திருக்கடையூர் அபிராமி அம்பாள் ஸமேத அம்ருதகடேஶ்வரர் மற்றும் தரங்கம்பாடி அகிலாண்டேஸ்வரி சமேத மாசிலாமணிநாதர்.
சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது.
அஷ்ட வீரட்டானக் கோயில்கள்: குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் பாடல் கேட்டிருப்போம். குனித்த புருவம் எப்போதும் மகிழ்ச்சியோடும், த்ருப்தியோடும் இருப்பவர்க்கே உரியது. எளிதில் மகிழ்ந்து வசப்பட்டுவிடுவார் என்பதால் ஈசனுக்கு அசுடோஷ் என்ற பெயரும் உண்டு. அப்படிப்பட்ட சிவனார் கோபம் கொண்ட தப்பு செய்தவர்களை உலக நன்மைக்காக அழித்த எட்டு இடங்களே இவைகள்.
மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மாவழுவூர்,
காமன் குறுக்கை, யமன்கட வூர்இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே
- என்ற பாடல் இந்த இடங்களை எளிதில் நினைவில் நிறுத்த உதவும்
திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்
திருக்கோவலூர் : அந்தகாசுரனைக் கொன்ற இடம்
திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்
திருப்பறியலூர் : மாமன் தக்ஷ ப்ரஜாபதி தலையைத் தடிந்த தலம்
திருவிற்குடி : ஜலந்தராசுரனை வதைத்த தலம்
திருவழுவூர் : கஜமுகாசுரனைக் கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்
திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம்
திருக்கடவூர் : மார்க்கண்டேயனைக் காக்க கூற்றுவனை உதைத்த தலம்.
சமயக்குரவர் மூவராலும், இன்னும் திருமூலர், மார்க்கண்டேயர், தேவர்கள் எனப் பலராலும் புகழ்ந்துரைக்கப்பட்ட திருக்கடையூர் தலமே இன்றையது.
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி! - கூன்பாண்டியன் நோய் தீர்த்த ஞானசம்பந்தரையும்,
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி! - நாவுக்கரசரையும்,
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி! - பித்தா என்று இறைவனை அழைத்த வன்தொண்டர் சுந்தரரையும்
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி! என்று மாணிக்கவாசகரையும் உமாபதி சிவாச்சாரியார் தொழுகிறார்.
மேலும் காரி நாயனார், குங்கிலியக்கலய நாயனார் வாழ்ந்த தலம் இது.
மேலைத் துவாரத்து மேலுற நோக்கி முற்காலுற்று
காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே என்று இவ்வூரை வாழ்த்துகிறார் திருமூலர் தன் திருமந்திரத்தில்.
தை அமாவாசையன்று, காவிரி கடலோடு சங்கமிக்கும் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து தஞ்சை திரும்பும் வழியில் சரபோஜி மஹாராஜா இந்த தலத்தைத் தரிசிக்க வந்த போது, அனைவரும் வழி விட்டு, வணங்கி மரியாதை செய்யும்போது ஒருவர் மட்டும் கண்களை மூடி அமர்ந்திருப்பதை காண்கிறார். சுப்ரமண்யம் என்ற அபிராமி பட்டரை விரும்பாதவர்கள் அவரைப் பயித்தியம், திமிர் பிடித்தவன், பெண் பித்தன் என்றெல்லாம் மன்னரிடம் முறையிட்டு தண்டிக்கச் சொல்கின்றனர். சிலர் இவரை ஞானி, அம்பிகையின் அருள் பெற்றவர், அனைத்திலும் அன்னையைக் காண்பவர் என்றும் எச்சரிக்கின்றனர். அவரை பரீக்ஷை செய்வோம் என்று மன்னரே இன்று என்ன திதி எனக் கேட்கிறார் அவரிடம். அன்னையின் தரிசனத்தில் திளைத்திருந்த அனுபூதியில் இன்று பௌர்ணமி என்று த்யானத்திலிருந்தபடியே அவரும் பதிலளித்து விடுகிறார். தண்டனை பிறப்பிக்கப்படுகிறது. இன்றிரவு நீர் பௌர்ணமியைக் காட்டாவிட்டால் எரியும் நெருப்பில் விழுந்து உயிர் விடவேண்டியது என்று நூறு கயிர்கள் கட்டப்பட்ட ஒரு ஊஞ்சலில் அவரை ஏற்றி, கீழே பெரும் தீ மூட்டப்படுகிறது. அவர் அப்போதும் அது என் வாக்கல்ல. என் நாவிலிருந்து அதை சொல்ல வைத்தவள் அவளே, என்னை இந்த இக்கட்டிலிருந்து காக்கப்போவதும் அவளே என்று அன்னையில் மேல் முழு நம்பிக்கையையும் வைத்து, தன்னை ஒப்படைத்து அவள் மேல் அந்தாதி பாடுகிறார். இவரைக் காப்பதற்காக ஒரு தகுதியும் பாராமல் எவரும் காணும் வண்ணம் தன் காதணியின் கல்லைப் பெயர்த்து வீசுகிறாள். வானில் அனைவரும் அதிசயிக்க பௌர்ணமியாக மிளிர்கிறது. இந்த தரிசனம் நிகழ்ந்த திருத்தலமும் இதுவே.
