்ரதானமா இருக்கு.
- வடலூர்-வ்ருத்தாசலம் ரோடு தைப்பூசத்துக்காக வழக்கம் போல டெம்ப்ரவரியா ரெடியாயிட்டு இருக்கு.  இப்படி எல்லாரையும் வாழ வைக்கறார் வள்ளலார் ! !
- வழி நெடுக மாமரங்கள் ரெண்டு பக்கத்துலயும்,  நெறையா மாவடு பொறுக்கி சாப்டோம்.
- அசலம் ன்னா மலை, வ்ருத்த - முதுமை,  எல்லா மலைகளையும் விடப் பழமையான தலம்.
- பாடல் பெற்ற ஸ்தலம்
- 18 படிகளுக்குக் கீழே இருக்கார் ஒரு பிள்ளையார் இங்க,  ஆழத்து வினாயகர் ன்னு.
- அருமையான சுதை, சிற்ப கோபுரங்கள்.
- சிவபூஜையில் முக்யமாக 28 முறைகள் உண்டு,  இங்கு அந்த ஒவ்வொரு முறைக்கும் ஒரு சிவன் என ப்ரதிஷ்டை செய்து, தகப்பனாரை வழிபட்டுள்ளார் வேலவர்.  அதற்கென்று தனி சன்னதியே உள்ளது பெயர்களோடு.
- ஆத்துல போட்டுட்டு, குளத்துல தேடின கதைன்னு ஒரு பழமொழி.  திருவாரூரில் கைங்கர்யம் செய்ய எல்லா இடத்துலயும் பொருள் வேண்டிப் பெற்றுக்கொண்டிருந்த சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள், இந்த ஊருக்கு வந்த போது, இந்த ஊர் ஸ்வாமி அவருக்கு ஆயிரக்கணக்குல பொன் குடுத்தார்.  சுந்தரருக்கு ஒன்னும் புரியல, இல்ல தலைகால் புரியல, ஒன்னு இது நெஜம்தானான்னு, இன்னொன்னு இத எப்படி திருவாரூர் வரைக்கும் திருடங்க கிட்ட மாட்டாம எடுத்திட்டு போறதுன்னு.   அப்ப திருடறதுக்குன்னு தனியாவே ஒரு கும்பல் இருந்திருக்கு!! ஸ்வாமி பிள்ளையார சாக்ஷியா வச்சிட்டு, தங்கத்தை உரசி, சுத்தத்தைக் காமிச்சார்,  மாற்றுரைத்த பிள்ளையார்னே இங்க ஒரு சன்னிதி இருக்கு.  திருடங்க ப்ரச்னைக்கும் ஸ்வாமி ஒரு வழி பண்ணி குடுத்தார்.  பக்கத்துல ஓடற மணிமுத்தாறு நதில அத்தனை தங்கத்தையும் போட்டு,  திருவாரூர் குளத்துல போய் எடுத்துக்கோ, அனுப்பிச்சி வைக்கறேன்னார்.   கொரியர், இல்ல கார்கோ !! அப்படியே செஞ்சார்,  அன்னிலேந்து வந்தது இந்த பழமொழி.

7. புவனகிரி: மாத்வ சம்ப்ரதாய முக்ய குருவான ஸ்ரீ ராகவேந்த்ரர் பிறந்த ஸ்தலம்.  அருமையா பழமை மாறாமல் வெச்சு, பராமரிக்கறாங்க.  தரிசனம் செஞ்சிட்டு, அங்கயே ஒரு ஹோட்டல்ல லஞ்ச் முடிச்சோம்.

8. பிச்சாவரம் தில்லை வனக் காடுகள்( மாங்க்ரோவ் ஃபாரஸ்ட், சதுப்பு நிலக் காடுகள், அலையாத்திக் காடுகள்):  இந்த தில்லை மரங்கள் நெறையா இருந்ததாலையே சிதம்பரத்துக்குத் தில்லைன்னு ஒரு பெயர்.   ரொம்ப அரிய காடுகள்,  இந்தியால ரெண்டு, மூணு எடத்துல தான் இருக்கு.  இந்தக் காட்டுகளுக்குள்ள போட்டிங் கூட்டிட்டுப் போறாங்க, தமிழக சுற்றுலாத் துறையினர்.  நாங்க துடுப்புப் போட்டுல போனோம்.  ஒரு மணி நேரம்னு நெனைக்கறேன்.  நல்ல அடர்த்தியான மரங்களுக்குள்ள பயணம்,   மருத்துவ குணம் கொண்டவை என 30, 40 க்கும் மேற்பட்ட தாவரங்கள், மரங்கள்.  வித, விதமான பறவைகள்,  இன்னும் கொஞ்சம் காசு, இன்னும் கொஞ்சம் தூரம்னு ஆசை காட்டினார் துடுப்பாளர்.  போனவரை போதும், குழந்தைங்க இருக்காங்கன்னு வந்துட்டோம்.  கோவில், கோவில்னு ஸ்தல புராணம் பாடினதுக்கு என் பொண்ணுக்கும் இந்த இடம் ஒரு த்ரில்லிங் அனுபவம்.

9. திருவதிகை:  கடலூர் ஏற்கனவே போயாச்சு, திரும்பி வந்த வழிலயே போனா திருவதிகை தரிசனம் பண்ணிட்டுப் போலாம்.  ஆனா மணி இப்பவே மாலை 4,  வேண்டாம், இன்னொரு சமயம் பாத்துக்கலாம்னுனு விழுப்புரம் நோக்கிக் கெளம்பினோம்.  பண்ருட்டி கிட்ட டேக் டைவர்ஶன், டேக் டைவர்ஶன்னு திருப்பித் திருப்பி விட்டிட்டிருந்தாங்க ஏதோ ரோடு வேலை நடக்குதுன்னு,  பாத்தா வழில திருவதிகை வீரட்டானேஶ்வரர் கோவில்னு போர்டு.  போட்டோம் ப்ரேக்க.
- பாடல் பெற்ற ஸ்தலம்
- அஷ்ட வீரட்டத் தலங்களில் ஒன்று (சிவன் கோபங்கொண்ட எட்டு இடங்கள்):  திரிபுர ஸம்ஹாரம் நிகழ்த்திய ஸ்தலம்.  தாருகன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்களும் பெரும் தவத்தால் வரங்களைப் பெற்றனர்.  மனதால் நினைக்குமிடத்திற்கு உடனே பறந்து செல்லும் ஊர்களை  தங்கம், வெள்ளி, இரும்பால் முறையே அமைத்துக் கொண்டனர்.  இந்த திரி புரங்களும் சேரும் இமைப் பொழுதில், சிவனைத் தவிர வேறாராலும் அழிவில்லை என்ற இருமாப்பில் எல்லாரையும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு துன்புறுத்தி ஆண்டு கொண்டிருந்தனர்.  தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் அவர்களை அவ்வாறே அழித்த இடம் இதுவே.
- மற்ற வீரட்டத் தலங்கள்: தஞ்சை கண்டியூர் - அகந்தை கொண்ட ப்ரஹ்மாவின் சிரத்தைக் கொய்த ப்ரஹ்ம சிர கண்டீஶ்வரர், விழுப்புரம் திருக்கோவிலூர் - அந்தகாசுரனை வதைத்த வீரட்டேஶ்வரர், நாகை திருப்பறியலூர் (பரசலூர்)- தக்ஷன் தலையைக் கொய்த இடம்,  நாகை திருவிற்குடி - ஜலந்தராசுரனை வதைத்த இடம்,  நாகை திருவழுவூர் - தாருகா வனத்து முனிவர்கள் யாகத்தில் வெளிப்பட்ட யானையைக் கிழித்துக் கொன்று, அதன் தோலைப் போர்த்திக் கொண்ட கஜ ஸம் ஹார மூர்த்தி,, நாகை திருக்குறுக்கை - மன்மதனை எரித்தது, நாகை திருக்கடவூர் - காலனைக் காலால் உதைத்தது.
- சமண மதத்தில் தீராத வயிற்று வலியை,  திலகவதியார் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, அவரது தம்பி மருள் நீக்கியாருக்குத் (அப்பர், நாவுக்கரசர், வாகீசர்) தன் திருநீற்றால் தீர்த்து ஆட்கொண்ட ஸ்தலம்.

10. திண்டிவனம்: திந்திரி வனம் (புளியங்காடு) திரிந்து திண்டிவனம் என்றாயிற்று,  திந்திரிணீஶ்வரர்,

இந்த மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் மட்டும் நைட் 8.15 க்குப் போனோம், பூட்டி இருந்துது,  அடுத்த டூர்ல காலை 6.30 க்குப் போனோம், பூட்டி இருக்கு,  பார்ப்போம்  எப்ப தரிசனம் கிடைக்கறதுன்னு.  மீண்டும் சந்திப்போம்.


Jun 27, 2017

ராமேஸ்வரம் டூர்

புதுக்கோட்டை கணபதிக்குக் கல்யாணம் ஜூன், 6, 2016 திங்கட்கிழமை, புதுக்கோட்டைல ஒரு பெரிய ஏசி கல்யாண மண்டபத்துல.  நல்ல பையன், மெக்கானிகல் இன்ஜினியர்,  கொஞ்சம் ரூல்ஸ், ப்ராஸஸ் ஃபாலோ பண்றவன்.  மெஜாரிடி பசங்க போல ஐ.டி ஃபீல்டுக்குத் தாவாம, அவன் ஃபீல்டுலயேதான் இருப்பேன்னு சாதிச்சும் காமிச்சவன்.  அவங்க வீட்ல அம்மா, தங்கைன்னு எல்லாருக்கும் எங்க மேல ஒரு ப்ரியம்.  இந்துக் குடும்பங்கள்ல, மெயினா ப்ராமின் குடும்பங்கள்ல எந்த ஒரு முக்ய கார்யத்துக்கும் முன்னாடி, அவங்க குடும்பத்துல சுமங்கலியா இறைவனடி சேர்ந்தவங்கள நினைச்சு ரொம்ப ஆசாரமா ஒரு ஃபங்க்ஷன் நடத்துவாங்க.  சொந்தத்துல இல்லாத ஒரு சுமங்கலி, ஒரு கன்யா குழந்தைய (பெரியவளாகாத பெண் குழந்தை) அழைச்சு, அவங்களுக்கு ட்ரெஸ்ஸு, மஞ்சள், மருதாணி, எண்ணெய்க் குளியல்னு ஏற்பாடு பண்ணி, அம்ருதமா ஒரு கல்யாண சாப்பாடும் செஞ்சு போட்டு மரியாதை பண்ணுவாங்க.  அந்த கௌரவத்துக்கு என் மனைவியும், பொண்ணும் செலக்ட் ஆகி இருந்தாங்க.  கூடவே எனக்கும் அட்டெண்டர் பாஸ்!!. 3 ஜூன் 2016, வெள்ளிக் கிழமை அந்த சுமங்கலி ப்ரார்த்தனை புதுக்கோட்டை அவங்க வீட்ல.

02 ஜூன் 2016, வ்யாழக்கிழமை, பொண்ணுக்கு இடது கை கொஞ்சம் ஃப்ராக்சர் மாவு கட்டு போட்டு இப்பதான் ரெண்டு வாரம் ஆகுது,  திருப்பி இன்னிக்கு செக்கப் க்குப் போகணும்.  இன்னும் ஒரு வாரம் இருக்கட்டும்னு சொல்லிட்டார் டாக்டர்,  பரவாயில்லன்னு கெளம்பியாச்சு படுத்துனு போற ஏசி பஸ்ல, நல்லா ஃபேமிலி ரூம் மாதிரி இருக்கு.  நாங்க மூணு பேரும் படுத்துக்கலாம்.  ராம் குட்டிக் குழந்தை, இன்னும் 2 வயசு கூட ஆகல, அட்ஜஸ்ட் பண்ணிப்பான்.

