குரு பௌர்ணமி - வியாஸ பூஜை
ஆடி மாத பௌர்ணமியை குரு பௌர்ணமியாகக் கொண்டாடி, வியாஸரை பூஜித்து இன்று முதல் நான்கு மாதங்களுக்கு நம் பாரத தேசமும் தாண்டி உலகெங்கிலும் உள்ள துறவிகள் உலக நன்மை, அமைதியை வேண்டி அடியார்களுக்கு உபதேசங்கள் அருள்வது அனாதியாய் தொன்று தொட்டு வரும் மரபு.
அது ஏன் எவ்வளவோ ஞானிகளை, ரிஷிகளை, முனிவர்களை உலகிற்கு அளித்த நம் பாரத தேசம் குறிப்பாக வியாஸரை இன்று குருவாகக் கொண்டாட வேண்டும் ?
நாராயணர், ப்ரஹ்மா, வஸிஷ்டர், ஶக்தி, பராஶரர், க்ருஷ்ண த்வைபாயனர் என்ற வியாஸர் என்று இவருடைய வம்ஶம் மிகப் பெருமை வாய்ந்தது. கறுப்பு நிறத்தவர் என்பதால் க்ருஷ்ணன், தீவில் பிறந்ததால் த்வைபாயனர். ஆனால் இதுவா காரணம் ? தினசரி வழிபாட்டில் வியாஸர் முதலான ரிஷிகள் என்று வருகிறது... அதாவது இவருக்கு முன்னால் இருந்த ரிஷிகளுக்கும் இவரே முதல்வர் என்றாகிறது. இவர் சாதனைகள் வியக்க வைக்கின்றன அப்படி.
சனாதனமான நம் ஹிந்து மதத்திற்கு வேதங்களே ஆதாரம். இந்த வேதங்கள் எல்லா துறைகளுக்குமான விஷயங்களை, முறைகளை ரஹஸ்யமாக வைத்துள்ளது. இதில் எந்த ஒரு மாறுதல்களும் செய்ய எவருக்கும் அதிகாரம் இல்லை. பரமேஶ்வரனின் மூச்சுக்காற்றான இதை இன்று நமக்கு உபயோகமாகும்படி வகுத்துத் தந்தவர் இந்த வியாஸரே.
ஐந்தாவது வேதம் என்கிற மஹாபாரதத்தை பகவத் கீதையோடு நமக்கு உபதேசித்தவர் இந்த வியாஸரே.
மும்மூர்த்திகள், முருகன், தேவதைகள் உபாசனை, பக்தி, தர்மம், உலக உற்பத்தி, ஸூர்ய, சந்த்ர வம்சத்து அரச பரம்பரைகளை ப்ரஸித்தப்படுத்திக் கொண்டிருக்கும் கந்த புராணம் முதலிய 18 புராணங்களை தந்தவர் இந்த வியாஸரே.
உருவ வழிபாடுகளைத் தாண்டி ஏகம் ஏவ அத்விதீயம், அஹம் ப்ரஹ்மாஸ்மி, தத்வமஸி என்றெல்லாம் வேதங்கள் கொண்டாடும் ஒன்றான பரம்பொருளின் இலக்கணத்தை, ப்ரஹ்ம ஸூத்ரம் என்று நமக்கு வர்ணித்தவரும் இந்த வியாஸரே.
உலக உற்பத்தி, காக்கும் வழிமுறைகள், ஒடுக்கம் என்பனவெல்லாம் மிகவும் தெளிந்த இந்த வியாஸர் நான்கு முகங்களற்ற ப்ரம்மா, நான்கு கைகள் இல்லாத மஹாவிஷ்ணு, முக்கண் இல்லாத பரமேஶ்வரன்.
குரு என்ற வார்த்தை இருளை அழிப்பவர் என்ற பொருள் கொண்டது.
இந்த ப்ரஹ்ம ஸூத்ரம், வேதங்கள், உபநிஷதங்கள், மாபாரதம், புராணங்கள் இல்லையென்றால் இன்று நமக்கு ஒரு பிடிமானமும் இல்லாமல் அனாதைகளாயிருக்க வேண்டியதுதான். நாம் இன்று சனாதனிகள், ஹிந்துக்கள் என்று பெருமையோடு உலகிற்கு வழிகாட்டுவது இவராலேயே.
துஷ்டர்களை அழிக்க அவ்வளவு அவதாரங்கள் எடுத்த மஹாவிஷ்ணுவே வியாஸராக தர்மத்தை நிலை நிறுத்த வந்தார். ஆதி சங்கரர் உட்பட இன்றைய எல்லா குருபரம்பரைக்கும் இவரே ஆதி குரு.
எல்லா குருக்களுக்கும் இன்று நம்முடைய சிறப்பு நமஸ்காரங்களை அர்ப்பணிப்போம்.