ம்ருகண்டு முனிவர் குழந்தையின்றி தவமிருந்து பெற்ற மார்க்கண்டேயன் பக்தியையும், பணிவையும் வியந்து என்றும் 16 வயதையும், எமதர்மன் வேண்டியபடி அவன் மார்பில் திருப்பாதத்தால் ஒரு உதையையும் இறையனார் அருளிய தலமும் இதுதான். சென்னையில் இன்றைய வேளச்சேரியில் இருக்கும் தண்டீஶ்வரர் கோவிலும், குளமும் தர்மராஜன் உருவாக்கி தவத்தாலும், பூஜையாலும் இந்த தண்டனையிலிருந்து மீண்டு தன் பதவியைப் பெற்றான். இந்த மார்க்கண்டேயராலேயே, 18 புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணம், பால முகுந்தாஷ்டகம் எல்லாம் நமக்குக் கிடைத்தன. இன்றும் குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோவிலில் கராரவிந்தேன பதாரவிந்தம் என்று இந்த ஶ்லோகத்தையே சொல்கின்றனர்.
2 கி.மீ. ல் கடவூர் மயானம்: மயானம் எனபது சிவபெருமான் பிரம்மதேவரை எரித்து நீராக்கிவிட்ட இடமாகும். தேவர்கள் வேண்டுதலால் மீண்டும் இங்கேயே ப்ரம்மனை உயிர்ப்பித்து அவருக்கு சிவஞானத்தையும் போதித்தார் ஸ்வாமி. காசி மயானம், கச்சி மயானம் காஞ்சீபுரம், காழி மயானம் சீர்காழி, நாலூர் மயானம் மற்றும் கடவூர் மயானம் என்பவையே பஞ்ச மயான தலங்கள் ஆகும். இந்த திருக்கடையூர் மயான கிணறு பிரம்ம தீர்த்தத்தில் கங்கை வந்த நாள் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரம் ஆகும். வருடம் ஒரு முறை வரும் இந்த புண்ணிய நாளில் மட்டும் தான் பக்தர்கள் அனைவரும் புனித நீராடுவர். மார்க்கண்டேயர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து சிவபூஜை செய்வதற்காக, திருக்கடவூர் மயான கிணற்றில்(காசி தீர்த்தம்) கங்கையை சிவபெருமான் வரவழைத்துக் கொடுத்தார் என்பது தல வரலாறு. தற்போதும், திருக்கடையூர் அமிர்த்தகடேஸ்வர சுவாமிக்கு காசியில் இருந்து கங்கா தீர்த்தம் எடுத்து வந்தாலும் அபிஷேகம் கிடையாது. இந்த புனித நீரைக் கொண்டு மற்ற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் என்ன என்று கூறி பாகுலேயன் என்ற மன்னன் திருக்கடையூர் மயான பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்த போது திருக்கடவூர் மயான பிரம்மபுரீஸ்வர சிவலிங்கத்தின் உச்சியில் வெடிப்பு ஏற்பட்டது. அதற்கான தழும்பு இத்தல இறைவனின் திருமுடியில் காணப்படுகிறது. ஆகையால் திருக்கடவூர் மயானம் ஈசனுக்கு கூட இந்த தீர்த்தத்தால் அபிஷேகம் கிடையாது. குமரக்கடவுள் இங்கு போர்க்கோலத்தில் வில், வேலுடன் தனக்கென ஒரு சண்டிகேஸ்வரருடனும் காட்சியளிக்கிறார்.
தரங்கம்பாடி அகிலாண்டேஸ்வரி சமேத மாசிலாமணிநாதர்.: அப்பர், சுந்தரர் பாடிய தேவார வைப்புத்தலமாகும். வெவ்வேறு கோவில்களின் தொகுப்பாகவோ, வேறு கோவிலிலிருந்து இன்னொரு கோவிலைப்பற்றி பாடியிருந்தால் அது வைப்புத்தலம். இக்கோயில் திருக்கடையூருக்குத் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கடல் அலைகள் இசை பாடுவதுபோல இருப்பதால் தரங்கம்பாடி,
https://www.youtube.com/watch?v=73gn_KEu2Ak