03 ஜூன் 2016, வெள்ளிக்கிழமை.  காலை 6 - 7 மணி போல புதுக்கோட்டை வந்து இறங்கியாச்சு.  கணபதி வந்து அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனார்.  முக்கனிகள் உட்பட செடிகள், மரங்கள் இருக்கு, சொந்த வீடு.  நல்ல உபசரிப்பு, குளிச்சு, பூஜையெல்லாம் முடிஞ்சு சாப்டாச்சு.  நாள்னிக்கு கல்யாணம், நாளை மாலை மாப்பிள்ளை அழைப்புக்குள்ள எங்கயாவது போய்ட்டு வந்துடலாம் டேக்ஸி தேடி போனோம்.  ரெண்டு, மூணு எடத்துல விசாரிச்சு, ஒரு அம்பாஸடர் ஏசி கார் புடிச்சோம்,  ரொம்ப வருஷங்களாச்சு அம்பாஸடர்ல போயி, 10 கி.மீட்டருக்கு ஒரு லிட்டர் போடனும், ட்ரைவர் பேட்டா, டோல், எல்லாம் தனின்னு ட்ரைவர் மாமா சொல்லி பேசி ஒரு 2.30 மணிபோல மதியம் கிளம்பினோம்.  புதுக்கோட்டை வெள்ளரிப் பிஞ்சு, நுங்கு ஃபேமஸ்.  இப்பதான் சாப்டிருந்தா, நுங்கு தோலோட சாப்டா வயித்துப் புண் ஆறும், உடம்புக்கு நல்லதுன்னு சொல்லி ரெண்ட திணிக்க, ஏசி கார்லயே வாந்தி என் பொண்ணு.  நல்லா வெச்சிருந்தார் கார, டர்க்கி டவல் போட்டு,   ஆனா கோவிச்சுக்கல ட்ரைவர் அண்ணா,  40-50 வயதிருக்கும், அவரும் கல்யாணம், குழந்தைகள்னு நல்லா பக்குவப்பட்டவர்,  தண்ணி எடுத்து, குழந்தைய க்ளீன் பண்ண ஹெல்ப் பண்ணினார்.  எனக்கும் மனைவி கிட்ட நல்லா திட்டு விழுந்துது.  கச்சேரி முடிஞ்சு கிளம்பினோம்.

1. குன்னக்குடி: குன்றக்குடி ஆறுமுகன் வள்ளி, தெய்வானையோடு இருக்கிறார்.  சின்ன மலை தான்.  ஓடிப்போய் பாத்துட்டு வந்தோம்.

2. பிள்ளையார்ப் பட்டி பிள்ளையார்: குன்றக்குடிலேந்து ஒரு 5 கி.மீட்டர்ல மலையக் குடைஞ்சு இந்த உட்கார்ந்திருக்கற பிள்ளையார 6 அடி உயரத்துக்கு செஞ்சிருக்காங்க.

3. திருத்தளி நாதர், திருப்பத்தூர் - பாடல் பெற்ற ஸ்தலம், தரிசனம் முடித்தோம்.

4. திருவாடானை:  பாடல் பெற்ற ஆதிரத்னேஶ்வரர், போன தடவை கும்பாஷேகம் நடந்த போது, வேத பாராயணத்துக்கு நானும் போயிருந்தேன்.  இப்போது மீண்டும் குடும்பத்தோடு,  நாங்க உள்ள ஓடிப் போய் பள்ளியறை தரிசனம் ஆனதும், இரவு கோவில் நடை  சாத்தப்பட்டது.

5. திருவெற்றியூர்:  இது சென்னைல இருக்கற திருவொற்றியூரில்லை.  இது திருவெற்றியூர்.  பக்கத்துல இருக்கற குளத்தூர் க்ராமம் தான் எங்க அம்மாவோட பூர்வீகம்,  அவங்க ஒரு பெரிய ஜமீன்தார் குடும்பத்துப் பெண்.  க்ராமம் கணக்குல நிலங்கள், இவங்க பொறந்த வருஷம் மழை பொழிஞ்சு, விளைச்சல் அமோகமா இருந்ததாலயே இவங்களுக்கு தான்ய லக்ஷ்மி ன்னு ஒரு பெயர்.  சின்னக் குழந்தையா இருக்கும் போதே இந்த ஊரைக் காலி பண்ணி சென்னை, அங்க, இங்கன்னு மொத்த குடும்பமும் பிரிஞ்சுப் போச்சு.  40-50 வருஷமா பாக்காம விட்டு, இப்ப ஒரிஜினல் பத்திரங்கள் மட்டும் இன்னமும் தாத்தா R.S. மஹாலிங்கம் பேர்ல இருக்கு,   ஒன்னும் முறையா பதில்கள் இல்ல குத்தகைக் காரங்க கிட்டேந்து.  அவங்களுக்கு ஏப்பம், சொந்தக் காரங்களுக்கு ஏக்கம், மாமா ஒரு கோவில்ல வேலை பாத்திட்டு இருக்கார், இவங்க கிட்டேந்து எதாவது கிடைக்குமாங்கறது ஆண்டவன் கட்டளை.

சரி, கோவிலப் பத்திப் பாப்போம்.  பாடல் பெற்ற ஸ்தலம், மொத்த சிவகங்கைச் சீமைக்கும் பாகம் பிரியாள் கோவில்னா ரொம்ப ப்ரசித்தம்,   மஹாபலியக் காலால மிதிச்சதால மஹாவிஷ்ணுவுக்கு கால்ல புற்று நோய் வந்தது,  பல கோவில்கள்ல சிவபூஜை செஞ்சு, கடைசியா இங்க வந்து வாசுகி தீர்த்தம் ங்கற கோவிலுக்கு எதிர்க்க இருக்கற குளத்துல குளிச்சு, பழம்புற்று நாதரைப் பூஜை பண்ணி, தன் நோயைப் போக்கிக் கொண்டார்.

அம்பாள் கோவில் நடை சாத்தியாச்சு, ஏற்கனவே செஞ்சிருந்த ஏற்பாட்டின் படி, கோவில் குருக்கள், மணிகண்டன் அண்ணா ஆத்துல ராத்திரி சாப்டுட்டுத் தூங்கினோம்,  பசங்க அண்ணா பசங்களோட நல்ல விளையாட்டு.  பூரணமா சைவ ஆகம முறைகள, முறையா படிச்சவர்.  சித்திரை மாசம் நடக்கற 10 நாள் கோவில் உற்சவங்களும் எங்க அம்மா வழி தாத்தா, அவங்க குடும்பமும் தான் பண்ணிட்டு இருந்தாங்க.    ரொம்ப பழக்கம் அதனால.  நைட்டு தூக்கம் மொட்டை மாடில.

04 ஜூன் 2016, சனிக் கிழமை,  காலை 5 மணிக்கு எழுந்து வாசுகி தீர்த்தத்துல ஒரு நீச்சல் குளியல், பாகம்பிரியாள், வல்மீகனாதர் (பழம்புற்று நாதர்) தரிசனம்.  புறப்பாடு.

6. உப்பூர் வெயிலுகந்த வினாயகர்:  தக்ஷ யாகத்தில் கலந்து கொண்டதற்குப் பரிகாரமாக, ஸூர்யன் பூஜை செய்த வினாயகர்.  ரோடு மேலயே இருக்கு, மூலஸ்தானத்துக்கு கூரை கிடையாது, வெயில் மேலே படும்படி அமைந்திருக்கிறது.

7. தேவிப்பட்டிணம்:  இந்த லிஸ்ட்ல வர்ற கோவில்கள் நிறையா ராமாயணத்தோடு தொடர்புடையவை,  ஸீதையைத் தேடிச் செல்லும் வழியில் ராமரால் பூஜை செய்யப்பட்டவை.  இந்த ஊரில் நவக்ரஹங்களும் கடல்ல மூழ்கி இருக்கு,   ட்ரெஸ்ஸு தண்ணில நனையாம சுத்தி வர ப்ளாட்ஃபார்ம் போட்டு இருக்காங்க, இறங்கி, கடல் தண்ணியிலும் ப்ரதக்ஷிணம் செய்து வழிபடலாம்.  நாங்க கடல்ல இறங்கி ப்ரதக்ஷிணம் செய்தோம்,  காலை சிற்றுண்டிய அங்கயே முடிச்சிட்டு கிளம்பினோம்.

8. உத்திரகோச மங்கை:  இங்க அம்பாளுக்கு ஆடிக்காமிச்ச தன் நடனத்தை தான் பின்னர் பதஞ்சலி முதலானோருக்கு சிதம்பரத்துல சிவபெருமான் ஆடிக் காண்பித்தார்.
- பெரிய கோவில்
- ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் தனித்தனி ராஜ கோபுரங்கள்.
- ஆறடி உயரத்துக்கு ஒரு மரகத நடராஜர் இங்க இருக்கார்.  வருஷம் முழுக்கப் பாதுகாப்புக் கருதி, சந்தனக் காப்பிட்டு வெச்சிருக்காங்க.   மார்கழி மாசம் திருவாதிரை நக்ஷத்ரம் அன்னிக்கு ஒரு நாள் மட்டும் அலங்காரத்தக் கலைச்சு, தடபுடலா அபிஷேகம், பூஜையெல்லாம் முடிச்சு, திருப்பியும் சந்தனக் காப்புல வெச்சிடுவாங்க.  நாங்க பார்க்கும் போது, கொஞ்சம் ப்ரமிச்சுப் போயிட்டோம்.
- அம்பாள் (மங்கை) கேட்ட கேள்விகளுக்குப் பதிலாக (உத்தரம்) வேத ரஹஸ்யங்களை (கோசம்) இறைவன் எடுத்து விளக்கிய தலமாதலால், உத்திரகோசமங்கை என்று ஊர்.
- இராமனாதபுரத்திலிருந்து 10 கி.மீ.

9. திருப்புல்லானி:   ராமர் சீதையைத் தேடிச் செல்லும் போது, சமுத்ரம் வழி விட வேண்டி, இங்கு தர்ப்பைப் புற்களைப் பரப்பி அதிலேயே நாட்கணக்கில் வாசம் செய்தார்.  இங்குள்ள ஜகன்னாதப் பெருமாளை வழிபட்டே, பின் புறப்பட்டார்.

மணி மதியம் 2.00, சரியான டயர்டு, காலைலேந்து சுத்தி, ராமனாதபுரத்துல ஒரு ஹோட்டல்ல சாப்டுட்டு, ராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டோம்.  வழில பாம்பன் பாலத்துல கொஞ்ச நேரம் வண்டிய நிறுத்தி, ரயில்வே பாலம், கடல் எல்லாத்தையும் வேடிக்கை பாத்துட்டு, ஃபோட்டோ எடுத்துண்டு கிளம்பினோம்,  பாலம் தாண்டி கொஞ்ச தூரத்துல ஒரு பார்க் வெச்சிருக்காங்க உருப்படாத, ஒடஞ்சு போன பொம்மை, சறுக்கு மரம் எல்லாம் வெச்சு, அங்க கொஞ்ச நேரம் வேஸ்ட் பண்ணிட்டு, எதிர்க் கரைல கண்ணாடி போட்டுல கூட்டிட்டுப் போயி, பவளப்பாறை காமிக்கறோம்னாங்க.  800 ₹ குடுத்து அதையும் போய் பாத்துட்டு வந்தோம்.  பவளப்பாறை இருக்கற கடல் கொஞ்சம் கூட அலையே இல்ல, அவ்ளோ அமைதி, எதிர்க் கடல் சரியான ஆக்ரோஷம்.

10. ராமேஸ்வரம் ராமனாதரைத் தரிசனம் செஞ்சிட்டு, தனுஷ்கோடிக்கு வேன்ல போனோம்.  ஒருத்தருக்கு 150₹.  ரெண்டு கடல் சேர்ற எடத்துக்கெல்லாம் கூட்டிட்டுப் போகல, முழுக்க அமைதியா இருக்கற கடல் பக்கமாவே தான் பயணம்,  நம்ம தான் பயந்து, பயந்து போறோம், சபிக்கப்பட்ட ஊர் மாதிரி இன்னும் ஒரு அமைதி,  ட்ரைவர் அசால்டா ஓட்டிட்டுப் போறாரு.  ரெண்டு கடலுக்கும் நடுப்பற ஒசத்தி ரோடு போடற வேலை நடந்திட்டு இருக்கு,  அடுத்த தடவையெல்லாம் வண்டிய உள்ள விட்டுடுவாங்கன்னு நினைக்கறேன்.  இப்பயே டூ வீலர் ஓட்டிட்டுப் பசங்க போய்டறாங்க.  ப்ளான் பண்ணி ரிலாக்ஸா போயிருந்தா இன்னும் கொஞ்ச நேரம் அந்த ஆக்ரோஷ கடல, இங்கயோ இல்ல அந்த பாம்பன் பாலத்துக்கிட்டயோ என்ஜாய் பண்ணி அனுபவிக்கலாம்.  மாலை நேரத்துக்கு ரெண்டு இடமுமே சூப்பரா இருக்கு.  டின்னர் ஒரு கடைல சாப்டுட்டு, ராமேஸ்வரம் கார்த்தின்னு ஒரு நண்பர், என்னோட எம்.சி.ஏ ஸ்டூடெண்ட்.  இப்ப சென்னைல ஹெச். பி ல டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டரா இருக்கார்.  அவர் வீட்டுல போய்த் தங்கினோம்.  புள்ளையோட சார் வரார்னு அவங்க அம்மா, அண்ணி ரெண்டு பேரும் ரொம்ப உபசரிப்பு,  சாப்டு வந்திட்டோம்னு ஒரு சொம்பு முழுக்க பால் குடுத்திட்டாங்க.  எங்களுக்கு ஏசி ரூம் குடுத்திட்டு, அவங்க ஹால்லயே படுத்திட்டாங்க.  கார்லயே அடைஞ்சிருந்தாங்களா, பசங்க ரெண்டும் அவங்களோட சரியான ஆட்டம், வாய்க்கு வாய் வம்பு, டி.வி, முடிச்சி ராத்திரி 12 மணிக்குத் தான் தூங்கினோம்.

05 ஜூன் 2016, ஞாயிறு - காலை 5 மணிக்குப் போயிருந்தா ஸ்படிக லிங்க பூஜை பாத்து இருக்கலாம், தூங்கிட்டோம்.  ஏழு மணி போல எழுந்து கோவிலுக்குள்ள இருக்கற 23 தீர்த்தங்கள்ல குளிக்கலாம், பசங்களுக்கும் ஜாலியா இருக்கும்னு பாத்தா, டிக்கெட் கௌண்ட்டர்ல அவ்ளோ கும்பல், 25₹ ஒருத்தருக்கு, கைல கட்டிக்கணும் டிக்கெட்ட.  குழந்தைகள வெச்சிட்டு அந்த ஞாயிற்றுக் கிழமை கும்பல்ல அங்க போயி, டிக்கெட் வாங்க முடியும்னு தோணல,  ஏற்கனவே டயர்டா இருக்காங்க,  இந்திய முறைப்படி ஒருத்தருக்கு 100 ₹ லஞ்சம் குடுத்து, ப்ரோக்கர் கிட்ட வாங்கினோம்,  நிறையா பேர் ஒளிவு, மறைவின்றி எங்கும் நீக்கமற இருக்காங்க அப்படி,   கைல கட்டிட்டு, குழந்தைகள இறுக்கமா புடிச்சிட்டு, க்யூவுல போனோம்.  முதல் 2 கிணத்துல தண்ணி இல்லன்னு மூடி வெச்சிருக்காங்க, கடைசி 3-4 பக்கத்துலயே போக முடியாத அளவு கும்பல்.  மிச்ச கிணத்துல எல்லாம் அந்த ப்ரோக்கர்ஸ் (தண்ணி எடுத்து வீசறதும் அவங்க தான்)  வந்து, தண்ணி எடுத்து வீசறாங்க பளிச், பளிச்னு, ஓடி, ஓடி குளிச்ச, குளிக்காத கிணறுன்னு 23க்கும் மேல திரும்ப, திரும்ப போய்க் குளிச்சோம்.  நான் பொண்ணத் தூக்கிண்டேன், மனைவி முடியாததோட குழந்தையத் தூக்கிண்டா.  வழியெல்லாம் போர்டு வெச்சிருக்காங்க அடுத்தடுத்த கிணறோட நம்பர் போட்டு.  ம்ஹூம்,  காசிக்குப் போயிட்டு வந்தவங்க, போகப் போறவங்கன்னு மொத்தக் கும்பலும் அங்க தான் இருக்கு.  சென்னை, பெங்களூர் மாதிரி சிட்டில இருந்து குழந்தைகளோட போறவங்களுக்கு இந்த 23 தீர்த்த ஸ்னானம் ஒரு விபரீத, வித்தியாசமான அனுபவம்.  ட்ரெஸ்ஸு மாத்திக்க தனித்தனி இட வசதிகள் இருக்கு,  கோவில்ல ஏதோ சாமி கட்டாயப்படுத்திக் கேட்டா மாதிரி எல்லாரும் பொதுவா ஈரத் துணியை அங்கயே போட்டுட்டுப் போய்டறாங்க.  கோவில் ஊழியர்கள் அப்பப்ப வந்து மூட்டை, மூட்டையா கட்டி இதையெல்லாத்தையும் வண்டில வெச்சி, தள்ளிட்டுப் போயி, க்ளீன் பண்ணிடறாங்க.  துணி போனா பிணி போகும்ங்கறது பழைய காலத்துலேந்து நம்பிக்கை,  வேற, வேற வேண்டுதல்களோட வராங்க,   இராமனாதர் எல்லாத்தையும் பொறுமையா, வெளையாட்டா,  ஏத்துக்கறார்,   ஈரத்தோட சாமி பாக்கலாம்னு போனா, மொத்த கும்பலும் அங்க க்யூவுல இருக்கு.  நேத்திக்கு தரிசனம் பண்ணினது போறும்னு வெளில வந்தோம்.    பொண்ணு கையில மாவு கட்டு முழுக்க ஈரமாயிருக்கு,  அக்னி தீர்த்தத்துல (கடல்) ஆரம்பிச்சு, இவ்ளோ குளியல்.  சாமி இனிமே பாத்துப்பார்னு, மொத்த மாவு கட்டையும் கத்தியால நறுக்கிப் போட்டாச்சு.  அவளும் கொஞ்சம் நிம்மதியானா.

அப்துல் கலாம் இல்லத்துக்குப் போனோம்.  சின்னூண்டு வீடு,  கீழ அவங்க குடும்பம் இருக்காங்கப் போல, மேல ரெண்டு மாடி முழுக்க அவர் பயன்படுத்திய பொருள்கள், புகைப்படங்கள், பரிசுகள், விருதுகள், விபரங்கள்னு வெச்சிருக்காங்க.  எல்லாம் புரியல.  ஆனாலும் அவரோட நினைவுகளோட, அவர் அடைஞ்ச உயரங்கள், சாதனைகள், உபதேசங்கள்னு எல்லாத்தையும் பாத்தோம்.

பக்கத்துல ஒரு ஆஞ்சனேயர் கோவில்ல ராமர் இலங்கைக்குப் பாலம் கட்டப் பயன்படுத்தின மிதக்கும் பாறைகள், மாதிரிக்குத் தொட்டில விட்டிருந்தாங்க.  அமுத்தி விட்டாலும் பெரிய, பெரிய பாறைகளும் முங்கி, முங்கி மீண்டும் மேலயே வந்துது.  பாத்துட்டு, திரும்ப ஊருக்குக் கெளம்பியாச்சு, மாலை மாப்பிள்ளை அழைப்பு புதுக்கோட்டைல.  வழில சீதையின் தாகம் தணிக்க, ராமர் தன் வில்லை ஊன்றி, ஏற்படுத்திய வில்லூண்டி தீர்த்தம் பாத்தோம்.  குட்டி பக்கெட் பத்து ரூபாய்க்கு வாடகைக்குக் கெடைக்குது.  வாங்கி, தண்ணிய இறைத்து, குடித்துப் பார்த்தோம், கடலுக்குள்ள ஒரு கிணறு, சுத்தி உப்பு நீர், கிணத்துல மட்டும் உப்பு கரிக்காத குடிநீர்.  என் பொண்ணு கீழ இறங்கிப் போய்க் கடல் தண்ணியையும் உடனே குடிச்சுப் பாத்துட்டு வந்தா.

விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவுக்குப் போய்ட்டு, வர இராமனாதபுரம் சேதுபதி மஹாராஜா ரொம்ப உதவி பண்ணினார்னு, விவேகானந்தர் திரும்பி கப்பல்ல வரும்போது, ராமேஸ்வரத்துல இறங்கி, அவரப் பாக்கனும்னு ஆசைப்பட்டார்.  அதுக்கும் பலத்த ஏற்பாடுகள பண்ணி அசத்திட்டார் ராஜா.  விவேகானந்தர் எறங்கினதும் ராஜா குந்துக்கால் (மண்டியிட்டு) போட்டு வரவேற்றார்.  அந்த இடத்துல குந்துக்கால் துறைமுகம்னு இப்போ, ஒரு நினைவகம்  அமைச்சு பராமரிக்கராங்க.  மெயின் ரோடுலேந்து ஒரு 5-7 கி.மீ உள்ள போகனும்.  ரோடு முழுக்க ஜல்லி பரப்பி வெச்சிருக்காங்க அப்பத்தான்.  ட்ரைவர் கார நெனைச்சு ரொம்ப  நொந்து போயிட்டார்.  ஒரு வழியா போய் சேந்தோம்.  உச்சி வெயில்.  விவேகானந்தர், சேதுபதி ராஜா சிலை, உபதேசங்கள், சுற்றுப் பயணங்கள்னு நிறையா வரைஞ்சும், எழுதியும் வெச்சிருக்காங்க.  ஏசி போட்டு ஒரு த்யான ரூம் இருக்கு.  எல்லாத்தையும் பாத்தோம்.  என் மனைவிக்கு விவேகானந்தர ரொம்ப பிடிக்கும், நல்லா சுத்திப் பாத்தாங்க, எல்லாத்தையும் படிச்சி, உள் வாங்கிண்டாங்க.  ராமேஸ்வரத்துல இந்த எக்ஸ்ட்ரா இடங்கள் எல்லாத்தையும் பத்தின விஷய உபயம் இன்னொரு கார்த்தி, அவர் இப்ப கல்யாணமாகி பெங்களூர்ல டெக்னிகல் லீடரா இருக்கார்.

கணபதி கால் பண்ண ஆரம்பிச்சிட்டான், மாப்ள எவ்வளவு பிசியா இருக்கனும், எங்களுக்குப் ஃபோன் பண்ணிட்டே இருந்தான்,  கெளம்பியாச்சா, எங்க இருக்கீங்க, சாப்டாச்சா, எப்ப வரீங்கன்னு ஒரே கேள்வி.  2 மணி போல ஒரு கடைல லஞ்ச் முடிச்சோம்.  ராமனாதபுரம், தேவக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டையையும் தாண்டிட்டோம்.

11. குடுமியான்மலை:  தினமும் இரவு பூஜை முடிந்ததும் அரசனுக்குக் கொடுக்க வேண்டிய புஷ்ப ப்ரசாதத்தை, அன்று அரசன் வரவில்லை என்று கோவிலில் நாட்டியமாடும் தேவதாசிக்கு சிவாச்சாரியார் குடுத்து விடுகிறார்.  சிறிது நேரத்தில் தாமதமாக அரசன் வந்து விடுகிறான்.  வழியொன்றும் அறியாது திகைத்த குருக்கள் தாசி சூட்டிக் கொண்ட ப்ரசாதத்தை வேண்டி வாங்கி, அரசனுக்குக் கொடுக்கிறார்.  அதில் தலை முடி இருப்பதைக் கண்ட அரசன் கோபிக்க, சிவாச்சாரியார் அது ஸ்வாமியின் தலையிலிருந்து எடுத்தது தான் என்று கூறி விடுகிறார்.  மேலும் கோபம் கொண்ட அரசன் ஸ்வாமிக்கு சிகை (குடுமி) இருக்கிறதோ என்று வேகமாகச் சென்று ஸ்வாமியின் தலையலங்காரத்தைக் கலைக்கிறார்.  தனக்கு நிதமும் பக்தியோடு பூஜை செய்யும் சிவாச்சாரியார்,  தேவதாசி இருவர் மேலும் கருணை கொண்ட சிவபெருமான் தன் தலை மேல் ஒரு குடுமியுடன் காட்சி அளிக்கிறார்.  அதையும் பொய் என்று நினைத்த அரசன் அதைப் பிடித்து இழுக்க, அங்கிருந்து இரத்தம் பீறிடுகிறது.  ஸ்வாமி காட்சி அளிக்க, அனைவரும் தங்கள் தவறுகளை உணர்ந்து மண்டியிருகின்றனர்.  இன்றும் இந்த மூலவருக்கு உச்சியில் குடுமி இருக்கிறது.

கோவில் மலையடிவாரத்தில் இருக்கிறது, மலையைச் சுற்றி க்ராமம்.  மலைமேல் படிகளின்றி ஒரு முருகன் கோவில்.  மற்ற கோவில்களில் இருப்பது போல் இங்கு 63 நாயன்மார்கள் சிலையும் தனித்தனியாக கோவிலில் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கவில்லை.  அம்பாள் சன்னிதிக்கு மேல் வெளிச்சம் இருக்கும் போது நிமிர்ந்து பார்த்தால் மேலே மலைப்பாறையிலேயே 63 சிலைகளும் குடையலாக செதுக்கப்பட்டு இருக்கிறது.  அவர்களுக்கு மத்தியில் ரிஷபத்தில் அம்பாளுடன் ஸ்வாமி.  இது வேறெந்த கோவில்களிலும் காணக் கிடைக்காதது.  இதைத் தவிர ப்ரஹ்மாண்டமான பிள்ளையார், ஷண்முகர், ராவணன், நரஸிம்மர் என வெவ்வேறு சிலைகள் தூண்களிலேயே புடைப்பாக செதுக்கப் பட்டிருக்கிறது.    தொல்பொருள் இலாகாவின் பராமரிப்பில் இருக்கிறது இந்த கோவில்,   புதுக்கோட்டையிலிருந்து 10-15 கி.மீ தொலைவில் இருக்கும் இந்தக் கோவில் நிச்சயம் தரிசிக்கப்பட வேண்டியதொன்று.

இரவு ஒரு 8 மணி போல மாப்பிள்ளை அழைப்பில் கலந்து கொண்டு, இரவு உணவை முடித்துக் கொண்டு, 10 மணிக்கு ஸ்லீப்பர் ஏசி பஸ்ஸில் மீண்டும் சென்னை நோக்கிப் பயணித்தோம்.

சம்போ மஹாதேவ !! மீண்டும் சந்திப்போம்...


Jun 24, 2017

வேதாரண்யம் டூர்

அடுத்தது என்ன வேலை பண்ணலாம், நாளைக்கு என்ன சமைக்கலாம், வீட்டுக்காரர் எப்ப வருவார், இப்டி கவலைப்பட்டு, பட்டு தூக்கமும், ஒடம்பு தெம்பும் போச்சு என் மனைவிக்கு, இன்ஸாம்னியா இந்த வ்யாதிக்குப் பேராம்.   அடிக்கடி டூர், தனியா!! கூட்டிட்டுப் போகனும், மனசு விட்டுப் பேசனும், வேலை செய்ய விடாம, ரிலாக்ஸா வெச்சுக்கனும்னு இங்க்லீஷ், ஆயுர்வேதிக் டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.  வீட்ல அவங்க ஏஜ் க்ரூப்ல இருக்கற ஆள் நாந்தான்.  நான் காலைல 10 மணிக்கு ஃபோட்டான்க்குப் போய்ட்டு, நைட் 12-3 மணிக்குள்ள வந்துடுவேன்!!  தூங்க்கி, குளிச்சு, திருப்பி ஆஃபீஸ் போய்டுவேன்.  மிச்சம் வீட்ல இருக்கறது 60+ ல மாமா, மாமி, 90+ ல தாத்தா, 2 ஆம் வகுப்புல பொண்ணு, 2 வயஸுல பையன்.   வெளில அப்பப்ப கூட்டிட்டுப் போனா தப்பே இல்ல.  கொஞ்சம் காச கரைக்கனும், உலகையும், மனைவியையும் பத்ரமா வெச்சுப் பாக்க.

ரெண்டு குழந்தைங்களும் சிசேரியன், அப்றம் போன மாசம் ஒரு ஆபரேஷன்.  நாங்க போற எல்லா டூருக்கும் வாகன விஷயத்துல நம்பிக்கையா இருக்கற டீம், பெருங்களத்தூர் ஃபேமிலி ட்ராவல்ஸ்.  எல்லா ரக வண்டியும் வெச்சிருக்காங்க, மணியும் (செல்: 9500004224 ), அவர் ஃப்ரண்ட்ஸும் சேர்ந்து எங்களுக்கு ஆஸ்தான ட்ராவல்ஸா இருக்காங்க.  எப்பவும் போல அன்ப்ளான்டு டூர் தான்.

25 ஜனவரி 2016, திங்கள் ஒரு நாள் லீவு போட்டா நாலு நாள் லீவு.  அப்டியே ECRல (கிழக்குக் கடற்கரைச் சாலை), வேதாரண்யம் வரைக்கும் போய்ட்டு வரப் போறோம்.  23, சனிக்கிழமை காலை 1 மணிக்குக் கெளம்பியாச்சு, ட்ரைவர் டைசன் அவரோட எட்டியோஸ் கார்ல.  சின்னப் பையன், ஆனா ரோடு ரொம்ப பொறுப்பா ஓட்றாரு.  அப்பாவோட பெரியப்பா பையன், ராமச்சந்த்ரன் சித்தப்பா, மதுரை த்யாகராஜா காலேஜ்ல காமர்ஸ் HODஆ இருந்தார், அவர் பொண்ணு ரேவதிக்கா கல்யாணம் ஆகி கடலூர்ல தான் இருக்கா.  ரொம்ப நாள் ப்ளான் அவங்க வீட்டுக்குப் போகனும்னு.  முதல் ஃபோன், கொஞ்சம் வம்பு இழுக்கலாம்னு,  அக்காதான் பேசறான்னு  நெனைச்சு, "டிவி சானல்லேந்து பேசறோம், ரேவதி இருக்காங்களான்னு" கேட்டா, அது அவங்க மாமியார், நான் இன்னும் அவங்களெல்லாம் பாத்ததே இல்ல. பட்டுனு ஃபோன வெச்சிட்டாங்க  வாய்ஸ் ஒரே மாதிரி இருந்ததுல கொஞ்சம் கொழப்பம்.  அடுத்த தடவ, அக்காவே ஃபோன எடுத்தா.   கெளம்பிட்டோம், வந்துட்டு, ரெண்டு, மூணு கோவில் பாத்துட்டு, லஞ்ச் முடிச்சிட்டு, கெளம்பறோம்னு ப்ளான் சொல்லியாச்சு.

எல்லாரும் குளிச்சு ஒரு மணிக்கு விடிகாலை வண்டியெடுத்து, 4.30 மணி போல அக்காகிட்ட வழி கேட்டு, வீட்டுக்குப் போயிட்டோம்.   ஒரு குட்டித் தூக்கம், கால நீட்டி.  அக்கா வீட்டுக்காரர், குழந்தையை ஆஃபீஸ், ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்பிச்சிட்டு, போலாமான்னு கேட்டா. லஞ்ச்சும் எங்களுக்கு ரெடி பண்ணி வெச்சிட்டா.  டைசன் கொஞ்சம் அசந்திட்டார், விடிகாலை ட்ரைவிங், கொஞ்சம் கஷ்டம்,  தூக்கம் தள்ளும்,  திருடங்க எல்லாம் கையில ஒரு கல்ல புடிச்சிட்டே, குந்தியிருப்பாங்களாம், தூங்கிப் போய், கல்லு அவங்கள அறியாம விழுந்திட்டா, அதான் சரியான  நேரம்னு திருட ஊருக்குள்ள போவாங்களாம்.  எங்க தாத்தா சொல்வார், அந்த  நேரம் அது,   அவரையும் எழுப்பித் தயாரானோம்.

1. பாடலீஶ்வரர் கோவில்:

- புலிக்கால் முனிவர் (வ்யாக்ர பாதர்) பூஜை செய்த கோவில்
- பாதிரி மரத்தடியில் இருந்து அம்பாள் சிவ பூஜை செய்த ஸ்தலம் (பாதிரி மரத்துக்கு ஸம்ஸ்க்ருதததில் பாடல வ்ருக்ஷம் என்று பெயர், அதனால் பாடலீஶ்வரர்), தமிழில் திருப்பாதிரிப் புலியூர்.
- சைவக் குரவர்களில் ஒருவரான அப்பரை சமணத்திற்கு மாறாததால், அவரை ஒரு கல் தூணில் பூட்டி, கடலில் போட்டு விட்டனர், அவர் கீழ்வரும் பாடலால் சிவனைத் துதித்து, ஒரு பாதிப்பும் இன்றி கரையேறினார், அந்த இடம் இப்போது "கரையேற விட்ட குப்பம்" என்று அழைக்கப்படுகிறது.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

வேதப் பொருளொனும், ஜோதி வடிவானவனுமான சிவனின் பொன் திருவடிகளை இறுக்கமாகப் பற்றித் தொழுவோர்க்கு, கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் நற்றுணையாவது நமஶ்ஶிவாய என்ற ஐந்தெழுத்தே.

ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.

சுதை, சிற்பங்களோடு கூடின அருமையான கோவில்.  தரிசித்து விட்டு திருவந்திபுரம் சென்றோம்.

2.  ஆதிசேஷனால் (அஹீந்த்ர = ஆதிசேஷன்)  நிர்மாணிக்கப்பட்டதால் திருவஹீந்த்ரபுரம், மருவி திருவந்திபுரம் என்றாயிற்று.  தேவநாதப் பெருமாளையும், எதிரே மலைமேலே வீற்றிருக்கும் ஹயக்ரீவரையும் தரிசித்தோம்.  ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப் பெற்ற) செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.

3. திருமாணிக்குழி:
மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே.

என்று ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம்.  பூத்த மலர்களால் அர்ச்சிக்கப்படும், மார்க்கண்டேயரது உயிரைப் பறிக்க வந்த காலனை காலால் உதைத்த சிவன் இருக்குமிடம்,  சந்தனம், அகில் முதலியவைகளோடு, மலை, குளங்களில் இருக்கும் மலர்களையும் கொண்டு வயல்களில் பாயும் கெடில நதி ஓடுமிடம் இந்த மாணிக்குழியே.

- சிவன் சன்னதியில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணையைக் குடிக்க ஒரு எலி முயற்சித்தது.  அப்போது அதன் செய்கையால் திரி உந்தப்பட்டு மங்கலாக எரிந்து கொண்டிருந்த அந்த விளக்கு ப்ரகாசமாக எரியத் தொடங்கியது.  அறியாமல் செய்த இந்தச் செயலில் மகிழ்ந்த சிவபெருமான் அந்த எலியைச் சக்ரவர்த்தியாகப் பிறக்க வரமளித்தார்.  (இப்படி எளிதில் சந்தோஷம் அடைவதால் சிவனுக்கு ஆஶுதோஷ் என்று ஒரு பெயர்).  எலி மஹாபலியானது.  மஹாபலிச்சக்ரவர்த்தியைக் காலால் மிதித்த பாபம் போக, வாமனராக அவதரித்த மஹாவிஷ்ணு பூஜித்த வாமன புரீஶ்வரர்.  (மாணி=ப்ரம்மசாரி) .  இந்தக் கதையை விளக்கும் சிற்பங்கள் இந்தக் கோவிலில் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன.

- மஹாவிஷ்ணு முதலானோர் தொடர் பூஜை செய்து கொண்டிருப்பதாலும், சிவ சக்தி ஸ்வரூபத்தில் மூலவர் இருப்பதாலும் இங்கு சிவபெருமானை பூஜையின் போது அதிக நேரம் தரிசிக்க முடியாது.  அவர்களுக்குக் காவலாக பதினோரு ருத்ரர்களில் ஒருவரான பீமருத்ரன் இங்கு மூலவரை மறைத்துத் திரைச்சீலையில் (ஸ்க்ரீன்) எழுந்தருளியிருக்கிறார்.  அவருக்கு முதலில் பூஜை செய்து, அவர் அனுமதியோடு அந்தத் திரையை விலக்கி, மூலவருக்கு தீபாராதனை 2-3 நிமிஷம் செய்து, மீண்டும் மூடி விடுகின்றனர்.  அவ்ளோதான் தரிசனம்.  குருக்கள் காஞ்சிபுரம் ஸ்ரீ உமாபதி ஶிவாச்சார்யாரின் மாணாக்கர்.  எளிய விளக்கங்களோடு அழகாக தர்சனம் செய்து வைத்தார்.

அக்கா வீட்டுக்கு வந்தோம், ஏற்கனவே சமையல் முடிச்சிட்டுதான் எங்களோட வந்திருந்தா அக்கா, நல்ல சாப்பாடு, நல்லா சாப்டோம்,  எல்லாரும் நல்லா கவனிச்சாங்க.  ஓய்வு, அக்கா பொண்ணு ஸ்கூல்லேந்து வந்ததும், கடலூர் ஸில்வர் பீச்சுக்குப் போனோம்,  மெரினா பீச் மாதிரி கூவம் கலப்பு இல்ல,  நெறையா கடைகளும், குப்பைகளும் இல்ல, தண்ணி சுத்தமா இருந்துது, கொஞ்ச நேரம் விளையாடிட்டு, அக்கா வீட்டுக்குப் போய்ட்டாங்க,  நாங்க வடலூர் வள்ளலார் கோவில்க்குப் போலாம்னு  நெனைச்சோம்.  ஆனா இன்னும் ரெண்டு நாள்ல தைப்பூசம், சரியான கூட்டமா இருக்கும், அப்பறமா போங்கன்னுட்டா அக்கா.

4. சிதம்பரம்.
- சைவர்களுக்குக் கோவில்னா இதுதான்.
- தில்லை மரங்கள் மிகுந்திருந்ததால் தில்லை என்றும் பெயர்.
- மனித வாழ்வின் பல ரகசியங்களை உள்ளடக்கி, தொடர்போடு விளங்கும் கோவில், அமைப்பு
- மூலவர் திருமூல நாதர் எனும் லிங்க வடிவினர், எல்லா சிவ கலைகளும் இங்குதான் தோன்றி, ஐக்யமாகிறது என்பதற்கிணங்க கடைசியாக அர்த்த ஜாமப் பூஜை நடக்கிறது.
- ஒரே இடத்தில் சபாபதியையும், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருச்சித்ரசபையில் பள்ளி கொண்டிருக்கும் கோவிந்தராஜப் பெருமாளையும் தர்சிக்கலாம்.
- புலிக்கால் முனிவருக்கும், பதஞ்சலிக்கும் நடன தரிசனம்.
- ஐந்து நாட்ய சபைகளில் இந்த கனக சபை முதலானது, (மற்ற நான்கு சபைகள்:  மதுரை மீனாக்ஷி சுந்தரேஶ்வரர் திருக்கோவில் - வெள்ளி சபை - இறைவனுக்குக் கால் வலிக்காதா என்று கவலைப் பட்ட பாண்டிய மன்னனுக்காக இங்கு மட்டும் நடராஜர் வலது பாதத்தைத் தூக்கி ஆடுகிறார்,   திருவாலங்காடு வடாரண்யேஶ்வரர் திருக்கோவில் - ரத்னசபை, திருனெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் - தாம்ர சபை,  திருக்குற்றாலீஶ்வரர் - சித்ர சபை)
- சிதம்பர ரகசியம்: பஞ்ச பூத தலங்களில் இது ஆகாயத் தலம்.  வெளி.  நடராஜருக்கு அருகிலேயே திரையைத் திறந்து தீபாராதனை காட்டுவார்கள்.  ஒரு உருவமும் அங்கில்லை.  ஆகாசலிங்கம் இருப்பதாக தங்க வில்வமாலை அணிவித்து இருப்பார்கள்.  இதுவே சிதம்பர ரகசியம்.  (மற்ற பஞ்ச பூத ஸ்தலங்கள்: நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்ரவனேஶ்வரர், நீர் - திருவானைக்கா ஜம்புகேஶ்வரர், காற்று - ஸ்ரீ காளஹஸ்தி, நெருப்பு - திருவண்ணாமலை அருணாசலேஶ்வரர்)
- ரத்ன சபாபதி ஒன்று பத்ரமாக கருவரையிலேயே ஒரு பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது.  தினமும் வெளியே எடுத்து, அவருக்குப் பூஜை நடக்கிறது.

- அன்னைக்கும், நடராஜருக்கும் நடந்த நடனப் போட்டியில் பெருமானின் குண்டலம் கீழே விழுந்து விட, ஆடலின் ஒரு அங்கமாக, தன் கால் விரல்களாலேயே அதைத் தன் காதில் பொருத்திக் கொண்டு விடுகிறார்.  அம்பாள் இதனால் வெட்கி, தில்லை எல்லைக்காளியாக 3 கி.மீ தொலைவில் கோவில் கொண்டுள்ளாள்.  தக்ஷிணா மூர்த்தி வடிவிலும் இங்கு அம்பிகை குடி கொண்டுள்ளாள்.

5. சீர்காழி:  காழி = உறுதி, ப்ரளய காலத்திலும் அழியாது உறுதியாக இருந்ததால், ஸ்ரீகாழி என்று அழைக்கப்பட்டது, மருவி சீர்காழி ஆனது.
- மூன்று நிலைகளில் கோவில் உள்ளது,  டிக்கெட் வாங்கிக் கொண்டு மேல் இரு நிலைகளுக்கும் படியேறிப் போகலாம்.
- படைப்புத் தொழிலில் பங்கம் வராதிருக்க ப்ரஹ்மா பூஜை செய்த ப்ரஹ்மபுரீஶ்வரர் கீழ் நிலையில் உள்ளார்.
- ஊழியிலும் அழியாத இத்தலத்தை உமா தேவிக்கு, ப்ரணவத்தைத் தோணியாக்கி, அதில் அழைத்து வந்து காண்பித்த தோணியப்பரும், உமையும் பெருவடிவில் இரண்டாம் நிலையில் எழுந்தருளி உள்ளனர்.
- மஹாபலியை அழித்த பாபத்தாலும், செருக்காலும் உலகை நடுங்கச் செய்து கொண்டிருந்த மஹாவிஷ்ணுவை, சிவாம்சமான அஷ்ட (8) பைரவர்களில் ஒருவரான வடுக பைரவர் அடித்து வீழ்த்தினார்.  மஹாலக்ஷ்மியின் வேண்டுதலில் அவரை மீண்டும் எழுப்பிய சிவபெருமான், விஷ்ணுவின் வேண்டுதலில், தான் வேறு, அவர் வேறு அல்ல என்று காண்பிக்க, அவருடைய தோலையே சட்டையாக அணிந்து, அவரது எலும்பை கதையாகக் கொண்டு சட்டை நாதராக மூன்றாவது நிலையில் எழுந்தருளியிருக்கிறார்.
- மேலே இருந்து பார்த்தால் 8 பைரவர்களுக்கும் உள்ள தனித்தனி சன்னிதிகளும் தெரிகின்றது.
- ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், சேக்கிழார், பட்டினத்தார், அருணகிரி நாதர், முத்துஸ்வாமி திக்ஷதர், நம்பியாண்டார் நம்பி, அருணாசலக் கவிராயர் என்று பலராலும் போற்றப்படும் ஸ்தலம்.
- சிவனுக்கும், உமையவளுக்கும் நடுவில் குழந்தையாக முருகன் தரிசனம் கிடைப்பதை ஸோமாஸ்கந்த (ஸ=உடன், உமா = உமை, ஸ்கந்தன் = முருகன்) தரிசனம் என்பர்.  முருகனே இந்த ஊரில் ஆறாம் நூற்றாண்டில் சிவபாத ஹ்ருதயருக்கும், பகவதி அம்மையாருக்கும் ஞானஸம்பந்தராகத் தோன்றினார்.  இந்தக் கோவில் ஸ்வாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் ஞானசம்பந்தருக்குத் தனி சன்னதியே உள்ளது (ஸோமாஸ்கந்த அமைப்பு).
- ஒரு நாள் அப்பாவோடு இக்கோவிலில் உள்ள ப்ரஹ்மதீர்த்தம் என்ற குளத்துக்குப் போயிருந்தார் குழந்தையாக இருந்த ஞானசம்பந்தர்.   இவரைக் கரையில் இருத்தி விட்டு நீரில் முங்கிக் குளித்துக் கொண்டிருந்தார் அப்பா.  அப்போது குழந்தை அழ ஆரம்பித்து விட, சிவபெருமானின் கருணையால் உமையே தன் பாலை, ஒரு கிண்ணத்தில் இவருக்கு வந்து ஊட்டி விட்டு, மறைந்தாள்.  குளித்து விட்டு, ஆசாரமாக வந்த அப்பா, குழந்தையின் வாயில் பால் ஒழுகியிருப்பதைக் கண்டு, யாரிடம் பால் குடித்தாய் என்று கோபமாக அதட்டுகிறார்.

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

அப்பா! காதுல தோடு போட்டுண்டு, காளை மாட்டு மேல ஏறி, தலைல வெள்ளையா நிலாவ வெச்சிண்டு, ஒடம்பு முழுக்க சுடுகாட்டு சாம்பல பூசிண்டு என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட திருடனப்பா அவன், முன்னாளில் தாமரையில் தோன்றிய ப்ரஹ்மா பணிந்து, பூஜிக்க அவனுக்கு அருள் செய்ய பெருமை மிக்க இந்த ப்ரஹ்மபுரத்தில் (ஸ்ரீகாழி) எழுந்தருளியவனப்பா அவன்!!
என்று வானை நோக்கித் தன் பிஞ்சுக் கையை நீட்டுகிறார்.  அங்கு அந்தக் குழந்தைக்குப் பணிந்து, நந்திகேஶ்வரரின் மேல் உமைமஹேஶ்வரராகத் தோன்றி அவரோட அப்பாவுக்கும் குளக்கரையில் தரிசனம் தருகிறார் சிவபெருமான்.

- இன்றும் ஞானசம்பந்தருக்குப் பாலூட்டிய நிகழ்ச்சி வருடம் ஒருமுறை நடந்து, அந்தப் பால் ப்ரசாதமாகத் தரப்படுகிறது.

- சூரபத்மன் கூட்டத்துக்குப் பயந்து, இங்கிருந்த மூங்கில் காடுகளில் மறைந்திருந்த தேவேந்த்ரனால் பூஜிக்கப்பட்ட ஸ்வாமி.
- 18 சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தர் சமாதி இங்கு உள்ளது.

6. வைத்தீஶ்வரன் கோவில் - நவக்ரஹங்களில் ஒருவரான அங்காரஹனுக்கு ஏற்பட்ட நோயைத் தீர்த்ததால் வைத்தீஶ்வரன்.
- புள்ளிருக்குவேளூர் - புள் (கருடன், சம்பாதி முதலிய பறவை), ருக்கு வேதம், வேள்- முருகவேள், சூர்யன் முதலானோர் பூஜித்த தலம்.
- பாடல் பெற்ற ஸ்தலம்

மயிலாடுதுறை: இறைவி மயிலாக வந்து பூஜித்த, பாடல் பெற்ற ஸ்தலம். பாக்கல, மணியாய்டுச்சு, வழியா, காரைக்கால் தாண்டி 23, சனிக்கிழமை ராத்திரி 12 மணிக்கு நாகப்பட்ணம் வந்து சேந்தோம்.  அப்பா ஃப்ரண்டு போலீஸ் ராஜா மாமா, ஏற்கனவே ஃபைர் சர்வீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்க்க இருந்த சத்யா லாட்ஜுல ரூம் சொல்லி இருந்தார், 400₹ ஏசி ரூம் வாடகை,  தஞ்சாவூர்ல ட்யூட்டில இருக்கறதால, காலைல வந்து பாக்கறேன்னு சொன்னார், நல்ல டைட் பேக்கேஜ், தொடர்ந்து கோவில்கள், கதை, கதையா சொல்லி கூட்டினு போனாலும், என் பொண்ணு டயர்டா ஆயிட்டா.  இனிமே ஒரு நாளைக்கு 2-3 மூணு கோவில்தான் இனிமே கூட்டிண்டு போகணும்னு கன்டிஷன் போட்டுட்டுத் தூங்கினா குழந்தை.  இவளுக்குப் போர் அடிக்கக் கூடாதுன்னு தான் ஒவ்வொரு நாளும் ஒரு பீச், பார்க் ஏதாவது சேக்கனும்னு ப்ளான்.  இன்னிக்குக் கடலூர் சில்வர் பீச் போயாச்சு, நாளைக்கு ஒரு ஸஸ்பென்ஸ் இருக்கு இவங்க எல்லாருக்குமே.

24 ஜனவரி 2016: இனிய நினைவுகள், ஒன்ற வருஷத்து அப்பறமாவும் இன்னும் ப்ளாக்ல கதைக்கற அளவுக்கு ஞாபகம் இருக்கு.  வெரி ஹேப்பி அயம், ப்ளெஸ்டா ஃபீல் பண்றேன்.  ஐடி கம்பனிலேந்து நானாவோ, அவங்களாவோ அனுப்பி, ஏதாவது காலேஜ்ல மிச்ச சர்வீஸ முடிச்சு, பசங்களும் கல்யாணம் ஆகி, அவங்க குழந்தை, குடும்பம் செட்டில் ஆனப்பறம், ஒருத்தரும் கூட இல்லேன்னா, இப்படித்தான் எங்கயாவது  நடையா சுத்திண்டு, பொறுக்கிண்டு பொழுத போக்குவேன்னு நினைக்கறேன்.  தாத்தா சொல்வாங்க, நாம் ஒன்று நினைக்க, சித்ரக்காரர் (சித்ரகுப்தன் - நம்ம தலையெழுத்து புக்ஸ மெயின்டெயின் பண்றவர்) ஒன்று நினைப்பார்னு.  பாப்போம்.  அப்ப இந்த ப்ளாக்ஸ், ஃபோட்டோஸ் திரும்பிப் பாக்க காசு, ஃபோன் என்ட இருக்குமான்னு தெர்ல, இன்ட்ரெஸ்ட் இருக்குமான்னும் தெர்ல, எனக்கு கண்ணு அப்ப எப்டி இருக்கும்னே தெரியல !!  சின்னப்பயலே! சின்னப்பயலே !! பாட்ல எம்.ஜி.ஆர் "நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி" ம்பாரு.  பாப்போம் காலம் நமக்கு என்ன பயிற்சி தருதுன்னு.

7. நாகப்பட்ணம்:
- பாடல் பெற்ற ஸ்தலம்.
- 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் அவதார ஸ்தலம்.
- பூபாரத்தை சமன் செய்ய தென் திசைக்கு வந்த அகத்தியருக்குத் திருமணக் கோலத்தில் தரிசனம் தந்த ஸ்தலம்.
- நாகராஜனான ஆதிசேஷனால் பூஜிக்கப்பட்டதால் நாகப்பட்ணம்
- காயாரோகணேஶ்வரர் - புண்டரீக முனிவரைத் தன் உடலில் (காயம் - உடல், தோல்) சேர்த்து (ஆரோகணம் - ஏற்றுதல், அவரோஹணம் - இறக்குதல்)க் கொண்ட ஸ்வாமி.
- ஸப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்று:  முசுகுந்த சக்ரவர்த்தி தேவாசுரப் போரில், தேவர்கள் சார்பில் போரிட்டு, வென்று கொடுத்தார்.  வெற்றியைக் கொண்டாடி, மகிழ்ந்த தேவேந்த்ரன், வேண்டிய பரிசைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுமாறு சக்ரவர்த்தியை வேண்டினான்.   அவரோ தேவேந்த்ரன் தினமும் பூஜிக்கும் சிவலிங்கத்தைத் தன் பூஜைக்குத் தருமாறு வேண்டினார்.  வாக்களித்து விட்ட தேவேந்த்ரன் என்ன செய்வதென்று யோசித்து, ஒரு ஐடியா பண்ணினான்.  தேவதச்சனாகிய விஶ்வகர்மாவை அழைத்துத் தான் பூஜிக்கும் சிவலிங்கத்தைப் போன்றே, ஆறு சிவலிங்கங்களை செய்யச் சொன்னான்.  விஶ்வகர்மா உளி படாமல், (டங்கம் - உளியால் செய்தது, வி  டங்கம் - உளி படாதது) மானசீகமாகவே சிவலிங்கங்களைப் படைத்தான்.  இந்த்ரன் அவைகளோடு தன் சிவலிங்கத்தையும் சேர்த்து வைத்து, உண்மையான ஸ்வாமியைக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்ளுமாறு முசுகுந்த சக்ரவர்த்தியிடம் கூறினான்.  அவர் தன் சிவ பக்தியாலும், சிவனருளாலும் உண்மையான சிவலிங்கத்தைக் கண்டு கொண்டார்.  அவர் பக்தியை மெச்சிய, இந்த்ரன்  ஏழையுமே அவருக்குப் பரிசாக அளித்து மகிழ்ந்தான்.  முக்ய லிங்கத்தை திருவாரூரிலும், வேறு ஊர்களில் மீதமுள்ள ஆறையும் ப்ரதிஷ்டை செய்து வழிபட்டார் சக்ரவர்த்தி.  இந்த ஏழு ஊர்களிலும், மூலஸ்தானத்தைத் தவிர, நடராஜர் சன்னதியில் இந்த சிவ லிங்கங்களைப் பத்திரமாக வைத்து, இன்றும் பூஜைகள் நடந்து வருகிறது.  நடராஜருக்கும் விடங்கர் (பேரழகன்) என்று பெயருண்டு.  இந்த ஏழூர்களிலும் வித்யாசமான நடன நிலைகளில்  நடராஜர் தரிசனம் தருகிறார்.

சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு
காரார் மறைக்காடு காராயில்-பேரான
ஒத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலி
சத்த விடங்கத் தலம்

திருவாரூர் - தியாகராசப்பெருமான்
திருநள்ளாறு - நாகவிடங்கர்
நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர்
திருக்காராயில் - ஆதிவிடங்கர்
திருக்குவளை - அவனிவிடங்கர்
திருவாய்மூர் - நீலவிடங்கர்
வேதாரண்யம் - புவனிவிடங்கர்

சிவன் கோவில், நீலாயதாக்ஷி அம்பாள் கோவில் என்று கூறினால் உள்ளூரில் அடையாளம் சொல்கிறார்கள்.  எந்த ஊரிலும் ஸ்வாமியோட பேர் சொல்லி, காயாரோகணேஶ்வரர் கோவில் எங்க இருக்குன்னு கேட்டா  நெறையா பேருக்குத் தெரியல.   சிவதரிசனத்தோடு பொழுது புலர்ந்தது.

8. நாகப்பட்ணம் ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் - இது ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலம், தாயார் இங்கு தனியாக கருடி (கருடன் - கருடி!!) வாஹனத்தில் எழுந்தருளுவாள்.  இது இங்கு மட்டுமே காணும் சிறப்பு, அழகாக இருக்கும் கருடி வாகனம், ஹாஃப் சாரி கட்டிண்டு,

9. பொரவாச்சேரி முருகன் கோவில்:  பொருள் வைத்த சேரி என்பது மருவி, பொரவாச்சேரியானது.  ஒரு தெய்வீகச் சிற்பி இந்தக் கோவில் முருகனை ஒரே கல்லில் வடித்தான்.  ஆறுமுகங்கள், ஆயுதங்களோடு பன்னிரு கரங்களையும் கொண்ட பெரிய முருகனை, வாயில் பாம்பைக் கவ்விக் கொண்டு மயில் தன் கால்களில் தாங்கி நிற்குமாறு வடித்திருக்கிறார்.  ஆயுதங்களைப் பிடித்திருக்கும் கந்தனின் கை நரம்புகளும், மொத்த எடையையும் தாங்கியிருக்கும் மயிலின் கால் எலும்புகளும் அழகுறத் தெரிகின்றன இந்தக் கற்சிலையில், இந்தப் பெருமை வேறெந்த கோவிலுக்கும் கிடைத்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் அரசன் அவன் கட்டை விரலை வெட்டி விடுகிறான்.  ஆனாலும் அதே அழகோடு ஒரு கி.மீட்டரில் அருகிலுள்ள சிக்கல் சிங்காரவேலனை வடிக்கிறான் அந்த சிற்பி,   இப்போது அவன் கண்களைத் தோண்டி விடுகிறான் அரசன்,  தன் எண்ணத்தையே கண்ணாகக் கொண்டு அவன் மீண்டும் எண்கண் முருகனை வடிக்கிறான்.   அதன் பின் மீண்டும் அதேபோல் ஒரு சிற்பத்தை வடிக்கையில் தவறி, சிலை சாய்கிறது, குருடனான அந்த சிற்பி அதை எட்டிப் பிடித்தான்.  அதுவே எட்டுக்குடி.  வள்ளி தெய்வானையோடு முருகன் அவனுக்கும், அரசனுக்கும் காட்சி தந்து, சிற்பியை முன்போல் பொலிவுறச் செய்கிறான்.

10.  சிக்கல் சிங்கார வேலர்:  சூரபத்மனுடன் போருக்குப் புறப்பட்டு, வழி நெடுக பல ஸ்தலங்களில் சிவ ப்ரதிஷ்டை, பூஜை செய்து,  சென்று கொண்டிருந்த முருகனுக்கு உமையம்மை தன் சக்தியைத் திரட்டி, ஆழத்திலும், அகலத்திலும், கூர்மையிலும் சிறந்த அறிவைக் குறிக்கும், வேலாயுதமாக தந்த திருக்கோவில்.    ஸ்வாமி நவநீதேஶ்வரர் ( நவனீதம் - புது வெண்ணெய்), காமதேனுவின் வெண்ணெயில் சிவலிங்கம் செய்து, இங்கு பூஜை செய்த வஸிஷ்டர், முடிவில் அதை எடுக்க முயல்கையில், வராமல் சிக்கிக் கொண்டதால் இந்த ஊருக்குப் பெயர் சிக்கல்.  வேல் தந்ததால் அன்னைக்கு பெயர் வேல் நெடுங்கண்ணி.  இன்றும் ஷஷ்டியின் போது உமையம்மையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கையில், முருகன் சிலையிலும், சன்னிதியிலும் உக்ரத்தால் வியர்வை நீர் கசிவதைப் பார்க்க முடிகிறது.

காலை தரிசனங்கள் முடிந்தது,  சிக்கலிலேயே கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கடையில் பூரி, பட்டானி சுண்டல் (5  ரூபாதான்), தோசைன்னு சிற்றுண்டியை முடித்தோம், சூப்பரா இருந்துது.   ராஜா அண்ணா ப்ளான் படி, ஹோட்டல காலி பண்ணிட்டு, 9.30 மணி போல அவரோடயே, நாகப்பட்ணம் நம்பியார் நகர் குப்பத்துக்குச் சென்றோம்.  இந்த மீனவர்களின் மூதாதையர் தான் நாம் முன்பு கூறிய அதிபத்த நாயனார்.  தினமும் தொழிலில் கிடைக்கும் முதல் மீனை சிவனுக்கு அமுதாகத் தந்து விட்டு தான், மீதத்தைத் தனக்குக் கொள்வார்.   நுளைபாடியென்பது இதன் புராணப் பெயர்.  இங்கு இவர் பூஜித்த அமுதீசர் கோவில் உள்ளது.  மீனவக் குடும்பங்கள் இந்தக் கோவிலை நன்றாகப் பராமரித்து வருகின்றனர்.    ஐயர் வேஷத்தில் பஞ்ச கச்சத்தோடு கோவில் தரிசனங்களை முடித்து விட்டு, அங்கு சென்ற எங்களுக்கு ஊரார் பெரும் வரவேற்பே கொடுத்து விட்டனர்.  இப்போதெல்லாம் கட்டு மரங்களை, ட்ராக்டரிலும் இழுத்து வந்து விடுகின்றனர்.  முன்பு பத்து, இருபது பேர்களாக சேர்ந்து குண்டு, குண்டு கம்பங்களில் கயிறைக் கட்டி, இழுத்தும், தூக்கியும் வருவர்.  நல்ல பசங்க, டிகிரி, எம்.பி.ஏ ன்னு படிச்சிட்டும் இந்தத் தொழிலில் இன்னும் இருக்கின்றனர்.  நல்ல கும்பல் நாங்க வந்திருக்கோம்னு, ஒரு மீன்பிடி ஸ்ட்ரீமெர்ல அவங்க நாலு பேர், நாங்க நாலு பேர்னு ஏறிக் கடல்ல கொஞ்ச தூரம் கூட்டினு போனாங்க.  லைஃப் ஜாக்கெட் ஏதும் இல்ல, டயர் ட்யூப்பும் இல்ல.  போட்ல அமர்ந்து கொண்டு என் மனைவி, அவள இறுக்கமா பிடிச்சிட்டு ஒரு வயசு கூட ஆகாத என் பையன்.   திரும்பி கரைக்கு வர்ற வரைக்கும் அவன் பிடிய விடவே இல்ல,  மனைவி தோள்லேந்து தலையையும் தூக்கல.  அலைகள் பெரிசு, பெரிசா வந்து கொண்டிருந்தது.  என் பொண்ணும் அவங்க சொன்னத கேட்டு ஒக்காந்திட்டா,  நான் என்னவோ நாயகன் படத்து கமலஹாசன் மாதிரி திமிரா நின்னுட்டு இருந்தேன்.  அனுபவம் இல்ல, அறிவும் இல்ல, ஆசை மட்டும் இருக்கு.  ஸ்பீடு ப்ரேக்கர் மாதிரி ஒரு பெரிய அலை வந்துது,  டொம்னு போட்டுக்குள்ளேயே விழுந்தேன்.  கணுக்கால்ல சிராய்ச்சு ரத்தம் வந்திடுச்சு.  மெல்ல, மெல்ல எல்லா அலைகளையும் தாண்டிப் போனாங்க.  மனந்தளராத விக்ரமாதித்தன் மாதிரி வேட்டிய மடிச்சு, கட்டிட்டு எழுந்தேன்,  நீல நிறத்துல, அலையில்லாம கண்ணுக்கெட்டின தூரம் வரை தண்ணி.  ஒன்னு, ரெண்டு ஸ்ட்ரீமெர் எங்கள தாண்டி கரைக்குப் போச்சு,  வெரைட்டியா மீனு, நண்டுல்லாம் காம்சிட்டுப் போனாங்க.  என் பொண்ணுக்கு இப்போ தைரியம் வந்தாச்சு, எழுந்து கைய விரிச்சு "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்" எம்.ஜி.ஆர் பாட்டு பாட ஆரம்பிச்சிட்டா, எல்லாரும் கோரஸ்ஸா பாடி என்ஜாய் பண்ணினோம்.    நான் கடல்ல குதிக்கப் போறேன்னேன்.

ஏக எதிர்ப்பு, நீச்சல் தெரியுமா, சேஃப்டி கருவிகள் ஏதும், இல்ல, மருந்துகளும் இல்லன்னு அந்தப் பசங்க.  வந்த எடத்துல இதெல்லாம் தேவையில்லாத வேலைன்னு எங்க வீட்ல,  ஏற்கனவே கட்டாயப்படுத்தி ட்ரைவர் டைசன ஏத்தினு வந்திட்டோம்,  கன்யாகுமரி அந்தப் பையன்.  மூணு கடலும் சங்கமிக்கற எடம்,  ஆயிரம் இருந்தும், நீச்சலும் தெரியல, தைரியமும் இல்லயே,  நோ பீஸ் ஆஃப் மைண்டு.!!  வாந்தி, வாந்தியா எடுத்துனு போட்ல ஒரு மூலைல இருக்காரு.  அவரே போட் பண்ணி, போயிருக்கேன்னாரு,  அப்பறம் பாத்தா, அது மெட்ராஸ் டிஸம்பர்ல மழை, வெள்ளம் வந்தப்ப, வேளச்சேரில தெர்மகோல்ல பண்ணிப் போன அனுபவமாம்.  எனக்குக் காவிரி நீச்சல்லாம் இங்க சரி பட்டு வராதுன்னு சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க.  அவங்க த்ருப்திக்கு (எனக்கும் கொஞ்சம் பயந்தே) போட்ல ஒரு குட்டி நூல் கயிறைப் புடிச்சுக்க சொல்லிட்டு, மறு முனைய என் கைல கட்டிட்டு  ஒரு ஜம்ப்.  காவிரி பழக்கம், ஆழத்துக்குப் போயி எல்லாரும் நம்பறதுக்கு அடி மண் எடுத்துட்டு வர்றது.  கொஞ்ச நேரத்துக்கு அப்புறந்தான் புத்தி வந்துது,  இது கடலு, நீ மண்ண தொடப் போறதில்லன்னு.  சுதாரிச்சு, தம் புடிச்சு, தண்ணி மேல வந்திட்டேன்.  எல்லாம் பயத்தோட எதிர்பாத்துட்டு இருந்தாங்க.    போட் முன் பக்கத்துல அதிபத்த நாயனார் துணை ன்னு எழுதி இருந்துது.  எல்லாம் சிவமயமா தெரிஞ்சிது.  கொஞ்ச நேரம் பத்மாஸனம் போட்டு தண்ணிலயே சீரா மூச்சு விட்டுட்டு, மிதந்துக்கிட்டு இருந்தேன்,  ஸூர்யன் சுளீர்னு கண்னைப் பறிக்க தரிசனம்.  திவ்யமான குளியல்.  வயிறு ஃபுல்லா சிக்கல் டிஃபன் சிக்கல்,   போட்ல திருப்பி மூச்சுப் புடிச்சு ஏற முடியல.  போட் ரொம்ப பெரிசா தெரிஞ்சிது.  கொஞ்ச நேரம் திருப்பி, தண்ணிலயே ரெஸ்ட் எடுத்துட்டு, போட் பின் பக்கம் வந்து, அவங்க உதவியோட மேல ஏறினேன்.  நல்லா ஆட்டம் போட்டாச்சு.  தண்ணில குதிக்கும் போது வீடியோ ரெக்கார்டிங் ஆன் பண்ணி, அப்டியே நான் குதிக்கறது, குளிக்கறது, யோகாஸனம் போட்டு தண்ணில மிதக்கறது எல்லாத்தையும் பதிவு பண்ண சொல்லி, கேமராவ குடுத்துட்டு குதிச்சிருந்தேன்.  வந்து நல்லா தண்ணியெல்லாம் தொடச்சிட்டு, கேமராவ கேட்டா, அவரு பேண்ட் பாக்கெட்லேந்து எடுத்துக் குடுக்கறாரு, ரெக்கார்டிங் அப்டியே ஆன்லயே இருக்கு,  பயத்துல பாக்கெட்ல போட்டுட்டாராம், உருப்படியா ஒன்னும் பதிவாகல.  கடல்ல ஒரு பழைய கப்பல நங்கூரம் போட்டு நிறுத்தி இருந்தாங்க.  மீனெல்லாம் வலைலேந்து பிரிச்சு, வகைப்படுத்திட்டு இருந்தாங்க.  அது கிட்ட போயி, கொஞ்ச நேரம் வேடிக்கை பாத்துட்டு, கரைக்கு வந்து சேந்தோம்.  அமுதீசர் கோவில்ல போயி, மோட்டார் போட்டு நல்ல தண்ணில குளிச்சு, சிவ தரிசனம் முடித்தோம்.  என் பையன் அப்பதான் கொஞ்சம் தைரியம் வந்து எறங்கினான்.  ட்ரைவர் ஓகே.  பசங்க நம்பர்லாம் இப்ப எங்கிட்ட இல்ல,  சிம் கார்டு டேமேஜ் ஆகி, எல்லா நம்பரும் போய்டுச்சு, ஞாயிற்றுக் கிழமை எல்லா மீனவர் குடும்பத்துலயும் சிறப்பு சமையல், எங்களுக்காக வந்து ஒரு வெஜிடேரியன் ஹோட்டல்ல கொஞ்சம் சாப்டு, எங்கள வழியனுப்பி வெச்சாங்க பாய்ஸ்.  வேதாரண்யம் போறதுக்கு முன்னாடி வடக்குப்பொய்கை நல்லூர் கோரக்கர் சமாதிக்குப் போய்ட்டுப் போகச் சொன்னாங்க.  மணி மாலை 3.00.

11. அமுதீசர் கோவில், 12, வடக்குப் பொய்கை நல்லூர் கோரக்கர் சமாதி தரிசனம் முடிந்து வேதாரண்யம் கோவில் குருக்கள் ஸ்ரீ சிவ சங்கர சிவாச்சார்யார் இல்லம் போய்ச் சேர்ந்தோம்.

13. வேதாரண்யம்:
- மறைகள் (வேதங்கள்) நான்கும் இறைவனை வழிபட்ட தலமாதலால் வேதாரண்யம் , திருமறைக்காடு.
- மூலஸ்தானத்துக்கு அடுத்த அர்த்த மண்டபத்தில் நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக நிற்கின்றன.
- மஹாபலி முன்பிறவியில் எலியாக இருந்து, விளக்குத் திரியைத் தூண்டி விட்ட தலம் .  வேதாரண்யம் விளக்கழகு என்ற பழமொழி நினைவு கூறத்தக்கது.
- ராமபிரானின் முன்னோரான த்ரிசங்கு ஸ்வர்க்கம் அடைந்த தலம்.
- முன்பு பார்த்த ஸப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்று.
- ஸரஸ்வதியின் யாழ் இசைக்கும், அன்னையின் குரலிசைக்கும் நடந்த போட்டியில் அன்னை வென்று யாழைப் பழித்த மொழியாள் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கும் தலம்.  இதனால் இங்கு தனி சன்னதியில் இருக்கும் ஸரஸ்வதி கையில் வீணையின்றி இருக்கிறாள்.
- ராமர் இலங்கைக்கு ஏகும் முன், இங்கு துர்க்கையை ப்ரதிஷ்டை செய்து வழிபட்டு சென்றிருக்கிறார்.  அருகிலுள்ள ராமர் பாதம் என்ற குன்றில் ஏறிப் பார்த்த போது இலங்கையில் இராவணின் கோட்டையின் பின் பக்கம் தெரிந்தது.  சக்ரவர்த்தித் திருமகன் பின் பக்கமாக செல்வதும், தாக்குவதும் தனக்கு அழகன்று என்று இராமேஸ்வரம் சென்று, இலங்கைக்குச் சென்றார்.
- ராவணனைக் கொன்ற ப்ரஹ்மஹத்தி தோஷத்தை மீண்டும் இங்கு வந்தே போக்கிக் கொண்டார்.
- வெகு காலமாக அரசனின் ஆணையால் கோவில் கதவு மூடப்பட்டு, மக்கள் பின்புறம் உள்ள ராஜ கோபுரத்தின் வழியாகவே தர்சனம் செய்து வந்துள்ளனர்.  இங்கு வந்திருந்த ஞானஸம்பந்தரின் பாடலால் பூட்டப்பட்டிருந்த கதவுகள் தானாகவே திறந்து, மக்கள் வழிபாட்டுக்கு உதவியது.  (இந்த நிகழ்ச்சியை பழைய திருவருட்செல்வர் திரைப்படத்தில் அற்புதமாக படமாக்கியிருந்தனர் ஏ.பி. நாகராஜன் குழுவினர்).  அந்த பெரியக் கதவுக்கு வெள்ளிக் காப்பு செய்துள்ளனர்.

பராமரிப்பில் இதுவும் பெரும்பாலான தமிழகக் கோவில்களைப் போலத்தான்.  மோசமாக இருந்தது.  கேரளா, திருப்பதில எல்லாம் கோவில் கலெக்ஷனைக் கொஞ்சமாவது கோவில்லயே செலவு செஞ்சு மக்களைத் திருப்பி, திருப்பி மயக்கி வரவழைக்கறான்.  நம்மூர்ல பழனி மலையச் சுத்தியே ஒரே மூச்சா நாத்தம் தான்.   (இது முன் கூட்டியே தெரிஞ்சு தான் போகர் ஸ்வாமி சிலைய நவபாஷாணத்துல செஞ்சிட்டார்).  அவ்வளவா கலெக்ஷன் இல்லாத இந்தக் கோவிலப் பத்தியெல்லாம் சொல்லனுமா ?  அம்மாவின் ஆணைக்கிணங்க இப்பதான் சமீபத்துல அவசர, அவசரமா கும்பாபிஷேகம் வேற நடந்திருக்கு.

மாலை விடங்கர் விக்ரஹத்துக்கு அபிஷேகம், பூஜைகள் 10-15 நிமிஷங்கள்.  நடராஜர் சன்னிதில ஒரு இரும்பு ஜெயில்ல, இரும்பு லாக்கர்குள்ள இருக்கார் இந்த மரகத ஸ்வாமி.  அறநிலையத் துறை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் முன்னிலையில் தினமும் காலை, மாலை ஒரு ரெஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டு, குருக்கள் இவைகளைத் திறந்து பூஜைகளை முடித்து, மீண்டும் உள்ளே வைத்து பூட்டி விடுகிறார்.  ஜெயிலுக்கு வெளிலேந்து எல்லாரும் பாக்கலாம்.  20-30 பேர் இருப்போம்.  நாங்க முன்னாடியே போய் பக்கத்துல ஒக்காந்துட்டோம்.  நல்லா பூஜை பாத்துட்டு, ப்ரசாதம் வாங்கிண்டு, டின்னர் முடிச்சிட்டு தூங்கினோம்.

25 ஜனவரி 2016, திங்கள்:
சரியான முன்னறிவிப்புகள் இல்லாததாலும், ப்ரைவேட் கம்பெனில வேலை பார்க்கிறதாலையும் நண்பரால எங்க டூர்ல கலந்துக்க முடியல,  அவர் பசங்களும் ஸ்கூலுக்குப் போயிட்டாங்க.   அவர் மனைவியும், அண்ணியும் தடபுடலா கவனிச்சிட்டாங்க.  வேதாரண்யேஶ்வரரை கடல்ல குளிச்சிட்டு, ஒரு ஏரில குளிச்சிட்டு, கோவில் குளத்துல குளிச்சிட்டு தான் தரிசிக்கனும்னு இங்க முறை.  ட்ரைவருக்கு ரெஸ்ட் குடுத்துட்டு, ஒரு லோக்கல் ஆட்டோ ஏற்பாடு செஞ்சு நண்பரோட அண்ணாவே எங்களோட வந்துட்டார்.  இந்த ஊர் கடல வேத நதின்னு தான் சொல்றாங்க.  என்னன்னு தெரியலை, எங்க பாத்தாலும் சரியான களி மண்,  கொண்டு வந்து கரைல தள்றாரு சமுத்ர ராஜன்.  தண்ணியெல்லாம் சேத்துக் கலர்ல இருக்கு.  எங்க கால வெச்சாலும் சல், சல்லுனு புதையுது.  தலைல தண்ணிய தெளிச்சிட்டு கெளம்பிட்டோம், குளிக்க முடியல, அண்ணாவுக்கும் ஏன் இப்படின்னு புரியல.   இன்னும் கொஞ்ச நாள்ல 27 வருஷத்துக்கப்பறம் மீண்டும் மஹோதயம் ங்கிற புண்ய நாள் வருது.  (தை மாசம், அமாவாசை, ஸ்ரவண நக்ஷத்ரம், திங்கள் கிழமை எல்லாம் சேர்ந்து வரும் நாள்).  கோடி சூர்ய க்ரஹணங்களுக்கு இணையான பலன் இந்த நாள்ல ஸமுத்ர ஸ்னானம் செஞ்சா, ஜபம் பண்ணினா.  லக்ஷக் கணக்குல கும்பல் வரும்னு கலெக்டர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யச் சொல்லி நடந்திட்டிருக்கு.

அங்கிருந்து கிளம்பி, ஏரில குளிச்சிட்டு, கோவில் குளத்துல போய்க் குளிச்சோம், ராஜ கோபுரத்துக்குள்ள நுழைஞ்சதும், இடது புறம் இந்த குளம், கோபுரத்துல நெறையா சுதைகள் இருக்கு.  குழந்தை கொஞ்சம், கொஞ்சமா தைரியம் வந்து கையிலேயே ஒக்காந்துண்டு குளிச்சான்.  நேத்து ராத்திரி புறப்பாடு முடிஞ்சு ஸ்வாமி 1.30 மணிக்கு விடிகாலைல தான் தூங்கப் போயிருக்கார்.  திருப்பியும் ஒரு தடவ மரகத விடங்கர் தரிசனம் செஞ்சோம்.

கார்ல கெளம்பி கோடிக்கரை போற வழில குன்றுல ஏறி ராமர் பாதம் பார்த்தோம்.  என் பையன் வால்மீகி ராமாயணம் படிச்சு, பொறந்ததால அவனுக்கும் ராமன்னுதான் பேர், தாத்தா ராமாயணத்த அனுக்ரஹ க்ரந்தம், அது கேட்டதக் குடுக்கும்னு சொல்வார்.  அது என் அனுபவம்.  அவன் குழந்தையா இருக்கும் போதே, அவனோட அங்க போனதுல கொஞ்சம் சந்தோஷம்.  மொத்த வழில அந்த குன்றுல மட்டும் அவ்ளோ குரங்குகள்.  கோடிக்கரை கடலை தரிசனம் செஞ்சு, நீரை எடுத்துத் தெளிச்சிண்டோம்.  வரும் போது உப்பளத்துல அதிகாரியா இருக்கற நண்பர் சிவ சங்கர்ட அனுமதி வாங்கிட்டு, கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சிட்டு, வீட்டுக்குப் போய் சாப்டோம்.

ஒரு மணி நேரம் ரெஸ்ட், நா மட்டும் தான் கொஞ்சம் படுத்தேன் (வேற என்ன வேல ஆம்பளைக்கு), மனைவி எல்லாத்தையும் பேக் பண்ணினாங்க.  பொண்ணு ஃப்ரெண்டு பொண்களோட விளையாடிட்டு இருந்தா.  நாலு, நாலரைக்குக் கெளம்பினோம்.

14. திருநள்ளாறு:
- திரு ன்னு ஆரம்பிச்சாலே அது பாடல் பெற்ற ஸ்தலம்தான்.
- நள மஹாராஜாவுக்கு இங்கு தான் சிவ பூஜை பலனாக சனி தோஷம் நீங்கிற்று.
- சப்த விடங்கரில் இங்கும் ஒருவர்.
- தர்ப்பைக் காட்டில் எழுந்தருளியதாள் ஸ்வாமி தர்ப்பாரண்யேஶ்வரர்.

15. திருக்கடையூர்:
- பாடல் பெற்ற ஸ்தலம்.
- அமிர்த கடத்தில் தோன்றியதால் அம்ருத கடேஶ்வரர்
- அஷ்ட வீரட்ட சிவ ஸ்தலங்கள்ல இதுவும் ஒன்னு.  மார்கண்டேயருக்கு ஆயுசு 16 வயதே என்பதால் அந்த வயதில் அவர் உயிரை எடுப்பதற்காக வந்த யமதர்ம ராஜா, அவர் இங்குள்ள சிவபெருமானை இறுக்க அணைத்துக் கொண்டிருக்கும் போதும்,  யோசிக்காமல் பாசக் கயிறை வீசினான்.  சிவன் ஓங்கி விட்டார் ஒரு உதை அவனுக்கு,  எங்க வந்து, என்ன பண்ணினு இருக்கும் போது, யாருக்கு சேத்து கயிறை வீசற, இனிமே நீ இந்த வேலை செய்ய வேணாம்,  நானே பாத்துக்கறேன், போ!! ன்னு சத்தம் போட்டு, அவன் ஆயுதங்களையெல்லாம் புடுங்கினு, தொரத்தி விட்டார்.  மார்க்கண்டேயருக்கும் என்றும் இனிமே உனக்கு பதினாறு வயசு தான்னு வரம் கொடுத்திட்டார்.   (இன்னிக்கு மெட்ராஸ்ல இருக்கற வேளச்சேரிக்கு புராணப் பெயர் வேதஶ்ரேணி, இங்க தான் அந்த யமன் திரும்பியும் வந்து யம தீர்த்தம்னு ஒரு குளத்த உண்டாக்கி, தினமும் குளிச்சு, முறையா பூஜை, தவம் எல்லாம் செஞ்சு, சிவன சந்தோஷப்படுத்தி, திருப்பியும் தன்னோட தண்டம், முதலான ஆயுதங்களையும், சக்தியையும், பொறுப்பையும் பெற்றான்.  அதனால வேளச்சேரி ஸ்வாமி பேர் தண்டீஶ்வரர்.)
- திருக்கடையூர் அபிராமி மேல தான் அபிராமி பட்டர் அந்தாதி பாடினார், அம்பாள் அவருக்காகத் தான் ஜொலிக்கற தன் ஆபரணத்தைத் தூக்கிப் போட்டு அமாவாசைய, பௌர்ணமியா மாத்தினா.

26 ஜனவரி 2016, செவ்வாய் விடிகாலை வீட்டுக்கு வந்தோம். ரெஸ்ட்.

கர்ப்பமா இருக்கறவங்க, நேர்ல இந்த கோவில்லுக்கெல்லாம் போக முடியாம இருக்கறவங்கவங்களுக்கு,  டெலிவரி மேனேஜர், என்னோட ரிப்போர்ட்டிங் மேனேஜர் திருனெல்வேலி ஜான்ஸனுக்கும் இந்த போஸ்ட் சமர்ப்பணம்!!  மீண்டும் சந்திப்போம்.